ஏமாற்றங்கள், துரோகங்கள், நஷ்டங்கள், கவலைகள், வெளியில் சொல்ல முடியாதபய உணர்வுகள், விரையங்கள், செலவுகள், தண்டனைகள். படுக்கை சுகங்கள்,
தூக்கம், தீய பழக்கங்கள், ரகசிய எதிரிகள், பிறந்த இடத்தில் இருந்து தொலை
தூரத்தில், வேறு இடங்களில் வசிப்பது , இடது கண், கால்கள், பாதங்கள், அடுத்த
பிறவி போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பன்னிரெண்டாம் வீடு.
மொத்தத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள்
நம்மைக் கேட்காமலே நடக்ககூடியவை. நாம் முயன்றாலும் தடுக்க முடியாதவை.
நாம் விரும்பாவிட்டாலும் வந்து நின்று நம்மைத் தொல்லைப் படுத்துபவை.
ஆகவே இருக்கின்ற வீடுகளிலேயே மிகவும் மோசமான வீடு பன்னிரெண்டாம்
வீடுதான்.
அதை மோசமான வீடு என்று சொல்லாமல் மறைவிடம் என்று ஜோதிட வல்லுனர்கள்
குறிப்பிடுவார்கள்.
நட்பு, நட்பு என்று அலைபவன், தன் நண்பன் ஒருவனால் ஒரு துரோகத்தைச்
சந்திக்கும்பொதுதான் நட்பை முறித்துக் கொண்டு, "இறைவா, என் எதிரிகளை நான்
பார்த்துக் கொள்கிறேன்; என் நண்பர்களை நீ பார்த்துக்கொள்!" என்பான்.
சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், ஒரு நாள் பங்கு வணிகத்திலோ அல்லது
ரியல் எஸ்டேட்டின் வீழ்ச்சியிலோ பறி கொடுத்த பிறகுதான் ஒரு மனிதனுக்கு நஷ்டம்
என்பது என்ன வென்று தெரியவரும்.
ஆசை ஆசையாக வளர்த்த பெண், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல், வீட்டை
விட்டுத் தனக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய் விடும்போதுதான் அல்லது வளர்த்த
மகன், "அப்பா, உன்னை வீட்டில் வைத்து போஷிக்க என் மனைவி விரும்பவில்லை,
நான் பணம் கட்டிவிடுகிறேன், நீ முதியோர் இல்லத்தில் போய் இரு" என்று சொல்லும்
போதுதான்," தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு;
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனசே கல்லம்மா" என்ற பாடல் நினைவிற்கு
வந்து அல்லாடுவான்.
"தீய பழக்கங்கள், வேலைக்காரனைப் போல முதலில் வரும்.பிறகு அது உனக்கு
எஜமானாக மாறிவிடும். ஆகவே தீய பழக்கங்கள் வேண்டாம் ' என்று பெரியவர்கள்
சொல்வதைக் கேட்காமல், "அவர்கள் கிடக்கிறார்கள், அனுபவிக்கத்தெரியாதவர்கள்"
என்று சொல்லி தீய பழக்கங்களுக்கு உள்ளாகுபவன், ஒரு நாள் கடும் நோய் வந்து
மருத்துவ மனையில் படுத்துப் பெரும் செலவுகளைச் சந்திக்கும்போதுதான், தீய
பழக்கங்களின் கொடுமையை உணருவான்.
'காதலி, காதலி என்று ஒரு தேவதைக்காக உருகியவன், உருகிப் பெற்றோர்களை
உதறிவிட்டு, அவளைக் கை பிடித்தவன், திருமணத்திற்குப் பிறகு, தோற்றத்தில்
மட்டும்தான் அவள் தேவதை, குணத்தில் அவள் பிசாசு' என்று தெரிந்து கொள்ளூம்
போதுதான், தான் ஏமாந்து போனதை உணருவான்.
இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நீளம் கருதி
பல உணர்த்தல்களை உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன்.
இப்படி வாழ்க்கையில் பல துன்பமான அனுபவங்களைப் பெற்று, கசப்புற்று,
இறுதியில், போனால் போகட்டும் போடா அல்லது யாரை நம்பி நான் பிறந்தேன்
போங்கடா போங்க என்று ஒருவன் சொல்லும் நிலைக்கு வருவது இந்தப்
பன்னிரெண்டாம் வீட்டை வைத்துத்தான்.
"அடும்வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?" என்று உறவுகளைப் பற்றியும்,
நண்பர்களைப் பற்றியும் ஒருவனுக்கு உணரவைத்து, உலகில் எதுவுமே நிலையானது
அல்ல, நிலையாமைதான் நிலையானது என்கின்ற ஞானத்தைக் கொடுப்பதும்
இந்தப் பன்னிரெண்டாம் வீடு!
ஞானம் என்றால் முழுமையான அறிவு (wisdom) என்று பொருள்
இந்த ஞானம் எப்போது வரும்?
சிலருக்கு 40 வயதில் வரும், சிலருக்கு 50 வயதில் வரும், சிலருக்கு 60 வயதில்
வரும், சிலருக்கு 70 அல்லது 80 வயதில் வரும். ஆனால் வராமல் இருக்காது.
சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களுக்கும் அதுதான் வேலை. அவைகள்
உணர்த்தாமல் விடாது. அந்த உணர்த்தலில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்க
முடியாது. சிலருக்குக் கொஞ்சம் மொஞ்சமாகப் புரியவைப்பார்கள். சிலருக்கு
அதிரடியாக ஒரே நாளில் புரிய வைப்பார்கள்! இது அவரவர்கள் ஜாதகப் பலன்!
எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?
சட்டையைப் பிடித்து உலுக்கி. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது -
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு
மட்டுமே கைவந்த கலை. அப்படிச் சொன்னவர்களில் பட்டினத்தாருக்கு ஈடு
இணையாக ஒருவரும் இல்லை. ஞானம் பெற பட்டினத்தார் பாடல்களைப் படிக்க
வேண்டும். அந்தப் பாடல்களை ஒரு வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால்
இப்படிச் சொல்ல வேண்டும்.
"புதையல் (Treasure) "
-------------------------------------------------------------------------------------
எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?
மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும் அவலத்தை,
பட்டினத்தார் அற்புதமாக நான்கே வரிகளில் நெத்தியடியாக ஒரு பாட்டில்
சொன்னார்.
திருபானி அம்பானியாக இருந்தாலும் சரி, இந்திரா காந்தியாக இருந்தாலும்
சரி, பில் கேட்சாக இருந்தாலும் சரி அல்லது வாரன் ப்ஃபெட்டாக இருந்தாலும்
சரி, அல்லது சாதாரண குப்பன், சுப்பனாக இருந்தாலும் சரி எல்லொருக்கும்
அந்த ஒரு பாட்டு போதும். வாழ்க்கையின் அவலம் விளங்கும். முடி சார்ந்த
மன்னனும் ஒரு நாள் பிடி சாம்பலாகிப் போவான் என்ற வாழ்க்கையின்
முடிவு தெரிய வரும்!!
”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்
முன்பே பதிவில் எழுதியதுதான். இருந்தாலும் இந்தப் பாடத்திற்கு அது சம்பந்தம்
உடையது என்பதால் மீண்டும் அந்த வரிகளை உங்களுக்காக இன்று கொடுத்துள்ளேன்
”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உனக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”
பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)
----------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப்படுத்தி இப்படிச்சொன்னார்:
ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
----------------------------------------------------------------------------------
மொத்ததில் மனிதனுக்கு ஞானத்தைத் தருவது பன்னிரெண்டாம் வீடு.
அது மறைவிடம் அல்ல. மனிதன் மறைத்து வைத்துவிட்டுப் பார்க்கப்
பயப்படும் இடம்.
(பாடம் தொடரும்)
வாழ்க வளமுடன்!

