மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.24

Astrology - தோஷம் எத்தனை தோஷமடா?

Astrology - தோஷம் எத்தனை தோஷமடா?

சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத்திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!
கசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?
ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள்
அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.10.24

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

Astrology -  ஆடும்வரை ஆட்டம்!!

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப்படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்றவர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப்படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலையமாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------
உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!
ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?

அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.10.24

Astrology - ஆனாலும் வரும்!

Astrology -  ஆனாலும் வரும்!

”செந்தமிழ் தேன் மொழியாள்  
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!

என்னவொரு வர்ணனை பாருங்கள்.

அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!

உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.

அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?

தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை

இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!
அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.24

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

”காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை” 

என்று, பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர் கண்ணதாசன், பாடலின் முடிவில் இப்படி எழுதியிருப்பார்:

”காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!”

உண்மையிலேயே, காதலிக்கும் யோகத்தை, நல்ல காதலி கிடைக்கும் யோகத்தை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? அதற்கு உரிய வீடுகள் என்ன? அதற்கு உரிய கிரக அமைப்புக்கள் என்ன?

அதை  இன்று பார்ப்போம்!
----------------------------------
ஜோதிடப்படி லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீடு, அன்பு, நேசம், காதல், மெல்லிய உணர்வுகளுக்கும் உரிய வீடாகும். ஏழாம் வீடு கணவன் அல்லது மனைவிக்கு (spouse) உரிய வீடாகும். அந்த இரண்டு வீட்டு அதிபதிகளின் மேன்மையான கூட்டணி (Association) காதலை உண்டாக்கும். நல்ல காதலி கிடைப்பான் அல்லது பெண்ணாக இருந்தால் நல்ல காதலன் கிடைப்பான். கிறங்க வைக்கும் காதல் உணர்வில் காதலர்கள் திகட்டும் வரை (திகட்டாது. காதல் திகட்டியதாக சரித்திரம் இல்லை) திளைப்பார்கள்.

அதாவது, அந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அல்லது இருவரும் பார்வையால் ஒன்று பட்டிருக்க வேண்டும். அல்லது சேர்க்கையால் ஒன்று பட்டு, கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காதல் திருமணம்!

அந்த கிரகங்களின் தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.24

Astrology - என்ன செய்யும் கோச்சாரம்?


Astrology - என்ன செய்யும் கோச்சாரம்?

கோள்சாரம் அல்லது கோச்சாரம் என்பது இன்றைய தேதியில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும்! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து, அதாவது உங்களுடைய சந்திர ராசியை வைத்து அதைப் பார்க்க வேண்டும். எண்ணும்போது ராசியையும் சேர்த்து எண்ண வேண்டும்.

கோச்சார கிரகங்கள் என்ன செய்யும்? தீய கோள்சாரங்கள் தொல்லைகளைக் கொடுக்கும். சிரமங்களைக் கொடுக்கும். சனீஷ்வரன் கோச்சாரத்தில் 8ம் இடம், 12ம் இடம், 1ம் இடம் இரண்டாம் இடங்களில் இருக்கும் காலங்களில் (மொத்தம் 10 ஆண்டு காலம்) தீமையான பலன்களையே கொடுப்பார்.

அப்படி ஒவ்வொரு கிரகமும் கோச்சாரத்தில் அதிகமான தொல்லையைக் கொடுக்கும், அதாவது ஜாதகனுக்கு அதிக அளவில் தீமையான பலன்களைக் கொடுக்கும் இடத்தைப் பற்றி முனுசாமி அதாங்க நம்ம முனிவர், பாடல் ஒன்றின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார்

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
கேளப்பா குரு மூன்றில் கலைதானெட்டு
   கேடுசெய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
   சீறிவரும் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
   அப்பனே திசையினுடைய வலுவைப்பாரு
மாளப்பாகுற்றம் வரும் கோசாரத்தாலே
   குழவிக்குதிரியாணங் கூர்ந்து சொல்லே!
              - புலிப்பாணி முனிவர்

குரு - 3ம் இடம்
கலை (சந்திரன்) 8ம் இடம்
சனி - 1ல்
புந்தி (புதன்) - 4ல்
சேய் (செவ்வாய்) - 7ல்
கதிரோன் (சூரியன்) 5ல்
கரும்பாம்பு - நிதியில் - 2ல்
அசுர குரு - சுக்கிரன் - 6ல்
இருக்கும் காலத்தில் அதிகமான தீமைகளைச் செய்வார்களாம்.
அக்காலத்தில் ஜாதகனுக்கு நல்ல தசா/புத்திகள் நடந்தால் ஜாதகனுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் இருக்காது. தசா நாதர்கள்/புத்தி நாதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.10.24

Astrology - போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Astrology - போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

மனிதர்களுக்கு கிடைக்கும் வேலையில்தான் எத்தனை வகைகள்?

சிலர் சேரும் வேலையிலேயே, அது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ, கடைசிவரை அதிலேயே  உழன்று விடுவார்கள்.அதாவது இருந்து விடுவார்கள்.

சிலர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியில் சேர்ந்து பணியாற்றத் துவங்கிவிடுவார்கள். அதே வங்கியில் 35 வருடங்களோ அல்லது 38 வருடங்களோ தொடர்ந்து பணியாற்றிவிட்டு, பணி ஓய்வு பெறும் வரை அந்த வங்கியிலேயே பணியாற்றுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து பணி செய்துவிட்டு இப்போதுதான் பணி ஓய்வு பெற்றார்.

ஆனால் சிலர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக,  சட்டையை மாற்றுவதுபோல அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.

ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

அதற்குக் காரணம் என்ன?

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.  
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். 
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். 
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். 
இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்

Mesha, Kataka, Thula and Makar are movable astrology signs, 
Rishaba , Simha ,Vrischika and kumbha are fixed signs. 
Mithuna, Kanya, Dhanu and Meena are known as common signs.
-------------------------------------------------------
1. பத்தாம் அதிபதி (10th Lord) உபய ராசியில் (common signs) அமர்ந்திருப்பதோடு,  சனி, அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், வேலையில் மாற்றங்கள் இருக்கும்.

2. அதே போல 12ஆம் அதிபதி (12th lord) பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒரே வேலையில் இருக்க விடமாட்டான்.

மேலே கூறியுள்ள இரண்டு அமைப்புக்களும், சுப கிரகங்கள் ஏதாவது ஒன்றின் பார்வையைப் பெற்றிருந்தால், அது விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.10.24

Astrology - மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Astrology - மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் திரைப்பட நாயகிகளைப் பற்றி எழுத உள்ளேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது ஜோதிடத்தில், முக்கிய மறைவிடங்களான ஆறாம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீட்டைப் பற்றியது.

அவற்றிற்கு தீய இடங்கள் என்று பெயர் (innimical places)

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோர் அங்கே சென்று அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உரிய விதத்தில், உரிய காலத்தில் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!

அதைவிட முக்கியமாக அந்த இடங்களுக்கு வேறு சூட்சமங்களும், வேறு முக்கிய செயல்களும் உள்ளன.

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
மறைவிடங்களின் முக்கியத்துவம்!

1.எட்டாம் வீடு ஒரு மனிதன் வாழும் காலத்தையும், அவனுக்கு மரணம் ஏற்படும் விதத்தையும் சுட்டிக்காட்டும்.

2.ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதிகளின் (Owners) நிலைப்பாட்டை வைத்து மரணம் ஏற்படும் காலத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

3. ஆறாம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் தீய கிரகங்கள் இருந்தாலும், அதாவது அங்கே சென்று அவர்கள் குடியிருந்தாலும், ஆறாம் வீட்டு அதிபதியும், எட்டாம் வீட்டு அதிபதியும் தீயவர்களாக இருந்தாலும், அவர்களில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடைய தசாபுத்திக் காலங்களில் ஜாதகன் போர்டிங் பாஸ் வாங்கிவிடுவான். மேலே போய்விடுவான். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

4. எட்டாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் (That is the planets aspecting the eighth house) மரணம் இயற்கையாக இருக்குமா அல்லது இயற்கையில்லாமால் துன்பம் நிறைந்ததாக இருக்குமா என்று தெரியவரும்.

5. எட்டாம் வீட்டைத் தங்கள் பார்வையில் வைத்திருக்கும் சுபக்கிரகங்கள் ஜாதகனுக்கு இயற்கையான மரணத்தைக் கொடுக்கும். இயற்கையான மரணம் என்பது உடற்கோளாறுகளை வைத்தோ அல்லது மூப்பின் காரணமாக (old age) உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை இழந்தோ வருவதாகும்

மரணத்தில், சாலை விபத்து, தீ விபத்தில் துவங்கி 28ற்கும் மேற்பட்ட மரணங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துப் பத்துப் பக்கங்களுக்கு விரிவாக எழுதலாம். தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.10.24

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:

”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”

 அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்

”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”

தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.

1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.24,000/-
80 ஆண்டுகளில் சுமார் 1850 மடங்கு உயர்ந்துள்ளது.

19ஆம் ஆண்டில்  கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.12
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.20

அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.500/-
அதே விகித்ததில் பார்த்தால் சுமார் 2000 மடங்கு உயர்ந்துள்ளது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 25,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு பவுன் காசு) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது

அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய மதிப்பு 24 லட்ச ரூபாய்கள்

எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்

தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?

செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை சரியத் துவங்கும்

”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.

பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும் முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.

தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள் சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.24

Astrology - பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

Astrology -  பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

அவை என்னென்ன?

விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல் நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.

ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow

அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1.  செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்
2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்
4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தி     சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.
5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ    பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

இதெல்லாம் பொது விதி. 

விதிவிலக்கு உண்டா? 

உண்டு!

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.24

Pooja Greetings from Vaaththiyar


Pooja Greetings from Vaaththiyar



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.24

Request by Vaaththiyar




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.10.24

Astrology - பரதேசம் போவது எப்படி?


Astrology - பரதேசம் போவது எப்படி?

யாராவது பரதேசம் போக விரும்புவார்களா? என்னடா வாத்தியார் இப்படித் தலைப்பிட்டிருக்கிறார் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஜாதகப்படி பரதேசம் போகும் அமைப்பு சிலருக்கு இருக்கும். நாம் போக விரும்பாவிட்டாலும், அல்லது அப்படிப்போகும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவை இரண்டையும் சொல்வதுதான் ஜோதிடம். அதைத் தெரிந்து கொள்வதால் ஒன்றும் கெட்டுப்போய் விடாது. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

பரதேசிகள் அலைந்து திரியும் இடம்தான் பரதேசம். முதலில் பரதேசி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

பரதேசி என்றால் ஊர் ஊராகச் சுற்றித்திரியும் பிச்சைக்காரன் என்று அகராதில் குறிப்பிடப்பெற்றுள்ளது. (wandering beggar). குடும்பத்தைத் துறந்து வெளியேறிய துறவிகளையும் அது குறிக்கும்

அந்தக் காலத்தில் பரதேசம் என்றால் நாடுவிட்டு நாடு போவதைக் குறிக்கும். இப்போது அப்படியெல்லாம் போக முடியாது. விசா பிரச்சினை குறுக்கே வந்து நிற்கும். ஆகவே உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது என்று பொருள் கொள்ளலாம்.

சரி, பரதேசம் போவதற்கான ஜாதக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------------
பாரப்பா ஈராறோன் இரு நான்கோனும்
   பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
   கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீசசந்திரனும் கண்ணுற்றாலும்
   சிலகாலந் தங்கியிருந்து செம்பொன் தேடி
ஆறப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
   அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே!
                       - புலிப்பாணி முனிவர்

ஈராறோன் என்றால் பன்னிரெண்டாம் அதிபதி (12th Lord)
இரு நான்கோன் என்றால் எட்டாம் வீட்டுக்காரன் (8th Lord)
செவ்வாய் என்றால் நம் அனைவருக்கும் தெரியும்

ஆக அம்மூவரும் கூட்டாக ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் பரதேசம் போவானாம்.

சரி, விதிவிலக்குண்டா?

நீச சந்திரன், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள தேய்பிறைச் சந்திரன், அம்மூவரையும் தன் பார்வையால் பார்த்தால் சற்று விதிவிலக்கு உண்டு. அதாவது ஜாதகன் போவதை அது தடுத்து நிறுத்தாது. ஆனால் சிலகாலம் ஜாதகன் சுற்றித்திரிந்து தங்கம் முதலான பொருட்களுடன் திரும்ப வீடு வந்து சேர்வானாம். பொருள் ஈட்டிக்கொண்டு வருவான். அல்லது உங்கள் மொழியில் சொன்னால் எங்காவது ஆட்டையைப் போட்டுக்கொண்டு வருவான்.

வந்து, தன் நாயகி, தன் மக்களுடன் சேர்ந்தால் சரிதான்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.10.24

Astrology - பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?


Astrology -  பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?

புரட்சித் தலைவரின் பழைய படப் பாடல் ஒன்று உள்ளது: “ஹலோ...ஹலோ சுகமா? இப்போ நீங்க நலமா?” என்ற பல்லவியுடன் துவங்கும். படம் ‘தர்மம் தலை காக்கும்’

நான்காம் வீடுதான் சுக ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால் இந்தப் பல்லவிக்கு வேலையே இல்லை. ஆசாமி எப்போதும், எந்த சூழ்நிலையிலும் சுகமாக இருப்பான்.

அந்த வீடு நன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? சுகக்கேடுதான்.
சுகககேடு மட்டுமா? வேறு சில கேடுகளும் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
   கெடுதி செய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா செனித்த மனை சுத்தபாழாம்
   சென்மனுக்கு கிரகமுண்டு விதியும் கூறு
கூளப்பா குளிகனுமே சேர்ந்து நிற்க
   குடியிருக்க குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
   அத்திடலில் அரவுக்கு சாந்தி செய்க!
          - புலிப்பாணி முனிவர்

நான்காம் வீட்டில் சனி, ராகு, அல்லது கேது போன்ற தீமையான கிரகங்கள் இருப்பது சுகக்கேடு.

நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். தாய், கல்வி, சுகம் (வீடு, வண்டி வாகனங்கள்). சரி, நான்காம் வீடு அடிபட்டுப்போயிருந்தால் இந்த இலாக்காக்கள் மூன்றுக்குமே கேடா?

அது பொது விதி! தாய்க்கு சந்திரனும், கல்விக்கு புதனும், சுகத்திற்கு சுக்கிரனும் மந்திரிகள் (authorities) அவர்களுடைய நிலைமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் (உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கப் பரல்களில் 5ம் அல்லது 5ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு கொடுத்து விடுவார்கள்) அவன் தப்பித்துவிடுவான்.

இல்லை என்றால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதாயிருக்கும்.

அந்த வீட்டில் கேது வந்து அமர்ந்திருந்தால், அது கேடானது என்று முனுசாமி (அதாங்க முனிவர்) அடித்துச் சொல்கிறார். அது பொதுப் பலன் என்றாலும் கொஞ்சமாவது வேலை செய்யும்.

என்னென்ன கேடு என்கிறார்? ஜாதகன் பிறந்த வீடு பாழாகிப் போகும் என்கிறார். அதாவது அடையாளமின்றிப் போகலாம். அதுவும் கேதுவுடன் மாந்தியும் சேர்ந்திருந்தால், கேட்கவே வேண்டாம், ஜாதகனுக்கு குடியிருக்க வீடு இருக்காது. வீட்டில் மாடு, கன்று இருக்காது.
முனுசாமி காலத்தில் மாடு கன்றுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அத்துடன் ஜாதகனுடைய தாய்க்கும் அது கெடுதியானது என்கிறார்.

அரவுக்கு சாந்தி செய்க என்கிறார். அதுதான் பரிகாரம் என்கிறார். பாம்பை வளர்த்து வணங்கவும் முடியாது. பாம்புப் புற்றில் தினமும் பால் வார்க்கவும் முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.

ஆகவே எல்லாம் வல்ல இறைவனைத் தினமும் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அத்துடன்  ஜென்ம நட்சத்திரத்தன்று கேது ஸ்தலத்திற்கும் சென்று கேது பகவானை வழிபட்டு வரலாம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.24

Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?


Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?

செவ்வாயின் இரட்டை வேடம்.

ஒரு படத்தின் நாயகனுக்குப் படத்தில் இரட்டை வேடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் கதாநாயகனும் அவரே, வில்லனும் அவரே என்றால், எந்த வேடத்தில் அதிகமாகக் காட்சி கொடுப்பார்?

காட்சி கொடுப்பது முக்கியமில்லை. எந்த வேடத்தில், படத்தின் முடிவில் அவர் வெற்றி பெறுவார்? வில்லன் வேடமே வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

செவ்வாய்க்கு அந்த நிலைமை உண்டு!

விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்திற்கும் உரியவன், ஆறாம் வீடான மேஷத்திற்கும் உரியவன் அவன்.

ஆறாம் வீடு வில்லங்கமான வீடு என்பது நமக்குத் தெரியும். ஆகவே நாம் விருச்சிக லக்கினக்காரர்கள் என்றால் அதிகமாகக் கவலை கொள்வோம்.

செவ்வாய் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால், அதாவது உச்சம் பெற்றோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலோ அல்லது அஷ்டகவர்க்க சுயபரல்களில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ,  ஜாதகனுக்கு மொத்தமாக நாயகன் வேலையை மட்டுமே செய்வார். தவறி வலிமையின்றி இருந்தால், அதாவது ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தாலும் அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் நீமைகளையே செய்வார்.

எப்போது செய்வார்? தனது தசா புத்திகளில் செய்வார். அப்படிப்பட்ட நிலைமை உடைய ஜாதகர்கள், சம்பந்தப்பட்ட புத்திக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இறைவழிபாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும்

செவ்வாய்க்கு மேஷம்தான் மூலத்திரிகோண வீடாகும். ஆகவே அவர் வலிமையுடன் இருந்தால், லக்கினத்துடன் இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து இரட்டிப்பு நன்மைகளைச் செய்வார்.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.24

Astrology - வம்பும், வழக்கும்!


Astrology -  வம்பும், வழக்கும்!

வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!

ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும். 

பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.

ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்

ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.

பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!

கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும். 

இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.24

Astrology - பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

Astrology - பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

மொழி என்பது நம் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. பேசுவதாகட்டும், படிப்பதாகட்டும் அல்லது எழுதுவதாகட்டும் சிலருக்கு மட்டுமே மொழியில் ஆளுமை இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் அந்தத் திறமை இருக்கும்.

முதலில் நம் தாய்மொழி நமக்கு வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது அதிகம் பேர்களுக்குத் தெரிந்த ஆங்கிலமும் வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து கூடுதலாக இன்னும் ஒரு மொழி தெரிந்திருந்தால், அவர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும். உதாரணத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், அவர்களால் பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற முடியும். 

மொழியின் மேன்மை நாம் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று தங்கும்போதோ அல்லது அங்கே பயணிக்கும் போதே தெரியவரும்!

ஒருவர் பன்மொழிகளில் திறமை பெற்று விளங்க ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------
1. குரு பகவான் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் ஒன்பதாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும், ஜாதகனுக்குப் பன் மொழித் திறமை இருக்கும்.
2. வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது இருந்தாலும் ஜாதகனுக்கு மொழிகள் வசப்படும்.
3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்

மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு மலேயா மொழியில் பேசத் தெரியும். அதுபோல இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கும். மும்பை, தில்லி போன்ற நகரகங்களில் இருக்கும் தமிழர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கும். ஆனால் பிறருடன் பேசுவதற்கு மட்டுமே தெரிந்த நிலை என்பது, அடிப்படை நிலைதான். அந்த மொழிகளில் படிப்பதற்கும், தவறின்றி எழுதுவதற்கும் திறமை இருக்கும் நிலையில்தான் அந்த மொழி அவர்களுக்கு வசப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஆகவே ஒருவருக்குப் பன்மொழிகளில் பேசும் திறமை இருக்கலாம். எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே உங்களுக்கு எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது. ஜாதகப்படி அது கிடைத்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா? என்று ஒரு கவிஞர் அசத்தலாக பல்லவியைத் துவக்கினார். இன்னொரு கவிஞர் பெண்ணின் பார்வை ஒருகோடி அது பேசிடும் வார்த்தை பலகோடி என்று எழுதினார். பெண்ணின் கண்கள் பேசும் மொழிக்கெல்லாம் கணக்குக் கிடையாது. ஜாதகமும் கிடையாது:-)))))

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.10.24

Astrology - எது மேலானது ? கையா அல்லது காலா?

Astrology - எது மேலானது ? கையா அல்லது காலா?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் எது மேலானது? எது நம்பகத்தன்மை மிகுந்தது? எது உயர்வானது?

இரண்டுமே மேலானதுதான். பிரித்துச் சொல்ல முடியாது!

கைகள், கால்களில் எது மேலானது? அல்லது எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டுமே மேலானதுதான். இரண்டு முக்கியமானதுதான். அவைகளில் ஒன்று இல்லாதவர்களை அல்லது ஒன்றில் குறைபாடு உள்ளவர்களைக்கேளுங்கள் அற்புதமாகப் பதில் தருவார்கள்.

மருத்துவத்தில் எது மேலானது அலோபதியா அல்லது ஹோமியோபதியா அல்லது ஆயுர்வேதமா அல்லது நாட்டு வைத்தியமா எது மேலானது என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உயர்ந்ததுதான்! அந்தத்துறையில் உள்ள விற்பன்னர்களின் (Experts) கையில் அவைகள் எல்லாமுமே மேலானதுதான்

பிறந்த நேரத்தில் தவறு இருந்தால், ஜாதகம் தவறாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் கைரேகை தவறாகிப் போவதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ்!

ஆனால் ஜோதிடத்தின் பிரம்மாண்டம் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. அது மட்டும் உண்மை!
-----------------------------------------------------------------------------------------------
கைரேகை சாஸ்திரத்தில் மேதை ஒருவர் இருந்தார். உலகம் அறிந்த, உலகமே போற்றிய மனிதர் அவர்

அவருடைய பெயர் ’சீரோ’ (Cheiro)

வில்லியம் ஜான் வார்னர் என்பது அவரது முழுப்பெயர்.
வாழ்ந்த காலம்: 1.11.1866 முதல் 8.10.1936 வரை
சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.
ஐரீஷ்காரர்.
கைரேகை சாஸ்திரம், ஜோதிடம் எண்கணிதம் என்று எல்லாவற்ரையும் ஒருகை பார்த்தவர்.
வாழ்ந்த காலத்தில் பல உலகப்பிரமுகர்கள் அவருடைய அபிமானிகளாகவும், வாடிக்கையாளராகவும் இருந்தார்கள்.
அதிரடியாக பலரது எதிர்காலத்தைக் கணித்து துல்லியமாகச் சொல்லியவர் அவர்.
இந்தக் கலைகளை எல்லாம் தான் கற்றுத் தேர்ந்தது இந்தியாவில்தான். இந்தியர்களுக்கு என்றும் கடைமைப்பட்டுள்ளேன் என்று தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசின் கையைப் பார்த்துவிட்டு, இவன் அரியணை ஏறமாட்டான் என்று அதிரும்படியாகச் சொன்னவர் அவர். அதுபோலவே நடந்தது. தன் காதலிக்காக நாட்டையே துறந்துவிட்டுச் சென்ற இளவரசன் அவன்.

அதுபோல தன் மரணத்தைத் துல்லியமாகச் சொன்னவர் அவர். தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் பெரிய விருந்து கொடுத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றவர் அவர். அன்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இதுபோன்று அவரைப்பற்றிப் பல செய்திகள் உள்ளன. பிறகு ஒரு நாள் அதை விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்

1.10.24

Astrology - ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

Astrology - ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும்" 
- திருவள்ளுவர்.

(ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கம் உயிரைவிட மேலானதாகப் பேணிக் காக்கப்படும்)

முற்காலத்தில் எல்லா மக்களும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதி, அதைக் கடைப்பிடித்தார்கள். ஆணோ அல்லது பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள். சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களைத்  தண்டிப்பதற்கு யாரும் இல்லை. எந்த அமைப்பும் இல்லை. அதிகம் படித்தவர்களாகவோ அல்லது செல்வந்தர்களாகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையில் ஒழுக்கத்தை மீறினாலும் அது தப்பில்லை என்ற நிலையே இன்று காணப்படுகிறது.

தென் இந்தியாவில் உள்ள பெரிய நகரம் இன்றில் கருத்தடை மாத்திரைகள்தான் அதிகமாக விற்கிறதாம். பல இளம் பெண்களின் கைப்பையில் லிப் ஸ்டிக்குடன் கருத்தடை மாத்திரைகளும் தவறாமல் இருக்குமாம். எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!
---------------------------------------------------------------
ஒழுக்கமற்றவர்களை இம்மாரல் கேரக்டர் என்பார்கள்.

immoral = wicked, sinful, ஒழுக்கமற்ற, கெட்ட, தீய, பாவகரமான, நெறியற்ற என்று பொருள்
immorality:
1. The quality or condition of being immoral.
2.An immoral act or practice.
3.The quality of not being in accord with standards of right or good conduct

சரி, அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்தால், அல்லது ஒருவருக்கொருவர் பார்வையில் இருந்தால், ஜாதகனின் அல்லது ஜாதகியின் ஒழுக்கத்திற்கு வேட்டு வைத்துவிடுவார்கள். வேட்டு வைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

Venus and Mars cause immorality. 

ஏழாம் வீடு இவ்விருகிரகத்தாலும் பாதிக்கபெற்றிருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

பத்தாம் வீடு அல்லது பத்தாம் வீட்டின் அதிபதி பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தாலும் ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள்.
---------------------------------------------------------------
மனிதர்களில் இரண்டு வகை:

1.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் ஒரு வகை
2.எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை

இரண்டாம் வகை ஆசாமிகளிடம் நீங்கள் கேட்டால் என்ன சொல்வார்கள்?

What is wrong in it yaar? Life is short, enjoy it yaar என்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!