++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூல் நயம்: உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள் என்று சொல்வதைப் போல, வள்ளுவரின் திருக்குறளை நயந்து எழுதும் நூல்கள் எல்லாம் ஒப்பற்ற நூல்கள்தான்.
வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, சிறந்த நூல் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் உவகை கொள்கிறேன்.
கதை, கவிதை, கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள மகிழ்விப்பதாக அமையும் தன்மையைக் குறிக்கும் சொல் நயம் என்னும் சொல்.
artistic beauty, literary beauty, merit என்று ஆங்கிலத்தில் வகைப் படுத்துவதை தமிழில் ஒரு சொல்லால் விளங்க வைத்துவிடலாம். அதுதான் செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பு.
இந்திய வருவாய்த் துறையில் பணி புரியும் உயர் அதிகாரி திரு. சி. இராஜேந்திரன் அவர்களால் எழுதப்பெற்ற ‘திருக்குறள் உவமை நயம்’
என்னும் ஒப்பற்ற நூல், படிப்பவர்களின் மனதில் படிக்கும்போது
ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.
நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்
புத்தகத்தைப் பிரித்தவுடன் 'முகவுரை' பகுதியில் தன்னுரையாக திரு. சி. இராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!
“ஓர் இனத்திற்குப் பண்பாடும், நாகரிகமும்தான் ஆணிவேர்
போன்றவை. ஆணிவேர் ஆழமாகச் சென்றால்தான் ஒரு மரம்
நிலைபெற்று நிற்கும். அதன் கிளைகளும் பல திசைகளில் பரவி,
தளிர்த்து, இலைவிட்டு, பூத்து, காய்த்து, கனி தந்து பயனுள்ளதாய்
விளங்க முடியும். வேர்களை மறந்த மரங்களுக்கு வாழ்க்கையில்லை.
நமது முன்னோர்கள், அவர்கள் உணர்ந்து எழுதி வைத்து விட்டுச் சென்ற அரிய, ஏற்புடைய கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள்தான் நமது பண்பாட்டையும், நாகரிகத்தையும் நமக்கு உணர்த்துபவை.
அவற்றை மறந்து ஓர் இனத்திற்கு வளமான வாழ்க்கை இல்லை.
நாம் நமது இலக்கியங்களில் ஆழக் கால் ஊன்றி அதிலுள்ள
கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டால்தான், நமக்கும்,
மற்றவர்களுக்கும் பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும்”
புத்தகம் பிறந்த கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?
அறத்துப்பாலில் 22ம் பொருட்பாலில் 56ம் இன்பத்துப்பாலில் 19ம் ஆக மொத்தம் 97 அதிகாரங்களில் உள்ள உவமைகள், நயமாக, விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன!
எனக்குப் பிடித்த நிலையாமை அதிகாரத்தில் உள்ள உவமைகளை நூல் ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரா என்றுதான் முதலில் தேடிப் படித்தேன். அதில் 4 குறள்களின் உவமை நயம் சிறப்பாக எடுத்துச்
சொல்லப்பெற்றிருக்கிறது.
“கூத்தாட்டு அவைக்குழாத் தற்று பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று”
- குறள் எண் 332
கூத்தாட்டுக் களத்துக்கு ஒவ்வொன்றாய் வரும் மக்கள் கூட்டம் போல் செல்வம் சிறிது சிறிதாக வரும். ஆனால் போகும்போது கூத்தாட்டுக் களத்திலிருந்து கூத்து முடிந்ததும் செல்லும் பெரும் மக்கள் கூட்டத்தைப் போல சிறுகச் சிறுகச் சேர்த்த பெருஞ்செல்வம் விரைந்து ஒரேயடியாகச் சென்றுவிடும்.
தமிழ் - இயல், இசை, நாடகம் - என மூன்று வகைப்படும். கூத்து என்பது நாடகத்தமிழ். கூத்தின் மூலம் மக்களுக்கு நல்ல பல கருத்துக்களையும், நமது பண்பாட்டையும், கலைஞர்கள் விளக்கிக் கொண்டிருந்த காலம் அது.......என்று தொடர்கிறது நூலாசிரியரின் விளக்கம்.
“பீலிபெய் சாகடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் - குறள் 475 (வலி அறிதல் அதிகாரம்)
மயிலறகே ஆனாலும் வண்டி தாங்கும் அளவிற்கு ஏற்றாமல்
அளவிற்கு மிஞ்சி ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும்
என்று வள்ளுவப் பெருந்தகை மயிலிறகை வைத்து உவமையாகச்
சொன்ன இந்தக் குறள் மட்டும் பள்ளிப் பாடத்தில் படித்ததினால்
பலருக்கும் தெரியும். வேறு இரண்டு உவமை நயங்களைச்
சொல்லுங்கள் என்றால் பலரும் விழி பிதுங்க விழிப்பார்கள்.
ஆகவே இந்த நூலில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள உவமை நயங்களை எல்லாம் படித்து அனுபவிக்கும் போது வள்ளுவரின் மேன்மை மேலும் பளிச்சிடுகிறது.
படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.
ஒரு உயர் அதிகாரிக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்தாலும், எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது திகைப்பிற்கு உரிய விஷயம். ஆர்வம் இருந்தால் போதும் என்று பதில் சொல்லாமல் ஒரு இரண்டு பக்கங்கள் எழுதிப் பாருங்கள், அப்போது தெரியும் நன்றாக எழுதுவது என்பது வரம் என்று!
வள்ளுவரின் உவமை நயங்களை, நயம்பட தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் 288 பக்கங்களைக் கொண்டது. சிறந்த முறையில் அச்சிடப்பெற்றுள்ளது.
Nightingale Binding என்னும் முறையில் பக்கங்கள்படிப்பதற்கு வசதியாகக் கட்டமைத்துக் கொடுக்கப் பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பார்க்கும்போது அதன் விலை குறைவுதான். விலை ரூ. 125:00 மட்டுமே
நூலில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முத்துக்கள். எல்லாவற்றையும் எடுத்து எழுத நான் விரும்பினாலும் பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது! அதேபோல மிகவும்
அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக் குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும். ஒரு புத்தக விமர்சனத்தில் அதைச் செய்வதும் சரியல்ல!
ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்.அதுதான் நூலைச் சிறப்பாக எழுதிய திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.
பதிப்பாளர்களின் முகவரி:
கவிதா பப்ளிகேஷன்
8, மாசிலாமணி தெரு,
பாண்டி பஜார், தி. நகர்
சென்னை - 600017
தொலைபேசி எண்: 24364243, 24322177
நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!