திருநள்ளாற்றில் உறையும் சனீஷ்வரர்
வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!
கிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது! அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.
சனீஷ்வரனுக்காக யாரும் யோசிக்காதீர்கள்! சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்!
நீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா? அல்லது அமைச்சராக வேண்டுமா? அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா? அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.
ஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
ஒருவனுக்கு அற்ப ஆயுளா? அல்லது மத்திம ஆயுளா? அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச் சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்!
எனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம் 19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன! எனது சிறுகதைகளில் வருகின்றன!
சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:
திருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல!
மதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.
ஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்
உள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்
உறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகளையும்
தீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை
சக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.
அதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.
மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.
சனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.
காலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
காலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.
இன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.
சிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.
சனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா? முடியாதல்லவா? ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.
அதுதான் ஆச்சரியமான விஷயம்.
வாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.
1
2
3
4
5
6
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:
URL: http://en.wikipedia.org/wiki/Shani_Shingnapur
20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!












