
தலை' யைப் பற்றிய தகவல்கள்
தலை' என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவிற்கு வருவது ரசிகர்கள் மாய்ந்து
மாய்ந்து சொல்லும் தலைகளான அஜீத் அல்லது விஜய்!
பதிவு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் பதிவை விட்டு
விலகவும்.
இது அவர்களைவிட முக்கியமான தலையைப் பற்றிய பதிவு
=====================================================
ஜோதிடத்தில் தலை என்று தலைப் பகுதியான லக்கினத்தைக் குறிப்பிடுவார்கள்
எண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுபோல, பன்னிரெண்டு வீடுகள்
அடங்கிய ஜாதகத்திற்கு லக்கினமே பிரதானமானது. அதுதான் தலைப் பகுதி
லக்கினத்தைப் பற்றிய பாடம் விரிவாக நடத்தப்படவுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன் லக்கினத்தைப் பற்றி, நான்கு பதிவுகளில் எழுதிய
செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்தால்தான் அல்லது
தெரிந்து கொண்டால்தான் அடுத்து எழுதுவது விளங்கும். ஆகவே அவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
அனைவரையும் பொறுமையாகப் படித்து அவற்றை உள் வாங்கிக் கொள்ள
வேண்டுகிறேன்.
அதைத் தொடர்ந்து, லக்கினத்தைப் பற்றி விரிவாக எழுத உள்ளதைப் படியுங்கள்
===================================================
லக்னம் என்றால் என்ன?
வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர்
தரப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அதற்குப் பெயர்கள் உண்டு
வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி என்பது கணக்கு.
ஆரம்ப ராசி மேஷம்தான்.
சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி. சூரியன் அந்த ராசியில்
தான் உதிக்கும். வைகாசி மாதம் ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம்
மிதுனம் ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசி மாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம், மார்கழி மாதம்
தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம் பங்குனி மாதம் மீனம் என்று
ஒரு சுற்று முடிந்து விடும்.
ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று மறுபடியும் மேஷத்தில்
தான் ஆரம்பமாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் எந்த மாதம்
பிறந்தவர் என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில்
இருந்தால் அந்த ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.
ஆனால் லக்கினம் என்பது வேறு!.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!
லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில்
குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events
at any given time of the day with reference to the time of sunrise
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்
லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
கொள்வார்கள்
சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து வரும் 2 மணி நேரம்
வரை உள்ள காலத்தில் பிறந்த குழந்தையின் லக்கினம் மேஷம்தான்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த ராசி வரிசையில்
லக்கினங்கள் அமையும்
ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி
நேரம் வரை தான் மேஷ லக்கினம் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப
லக்கினக் குழந்தையாகும்.
இந்த வித்தியாசம் ஏன்?
ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு = 24 மணிகள்
வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்
ஆகவே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகையைத் தாண்டி
வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில் 15 பாகைகளைக் கடந்து விடும்
ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள் அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்
இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகை வீதம்
360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு
அது எந்தப் பாகையில் பிறந்ததோ அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம்
ஆகும்.
உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச் செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய
ஆளூமையைச் சொல்ல முடியும்.
அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா? அல்லது
Villainனா? என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா
அல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்!
அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம்
பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப்
போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா
என்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா.
ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால்
நயன்தாராவா அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம்
லக்கினத்தை வைத்துத்தான்
எல்லாவற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே
முதலில் லக்கினம் என்பது என்ன என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.
அதன் பலா பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில் சொல்லிக்
கொடுக்கப்படும்!
-----------------------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய
கூகுள் ஆண்டவர் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கான
சுட்டியைக் கொடுத்துள்ளேன்!
http://en.wikipedia.org/wiki/Ascendant
Written on 20.3.2007
இப்போது லக்கினத்தின் அடுத்த பகுதி!
1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி
(Owner of the lagna or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு
(திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)
2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!
3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்
மறைந்து விடக்கூடாது! These places are inimical places (தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு
அமர்ந்து விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன - வரிசையாக அவைகளும்
சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion by seeing a single rule. The houses
are to be judged by various factors which will be taught one by one
4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் -
house of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது.
அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.
5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில்
வந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம் வீடான
கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி
விடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது
You should not jump to any conclusion by seeing a single rule. The houses are
to be judged by various factors which will be taught one by one
6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு
அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of the 12th associated together in
any place in the horoscope will not confer any auspicious things to the native
7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example - சிம்மலக்கின
ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.
8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope
9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த
இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.
10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில்
சந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி
அழகாக இருப்பாள்.
11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும்
அழகான தோற்றத்தை கொடுப்பான்
சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும். அதனால்தான்
அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்
சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள்
தாராளமாகக் கிடைக்கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி:-))))
நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?
12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான
திறமையைக் கொடுப்பான்
13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான
சிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள்
எல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்கள்)
=============================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும்
சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா? மனதளவில் நானும்
ஹீரோதான்..ஹி.ஹி:-))
----------------------------------------------------------------------------------
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த
லக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்
15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள்.
அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள்
நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாகக்
குடம் வழங்கப் பெற்றுள்ளது.
பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப்
பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக
ஈர்த்து விடக்கூடியவர்கள். They will attract or mix with any people
or any Society easily
17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம்
- திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம்
போன்றவர்கள்)
18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில்
ஈடுபடுபவர்கள். உதாரணம் - கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி,
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்
19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள்
(அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக்
கூடியவர்கள். ரசனை உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்
20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய் அதிபதி அதனால்
போராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும்
பயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில்
பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.
21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதியானதால், இயற்கையாகவே
சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance,
stock market, Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!
22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர்,
அவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உடல் நலமும் நன்றாக இருக்கும்
23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது
ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.
24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய
கிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும்
25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள
குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ
ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.
ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?
இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"
நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை இறைவன் Strengthஐ
கழுதைக்குக் கால்களில் கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத்
தெரியும் கேட்டுப்பார்"
அதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை!(Balancing Theory) Wealth இருக்கிறவனுக்கு
Health இருக்காது. Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது. பயில்வானாக
இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு
உடல் பலம் மறுக்கப்பட்டிருக்கும்.
பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான். அவர்களுடைய கார்
டிரைவருக்கும் 337தான். கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் தன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டுமானலும் போவான்.
ஆனால் அவர்கள் Security இல்லாமல் எங்கும் செல்ல முடியாது
....................Written on 21.3.2007
========================================================
நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்தவீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட இடத்தின் பெயர்தான் ஜாதகம்.
வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்
ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு என்பார்கள்.
ஆங்கிலத்தில்,They will say them as houses.
உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது. அதுதான் தலைமைச்
செயலகம்.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால் எப்படிச்
சாப்பிட முடியும்?
இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!
முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தோற்றம், குணம்,
வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.
எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு
எதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப
லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின்
கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்
சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின்
அதிபதி சனி. ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்
சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில்
நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes)
சிம்ம லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு
மென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்
சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.
ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது
லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட
தோற்றம் அவர்களுக்கு இருக்காது.
நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்
சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு
ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன்
லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய
இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று
அமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.
சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற
முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை
யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு.
சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும்
அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும்
உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்வார்கள்
சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும்
(அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்)
சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை
இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில்
செவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.
சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக்
கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும். கும்ப லக்கினக்காரர்கள்
நல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.
கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக
இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்
திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.
கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும்
சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார்.
அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப
லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ்
வீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும்
(Lord for the losses) அவனே!
ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற
இரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்!
..........Written on 17.10.2007
=====================================================
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள்
அறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று
தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.
மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி
ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள்
பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச்
சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக
இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இதெல்லாம் பொது விதி!.
1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள
வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக
இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be
fortunate.
2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால்
அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம்.
வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள்
எதையும் போராடித்தான் பெற வேண்டும்.
இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும்
என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள்
வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.
இந்த விதி தலையான விதியாகும்.
இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது
பொருந்தும்.
இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி,
பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம்
வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம்
ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார்
போலத்தான் இருக்கும்.
If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.
ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.
அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்
1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.
2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.
3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.
4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
...........Written on 21.11.2007
ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!
நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்
இந்தப் பதிவு வலை ஏற்றப்பட்ட நேரத்தைக் கவனியுங்கள்.
எல்லாம் உங்களுக்காகத்தான்!
அதோடு இன்னொன்றையும் கவனியுங்கள். இது ஜோதிடப் பாடத்தின்
200 வது பதிவு.
வாழ்க வளமுடன்!