Astrology மாதா பிதா குரு சனி!
“என்ன சார் குழப்பம்? மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதானே சொல்லுவார்கள்?”
“ஜோதிடம் கற்றுக்கொள்ளும் நமக்கு மாதா பிதா குரு சனி என்பதுதான் பாடம்”
“எப்படி?”
“நமக்கு மாதா என்பது சந்திரனையும், பிதா என்பது சூரியனையும் குறிக்கும். சந்திரன் மனகாரகன், சூரியன் உடல் காரகன். இருவரும் நமக்குப் பிரதானம். அடுத்து நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவும், ஆயுள் மற்றும் கர்மகாரகனான சனியும் முக்கியம். மற்ற கிரகங்கள் எல்லாம் அதற்கு அடுத்துத்தான். புத்தியே பிரதானம் என்பவர்கள் புதனையும், இல்லை சுகமே முக்கியமானது என்பவர்கள் சுக்கிரனையும் அடுத்து சேர்த்துக்கொள்ளலாம்!
--------------------------------------------------------------------------------------------------
வாக்கியப் பஞ்சாங்கப்படி குரு பகவான் 28.5.2013ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அடுத்து வரும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு அவர் அங்கே இருப்பார். அதாவது 12.6 2014 வரை அங்கே இருப்பார்
இதனால் நன்மை பெறும் ராசிக்காரர்கள். (ராசி என்பது உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை வைத்துப் பார்க்க வேண்டும். இதைப் புது முகங்களுக்காகச் சொல்கிறேன்)
1. ரிஷபம்
2. சிம்மம்
3. துலாம்
4. தனுசு
5. கும்பம்
ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நன்மைகளைத் தரும்.
1. ரிஷப ராசிக்காரர்கள் இதுவரை ஒன்றாம் இடத்துக் குருவால் அவதிப்பட்டவர்கள், அந்த அவதிகளில் இருந்து விலகி நன்மை பெறுவார்கள்
2. சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை பத்தாம் இடத்தில் இருந்த குரு இப்போது பதினொன்றாம் இடத்திற்குப் போகிறார். அது கோள்சாரப்படி அதிகமான லாபத்தைத் தரும் இடம். அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
3. துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை எட்டாம் இடத்தில் இருந்து காரியங்களை முடக்கி வைத்தவர் ஒன்பதாம் இடத்திற்கு, பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்கிறார். அது மிகவும் நன்மையானது.
4. தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை ஆறில் இருந்த குரு இப்போது ஏழாம் இடத்திற்கு இடம் மாறி ராசிக்காரர்களைத் தன் நேரடிப் பார்வைக்குக் கொண்டு வந்து ஏராளமான நன்மைகளைச் செய்வார்.
5. கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு ஐந்தாம் இடமான புண்ணிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். அதுவும் நன்மையானதே
-------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு சராசரியான (average) பலன்கள் கிடைக்கும்.
1. மேஷம்
2 கடகம்
3. மகரம்
-------------------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு நன்மைகள் எதுவும் இருக்காது
1. மிதுனம் (ஒன்றாம் இடத்துக் குரு)
2.கன்னி (பத்தாம் இடத்துக் குரு)
3. விருச்சிகம் (எட்டாம் இடத்துகு குரு)
4.மீனம் (நான்காம் இடத்துக் குரு)
----------------------------------------
சரி நன்மைகள் என்றால் என்ன?
உங்களுக்குத் தெரியாதா என்ன?
இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். எல்லோருக்குமா? அதெப்படி எல்லோருக்கும்? திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய களத்திரகாரகன், ஏழாம் இடத்துக்காரன் அல்லது லக்கினாதிபதி அல்லது இரண்டாம் இடத்துக்காரனின் திசைகளில் ஒன்றும் நடந்து கொண்டிருக்க வேண்டுமே! அப்போதுதான் திருமணம் கூடி வரும்.
கோள்சாரத்தைவிட தசா புத்திப் பலன்கள் மிகவும் முக்கியமானது. நல்ல தசா புத்திகள் நடந்து கொண்டிருந்தால் கோள்சாரப் பலன்கள் பெரிய பாதிப்பை உண்டாக்காது.
நல்ல தசா புத்தியும் நடந்து கொண்டிருந்து இப்போது குருவும் நன்மையான இடத்திற்கு இடம் மாறுகிறார் என்றால் உங்களுக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். பழம் நழுவிப் பாலில் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாய்க்குள் விழுந்ததைப் போல இருக்கும்.
அதுபோல, மோசமான தசாபுத்தியும் நடந்து, குருவும் கோச்சாரப்படி மோசமான இடத்திற்கு மாறுகிறார் என்றால், அவதிகள், கஷ்டங்கள் இரண்டு மடங்காகிவிடும்.
இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக பத்துக் கோடிப்பேர்களுக்கு ஒரு ராசி என்ற கணக்கு இருக்கும். இந்தக் குருப் பெயர்ச்சி பத்துக் கோடிப்பேர்களுக்கும் (ஒரு ராசியை வைத்து) ஒரே மாதிரியான பலனைத் தரும் என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஒருவருடைய சொந்த ஜாதகம், நடப்பு தசா புத்தி, அத்துடன் இந்தக் கோள்சாரம் ஆகிய மூன்றையும் வைத்துத்தான் பலன்கள். அதாவது நன்மை தீமைகள்.
நான் எப்போதும் சொல்வது போலவே, இப்போதும் சொல்கிறேன். ஜாதகம் என்பது கார். தசாபுத்தி என்பது சாலை, கோள்சாரம் என்பது ஓட்டுனர். இம்மூன்றும் நன்றாக இருந்தால் பயணம் அருமையாக இருக்கும். அதி சுகமாக இருக்கும். இன்னோவா ஏ.ஸி.கார். ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பர்ட் டிரைவர் என்று மூன்றுமே அமைந்தால் பயணம் சுகமாகத்தானே இருக்கும். பழைய மிலிசெண்ட்டோ பியட் கார், குண்டும் குழியுமான கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி சாலை போன்ற பாடாவதி சாலை, ஒரு எல் போர்டு ஓட்டுனர் போன்று மூன்றுமே இடக்காக இருந்தால் பயணம் எப்படி சுகப்படும்? அட்லீஸ்ட் 3ல் இரண்டாவது நன்றாக இருக்க வேண்டாமா?
ஆகவே குருப் பெயர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், நடப்பு தசா புத்தியையும் பாருங்கள்.
அத்துடன் இறைவனையும் அன்றாடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். நடக்க வேண்டியதெல்லாம் நல்லதாகவே நடக்கும். பிரார்த்தனையில் நம்பிக்கைதான் முக்கியம். அதை மனதில் வையுங்கள்.
என்னதான் பெயர்ச்சி நடக்கட்டுமே
இருட்டினில் கிரகம் மறையட்டுமே
தசாபுத்தி துணைசெய்யும் தயங்காதே (லக்கின)
காரகன் இருக்கிறான் மயங்காதே
என்ற வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

