என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார்,"யார் செல்வந்தன்?"நான் சொன்னேன் "செல்வம் இருப்பவன் எல்லாம் செல்வந்தன் இல்லை!"
அவர் விடவில்லை,"அது தெரியும் ; அதனால்தான் கேட்கிறேன்!"
"யாருக்குக் கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்!"
என்று நான் சொன்னேன்
"அதுதான் உண்மை! Health is welath!" என்று சொன்ன அவர், அதற்குப்
பிறகு ஒரு மணி நேரம் அது பற்றிப் பேசிவிட்டுத்தான் என்னை விட்டார்.
இன்று கோவையிலும், திருப்பூரிலும் பெரிய அளவில் தொழில் செய்பவர்
களுக்கு, சொத்துக்களைப் போலவே கோடிக்கணக்கில் வங்கிக் கடன்கள்
உள்ளன. 24 மணி நேரமும் பணத்தை ஈட்டும் சிந்தனையிலேயே இருப்பதால்
சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கமோ அல்லது தேவையான
அளவு தூக்கமோ இல்லாமல் தவிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்
பலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் உண்டு!
பணத்தைத் துரத்தும்போது, நோய்களையும் சேர்த்துதான் துரத்துகிறோம்
என்பதைப் பலர் உணர்வதில்லை!
--------------------------------------------------------------
இப்போது பாடம்!
தலைப்பு: ஆறாம் வீடு (The sixth house in a birth chart)
ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு
எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது.
ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி
மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes)
பற்றிச் சொல்லும் வீடு.
நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்!
தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா!
ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான்.
ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம்.
கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து
விட்டால் அது சுகம்!
அதுபோல எதிரிகளும் அப்படித்தான். நாம் நட்பு பாராட்டும் தன்மையை
ஏற்படுத்திக் கொண்டால் எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சரி, இந்த மூன்றுமே - அதாவது நோய், கடன், எதிரி ஆகிய மூன்றுமே
உங்களைக் கேட்டுத்தான் ஏற்படுமா? இல்லை! ஜாதகத்தில் கோளாறு
என்றால், எந்தக் கொம்பனாலும் அவற்றைத் தவிர்க்க முடியாது.
கதவைத் தட்டிக் கொண்டு அல்ல, கதவை உடைத்துக் கொண்டு
அவைகள் உள்ளே நுழைந்து விடும். என் அனுபவத்தில் பலரை நான்
பார்த்திருக்கிறேன்.
வந்துவிட்டுப் போகட்டும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது
அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கோ வழி இருக்கிறதா?
ஏன் இல்லை? இருக்கிறது! அதுதான் இறைவழிபாடு.
இறைவன் கருணை மிக்கவன். உங்கள் கர்ம வினைகளால் ஏற்படும்
இவற்றை எல்லாம் கடக்க அவன் உதவுவான்.
அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன். ஜோதிடமும், இறை வழிபாடும்
ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்தது.
வள்ளுவப் பெருந்தகை அசத்தலாக இப்படிச் சொன்னார்:
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்!"
அவர் மொத்தமாக மனிதப் பிறப்பையே பிணி என்று சொல்லிவிட்டார்
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு நோய்கள் இருக்கும் ; ஆனால் கடன் இருக்காது. கையில்
நிறையப் பணம் வைத்திருப்பார். இன்னொருவர் மிகுந்த உடல் நலத்துடன்
இருப்பார். ஆனால் கடன் தொல்லைகள் அவருக்கு இருக்கும்.
அவதிப்படுவதில் கணக்கிட்டால் இருவர் நிலையும் ஒன்றுதான். வில்லன்கள்
வேறுபடலாம். ஆனால் கதாநாயகி அல்லது நாயகனின் துயரம் ஒன்றுதான்
அதுபோல ஒருவர் நல்லவராக, திறமைசாலியாக இருக்கலாம். அவர்மேல்
பொறாமையும், எரிச்சலும் கொண்ட எதிரிகள் அவருக்குத் தெரியாமலேயே
இருக்கலாம்.
இந்த நிலைகளை உள்ளடக்கியதுதான் ஆறாம் வீடு. அதனால்தான் ஆறாம்
வீட்டை வைத்துப் பலன் சொல்வது மிகவும் சிரமமான காரியம். பலத்த
ஆராய்ச்சி செய்துதான் பலன் சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால்
ஜோதிடர் பொய்யாகிப் போய்விடுவார்.(ஜோதிடம் பொய்யில்லை)
ஆறாம் வீட்டை வைத்து ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வலிகள்(pains)
ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
உதாரணத்திற்கு ஆறாம் வீட்டு அதிபன் இரண்டாம் வீட்டில் அமர்ந்துவிட்டான்
என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவ்வாறு அமைப்புள்ள
அனைவருக்குமே ஒரே மாதிரித் துன்பம் வரும் என்று நினைக்க வேண்டாம்.
அந்தக் கிரகம், அமர்வினால் பெறும் உச்ச நீசம், நட்பு, பகை, அதோடு
மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை என்று ஏற்படும் வெவ்வேறு நிலைகளால்
பலன்களும் மாறுபடும்.
அவதிப்படுவது என்றாகிவிட்ட பிறகு எப்படி அவதிப்பட்டாலும் அது ஒன்றுதான்
அவதி அவதிதான். ஒருவர் நோயால் அவதிப்படலாம், ஒருவர் கடன்களால்
அவதிப்படலாம், ஒருவர் எதிரிகளால் அவதிப்படலாம். ஒருவர் துரதிர்ஷ்டங்
களினால் அவதிப்படலாம். ஆனால் அவதி அவதிதான்.
இங்கே துரதிர்ஷ்டம் என்பது சூழ்நிலைகளால் (unfortunate situations) ஏற்படுவதைக்
குறிக்கும்.
வங்கி வேலைதான் என்றாலும், ஒரு கிராம வங்கி அல்லது ஒரு கூட்டுறவு வங்கி
அல்லது ஒரு தனியார் வங்கி அல்லது ஒரு தேசிய வங்கி அல்லது ஒரு பன்னாட்டு
வங்கி என்று வங்கிகளில் வேலை பார்க்கும் சூழ்நிலைகளிலும், வருமானத்திலும்
(சம்பளத்திலும்) எத்தனை வேறுபாடுகள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!
You can call it as circumstance, or chance or unluck, but it is unfortunate!
பாடத்தைப் படித்துத் தேறுவதால் மட்டுமே ஒருவர் சரியான பலனைச் சொல்லிவிட
முடியாது. இதிலேயே ஊறி அனுபவம் பெற்றவரால்தான் நெத்தியடியாகப் பதிலைச்
சொல்ல முடியும்.
பாடம் 50% + அனுபவம் 50%
அனுபவம் என்பது பல ஜாதகங்களைப் பார்ப்பதாலும், அதுபற்றி ஜாதகர்களுடன்
பேசித் தெளிவதாலும், ஜோதிட அறிவுடையவர்களுடன் உரையாடுவதாலும்
மட்டுமே கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டைப்பற்றித் தெரிந்து கொள்ள, ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள்,
ஆறாம்வீட்டின் அதிபதி (owner), அவர் சென்று அமர்ந்த இடம் (placement),
அவரோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் (associates), ஆறாம் வீட்டில் வந்து அமர்ந்தவர்கள்,
ஆறாம் வீடு பெறும் பார்வைகள் (aspects) போன்றவற்றை அலச வேண்டும்!
மெலும் ஜாதகத்தில் உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.
யோகத்தில் அவயோகம்கூட உண்டா என்று கேட்காதீர்கள்!
அவயோகமும் உண்டு! அவற்றைப் பற்றி யோகங்கள் என்னும் தலைப்பில் பாடம்
நடத்தும்போது விரிவாகச் சொல்கிறேன்.
இன்று ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.
ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்!
அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம்
எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால்
அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.
வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற
நிலையில் நிறுத்திவிடும்!
உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால்
பயந்து விடாதீர்கள்.
அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ
அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள்
பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
-------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டு அதிபதி வெவ்வேறு வீடுகளில் அமர்ந்திருப்பதால் ஏற்படும்
பொதுப் பலன்கள் (The results of Sixth Lord occupying different houses)
1.
முதல் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying lagna in a horoscope)
நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புத்
துறையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கும். சாதாரண ராணுவ வீரராகவோ
அல்லது காமாண்டராகவோ பணிபுரிவார். அல்லது காவல் துறையிலோ அல்லது
சிறைத்துறையிலோ பணிபுரிவார். ஜாதகத்தின் மேன்மை அளவை வைத்து
அதில் பெரிய பதவி வரைக்கும் சென்று அமரக்கூடியவராகவும் இருப்பார்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் திருட்டுத்தொழிலோ அல்லது ஒரு பெரிய மோசடிக் கூட்டத்திலோ
பணியாற்ற நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying second house in a horoscope)
இது நல்ல அமைப்பு அல்ல! இது குடும்ப வாழ்க்கைக்கும், நிதிநிலைக்கும்,
கண் பார்வைக்கும், பேச்சுத்திறமைக்கும் உரிய வீடாகும். இந்த வீட்டில்
ஆறாம் அதிபதி வந்து அமர்ந்தால், ஜாதகனுக்குப் பார்வைக்கோளாறுகள்,
பற்சிதைவுகள் ஏற்படும். திக்குகின்ற பேச்சு நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கை
தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்ததாக இருக்கும். எதிரிகளால்
பண இழப்புக்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அது அந்த தீய கிரகத்தின்
தசா புத்தியில் ஏற்படும். அதே அமைப்போடு சுக்கிரனும் நீசமாகியிருந்தால்
ஜாதகன் வறுமையில் உழல்வான். பசிக்கு உணவின்றி பட்டினி கிடக்க
நேரிடும்.
-----------------------------------------------------------------------------------------------------
3
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying third house in a horoscope)
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும். அல்லது உடன்
பிறப்புக்களுக்கு அடிக்கடி நோய் நொடிகளை ஏற்படுத்தும். அதன் பொருட்டு
ஜாதகனுக்கு பண இழப்புக்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அல்லது இங்கே வந்து அமரும் ஆறாம் அதிபதி நீசமாகியிருந்தால் ஜாதகன்
வீட்டின் கடைசி ஆண் குழந்தையாக இருப்பான். ஜாதகியாக இருந்தால்
அவளுக்கு அடுத்து அவள் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்காது.
--------------------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fourth house in a horoscope)
ஜாதகன் ஒரு மோசமான வீட்டில் குடியிருப்பான் அல்லது மோசமான சூழலில்
அவன் வீடு இருக்கும். கல்வி தடைப்பட்டுவிடும். ஜாதகன் தன் அன்னையைக்
கைவிட்டுவிடுவான். தாய் மாமாக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பார்கள்
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
பெற்ற தாயுடனான உறவு தர்க்கங்களால், சண்டைகளால் சீர்கெட்டு இருக்கும்.
முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை நடத்திக்
கொண்டிருப்பான். குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fifth house in a horoscope)
நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான். தாயார் மூலம் மாமா வழிச்
சொத்துக்கள் கிடைக்கும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மனப் போராட்டம் உடையவனாக இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying his own house in a horoscope)
தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை
உடையவனாக இருப்பான். தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
இந்த வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய
உறவுகளுடன் பகை ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
7
ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying seventh house in a horoscope)
இந்த அமைப்புள்ள ஜாதகன் தாய்வழி மாமா மகளையோ அல்லது தந்தை
வழி அத்தை மகளையோ திருமணம் செய்துகொள்வான்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் விவாகரத்துப் பெற்றவனாக இருப்பான்.அல்லது மனைவி இளம்
வயதிலேயே இறந்து போயிருப்பாள். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான்
நவாம்சமும் கெட்டிருந்தால் (ஏழாம் வீடு)ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக
அழகிழந்தவளாக இருப்பாள். இதே வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின
அதிபதியும் கூட்டணி சேர்ந்தால், ஜாதகன் ஆண்மைக் குறைபாடுகள்
உடையவனாக இருப்பான். தீயபெண்களின் சகவாசத்தால் அடிக்கடி
தொல்லைகளுக்கு ஆளாகுபவனாக இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eigth house in a horoscope)
ஜாதகன் மத்திம ஆயுள் உடையவனாக இருப்பான்.
(He will die in the middle age). இது பொது விதி!
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் இதற்கு விதிவிலக்கும் உண்டு!
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவனாக
இருப்பான். பெண் வேட்டையில் ஈடுபடுபவனாக இருப்பான். மற்றவர்களை
இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying ninth house in a horoscope)
நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால், ஜாதகனின் தந்தை நீதித்துறை
யில் பணியாற்றுபவராக இருப்பார். தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில்
இருப்பார்கள்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
தந்தையுடன் சச்சரவுகள் ஏற்பட்டு சுமூகமான உறவு இருக்காது.
வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
உறவினர்களால் தீமைகள் ஏற்படும். நன்றி கெட்ட செயல்களைச் செய்ய
நேரிடும். அறவழிகளுக்கு எதிரான செயல்களைச் செய்ய நேரிடும்
--------------------------------------------------------------------------------------------------
10
பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying tenth house in a horoscope)
பாவச் செயல்கள், தீய செயல்களைச் செய்ய நேரிடும் அல்லது தொழிலாகக்
கொள்ள நேரிடும். இறையுணர்வாளர்கள் போல இருப்பார்கள். ஆனால்
கேவலமான வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சிலர் போலிச்
சாமியார்களாக இருப்பார்கள்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்வார்கள். தானும்
பயப்படக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பார்கள்.கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வார்கள். கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eleventh house in a horoscope)
மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான
புகழுடன் வாழ்வார். அவரால் ஜாதகன் பல ஆதாயங்களைப் பெறுவார்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஏழ்மை தாண்டவம் ஆடும். மோசமான சூழலில் வாழ நேரிடும். அடிக்கடி
சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெறவும் நேரிடும்
------------------------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying twelth house in a horoscope)
வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகனால்
மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------------
இவை அனைத்துமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஜாதகத்தின்
மற்ற அமைப்புக்களை வைத்து இவை கூடலாம், குறையலாம் அல்லது
இல்லாமல் போகலாம்.
----------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை எனது தட்டச்சும் நேரம் ஆகியவை
கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.
இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி அடுத்த பதிவில். அதுவரை பொறுமை காக்கவும்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
(தொடரும்)
BSNL அகண்ட வரிசை இணைய இணைப்பு இரண்டு நாட்களாக கோவைப் பகுதியில்
வேலை செய்யவில்லை. அதனால் அதிகமாகத் தவிப்புற்றது அடியேனாகத்தான்
இருக்கும். இன்று காலை முதல் வேலை செய்கின்றது. உடனே இடுகையை
வலையேற்றியுள்ளேன்!
வாழ்க வளமுடன்!
















