Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2
Serial write up.தொடர் எழுத்தாக்கம் - பகுதி இரண்டு
இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
அதற்கான சுட்டி (Link): http://classroom2007.blogspot.in/2013/05/astrology-marathon-posts.html
----------------------------------------------------------------------------------------------------------------
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம் என்று முன் பதிவில் சொல்லியிருந்தேன்.
என் வாசகருக்குக் கொடுத்த வாக்குப்படி என் புத்தகத்தை 20 சிறுகதைகளின் முதல் தொகுப்பாக இரண்டுமாத காலத்திற்குள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன்.
அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்
எனக்குத் தெரிந்த பதிப்பாளர்கள் (Book Publishers) இருவர் சென்னையில் இருந்தார்கள். புத்தகம் வெளியிடுவதில் எனக்கு அனுபவம் (அப்போது) இல்லையாதலால, ஒரு பதிப்பகத்தின் மூலம் புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்.
முதலில் ஒருவரிடம் என் புத்தகத்தை வெளியிடுவது குறித்துப் பேசினேன்.
அவர் சாதகமாகப் பேசவில்லை. தமிழில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதைத் தெளிவு படுத்தினார். அத்துடன் கதை, கவிதைப் புத்தகங்களுக்கெல்லாம் அச்சடித்தால் வாங்க ஆள் இல்லை என்றும் கூறினார். ஒரு பிளேட் அடித்தால் (அதாவது ஆயிரம் பிரதிகள் பிரசுரித்தால்) அதை விற்பதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டு காலம் ஆகும் என்றார். புத்தகக் கண்காட்சிகளில் போட்டுத்தான் விற்க வேண்டும் என்றார். அத்துடன் சுஜாதா, பாலகுமாரன் போன்ற பிரபலங்களின் புத்தகங்கள் விற்கும் அளவில் மற்றவர்களுடையது ஐந்து சதவிகிதம் கூட விற்காது என்றும் கூறினார்.
“என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்
“நீங்கள் கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு, ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் எழுதுங்கள். நிறைய விற்கும்!” என்றும் யோசனை சொன்னார்
“அள்ள அள்ளப் பணம் என்னும் தலைப்பிலா?” என்று கேட்டேன். மெல்ல புன்னகைத்தார்
அள்ள அள்ளப் பண்மெல்லாம் எல்லோருக்கும் வராது. அதற்கெல்லாம ஜாதக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு பைப். பைப்பிலும் தொடர்ந்து தண்ணீர் வரவேண்டும். அண்டாவும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் லக்கினாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். சிலருக்கு இரண்டாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்கும். கூடவே சனி அல்லது ராகு இரண்டாம் வீட்டில் டென்ட் அடித்துக் குடியிருப்பார்கள். அண்டா இருந்தும் அது ஓட்டை அண்டா. வரும் காசெல்லாம் பல வழிகளில் கரைந்து கொண்டிருக்கும்
“அள்ள அள்ளப் பணம் என்பதெல்லாம் பொய். தள்ளத் தள்ள விதி என்பதுதான் உண்மை! - ‘தள்ளத் தள்ள விதி!’ என்னும் தலைப்பில் எழுதித் தரட்டுமா என்று நகைச்சுவையுடன் கேட்டேன்.
அவர் உற்சாகமாகிவிட்டார். “ஆகா...எழுதிக்கொடுங்கள். ஜோதிடப் புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது!” என்றார்.
“சரி, அதைப் பிறகு பார்ப்போம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்
“நீங்கள் பாதி, நாங்கள் பாதி என்ற கணக்கில் பணம் போட்டால், புத்தகம் சாத்தியப்படும்” என்றார்.
Type setting, page alignment, wrapper designing, bulk purchase of 16.8 map litho paper, off set printing, multicolor wrapper printing, glue binding' என்று பல வேலைகள் உள்ளன. உத்தேசமாக 35 முதல் 40 ஆயிரம்வரை செலவாகும் என்றார்.
எனக்கு அதில் உடன்பாடு இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அடுத்த பதிப்பாளரும் அதையேதான் சொன்னார். பழநி அப்பன் இருக்கிறான் பார்த்துக்கொள்வோம். நாமே முழுப்பணததையும் போட்டு புத்தகத்தைத் தயார் செய்துகொள்வோம் என்று முடிவிற்கு வந்தேன். அத்துடன் உடனே புறப்பட்டுக் கோவைக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
செட்டியார் வந்த் அன்றுதான் எனக்கு சனி மகாதிசை முடிந்து, புதன் மகா திசை ஆரம்பமாகியிருந்தது. நான் சிம்ம லக்கினக்காரன் புதன் என் ஜாதகத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஏழில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வைத்திருக்கிறான். நான் நினைத்தபடி எனக்குப் புதன் கை கொடுத்தான். ஒன்று அல்ல மூன்று பத்தகங்களை ஆறு மாத காலத்திற்குள் அடுததடுத்து வெளிக் கொணர்ந்தேன். செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் தொகுப்பு ஒன்று, தொகுப்பு இரண்டு, தொகுப்பு மூன்று என்று என்னுடைய மூன்று புத்த்கங்களும் வெளிவந்ததுடன், அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. (மூன்று தொகுப்புக்களிலும் சேர்த்து மொத்தம் 60 சிறுகதைகள். ஒவ்வொரு தொகுப்புமே 160 பக்கங்கள்.)
புத்தகங்களைப் பதிப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை எல்லாம் புதன் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அத்துடன் வடிவமைக்கவும், அச்சிடவும் தேவையான நபர்களை எல்லாம் அவனே என் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
புத்தகங்களுக்கு அணிந்துரை வாங்க வேண்டுமே!
என்னுடைய முதல் புத்தகத்திற்கு மனமுவந்து மூவர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். முன்னாள் உச்சநீதி மன்ற நீதியரசரும், அப்போது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக (Chairman, Law Commission of India) இருந்தவருமான திருவாளர்.டாக்டர், ஜஸ்டிஸ். AR.லெட்சுமணன் அவர்கள்
சிறப்பானதொரு பாராட்டுரை நல்கினார்கள். சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் தலைவரான திருவாளர் ப.லெட்சுமணன் அவர்கள் (இவர் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்) எனது கதைகளை அலசி நல்லதோர் அணிந்துரை நல்கினார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த திருவாளர். முனைவர், பேராசான், தமிழண்ணல் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கினார்கள். மூவரின் அணிந்துரையுடன் புத்தகம் அழகு பெற்றது.
இரண்டாவது புத்தகத்திற்கு இயக்குனர் SP.முத்துராமன் அவர்களும், பெரும் புலவர்.திரு.ப.நமசிவாயம் அவர்களும், கவித்தென்றல் திரு.காசு. மணியன் அவர்களும் அணிந்துரை வழங்கினார்கள்
என்னுடைய மூன்றாவது புத்தகத்திற்கு தில்லியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் திரு. சோம வீரப்பன் அவர்கள் அணிந்துரை வழங்கினார் (இவர் இயக்குனர் வசந்த அவர்களின் மூத்த சகோதரர்)
மூன்று புத்தகங்களுமே காரைக்குடியில் உள்ள செல்வந்தர்கள் மூவரின் வீடுகளில் நடந்த மணி விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் வெளியிடப் பெற்றன.
வெளியீடு என்றால் மண்டபத்தைப் பிடிக்க வேண்டும். அழைப்பிதழ்கள் அனுப்பி வாசகர்கள் மற்றும் நண்பரகளைச் சேர்க்க வேண்டும். தலைமை தாங்க ஒருவரையும், வெளியிட ஒருவரையும், முதல் பிரதியை வாங்கிக் கொள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பேச இருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். வந்திருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும்.
ஆனால் எனக்கு ஒரு பைசாக் கூட செலவு ஏற்படாமல் பழநிஅப்பன் அதற்கும் வழி வகுத்தான்.
எப்படி நடந்தது அது?
அடுத்த பதிவில் அதைச் சொல்கிறேன்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------------------------
எனது முதல் புத்தகம்
எனது இரண்டாவது புத்தகம்
எனது மூன்றாவது புத்தகம்
எனது முதல் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய மேன் மக்கள்
எனது இரண்டாவது புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய மேன் மக்கள்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







