மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 511 - 520. Show all posts
Showing posts with label Lessons 511 - 520. Show all posts

27.2.12

Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!




Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!

சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில், ஜோலார் பேட்டைக்கு முன்னதாக இருக்கும் ஊர் வாணியம்பாடி. சென்னையில் இருந்து அந்த ஊரின் தூரம் சுமார் 200 கிலோமீட்டர்கள். அங்கிருந்து ஜோலார் பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தூரம். ரம்மியமான ஊர். பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

அருகில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடிகள் உயரத்தில் உள்ள ஊர். தோல் பதனிடுதல், மற்றும் தோலால் செய்யப்படும் ஆடைகள், கையுறைகள் போன்ற பொருட்களால் அறியப்படும் ஊர்.

பலருக்கும் தெரிந்த ஊர்தான். ஆனாலும் அந்த ஊரின் பெயர்க் காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!

உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள், இன்று அதைத் தெரிந்து கொள்வோம்!
------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 13
புனர்பூச நட்சத்திரம்
நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரம். குரு பகவானுக்கு உரிய நட்சத்திரம். ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் இது.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி,
----------------------------------
த்ற்பெருமை பேசலாமா? அதுவும் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா பேசலாமா? அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார்? தன்
அன்பு மனைவி சரஸ்வதி தேவியாரிடம் பேசினார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதைப்போல, மக்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனறு எனது பெயரைத்தான் முதலில் கூறுவார்கள்.ஏனென்றால்
உயிர்களைப் படைக்கும் நான்தான் அவர்கள் இருவரையும் விடப் பெரியவன்"

அதைக்கேட்டு கலைமகள் சிரித்து விட்டார். அது அவருக்குப் போதாத நேரம்.

கோபம் கொண்ட பிரம்மா, தன் மனைவியை சபித்து, பேசும் சக்தியற்றவளாகி விட்டார்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளுக்கு, வீணை செய்யும் ஒலியில் இருப்பவளுக்கு, பேசும் சக்தியில்லை என்றால் என்ன ஆகும்? கொடுமையல்லவா?

வருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்.

சரஸ்வதி தேவியார் தவமிருந்த சிருங்கேரியின் தற்போதைய தோற்றம்
சிருங்கேரி, கர்நாடக் மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலை வாசக ஸ்தலம். துங்கபத்ரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ரம்மியமான இடம்.
பிற்காலத்தில் ஆதி சங்கரர் அந்த ஸ்தலத்தில் 12 ஆண்டுகள் தங்கி தன் சீடர்களுக்குப் போதனைகள் செய்த இடம்.

தேவியைப் பிரிந்த பிரம்மா, பல சிரமங்களுக்கிடையே தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரைக் கண்டுபிடித்தார். சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்கையில், வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஒரு நாள் தங்கினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதியும் சரஸ்வதிக்கு அருள்செய்து, மீண்டும் பேசும் சக்தியைக் கொடுத்ததுடன், அவரைப் பாடும்படி கேட்டுக்கொண்டனர். வாணியும் பேசும் சக்தி பெற்று தன் இனிய குரலில் பாடினார். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், அந்த இடம் வாணியம்பாடி ஆனது. 
-----------------------------------------------------------------------------
இறைவனாரின் பெயர்: அதிதீஸ்வரர்
அம்பிகை: பெரியநாயகி,
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
புராணப் பெயர் : வாணியம்மைபாடி 
தற்போதையப் பெயர்: வாணியம்பாடி
மாவட்டம் : வேலூர்
திருவிழாக்கள்: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை .

முகவரி:
அருள்மிகு அதிதீஸ்வரர்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,
திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!

22.2.12

Astrology அரசனா அல்லது ஆண்டியா?



Astrology அரசனா அல்லது ஆண்டியா?

பயிற்சிப் பாடம்

அரசனா அல்லது ஆண்டியா? இப்படிக்கூடச் சொல்லலாம்: சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா? ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் அந்த இரண்டில் ஒன்று கிடைக்கும்.

உங்களுக்கு அதுபோல உள்ளதா?

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் - அப்படி இருந்தால் நீங்கள் எதை விரும்புவீர்கள்? 99% சதவிகிதம் பேர்கள் சாம்ராஜ்யத்தைத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில் இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுதான். சொல்லப்போனால் சந்நியாசம் சற்று மேன்மையானது.

"ஆடு, மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா
பிள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா" 

என்று கிராமங்களில் சொல்வார்கள். என்ன மழை, புயல் அடித்தாலும் அல்லது வற்ட்சி, பஞ்சம் எனறு என்ன அவல் நிலை நாட்டில் ஏற்பட்டாலும் அது சநநியாசியை ஒருபோதும் பாதிக்காது. அவருடைய நிம்மதியைக் குலைக்காது. பத்து நாட்கள் கூட அவரால் உணவு இன்றி தாக்குப் பிடிக்க முடியும். அந்த மன வலிமை சந்நியாசிகளுக்கு மட்டுமே உரியது.

அரச்னுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும்.

"அரண்மனை மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், அரச மரத்தடிக்கு வந்துவிடு. அது உனக்கு மகிழ்ச்சியைத் தரும்" என்பார் கவியரசர் கண்ணதாசன்.

ஆனால் பதவியில் இருக்கும் எவனும் அதைச் செய்ய மாட்டான்.

இரண்டிற்கு நான்காக கட்டிங் சரக்கை (சோமபானம், உற்சாகபானம் ) அடித்துவிட்டு, அந்தப்புரத்திற்குபோய் அங்கே மகிழ்ச்சியைத் தேடுவான். நிம்மதி முன் வாயில் வழியாக வெளியே போய்விடும். பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து பூதகரமாகி ஒரு நாள் அவனைக் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும். அப்போதுதான் அவனுக்கு ஞானம் வரும்!

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். ஐந்தில் கேது இருக்கும் ஜாதகம் ஒன்றை உங்களின் பார்வைக்காக/ ப்யிற்சிக்காக இன்று அலசுகிறேன்
--------------------------------------------------------
மகான் ராமானுஜரின் ஜாதகம்
மகான் ராமானுஜர்!

ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இருந்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு விக்கி மகாராஜாவின் தொகுப்பில் இருக்கும் செய்திகளுக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான சுட்டி!
http://en.wikipedia.org/wiki/Ramanuja
---------------------------------------------------------
அவருடைய காலம்: 1017ம் ஆண்டு முதல் 1137ம் ஆண்டுவரை
ஆமாம் அபூர்வமாக 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவர். அதுதான் அவருடைய ஜாதகத்தின் சிறப்பு! 120 ஆண்டு காலம் வாழ்ந்து மொத்தம் உள்ள ஒன்பது தசா/புத்திக் காலங்களையும் பார்த்துவிட்டுச் செல்வது என்பது லேசான செயலா? அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்குமா என்ன?
இன்று அதைக் கையில் எடுத்து, அலசி, உங்களுக்காகக் கொடுக்கின்றேன்
--------------------------------------------------------------------------------------------------

1. கடக லக்கினக்காரர். தலைமைப் பதவி வகிக்கக்கூடிய (லக்கினத்துடன் உள்ள) ஜாதகம். ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பதவி கிடைத்ததல்லவா? ரெங்கநாதப் பெருமாளின் புகழைப் பாடியவர்களில் முதன்மையானவர் என்ற பட்டம் கிடைத்ததல்லவா? அதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்?

2. லக்கினாதிபதி சந்திரன் 12ல். விரையத்தில். அதனால் அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. இறைப் பணி செய்து மேன்மையுற்றார். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவருடைய ஆக்கங்கள் பயன்பட்டன. படுகின்றன.

3. லக்கினாதிபதி சந்திரன் 12ல் அமர்ந்தாலும், உடன் பாக்கியாதிபதி குருவும் இருப்பதால், குருச்சந்திர யோகம் இருப்பதால், நல்ல வழியில் அவருடைய வாழ்க்கை அமைந்தது.

4. கடக லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் இரண்டில் - நட்பு வீட்டில் அமர்ந்து, அவருக்கு அனைத்து யோகங்களையும் பெற்றுத்தந்தான்.

5. ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில், ராகு திசையில் பிறந்த ராமானுஜர், ராகு திசை திரும்பவும் வரும் காலம்வரை வாழ்ந்து, ராகு திசையில் இயற்கை எய்தினார்.

6. ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதியும், காரகனுமான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்ததுடன், அமர்ந்த இடத்திற்கு அதிபதியான குருபகவானின் பார்வையைப் பெற்றதோடு, லக்கினாதிபதி சந்திரனின் பார்வையையும் பெற்றார். அதனால்தான் அவர் நீண்ட ஆயுளைப் பெற்றார். 120 ஆண்டு காலம் வாந்தவர் என்பதை நினைவில் கொள்ளவும்.

7. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் அவருக்கு மெய்ஞானம் வசப்பட்டது. பாகவதத்தை எளிமைப் படுத்திச் சொன்னவர் ராமானுஜர். ஆதி சங்கரரின் கோட்பாடுகளை, எளிமைப் படுத்தி எழுதியவர் ராமானுஜர்.

8. ஐந்தில் அமர்ந்த கேதுவும், பதினொன்றில் அமர்ந்த ராகுவும், ராமானுஜரின் உயர் அறிவை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர, புகழ்பெற அவருக்கு உதவி செய்தன!

9. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் ராகு அமர்ந்தால் ஜாதகனுக்கு மகாசக்தி யோகம் உண்டாகும். அவருக்கு மகாசக்தியும், இறையருளும் முழுமையாகக் கிடைத்தது.

10. ஐந்தில் கேது அமர்ந்தால் ஒன்று சாம்ராஜ்ய யோகம் அல்லது சந்நியாச யோகம் என்பது விதி. அவர் சந்நியாசியாகிப் புகழ் பெற்றார்.

11. பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான் அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.

12. நான்காம் வீட்டிற்கு (இந்த ஜாதகரின் கல்விக்கு) அதிபதியான சுக்கிரன், புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனுடன் சேர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், இந்த ஜாதகத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (வாக்கு ஸ்தானம்) அதிபதியாகவும், உச்சமாகவும் உள்ள சூரியனோடு சேர்ந்து 4ஆம் வீட்டைப் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான் அவர் அறிவு ஜீவியாகவும் விளங்கினார்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

21.2.12

Astrology ரேவதிசந்திரன்



Astrology ரேவதிசந்திரன்

ஆஷா கேளுன்னி குட்டி என்ற நடிகை திருமதி ரேவதியை நமக்கெல்லாம் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாராதிராஜா அவர்கள்
தன்னுடைய மண்வாசனை என்ற வெற்றிப் படத்தில் அவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு உதயகீதம், வைதேகி காத்திருந்தாள்,மெளனராகம்,
அரங்கேற்றவேளை போன்ற பல வெற்றிப்படங்களில் தன் நடிப்பால் கலக்கியவர் அவர்.

யார் அவர் ரேவதி சந்திரன்?

27 நட்சத்திரத் தேவியர்களில் ஒருவர்தான் அவர். மக்களுக்கு அழகைக் கொடுக்கக்கூடிய சந்திர பகவானை விரும்பி (உங்கள் மொழியில் சொன்னால்
காதலித்து) மணந்து கொண்டவர் அவர்.

சந்திரனை மணந்து கொண்டதால் அவர் ரேவதிசந்திரனாகிவிட்டார்

இன்று அவரைப்பற்றிப் பார்ப்போம்!
------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 12
ரேவதி நட்சத்திரம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
-----------------------------------
முன்னரே 26 நட்சத்திர தேவிகளை மணந்த சந்திர பகவான்,சும்மா இருக்காமல் கடைசி நட்சத்திர தேவியான ரேவதியையும் மணந்தார். வந்தவள், தன்
நாயகனோடு சேர்ந்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசிக்க விரும்பினாள். கருணை கொண்ட அம்பிகை காட்சி கொடுத்தார். அந்த இடமே
இத்தலத்தில் சிவனாருக்கு ஒரு கோவிலுடன் சிறப்புப் பெற்றது.

மேகங்கள் எல்லாம் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன வாம். எனவே ரேவதி நட்சத்திரத்தன்று இங்கு வருண பகவானுக்குப் பிரார்த்தனை செய்தால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தட்டுப்பாடின்றி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்கு மெனற நம்பிக்கை நிலவுகிறது. விவசாயிகள் பெருமளவில் வந்து வணங்கிச் செல்லும் கோவிலாகும் இது

காசிக்கு அடுத்து காருகுடி என்ற சொல்லடைலை இத்தலத்திற்கு ஏற்பட்டுள்ளது. காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். நோய் தீர்க்கும் தலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

முற்காலத்தில் நாமக்கல்லிற்கு அருகில் உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான்.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோர வீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம்,
நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

அந்தக் கோவில்தான் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவிலாகும்
-------------------------------------------------
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சுவாமியின் பெயர்: கைலாசநாதர்
அம்பிகையின் பெயர்: கருணாகரவல்லி
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்

 
கோவிலின் விலாசம்:
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்
காருகுடி கிராமம் - 621 210
தாத்தயங்கார் பேட்டை அருகில்,
முசிறி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முசிறி நகருக்குச் சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டைக்குச் செல்ல வேண்டும். அந்த ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காருகுடி கிராமத்திற்குச் சென்றால கோவிலை அடையலாம்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தல இறைவனை வணங்கலாம். இக்கோவிலில் பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும் என்பதும், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையைக் கேள்வி கேட்காமல் சொல்லியுள்ளபடி பிரார்த்தனையை மட்டும் செய்யுங்கள்

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

20.2.12

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

அருள்மிகும் அண்ணாமலையார்

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவியரசர் கண்ணதாசன். சரி, மனைவி சரியாக அமைவிட்டால், ஏற்றபடி கிடைக்கா விட்டால், அது யார் கொடுத்த வரம்? அது அவ வரம். அவஸ்தை. அதற்கெல்லாம் யாராவது வரம் கொடுப்பார்களா? அப்படி இருந்தால், அது நாம் வாங்கி வந்த வரம். முன் ஜன்ம பூர்வ புண்ணியப்படி வாங்கிவந்த வரம். பிறக்கும்போதே வாங்கிவந்த வரம். முன் ஜன்மம், பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு (Posting) அல்ல!
--------------------------------------------------------------------------
ஜாதகத்தில் வாங்கிவந்த வரம் - குறிப்பாக மனைவியைப் பற்றிய செய்திகள் தெரியுமா?

ஏன் தெரியாது? தெரியும்.

நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள். லக்கினத்திற்கு ஏழாம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் டேரா போட்டு உட்கார்ந்து கொண்டாலும், அல்லது தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில்
உட்கார்ந்து கொண்டாலும், நல்ல மனைவி அமைவது கடினம்.
அதுதான் முதல் விதி (First Rule) இன்னும் பல விதிகள் உள்ளன. அதைப்
பற்றி மேல் நிலைப் பாடத்தில் விரிவாக அலசுவோம்.

இப்போது ஒரு புள்ளி விவரம் தருகிறேன். நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள் என்பது தெரியுமல்லவா? அப்படி உள்ள 12 லக்கினங்களில், இரண்டு லக்கினக்காரகளுக்கு மேற்சொன்ன அமைப்பில் - டிஸ்க் சுழற்சியில் - இரண்டு லக்கினக்காரர்களுக்கு மட்டும் ஏழாம் வீட்டுக்காரன் "கட்டிங்" அடித்துவிட்டு, அந்த வீடுகளில் போய் படுத்துக்கொண்டு விடுவான். அதாவது 7th lord in the 12th place from lagna or 7th lord in the 12th place from his own house

சுருக்கமாகச் சொன்னால், 2/12 = 1/6, தினம் பிறக்கும் குழந்தைகளில் ஆறு பேர்களில் ஒருத்தருக்கு (That is one out of six) நல்ல மண வாழ்க்கை - அதாவது விரும்படியான மண வாழ்க்கை அமையாது. இதை நீங்கள் உங்கள் உறவினர்க்ள அல்லது நண்பர்கள் வட்டத்தில் சோதனை செய்து கொள்ளலாம்

அதுபற்றி பின்னால் (பிறகு ஒரு நாள்) விவரமாகப் பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
அது என்ன சார், ஒரு மனைவிக்கே திண்டாட்டமாக இருக்கும்போது, 27 மனைவிகளா?

ஆமாம், அது பற்றி நாளை பார்ப்போம். இன்று அதைவிட முக்கியமான வேலை உள்ளது. வேலை என்பதைவிட கடமை உள்ளது என்று சொல்லலாம்
--------------------------------------------------------------------------------------------
இன்று சிவராத்திரி

மிகவும் விஷேசமான தினம்

ஒவ்வொரும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று, சிவபெருமானை பிரார்த்தனை செய்ய வேண்டும். வருடத்திற்கு 13 தடவைகள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும்

365 வகுத்தல் 27 = 13.5 = இரண்டு ஆண்டுகளுக்குள் உங்களுக்கு 27 ஜன்ம நட்சத்திரங்கள் வரும்.

மாதம் ஒருமுறை தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சிவனைப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், குறைந்த அளவு சிவராத்தியன்றாவது சிவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பிரார்த்தனைக்கான பாடல்:


நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

(இன்னும் வரிகள் உள்ளன.முழுப்பாடலையும் தேடிப்பிடித்துப் படியுங்கள்)

இது சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த பாடல். மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில் - செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே அப்படி!

வட இந்தியாவில் சிவராத்திரியை மக்கள் விஷேசமாகக் கொண்டாடுவார்கள். சிவராத்திரியைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்திக் கிடைக்கும் செய்திகளைப் படித்து பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Maha_Shivaratri

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
கீழே உள்ள படங்கள் நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியுள்ளார்கள். உங்கள் பார்வைக்காக அவற்றை வலை ஏற்றியுள்ளேன்

பெருந்துறைப் பிராட்டியார் உடன் உறை சப்தரிஷீர்வரவர் - ஊற்சவ மூர்த்தியாக அலங்காரத்தில் வலம்வரும் காட்சிகள்! திருவாதிரை உற்சவத்தில் எடுக்கப்பெற்ற படங்கள்

1
2
3
4

----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

15.2.12

Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

ஸ்ரீவரதராஜப் பெருமாள்

திருக்கோவிலின் முகப்புத் தோற்றம்
Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 11
கேட்டை நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
-----------------------------------
ஆழ்வார்களில் முதன்மையானவர் ராமானுஜர். சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த அவர், சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.
1,017 ஆம் ஆண்டுமுதல் 1,137ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். வாழ்ந்தவர் என்று சொல்வதைவிட, வாழ்ந்த காலத்தில் பெருமாளுக்கு சேவைகள் செய்தவர்.

திருவரங்கம்  சென்று அங்கேயே தங்கி ரங்கநாதருக்கு சேவை செய்தவர். மக்களின் பார்வை வைணவத்தின் மேல் விழும்படியாக பல பாசுரங்களை இயற்றியவர்

அவர் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு அரசனுக்கு நிகரான புகழைப் பெற்றிருந்தார். அவருடைய குரு பெரிய நம்பிகளும் சீடர் கூரத்தாழ்வாரும் அவருடனேயே தங்கியிருந்தனர்

ராமானுஜர் புகழ் பெற்று விளங்குவதைப் பொறுக்காத சோழ மன்னன் ஒருவன், அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படி தனது படை வீர்ரர்களை அனுப்பினானாம். புகைப்படங்கள், செய்தித்தாள்கள் இல்லாத காலம், ராமானுஜரை அடையாளம் தெரியாது. ஆகவே வந்தவர்களிடம் தன் குருநாதர் மாட்டக்கூடாது என்று நினைத்த ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு, சோழப் படையினரிடம் சென்று நான்தான் ராமானுஜர் என்று சொல்லி, அவர்களுடன் சென்றாராம. அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் (என்ன பெயருடா சாமி!) சென்றார்களாம்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும்படி மன்னன் சொல்ல, சென்றவர்கள் மறுக்க, இருவரின் கண்களையும் பறிக்கும்படி கூறித் தண்டனை கொடுத்துவிட்டானாம் அந்தச் சோழ மன்னன். கூரத்தாழ்வார், தன் கண்களைத் தானே குத்திக்கொண்டு பார்வை இழந்தாராம் சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினார்களாம்.

பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்துகொண்டு வந்து தங்கிய தலம்தான் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றது. பெரிய நம்பிகளுக்கு வயது 105. வயதான காலத்தில் கண்களை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானாராம். அவர்மீது கருணை கொண்ட வரதராஜப்பெருமாள், அவருக்குக் கண்பார்வை அளித்துக் காட்சி கொடுத்ததோடு, அவருக்கு வைகுண்டப் பிராப்யதியையும் வழங்கி அருள்பாலித்தாராம்.

பசுபதி கோவில் என்னும் அத்தலத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்தான் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்!

அக்கோவிலில் பெரியநம்பிகளுக்குத் தனி சன்னிதானம் உள்ளது

பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவராம். அன்றைய தினம் கோவிலில் அவரது திருநட்சத்திர விழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் அவருக்குப் பூஜை உண்டு.

கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க அவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை, அதிரசம், வடை நைவேத்யம் முதலியவற்றுடன் அந்த வழிபாட்டை அவருக்குச் செய்கின்றனர்.

மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை அங்கே நிலவுகிறது. அந்த எண்ணெய் கோயிலில் கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்ளலாம்!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்திலுள்ளது பசுபதிகோவில். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 9 மணிவரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை.

வரதராஜ பெருமாள் மட்டுமின்றி பெருந்தேவி தாயாரும் அங்கே அருள் பாலிக்கின்றார்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்து பலனைப் பாருங்கள்

கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று. மக்களின் முட்டாள் தனம் அது! நட்சத்திரங்கள் எல்லாம் சமமானவையே! ஒரு கேடும் வரப்போவதில்லை. ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்.

கேட்டை நட்சத்திரத்திற்கு மட்டும் ஒரு சின்ன குறைபாடு உண்டு. சந்திரன் நீசமாகியிருப்பான். கேட்டை நட்சத்திர ஜாதகர்களுக்கு லக்கினத்தை வைத்துப் பலன்கள் வித்தியாசப்படும். அவற்றை வேறு ஒரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

14.2.12

Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?



Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 10
ஆயில்ய நட்சத்திரம்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
-------------------------------------------
துர்வாச முனிவர் என்றால் நமக்கு அவருடைய கோபமும், சகுந்தலைக்கு அவர் கொடுத்த சாபமும்தான் நினைவிற்கு வரும்.

சகுந்தலையின் காவியததை எழுதிய மாபெரும் கவிஞன் காளிதாசன், அந்த நிகழ்வை விவரிக்கின்றான்.

அதாவது சகுந்தலை தன் காதலன் துஷ்யந்தனைப் பற்றிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தாளாம். அந்த நேரத்தில் அங்கே வந்த முனிவரை அவள் கண்டு
கொள்ளவில்லையாம். உடனே பிடி சாபம் என்று சாபமிட்டுவிட்டார் துர்வாசர். அவளது காதலன் அவளை மறந்து விடுவான் என்பதே சாபம்

சகுந்தலை விடுவாளா? முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பைப் பெற்று அந்த சாபத்திற்கு விமோசனம் தேடியதுடன், தன் காதலனைச் சேர்ந்தாளாம்.

அந்தக் காலத்தில் காளிதாசன் எழுதிய காதல் கதை அது.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காளிதாசர். அதை மனதில் வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்
-------------------------------------------------------
வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்திலும் துர்வாசர் காணப்படுகின்றார்.

மகாபாரத்த்திலும் அவர் வருகிறார். குந்திக்கு அதர்வ மந்திரத்தை போதித்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது.

அவ்விரண்டு நிகழ்வுகளுமே வெவ்வேறு யுகங்களில் நடைபெற்றன.

சத்ய யுகம், த்ரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு பிரிவுகளாகச் சொல்லப்படுகின்றன. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது.
மகாபாரதம் துவபார யுகத்தில் நிகழ்ந்தது. காளிதாசர் நம் யுகத்து ஆசாமி.

குழப்பம் என்ன்வென்றால், துர்வாசர் எப்படி மூன்று யுகங்களிலும் தலை காட்ட முடியும்?

அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.

காலகட்டங்களை மற்ந்து விட்டு சொல்லப்படும் செய்திகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
--------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த புதுக் கதைக்கு வருகிறேன்

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் சிவபூஜை செய்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆசாமி ஒருவன் துர்வாசரின்
நடையைப் பார்த்து, " நடையா, இது நடையா, நண்டின் நடையல்லவா தெரிகின்றது" என்று கேலி செய்து பாட்டுப்பாடியதுடன், அவரைப் போல நடந்தும் காட்டினானானம். துர்வாசர் எசப்பாட்டு (எதிர்வினைப் பாட்டு) பாடாமல், அவனை அக்கணமே நண்டாகும்படி சபித்து விட்டாராம்.

அவன் தன் செயலுக்கு வருந்தி, மன்னிப்புக் கேட்டு வேண்டினானாம்.

அவர் அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று அங்கு உறையும் சிவனாரைப் பூஜித்து சாப விமோசனம் பெறச் சொன்னாராம, துர்வாசரின்
அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றானாம் அவன். சிவனின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை
இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் அவர் கற்கடேஸ்வரர் என்னும் பெயர் பெற்றார் உள்ளூர் வாசிகள் சிரமப்பட்டு கற்கடேசுவரர் திருக்கோவில் என்று சொல்லாமல் சிம்ப்பிளாக நண்டுக்கோவில் என்று சொல்கிறார்கள்

அந்தக் கோவில்தான் ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் கோவில். அதாவது அந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
---------------------------------------------------------
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இறைவனின் பெயர்: கற்கடேஸ்வரர்
அம்மனின் பெயர்: அருமருந்துநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
காலம்: சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஆலயம்
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:: திருந்துதேவன்குடி, தஞ்சை மாவட்டம்
சிவராத்திரி, மற்றும் திருக்கார்த்திகை நாட்களில் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி:
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்,
திருந்துதேவன்குடி - 612 105.
வேப்பத்தூர் போஸ்ட்,
திருவிடைமருதூர் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம்.

பிணி நீக்கும் சிவன என்று பெயர் பெற்றவர் இங்கே உறையும் சிவனார். ஆகவே பிணி உள்ள மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்திற்குச் சென்று வழிபடலாம். இவரைப் பிணி நீக்கும் சிவன் என்று சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து குலுக்கல் வண்டி (ஆட்டோ) வசதியும் உண்டு.

வடமொழியில் ஆயில்ய நட்சத்திரத்தின் பெயர் அஷ்லேஷா

இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள மற்ற கோவில்கள். போகிறது போகிறீர்கள் அவற்றையும் பார்த்துவிட்டு வாருங்களேன்.

ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருவிடைமருதூர்
திருமங்களக்குடிக் கோவில்,
சூரியனார் திருக்கோவில்
திருவிசை நல்லூர் திருக்கோவில்
சரபேஸ்வரர் திருக்கோவில் திருப்புவனம்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனை வந்து பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

13.2.12

Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!



Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!

பயிற்சிப்பாடம்

பணம் இருப்பவர்களில் சிலர் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை! அதீத பணம் இருந்தால் அது வைத்திருப்பவனைச் சும்மா இருக்க விடாது.

    "ஒரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதீத, தேவைக்கு மேலே பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்"  என்ற் திரைப்பட வசனம் ஒன்று உண்டு. அது உணமை.

அதீத பணம் வைத்திருப்பவன் அதைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டியதிருக்கும். வங்கியில் போட்டு வைத்தால், அது பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அங்கே வட்டி குறைவு. இன்றைய நிலையில் பண வீக்கத்தைவிட (inflation) வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணம் வளரும் விகிதம் குறைவு.

Definition of 'Inflation' The rate at which the general level of prices for goods and services is rising, and, subsequently, purchasing power is falling. பணப்பபுழக்க விகிதம் Statistically determined measure of the rise in price levels and therefore the decline in the value of money. The inflation rate shows the percentage change in price levels over a given period (month, year).

ஆகவே அதைச் செய்வதற்குத் தயங்குவான். பணம் பல மடங்கு பெருக வேண்டும் என்று ஆசைப் படுவான். இடம், நிலம் அல்லது வீடுகளை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

வசதிக்குத் தகுந்தாற்போல இரண்டு அல்லது நான்கு மனை இடத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்குவான். தி.நகர், வடபழநி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் வாங்குவதற்கு ஆசைப்படுவான். செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் புறநகர்ப் பகுதிகளில் 4 ஏக்கர் அல்லது 8 ஏக்கர் இடத்தை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

அப்படிப்போட்டவர்களின் கதையை, அவர்கள் வாங்கிய சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடராக எழுதி பெரிய புத்தகமாகப் போடலாம் அந்தஆளவிற்கு என்னிடம் கதைகள் உள்ளன. அப்படிச் செய்து மேன்மை அடைந்த இண்டு பேர்களை நீங்கள் காட்டினால், சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நான்கு பேர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அதற்கெல்லாம் காரணம் என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரம்!

இருப்பது போதும். வருவது போதும் என்று உங்களால் ஏன் இருக்க முடியவில்லை?

முப்பது ஆண்டுகள் மாங்கு மாங்கென்று துபாயில் குப்பை கொட்டியவன் என்ன சாதித்திருப்பான் என்று பார்த்தால், சென்னை திருவான்மியூர், அடையாறில் போன்ற பகுதிகளில் இரண்டு வீடுகளை வாங்கியிருப்பான். காரைக்குடி அல்லது புதுக்கோட்டையில் ஒரு வீட்டை வாங்கியிருப்பான். மனைவியை, குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு, இளமையை, இனிமையைத் தொலைத் திருப்பான். வளைக்கரங்களின் அணைப்பைத் தொலைத்திருப்பான், அவள் கைச் சாப்பாட்டைத் தொலைத்திருப்பான். தொலைத்ததெல்லாம் கணக்கில் வராது. அதுதான் அவலம்!

வாங்கியதெல்லாம் கணக்கில் வரும். வாங்க மறந்தது அல்லது வாங்க விடுபட்டதெல்லாம் (அவனுடைய) கணக்கில் வராது!

தினத்தந்தி, மக்கள் தொலைக்காட்சி, பூப்போன்ற சாதம், கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைப்பூ உசிலி, அம்பிகா அப்பளம், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய், பாஸந்தி, காராச்சேவு, ஃபில்டர் காப்பி,  மாலை நேரத்தில் கோவில் வளாகத்தில் வீசும் காற்று, மல்லிகைப்பூ பிடறியை மறைக்க பேசும் கண்களை உடைய பெண்கள் என்று வாழ்க்கையின் பல சுவைகளை இழந்திருப்பான்.


இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். தங்களின் வ்றுமையான குடும்பச் சூழலை மாற்றியமைப்பதற்காகச் சென்ற தியாக மனப்பான்மை உள்ளவர்களும் இருக்கிறார்கள். தியாக உள்ளங்களுக்கு புறச் சுகங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.

அப்படிப் பலவற்றைத் தொலைத்து வாங்கிய சொத்துக்களை பிறகு பார்ப்போம். சிலருக்கு வம்சா வழியில் வந்த சொத்துக்களும் பிரச்சினைகளை உண்டாக்கும். தந்தையார் தான் உயிரோடு இருக்கும்போதே பிரித்துக்கொடுக்க மாட்டார். பிரித்துக்கொடுத்தால் பசங்க தன்னைத் திராட்டில் விட்டு விடுவார்கள் என்று பிரித்துக்கொடுக்க மாட்டார். புத்திசாலித் தந்தை உயில் எழுதிவைத்துவிட்டுப்போவார். சில அசமந்தங்கள் அதையும் செய்யாது.

டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்பா மேலே போன பத்தாம் நாள் காரியம் செய்வதற்குள்ளேயே சண்டை வலுத்து அடிதடிவரை போன குடும்பங்களை எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் ஆசைதான் காரணம்
--------------------------------------------------------
அசையாத சொத்துக்களின் (immovable properties) நிலைமை என்ன?

அசையாத சொத்துக்கள் இல்லாதவர்களைப் பற்றிக் கவலை இல்லை,
இன்று உலகில் பாதிப் பேர்கள் உறவுகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லாதவர்கள்.சொந்த வீடு, நில புலம் இல்லாதவர்கள். அதனால் கவலை இருந்தாலும், அவற்றை வைத்துப் பிரச்சினை இல்லாதவர்கள். அதே நேரம் கொடுத்து வைத்தவர்கள்

  "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
    அதனின் அதனின் இலன்" 

எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.

என்று சொல்லி வைத்துள்ளார் பொய்யாமொழிப் புலவர்.

அவர் சொல்லிவைத்துள்ளார் என்பதற்காகச் சராசரி மனிதனால் பற்றில்லாமல் இருக்க முடியாது. தங்களுடைய சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது கவலைப் படாமல் இருக்க முடியாது .பட்டினத்தார் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியப்படலாம்.

சிக்கல் வருவது எல்லாம் நம் கையிலா இருக்கிறது. அது விதிக்கப்பட்டது. அப்படி வரும்போது, அந்தச் சிக்கல் தீருமா? அல்லது தீராதா? எப்போது தீரும் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.

அசையாத சொத்துக்களுக்கு அதிபதி 4ஆம் வீட்டுக்காரன். அவன் ஆறாம் வீட்டில் குடியிருந்தாலோ, அதாவது அமர்ந்திருந்தாலோ, அல்லது ஜாதகத்தில் நீசமாகியிருந்தாலோ. அசையாத சொத்துக்கள் கிடைப்பது சிக்கலாகிவிடும்

ஒரு உதாரண ஜாதகம் கொடுத்துள்ளேன். பாருங்கள்.



1. 4ஆம் அதிபதி சனி நீசம்.
2. 2ஆம் அதிபதி குரு ஆறில்
3. லாபாதிபதி புதன் நீசம். கேதுவோடு கூட்டு! லாப ஸ்தானத்தில் ராகு
4. சுக்கிரன் எட்டில்

இந்த அமைப்புக்களால், சொத்துக்களை வைத்து ஜாதகனுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். வம்பு, வழக்கு எதிரிகள் என்று பல அவஸ்தைகளைச் ஜாதகன் சந்திக்க வேண்டியதாயிற்று.

இதுபோன்ற அமைப்பு இருந்தால் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்று சும்மா இருக்க வேண்டியதுதான்

இருக்க முடியுமா?

விதி இருக்க விடாது!

அதுதான் விதி. விதிப்படிதான் வாழ்க்கை!

ஜாதகப்படி சொத்து கிடைக்கும் என்றால் கிடைக்கும்
ஜாதகப்படி சொத்து கிடைக்காது என்றால் கிடைக்காது
ஜாதகப்படி சொத்து நிலைக்கும் என்றால் நிலைக்கும்
ஜாதகப்படி சொத்து நிலைக்காது என்றால் நிலைக்காது

இறைவழிபாடு ஒன்றுதான் சற்று நிம்மதியைத் தரும். கூடுதலாக மகிழ்ச்சியைத் தரும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

8.2.12

Astrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்புறீங்க?


 Astrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்புறீங்க?

பயிற்சிப் பாடம் - Key Points - பகுதி 3

உங்கள் வீட்டிற்கு இரு புறமும் தாதாக்கள் குடியிருந்தால் என்ன ஆகும்? ஏதாவது அடிதடி என்றால் உங்களுக்கும் சேர்த்து அடிவிழுகும். அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணக்காக - என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காக - உங்களையும் கூட்டிக் கொண்டுபோய் வதைக்கலாம்.

இன்னொன்றையும் யோசியுங்கள். அந்தக் காலத்தில் பொதுமகளிர் எல்லாம் வீடுகளில் குடியிருந்து கொண்டே தொழில் செய்தார்களாம். அதுபோல உங்கள் வீட்டிற்கு இரு புறமும் அந்த மாதிரிப் பெண்கள் இருந்தால் உங்கள் நிலை என்ன ஆகும். சரக்கடித்துவிட்டு, அவர்களைத் தேடி வருகிறவன், குடி மயக்கத்தில் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டித் திறக்கச் சொல்லி தகராறு செய்யும் அபாயம் இருக்கும்

அதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள நமக்கு முக்கியம். நமது நன்மைக்கும், அமைதிக்கும் முக்கியம்.

அதுபோல ஜாதகத்தில் ஒருவீட்டின் இருப்க்கமும் தீய கிரகங்கள் இருந்தால், அந்த வீட்டிற்கு அது கேடானது.

அதற்குப் பாபகர்த்தாரி யோகம் என்று பெயர். பாபிகளால் சூழப்பெற்ற வீடு - அதற்குரிய கேடுகளை அனுபவிக்க வேண்டும் என்று பொருள்

இன்று அதைப் பற்றி ஒரு பர்ர்வை பார்ப்போம்!
----------------------------------

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.

6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.

10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

சரி, சுப கர்த்தாரி யோகம் என்கிறார்களே - அது என்ன? அதன் பல என்ன?

அது மேல் நிலைப் பாடம் அதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

8.2.2012

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

7.2.12

Astrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்?


7..2..2012 செவ்வாய்க் கிழமை

Astrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்?
பயிற்சிப்பாடம்

"காசேதான் கடவுளப்பா - அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
நீதேடும்போது வருவதுண்டோ
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ

என்ற பாடல் வரிகள் 1972ஆம் ஆண்டு வந்த திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகள். பாடல் அசத்தலாக இருக்கும். காணொளியின்  சுட்டியைக்
கீழே கொடுத்துள்ளேன். அதைக் கிளிக்கிப் பிறகு பாருங்கள்.  
இப்போது பதிவைப் படியுங்கள்
-----------------------------------------------------------------
பெற்ற தாய், தந்தையைத் தவிர மனிதனால்
எதையும் விலைக்கு  வாங்கமுடியும். ஆனால் காசை வைத்து
அப்படிச் சொல்லும் மனிதனையே விலைக்கு வாங்கமுடியும்.
அதுதான் இன்றைய நிலை!

பொருளாதாரம் சார்ந்த நவ நாகரீக உலகில் அனைவருக்கும் பணம் அதி முக்கியமாகத் தேவையானதாகும். யாரும் பணத்தைத்  தேவையில்லை
என்று சொல்ல முடியாது. பணத்தை வேண்டாம் என்று சொல்ல முடியாது. துறவறம் மேற்கொண்டுள்ளவர்கள் கூடப் பணம் இன்றி உயிர் வாழமுடியாது. பிறந்தது முதல் இறைவனடி சேரும்வரை பணம் இன்றி வாழ்க்கையில்லை.
-----------------------------------------------------------------
தேவை வேறு ஆசை வேறு!

எல்லோருக்கும் தேவையான அளவு பணம் கிடைக்கிறதா?

அதுதான் இல்லை.

தொகைதான் வித்தியாசம். எண்ணிற்குப் பின்னால் வரும் ஜீரோக்கள்தான் வித்தியாசம். உங்களுக்கும் எனக்கும் பணம் ஆயிரங்களில் வேண்டும். ஆனால் அம்பானிகளுக்கும், பிர்லாக்களுக்கும், மோடிகளுக்கும், மிட்டல்களுக்கும் கோடிகளில் வேண்டும்.

சரி தேவையை விட்டு விடுவோம்.

பணம் பற்றாமல் short fall ல் வாழ்பவர்களையும், கடன் சுமையோடு வாழ்பவர்களையும் எண்ணிப்பாருங்கள்.

அவர்கள் மனதில் தோன்றுவதெல்லாம் அல்லது கேட்பது எல்லாம் “எங்கள் பணப்பிரச்சினை எப்போது தீரும்?”

அதற்குரிய நேரம் வரும்போது தீரும்.

நேரம் எப்போது வரும் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

ஜாதக ரீதியாக ஒரு சிறு அலசல் அலசுவோம்!

1. ஏழரைச் சனி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
2. ஆறாம் இடத்து அதிபதியின் திசை அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
3. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்த இடத்தின் அதிபதியின் திசை அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
4. ஆறாம் இடத்து அதிபதி, பத்தாம் இடத்தானுடன் கூட்டாக இருந்து, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அவர்களுடைய திசை

அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்

ஜாதகத்தைப் பாருங்கள்.


1. இரண்டாம் அதிபதி சுக்கிரன் 4ஆம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்து பன்னிரெண்டில். நான்கில் ராகு. சுகக்கேடான ஜாதகம்.
2. இரண்டாம் அதிபதி  (Lord for house of finance) சுக்கிரன் பன்னிரெண்டில் அமர்ந்ததால், ஜாதகனுக்குக் கடும் பணப் பிரச்சினை உண்டானது.

ஆனால் அவன் ஜாதகத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் உள்ளதால், தன்னுடைய திசையில் ஜாதகனின் பணப்பிரச்சினைகள  அனைத்தையும் தீர்த்துவைத்தான்.

உச்சமான கிரகங்கள், தங்களுடைய திசைகளில் பலத்த நன்மைகளைச் செய்யும். அதுவும் சுபக்கிரகமாக இருந்தால் நன்மையான பலன்களே அதிகமாக இருக்கும். அதை மனதில் வையுங்கள்.

பண வரவிற்கு இன்னும் சில அமைப்புக்கள் உள்ளன. அது மேல் நிலைப் பாடத்தில் வரும். இங்கே அல்ல. இங்கே வந்தால்  திருட்டுப்போய்விடும். ஆகவே வாத்தியாரின் தனி இணைய தளத்தில் வரும். இரண்டு ஆண்டுகள் கழித்து மேல் நிலைப் பாடங்கள் புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.
-----------------------------------------------
"வாத்தி (யார்), இரண்டு ஆண்டுகள் எதற்கு? அதற்கு முன்னதாகவே வராதா?"

"முதலில் இதுவரை எழுதிய பாடங்கள் அனைத்தும் புத்தகங்களாக வரும். மொத்தம் 3 அல்லது 4 பகுதிகள். அவைகளுக்கு உள்ள ஆதரவைப் பார்த்துவிட்டு, அவைகள் விற்றுத் தீர்ந்தவுடன், அடுத்த பகுதிகள் அச்சிடப்பெறும். அதற்குத்தான் அந்த இடைவெளி கண்ணா!

"அதெல்லாம் விற்றுவிடும். பதிப்பகத்தாரிடம் சொல்லி, வரிசையாகத் தொடர்ந்து வெளியிடுங்கள்"

"எனக்கு மக்களின் மேல்  பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்கு இலவசங்கள் மீதல்லவா காதல் இருக்கிறது!"


http://youtu.be/2gNNDIjDXKE:  Our sincere thanks to the person who uploaded the video clipping
-----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

31.1.12

Astrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?


Astrology  பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 9

அவிட்ட நட்சத்திரம்

கோரக்கர் என்னும் பெயரைக்கொண்ட சித்தர் ஆலயங்களுக்கு யாத்திரையாக வந்தபோது, இத்தலத்திற்கு வந்தாராம். வந்தவர் இங்கே உறையும்
சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, அருகில் இருந்த மடம் ஒன்றில் தங்கினாராம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் மடங்களும், வீட்டுக்கு வீடு திண்ணைகளும் இருந்தன. வழிப்போக்கர்களும், பயணிகளும் இரவு நேரத்தில் தங்கிச் செல்வார்கள்.

அப்படி மடம் ஒன்றில் தங்கிசென்றபோது கோரக்கர் (என்ன பெயருடா சாமி) ஒரு சோதனைக்கு உள்ளானார். பல பக்தர்கள் முன்பே அங்கு தங்கியிருந்தனர்.
அவர்களோடு ஒரு ஓரமாகப் படுத்திருந்த கோரக்கர் அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழித்தவருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அருகில்  ஒரு இளம் பெண் படுத்திருந்தாள். அத்துடன் அவளுடைய சேலைத்தலைப்பு விலகி, இவர் மேற்கிடந்தது. அப்பொழுதெல்லாம் ஒன்பது முளம் சேலை. பெண்கள் ரவிக்கை (Blouse) அணிவதில்லை. அதனால் இறுக்கி முடிந்துகொண்டுதான் படுப்பார்கள். அப்படி இருந்தும் எப்படி விழுந்தது என்று தெரியவில்லை.கோரக்கர் மிகவும் வருத்தமுற்றார்.

அதற்குப் பரிகாரமாக தன் கையை வெட்டிக் கொண்டு விட்டார். பிறகு அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் தினமும்
இருமுறை நீராடி, வெட்டுப்பட்ட கையோடு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லித்தாயாரையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவனார் அந்தச் சித்தருக்கு அருள்பாலித்தார். சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை என்ற பெயர் உண்டானது. தனது வெட்டுண்ட கையால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் அது கொருக்கை என்று மாறி விட்டது.

பிரம்மாவிடம் இருந்த வேத நூற்சுவடிகளை அசுரரகள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். அந்த நிகழ்வால், பிரம்மாவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. படைப்புத் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவர் இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, பாதப்பிரதட்சணம் செய்து தினமும் சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நன்நாளில், சிவன் பிரம்மாவிற்கு ஞானம்  (wisdom) கொடுத்தார். அதனால் பிரம்மா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி முன்போலவே சிறப்பாகச் செயல் புரிந்தார். அதனால் இத்தலநாதன் பிரம்ம  ஞானபுரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்.

இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தி. சிவனுக்கும் அம்பிகைக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த  காரியம் நடக்கும் என்பது இங்கே நிலவும் நம்பிக்கை.
     
அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை என்னும் கிராமத்தில், பட்டீஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. அந்தப்
பட்டீஸ்வரம்  கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரம்மஞானபுரீஸ்வரர். தாயாரின் பெயர், அதாவது அம்பிகையின் பெயர் புஷ்பவல்லி.  கோவிலின் முன் உள்ள திருக்குளத்தின் பெயர்: சந்திர புஷ்கரிணி. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட புராதனக்கோவில். கோவிலின் நடை காலை 11 மணி முதல் 1  மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.

மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கிச் சுகமடைய இத்தல இறைவனை வழிபாடு செய்வது நல்லது. அத்துடன் கல்வியில்  சிறக்க, திருமணத் தடைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்வதும் நல்லது. அதாவது நன்மை பயக்கும்!

ஆவணிமாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பெளர்ணமியும் சேர்ந்துகொள்ளும். அன்றைய தினம் இங்கே வந்து வழிபடுதல் மேன்மை உடையதாகும்

கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்து, இத்தலத்திற்கு திருப்பணி செய்வது நல்லது. அது புண்ணியக் கணக்கில்  வரும்! பணத்தை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்களேன்!
+++++++++++++++++++++++++++
ஆவணி அவிட்ட நட்சத்திரம் பற்றிய மேலதிகத்தகவல்:



கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

 சோ  நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.

கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?

சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா  வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான்
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.

தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம்  நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.

ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து  விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம்  உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.

நன்றி: திருவாளர் சோ.ராமசாமி அவர்கள் மற்றும் சோ அவர்களின் செய்திகளைத் தொகுத்தளித்த திருவாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: மகிழ்ச்சியான செய்தி - வாத்தியார் வெளியூர்ப் பயணம். நாளை ஒருநாள் வகுப்பறைக்கு விடுமுறை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!