சென்னிமலை முருகன்
கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் சென்னிமலை
ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக் கோவில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மலை மீது அமைந்துள்ள திருத்தலம் இதுவாகும். இதன் சிறப்பு, இன்று உலகமெல்லாம் பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர், இந்த தலத்தில் உள்ள முருகபெருமான் முன்னிலையில் அரங்கேற்றினார்.
ஈரோடு-கோவை செல்லும் வழியில் இங்கூர் என்ற ரெயில் நிலையத்தி லிருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சென்னிமலை. ஈரோட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு தூரம். பெருந்துறையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு. கடல் மட்டத்தி லிருந்து 600 மீட்டர் உயரத்தில், 1320 படிக்கட்டுக்களுடன் மலையில் உள்ள கோவில் ஆகும். மலை உச்சி வரை பஸ் செல்லும் வசதி உண்டு. தேவஸ்தானத்தில் தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
நொய்யல் ஆற்றுக்கு அருகில் ஒரு விவசாயி ஒரு பசு வளர்த்து வந்தார். அந்த பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் மட்டும் பாலை சொரிந்தது. இதை கவனித்த அந்த பசுவின் உரிமையாளர், என்ன காரணத்தால் இந்த இடத்தில் மட்டும் பாலை தானாகவே சொரிகின்றது என்று அறிந்து கொள்ள, அந்த இடத்தை தோண்டியபொழுது, அந்த இடத்தில் ஒரு அழகிய முருகப் பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல அழகிய வேலப்பாடுகளுடன் இருந்தது.
சிலையிலிருந்து பீறிட்ட ரத்தம்
கீழ் பகுதி கரடு முரடாக இருந்தததால், அதை உளி கொண்டு செதுக்க முனைந்தபொழுது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டதாம். அதைக் கண்டு பயந்து போய் ஓடி விட்டார். பின்னர் அங்கு வசித்து வந்த ஒரு முனிவரிடம் இது பற்றி கூறினர். அவரின் பெயர் சரவண முனிவர். அவர் ஆராய்ந்து, இந்த முருகன் அப்படியேதான் இருக்க விரும்புகின்றார். ஆகவே அப்படியே வைத்து பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முருகன் அன்று கண்டு எடுத்தது போலவே உள்ளார் என்பது வரலாறு.
இன்றும் இந்த முருகபெருமானின் சிலை இடுப்புக்கு கீழே வேலைப் பாடுகள் இல்லாமலேயே இருப்பதை காணலாம்.
தவிர, ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர்.
12.2.1984 அன்று, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி செங்குத்தான வளைந்து வளைந்து செல்லும் படிகளில் ஏறி, மலைக் கோவிலுக்கு சென்று அதிசயம் நடத்திய இடம் ஆகும். வேறு எங்கும் காண இயலாதபடி, இன்றும் பொதி காளைகள் மூலம் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த திருத்தலம் 500-1000 வருட பழமை வாய்ந்தது. இதை புஷ்பகிரி, என்றும், கரை கிரி என்றும், மகுடகிரி என்றும் பல பெயர்களில் குறிப்பிடு கின்றனர்.
மூலவர் பெயர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் தண்டாயுதபாணி என்ற நாம கரணம் கொண்டவர். மூலவர் முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து, மூலவரை சுற்றி, எட்டு நவகிரகங்களும் உள்ளன. மூலவரை வழிபட்டாலே, நவகிரகங்களை வழிபட்ட பலனும் கிட்டும் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி பெயரில் தவம்…
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்ய தனிப் பெருங்கோவிலாக இங்கு அமைந்து உள்ளது. இவை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. அருணகிரி நாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத் தானே பூஜித்த தலம் இதுவாகும். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய தலம் என்றும் கூறுகின்றனர்.
இரண்டு தலை முருகன்
இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும். இது மிகவும் விசேஷமான தலம் ஆகும். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லாத தேர் இங்கு உள்ளது. இது வேங்கை மரத்தில் செய்யப்பட்டது ஆகும்.
மலையின் மீது அடர்ந்த மரங்களுடன், அமைதியான, அழகான கோவில் இதுவாகும். மேலும் சிறப்பான அம்சமாக, இங்குள்ள மாமாங்க தீர்த்தக்குளம் என்பது ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வறட்சியான கோடை காலத்திலும், மழையே இல்லாத நேரத்திலும், மலைக் கோவிலின் தென்புறம் உள்ள தீர்த்த குளத்தில் விநாயகர் முன்பு, திடீரென்று பொங்கி வழிந்தோடுவது மிகவும் அதிசயமான ஒன்றாகும். இத்தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தாகவும் சகல பிணிகளையும் களைய வல்லதாகும் என்கின்றனர்.
சித்தர்கள் வாழ்ந்த மலை
இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் சன்னதியில் இருந்து பின்புறம் சென்றால், மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு (புண்ணாக்கு) சித்தர் கோவில், வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகில், சரவணமா முனிவரின் சமாதியும் உள்ளது. அந்த முனிவர்கள் வசித்த குகைகள் உள்ளது.
சென்னிமலை என்பதில் சென்னி என்றால் சிரம், கிரி என்றால் மலை ஆகவேதான் சிரகிரி சென்னிமலை என்கின்றனர்.
இயற்கை மூலிகைகள், மரங்கள், செடி கொடிகள் அதிக அளவில் இங்கு இருப்பதாகவும், இங்கு வந்து செல்லும் பக்தர்கள், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, நெஞ்சு வலி, மூச்சு இறைப்பு உள்ளோர் குணம் அடைகின்றனர் என்று கூறுகின்றனர். இது அனுபவ பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் பலர். திருமணம் வரங்கள், விவசாயம், கிணறு வெட்டுதல், புதிய தொழில் துவங்க,வியாதிகள் தீர, முடிவு செய்ய, அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்திரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு, காரியத்தை தொடங்குகின்றனர். உத்தரவு கிடைக்கா விட்டால் அந்த காரியத்தை துவங்குவது இல்லை.
இத்தலத்தில் உள்ள சக்தி வாய்ந்த சுப்ரமணிய சுவாமியை வழிபட்டால், கல்யாண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்,செவ்வாய் தோஷம் நீங்கும், நோய்கள் அகலும், ஆயுள் தீர்க்கமடையும், ஞானம் பெருகும், சுபிட்சமான வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.
பால், தயிர் அபிஷேகம்
முருகப் பெருமானுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.மேலும் காவடி எடுத்தல், முடிக்காணிக்கை செலுத்துவது, அன்னதானம் செய்வது, காது குத்தும் வைபவம் செய்வது என்பதற்காக பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.
அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


