31.7.13

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

 

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது


என்றொரு பாடல் உண்டு. மிகவும் பிரபலமான பாடல். அந்தப்பாடலை சற்று மாற்றி நம் வகுப்பறைப் பாடத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றினால் இப்படி எழுதலாம்:

துன்பம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
விதியின் கதை இது


எல்லோரும் விரும்புவது துன்பம், கஷ்டம் இரண்டும் இல்லாத வாழ்க்கை. நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை. அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அமையாது. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு ஒரு வேளை அது போன்று அமையலாம். ஆனால் அது தொடர்ந்து அப்படியே நிலைத்திருக்குமா என்றால் இருக்காது. அவர்களுக்கும் நேரம் காலம் மாறும்போது அதுவும் மாறும். அதாவது அந்த நிலைமையும் மாறும்.

ஆனால் இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பாவிப்பவர்கள். எப்போதும், கவலையின்றி இருப்பார்கள். அந்த இரண்டு உணர்வுகளுமே அவர்களை அதிகம் பாதிக்காது. அறிவும், மனமும் தெளிவாக இருப்பவர்களுக்கு அது சாத்தியமே! அந்த நிலைப்பாடு சாத்தியமே!

நாம் சும்மா இருந்தாலும், நமது நேரம் நம்மைச் சும்மா இருக்க விடாது.

அதைத்தான் கிராமத்தில் உள்ளவர்கள் இப்படிச் சொல்வார்கள். அதிர்ஷ்டம் கடிதத்தில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்’ இப்போது தந்தி கிடையாது. அதனால் அதை இப்படிச் சொல்லலாம். தரித்திரம் எஸ்.எம்.எஸ்ஸில் (S.M.S) வரும்.
--------------------------------------------------------------------------------------
6ஆம் வீடும், 8ம் வீடும், 12ஆம் வீடும் தீய வீடுகளாகும். விளக்கமாகச் சொன்னால் துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் உரிய வீடுகளாகும். 3ஆம் வீடும் தீய வீடுதான். ஆனால் குறைந்த அளவே பாதிப்புக்களைக் கொடுக்கும் வீடாகும். அந்த வீடுகள் (6, 8 & 12ஆம் வீடுகள்) நமது பொருளாதாரத்திற்கும், நிம்மதிக்கும் வேட்டு வைக்கும் வீடுகளாகும். அந்த வீட்டில் அமர்ந்திருப் பவர்களும், அந்த வீட்டிற்கு உரியவர்களும் தங்கள் தசாபுத்திகளில் வலிகளைக் கொடுக்கக்கூடியவர்கள்.

அந்த வீட்டில் அமர்ந்திருப்பவர்கள், அல்லது அந்த வீட்டிற்கு உரியவர்கள் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது ஆட்சி பலம் பெற்றிருந்தாலோ பாதிப்புக்கள் இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். அத்துடன் வரும் கஷ்டங்களைப் போக்கும் சக்தியை அல்லது தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர்கள் கொடுப்பார்கள்

6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.

8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்

12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள்,  வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்!

அவைகளால் நொந்து போகாமல், நம்மைப் புடம் போட்டு, மேன்மைப் படுத்தும் வீடுகள் அவைகள் என்று அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும்.

’கையைக் கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது’ என்று ஒரு கவிஞன் சொன்ன வரியை நினைவில் கொண்டு,  எந்த வெள்ளம் வந்தாலும் நீந்திக் கரை சேரும் சக்தி நமக்கு வேண்டும். வெள்ளத்தோடு வெள்ளமாகப் போய்ச் சேர்ந்து விடக்கூடாது.

அதுபோன்ற சமயங்களில் மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நீந்திக் கரை சேரும் வலிமையை அவர் கொடுப்பார்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.7.13

அறிவிப்பு!

அறிவிப்பு

வாத்தியார் சென்னை பயணம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற ‘பன்மலர்ச் சோலை’ என்ற புத்தக வெளியீட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றவர், கூடுதலாக இரண்டு நாட்கள் சென்னையில் தங்கும் படியாகி விட்டது. அதனால் வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 31.7.2013 புதனன்று.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

26.7.13

சுடர் வருமா அல்லது இடர் வருமா?

 

சுடர் வருமா அல்லது இடர் வருமா?

பக்தி மலர்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!

- அபிராமி அந்தாதிப் பாடல்

இந்தப் பாடலை, திரு.கெளசிக் அவர்கள் பாடுகின்றார். கேட்டு மகிழுங்கள்

சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ -  இல்லை எனக்கு
இடர் வருமோ


அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/V2qfhK9Xw1Y
Our sincere thanks to the person who uploaded the song in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 34

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 34

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 34

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும்உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மிருகசீரிஷம்
2. திருவாதிரை
3. ஆயில்யம்
4. மகம்
5. பூரம்
6. சித்திரை
7. அனுஷம்
8. மூலம்
9. பூராடம்
10. திருவோணம்
11. அவிட்டம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மகம் & பூரம் அகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது.

மீன ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான அவிட்டம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, சுவாதி, ரேவதி  ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

அஸ்விணி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.7.13

Astrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாமி!

 
Astrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாமி!

அதாவது மாந்தி, குளிகன் என்று உப கிரக குழப்பத்தைச் சொல்கிறேன்

குளிகனுக்கும் மாந்திக்கும் என்ன வித்தியாசம்?
--------------------------
குளிகனும் மாந்தியும் ஒரே ஆசாமிதானா? சிலருக்கு அந்த சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை வைத்துக் குழப்புவார்கள்.

அவர்கள் இருவருமே வெவ்வேறானவர்கள் என்பார்கள். சித்தப்பன் மகன் பெரியப்பன் மகன் போன்று வேறுபட்டவர்கள் என்பார்கள்

8.6.2013 அன்று உள்ள கிரகநிலைகளைக் கீழே கொடுத்துள்ளேன் (Taken from Jagannatha Hora web site) அதில் பார்த்தீர்கள் என்றால் இரண்டும் வெவெவேறு பாகைகளில் இருப்பது தெரியவரும்!


சர்வார்த்த சிந்தாமணி என்னும் ஜோதிட நூல் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகிறது. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்.

ஆகவே ஜகந்நாத மென்பொருளை உபயோகிப்பவர்களுக்கு அந்த இரண்டின் அமைப்பும் இருக்கும். மற்ற மென்பொருளை உபயோகிப்பவர்களுக்கு மாந்தியின் அமைப்பு மட்டுமே கொடுக்கப் பெற்றிருக்கும்

அது பற்றி இன்று விவரமாகப் பார்ப்போம்!
---------------------------------------
4.8.2009ம் தேதியன்று மாந்தியால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி விவரமாக எழுதினேன்.

அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நம் மதிப்பிற்குரிய ஓம்கார் சுவாமிஜி அவர்கள் இவ்வாறு பின்னூட்டம் இட்டார்கள்:

கேரள ஜோதிடம் அறிந்தவன் எனும் முறையில் சொல்லுகிறேன். அனைத்து கிரகங்களை விட மாந்தி அதிபயங்கரமானது..!

மாந்தி ப்ரேதஹா என்கிறார்கள்.

மாந்தி லக்னம் அல்லது 7ல் இருந்தால் அவர்களின் மணவாழ்க்கையில் 24 மணிநேரமும் சண்டை சண்டையாகவே இருக்கும். ஆனால் பிரிந்து வாழவும் மாட்டார்கள். சேர்ந்து சந்தோஷமாகவும் இருக்கமாட்டார்கள்.

இது எனது ஜோதிட ஆய்வு.

மாந்தியை ஞாபகப்படுத்தி என்னை கிலி ஏற்படுத்தியதற்கு நன்றி வாத்தியாரே..!

ஸ்வாமி ஓம்கார்
==========================================================
ஒரிஜினல் மிட்டாய்க் கடை அல்லது ஒரிஜினல் அல்வாக் கடை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான நெய்யினால் செய்யப்பெற்ற இனிப்புகள்
என்பார்கள். அதுபோல வில்லன்களிலும் ஒரு ஒரிஜினல் வில்லன் இருக்கிறான். நீங்கள் திரைப்படங்களில் பார்க்கும் வில்லன் படத்தோடு போய்விடுவான்.நேரில் பார்க்கும் வில்லத்தனமான ஆசாமிகளைக் கொஞ்சம் புத்திசாலித் தனத்தோடு சமாளித்துவிடலாம்.

ஆனால் யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்.அவன் பெயர் மாந்தி!

எல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை. ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன் இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

"அது மட்டும் ஏன்?" என்று கேட்காதீர்கள். சில ஜோதிட விதிமுறைகளுக்குக் காரணம் சொல்ல முடியாது. அதை வகுத்தவர்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். போய்ச் சேர்ந்தவர்களிடம் எப்படிக் கேட்பது? அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதை, அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அந்த வில்லனிடம் அடி வாங்கியவர்களும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையும், அதாவது அவர்கள் அனுபவித்ததையும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம் (shadow' planet)

தீயவைகளைச் செய்யக்கூடியது.It has a malefic effect.

குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். ஒரே உபகிரகம்தான் என்கிறார்கள். ஆனால் சிலர் வேறு படுகிறார்கள். புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன. அது நமக்குத் தேவையில்லாதது. எந்த மருத்துவமனையில் அவர் பிறந்தார் என்றெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருப்போம். ஆகவே அது தேவையில்லாதது.

It is scientifically a satellite. There ends the matter.

சில ஜோதிடவல்லுனர்கள், இரண்டு பெயர்கள் இருந்தாலும், அவை ஒன்றுதான் என்பார்கள் வேறு சிலர் அவை தனித்தனி என்னும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் பழைய ஜாதகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால், ஒன்றைத்தான் குறித்து வைத்துள்ளார்கள். ஆகவே அடித்துச் சொல்லலாம், அவை இரண்டும் ஒன்றுதான்! There is not a single chart in any book where Gulika & Mandi are both present, so both must be the same.

ஆகவே நாம் மாந்தியை மட்டும் எடுத்துக்கொள்வோம்!

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன்
தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.

ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

இந்தக்கதையை நம்புவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள், பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம். ஒரு குறுகுறுப்பான தகவல் என்பதற்காக அதைக் கொடுத்துள்ளேன். எனக்கும் அந்தக் கதையில் நம்பிக்கை இல்லை!:-))))

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும் இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி, குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும் அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.

அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின் நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின் பார்வை அவன் மேல் விழுக ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல் கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
----------------------------------------------------------------------------
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச் சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச் சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள், மாந்தியையும் பார்ப்பதில்லை. அஷ்டகவர்க்கத்தையும் பார்ப்பதில்லை. என் கண்ணிற்கு அது ஒரு குறையாகத்தான் படுகிறது!

நான் படித்ததெல்லாம் ஆங்கில ஜோதிட நூல்கள் என்பதால், எனக்கு ஒரு விரிந்த பார்வை கிடைத்தது. நான் கேரள ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். குஜராத் ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary) மட்டும்தான்.
---------------------------------------------------------------------
3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும்
என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன்.உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு
நல்ல உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------
4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
-----------------------------------------------------------------------
5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
-------------------------------------------------------------------------
++++++6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)
-------------------------------------------------------------------------
7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
-------------------------------------------------------------------------
8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன்.

துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
------------------------------------------------------------------------
9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய்
விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.
வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.

சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது. உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
----------------------------------------------------------------------------
12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
-----------------------------------------------------------------------
கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். இங்கே பதிவிடப் பெறும் மேல் நிலைப் பாடங்கள் எல்லாம் 2 நாட்களுக்குப் பிறகு நீக்கப்பெற்றுவிடும். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பொதுவில் சொல்ல முடியாது!

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

23.7.13

முக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி!

 

முக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி!

நமது வகுப்பறை நண்பரும், சக பதிவருமான திரு.வி.பிரசன்னகுமார் அவர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பி யிருந்தார். அதை அப்படியே இன்று உங்களுக்கு  அறியத்தருவதில் அடியவனும் மகிழ்ச்சி கொள்கிறேன். அந்த அன்பருக்கு நம் வகுப்பறையின் சார்பில் நன்றியத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் செய்தியை முதன் முதலில் வெளியிட்ட ’சிறகு’ இணைய இதழ் http://siragu.com/ அமைப்பாளர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------

நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்"
============================
சென்னை நகர வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் பயண பேரத்தில் கொடுக்கும் தொல்லையும், பயணிகள் நொந்து போவதும், அதனால் விளையும் ஏச்சும் பேச்சும் சென்னையில் வாடிக்கையாக நாம் அனுபவித்த நிகழ்வுகளில் ஒன்று.

இனி இது போல் நாம் பேசவும் தேவையில்லாமல் ஏசவும் தேவை இல்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டு, மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது “நம்ம ஆட்டோ” (சென்னையின் கெளரவம்) – என்ற பெயருடைய மூன்று சக்கர வாகன நிறுவனம்.

அப்படி என்ன இங்கு புதிதாக நடக்கிறது? இதைத் தொடங்க வேண்டிய அவசியமென்ன? என்று மனதிற்குள் பல கேள்விகளுடன், தேனாம்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” நிறுவனர்களைச் சந்திக்கச் சென்றோம்.

இந்நிறுவனத்தின் பொது மேலாளரான மூசா சபீர்கான் என்பவரைச் சந்தித்தோம். அவர் கூறியதாவது.

அப்துல் கஜிப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்தே இத்திட்டத்தைக் கடந்த மே மாதம் 19ம் தேதி ஆரம்பித்தனர். ஏன் இதை தொடங்கினார் என்றால் ‘நம்ம ஆட்டோ’வின் நிர்வாக இயக்குனராக இருக்கும் அப்துல் கஜிப் அவர்கள் சென்னையில் கடந்த 10 வருடமாக மூன்று சக்கர வாகனம் ஓட்டும் ஒட்டுனர்களிடமிருந்து பெற்ற பல்வேறான கசப்பான அனுபவத்தின் விளைவாகவே இந்நிறுவனம் எப்படி இருந்தால் மக்கள் விரும்புவார்கள் என பல நாள் என்னோடு பேசுவார்.

அரசு கூறியது போலவே மீட்டர் பொருத்தி ரசீது வழங்க வேண்டும் என முடிவெடுத்தார். சென்னையில் கடந்த 15 வருடமாக மீட்டர் என்றால் என்னவென்றே தெரியாமல் மூன்று சக்கர வாகனத்தில் பயணப்பட்ட நம் மக்களுக்கு இன்று ‘நம்ம ஆட்டோ’வில் மீட்டர் பொருத்தி ரசீது வழங்குவதும், நியாயமான முறையில் பணம் வசூலிப்பதும் மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது. இதைத் தொடங்கிய சில நாட்களிலிருந்தே தினமும் எங்களுக்கு 150 அலைபேசி அழைப்புகள் வருகிறது. இன்று நகருக்குள் மொத்தம் 66 மூன்று சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. கடந்த 45 நாட்களாக 8 ஆயிரம் பயணச்சேவை செய்துள்ளோம்.

இதுவரை மக்களின் கட்டணத் தொகையாக 7 லட்ச ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளோம் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. தொழில் நுட்பத் துறையில் (ஐ.டி) பணியாற்றிய இவர் தொடங்கிய இந்த “நம்ம ஆட்டோ” என்ற நிறுவனத்திற்காக கடந்த நான்கு வருடமாக உழைத்தார். காரணம் சென்னையின் உயிர் இந்த மூன்று சக்கர வாகனம். இதை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர மக்களின் பணம் வீண் விரயமாகக் கூடாது. நேர்மையான முறையில் அவர்களுக்கு சிறந்த பயணத்தை இந்த மூன்று சக்கர வாகனம் மூலம் அளிக்க வேண்டும் என எண்ணினார்.

நம்ம ஆட்டோவின் சிறப்பு:

‘நம்ம ஆட்டோ’வில் ஜி.பி.ஆர்.எஸ் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் துணையால், எங்களின் தலைமை இடமான தேனாம்பேட்டையில் இருந்து நகருக்குள் ஓடுகின்ற ஒவ்வொரு மூன்று சக்கர வாகனத்தையும் கண்காணிக்கின்றோம். ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும், 2 கிலோமீட்டருக்கு 25 ரூபாயும் வசூலிக்கிறோம். இரண்டு கிலோமீட்டருக்கு மேல் ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வசூலிக்கின்றோம்.

இதில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் செல்லும் தூரத்தையும், அதற்கான கட்டணத்தையும் மீட்டரில் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். மீட்டர் காட்டும் கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும் கண்டிப்பான முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு தேதி, நேரம், மூன்று சக்கர வாகன எண்ணுடன் கூடிய ரசீது பயணிகளுக்குத் தரப்படும்.

பயணிகள் எங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது ஓட்டுனர்கள் வருபவர்களிடம் தவறாக நடந்தாலோ, மரியாதை இன்றி பேசினாலோ அல்லது வேறு ஆபத்துகள் என்றால் உடனே பயணிகள் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் போதும், உடனே தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலிக்கும்.

இது எதற்காக என்றால் பயணிகள் தங்கள் குறைகளை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. தவிர சாதாரணமாக நகருக்குள் ஓடும் மூன்று சக்கர வாகனத்தில் வசூலிக்கும் கட்டணத்தை விட நாங்கள் 50 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் மக்களின் பணம் 50 சதவீதம் மிச்சம் ஆகிறது என்ற திருப்தி எங்களுக்கு நிறைவைத் தருகிறது.

ஒட்டுனர்களுக்கான விதிகள்:

*. “நம்ம ஆட்டோ” – ஓட்டும் பணிக்கு வரும் ஓட்டுனர்கள் முதலில் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும், பேட்ஜயும் எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அவர்களுக்கு நாங்கள் தரும் நான்கு விதிகளாவன
*. முதல் விதி: 4500 ஆயிரம் சம்பளம், 30% கமிசன், கால அளவு 36 மாதம்.
*. இரண்டாம் விதி: 12 ஆயிரம் சம்பளம், 10% கமிசன், கால அளவு 40 மாதம்.
*. மூன்றாம் விதி: 15 ஆயிரம் சம்பளம், 5% கமிசன், கால அளவு 42 மாதம்.
*. நான்காம் விதி: 18 ஆயிரம் சம்பளம், கமிசன் இல்லை, கால அளவு 42 மாதம்.

இந்த விதிகளில் ஏதேனும் ஒரு விதிக்கு உட்பட்டு ஓட்டுனர்கள் பணியில் இணையலாம். இவர்கள் இந்தக் கால அளவு முடியும் வரை எந்த குறைபாடு இல்லாமலும், பயணிகள் பாராட்டும் விதத்திலும் வாகனம் ஓட்டினால் அதற்குப் பரிசாக, இக்கால அளவு முடியும் தருவாயில் இவர்களுக்கு புதிதான மூன்று சக்கர வாகனம் ஒன்று எங்கள் நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு வருபவர்களுக்கு நாங்கள் வழங்குவது

எங்களின் மூன்று சக்கர வாகனம் தருகிறோம்.

இலவச ஓட்டுநர் சீருடை தருகிறோம்.

ஓட்டுவதற்கு எரிபொருள் தருகிறோம்.

“நம்ம ஆட்டோ” என்ற விளம்பரப் பலகையும், மீட்டரும் தருகிறோம்.

இங்கு இத்தனை மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்ற கால அளவு எதுவும் கிடையாது. அவரவர் மனசாட்சிப்படி வாகனம் ஒட்டினாலே போதும். அல்லது அவர்கள் ஓட்டும் நேரத்தை ஓட்டுனர்கள் விருப்பம் போல் மாற்றிக் கொண்டு பணியாற்றலாம்.

தினமும் மக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் எங்களின் பொறுப்புணர்வு மேலும் மேலும் கூடுகிறது.

நம்ம ஆட்டோ ஓட்டுனரின் தகுதிகள்:

ஓட்டுநர் சீருடை அணிந்தே வாகனம் ஓட்ட வேண்டும்.

மீட்டர் போட்ட பின்பே வாகனம் ஓட்ட வேண்டும்.

மீட்டருக்கு மேல் 1 ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது.

போதைப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது.

பயணிகளிடம் கனிவான முறையில் பேச வேண்டும்.

மிதமான வேகத்திலே செல்ல வேண்டும்.

இந்த தகுதிகளை கண்டிப்பாக ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். இதில் பயணம் செய்பவர் ஓட்டுநர் மீது ஏதும் குறை கூறினால் பயணி பயணம் செய்த அந்தப் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அப்பயணம் இலவசமே.

இந்த விதிகளைக் கொண்ட துண்டுச்சீட்டு ஒன்று பயணிகள் பார்வைக்காக வாகனத்தில் உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும்.

ஓட்டுநர் சலுகைகள்:

ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி துறையில் வழிகாட்டுதல்.

சிறப்பாக பணியாற்றுவதற்காக சிறப்பு ஊக்கத்தொகை அளித்தல்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்திக்கொடுத்தல்.

வாரம் ஒரு நாள் விடுமுறை.

நம்ம ஆட்டோ அடையாளம்:

மூன்று சக்கர வாகனத்தில் மேற்புறத்தில் ஒரு புறம் தமிழிலும், மறுபுறம் ஆங்கிலத்திலும் “நம்ம ஆட்டோ” என்று எழுதப்பட்டிருக்கும். என மூசா சபீர்கான் கூறி முடித்தார்.

இது போல மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை நகரில் தேனாம்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” சென்னை நகர் முழுக்க இருந்தால் இன்னும் பல மக்கள் எங்களைப் போல பயனடைவார்கள் என்று நம்ம ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதைக் கேட்கும் போது நமக்கும் இந்த எண்ணம் வரத்தான் செய்கிறது.

மேலும் தொடர்புக்கு : 044-65554040 & 65552020

மின்னஞ்சல் முகவரி : info@nammaauto.com
www.nammaauto.com

News Credit - http://siragu.com/   
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து உள்ளதும் மகிழ்ச்சியான விஷயம்தான். நம் விசு அய்யர் அறிவுறுத்துகிறார். படித்துப் பாருங்கள். நமக்குத் தனியானதொரு சொந்த வீடு இல்லையே என்ற கவலையை விட்டொழியுங்கள்
----------------------------------------------
தங்கம் வாங்கலையோ 
தங்கம் என்ற நிலை மாறி

வீடு வாங்கலையோ வீடு என 
விடாமல் துரத்துகின்றன ரியல் எஸ்டேட்டுகள்

பொருளாதார நிலைமை சரியில்லை என 
பொதுவாக பார்லியிலும் தினமும் விவாதம் தான்

சரி

வீடு வாங்குவது புத்திசாலிதனம் தானா
விவரமாக சிந்தித்து பார்ப்போமா

முன்பெல்லாம் வீட்டுக்கு சில ஆளு
இப்பெல்லாம் ஆளுக்கு சில வீடு

ஆவி போறதுக்குள்ள 
சாவியை கொடுன்னு மருமகள் தரும் சொத்து தகராறு

NEAT ஆக சொல்லலாம் 50 லட்சத்துக்கு குறைவா 
FLAT இப்பெல்லாம் வாங்க முடியாது

அந்த பணத்தை அப்படியே தொழிலில் போட்டால்
அசல் போக மாதம் 10/15 ஆயிரம் வரும் 

அந்த பணத்தில் வசதியான வாடகை வீட்டிலிருக்க முடியும் தானே
அதை யோசிக்காமல் மண்ணின் மீது என்ன ஆசை 

வயிற்றை கட்டி வாங்குபர்கள் சொல்கின்றனர் 
வாங்கி வைச்சா நாளைக்கு லாபம் வருமென்று

இன்றைய லட்சங்கள் 
நாளைய கோடிகள் சரிதான் ஆனால்

கோடியை வைத்துக் கொண்டு 
ஓடியா போக முடியும் இன்னொரு 

வீடு வாங்கப் போனால் அது நம்மை 
விட்டு ஓடி விடுமளவிற்குள்ளது நாளைய விலை

காசு கொடுத்தா வாங்கறோம் 
கடனாத் தானே வாங்கறோம் என சிலர் வாதம் 

வாடகை போல கடனை கட்டினால் 
வரும் சொந்த மாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த சிந்தனையும் ஆரோக்கியமாக தெரியவில்லை
இதில் ஓளிந்து இருக்கும் வட்டியும் 

இருக்கும் வீட்டில் உள்ள வசதியும் 
இப்போ யோசித்து பார்த்தால் வேறுமாதிரி சிந்திக்க வைக்கும்

மாதம் தோறும் பராமரிப்பு கட்டணம் 
மாறாமல் வரும் பார்க்கிங் கட்டணம்
ஆண்டுக்கிருமுறை சொத்து வரி
அவ்வப்போது வரும் ரிப்பேர் தொந்தரவுகள் 

மாதம் தொடங்கியதும் 
மாறாமல் வரும் ECS தவனைகள் 

இப்படி பல 
இன்னமும் உள

காசு கொடுத்து வாங்கினாலும் பிரச்சனைகள் 
கடனாக வாங்கினாலும் தொந்திரவுகள்

தங்கம் வாங்காதீர் என 
தமிழகத்தை சேர்ந்த நிதியமைச்சர் வேண்டுகோள்

ஏரிகள் எல்லாம் 
ஏரியாக்களாச்சு என கிராம மக்கள் புலம்பல்

விளை நிலங்கங்கள்  எல்லாம் 
விற்கும் பிளாட்டுகளாகும் நிலைமை 

என்ற நிலையில் 
எப்போதாவது இது பற்றி யோசிப்பதுண்டா?

செலவு செய்யும் கலாச்சாரம் பெருகினால் 
செழிப்பாக இருக்க முடியும் தானே

வாடகைக்கு உயிர் இருக்கும் கூடே இந்த உடல் 
வாடகைக்கு இருக்க எதுக்கு சொந்த வீடு

யோசித்து பாருங்கள் மற்றவர்களிடமும்
யோனையை தவழவிடுங்கள் 

என்ற சிந்தனையை சிந்திக்க சில 
என தந்த படி

விசு அய்யர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
விசு அய்யருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
.....
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.7.13

ஊக்குவிப்பவன் எப்போது தேக்குவிப்பான்?



ஊக்குவிப்பவன் எப்போது தேக்குவிப்பான்?
==================================================================
கவிஞர் வாலி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக இந்தக் கட்டுரை.
==================================================================
“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”

- கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய வைர வரிகள்!
---------------------------------------------------
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு திருவரங்கம் என்னும் திருத்தலம் பல நன்முத்துக்களைப் பரிசாகக் கொடுத்துள்ளது. அதில் முதன்மையான பரிசு ‘வாலி' என்னும் இரண்டெழுத்துப் பெயரைக் கொண்ட கவிஞர். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

ஒரே பாட்டில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்.படித்தவன்முதல் பாமரன்வரை அந்தப் பாட்டில் தன்னைப்
பறிகொடுத்திருக்காதவனே கிடையாது. அந்தப் பாடல் இடம் பெற்ற படகோட்டி என்னும் திரைப்படம் புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின்
படம் என்பதால் வெற்றி பெற்றது என்பதை விட வாலியின் பாடல்களால் அசைக்க முடியாத ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதுதான் சிறப்பு!

அதுதான் உண்மை கூட!

என்ன பாடல் அது என்கிறீர்களா? கொடுத்துள்ளேன் பாருங்கள்:

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் -
மனம்நிறைய இருளிருக்கும்!
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!

-படம் படகோட்டி (வருடம் 1964)

இறைவன் கருணை வடிவானவன். பேதமில்லாதவன்

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”.

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியதுபோல இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவன் படைத்த அனைத்துமே பொதுவானதுதான்.
வானம், நீர், நெருப்பு, காற்று என்று அனைத்துமே பொதுவானதுதான்.

ஏழைக்கு ஒரு காற்று பணக்காரனுக்கு ஒரு காற்று என்று இரண்டு விதமான காற்று கிடையாது. ஒளியிலும் இரண்டு விதமான ஒளி கிடையாது.

அதைக் கவிஞர் எவ்வளவு சிறப்பாகச் சொன்னார் பார்த்தீர்களா?

”மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?”

என்று இரண்டே வரிகளில் இறைவனின் நிலைப்பாட்டைப் புரிய வைத்தார் அல்லவா?

இங்கே நிகழும் அவலங்கள் யாவிற்கும் சகமனிதனே காரணம்.உழைத்தவர்கள் தெருவில் நிற்பதற்கும், மடி நிறையப் பொருள் இருப்பவனின் மனதில் இருள் இருப்பதற்கும் யார் காரணம்? கடவுளை எப்படிக் குறை சொல்ல முடியும்?

பாடலில் எதுகையும், மோனையும், எளிய சொற்களும் மனதில் பதியும் விதமாக அமைந்திருப்பதை நினைவில் வையுங்கள். அதனால்தான் இந்தப்
பாடல் கேட்ட அத்தனை உள்ளங்களிலும் சென்றமர்ந்துவிட்டது!
--------------------------------------------
பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார். இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்!
திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று
தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத்
தன் நன்றியைச் சமர்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”


அதேபோல தான்பாடிய கவியரங்கங்களில், வாலி அவர்கள் தன்னை நன்கு வளர்த்து ஆளாக்கிய தமிழன்னைக்குச் சிறப்புச்செய்து நன்றி
பாராட்டும் முகமாகக் கீழ்க்கண்ட வரிகளைச் சொல்வார்.

“கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப்பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே!”


தமிழ் அன்னையின் அரவிந்த அடிகளுக்கு இதைவிடச் சிறப்புச் செய்ய யாரால் முடியும்?
-------------------------------------------------------------------------
தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத்
துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை
வெளியிட்டுச் சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல
திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா
என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும் திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும்
வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப்
பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித் தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!

சரி, நமது ரங்கராஜன் எப்படி வாலியானார்?

அது ஒரு சுவையான கதை. வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக் கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினான். பள்ளிக்கூட
வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும் சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது

ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.

“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”

அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.

“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”


என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
-------------------------------------------------------------------------
வாலி அவர்கள் எழுதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்கள் ஒரு நூறுக்கும் மேல் உள்ளன. இடம், பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய
பொன்னான நேரம் கருதி அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை. பின்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றை ஒரு தொடராக எழுதலாம் என்றுள்ளேன்.
அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்,


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++

19.7.13

வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?

 

வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?

பக்தி மலர்

அறுபடை வீடுகொண்ட திருமுருகா’ என்று துவங்கும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/-yxqOKUtSOs
Our sincere thanks to the person who uploaded the song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

18.7.13

Astrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்!

 
===========================================================
 Astrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மேலதிகாரி ஒருவர் அன்னாச்சிப்பழத்தை வைத்து ஒரு மனவளக் கட்டுரை எழுதினார். பத்திரிக்கை ஒன்றில் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. ஏனென்றால் அதன் சாராம்சம் அப்படி!

ஆனால் எழுதிய அன்பர் பெயர் மட்டும் நினைவில் இல்லை!

என்ன சொன்னார் அவர்?

அன்னாச்சிப் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் வையுங்கள். குழந்தைகள் யாரும் அதைத் தொடமாட்டார்கள். அதே பழத்தை, தோலைச் சீவி, சிறு சிறு தண்டுகளாக்கி, தட்டு ஒன்றில் வைத்து, அத்துடன் அதன் மீது சிறிது உப்பு, மிளகுத் தூள் ஆகியவறைத் தூவி, இரண்டு ஸ்பூன்களையும் (தேக்கரண்டி களையும்) போட்டு, மேஜை மீது வைத்துவிட்டுப் பிறகு பாருங்கள். பத்தே மணித்துளிகளில் தட்டு காலியாகிவிடும்.

நம் பிரச்சினைகளையும் அவ்வாறுதான் கையாள வேண்டும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அது பூதாகரமாகத் தெரியும். நம்மைப் பயமுறுத்தும். நம்மைக் கவலைக்கு ஆளாக்கும். நம்மைச் செயல்படாமல் முடக்கி விடும். ஆகவே பிரச்சினைகளைப் பிரித்துப் பாருங்கள். நடந்தது. நடக்க வேண்டியது. நம்மால் முடிந்தது. நாம் செய்ய வேண்டியது என்று பிரித்துப் பாருங்கள்

உதாரணத்திற்கு உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அல்லது பார்க்கும் வேலை பிடிக்க வில்லை, சம்பளம் போதவில்லை என்றிருந்தால் முடங்கிப் படுத்துவிடாமல், நம் நிலைமையை, நாம் அடுத்துச் செய்ய வேண்டியதை அந்த அன்னாச்சிபழ தொழில் நுட்பத்தை வைத்து செயல் படுத்த வேண்டியதுதான்

வேலை கிடைக்கவில்லை என்றால், என் தகுதிக்கு, என் படிப்பிற்கு உகந்த வேலை இல்லை அது என்று சொல்லிக் கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். அதுதான் உத்தமம்.

அதுபோல நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் பெண் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்காமல், கிடைக்கின்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.  அதுதான் உத்தமம்.

உங்கள் நேரம் சரியில்லை என்றால், அதாவது நடக்கின்ற தசா புத்தி சரியில்லை என்றால், அந்த புத்தி முடிகின்ற காலம் வரை பல்லக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்து அடுத்த தசா புத்தியில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அல்லது நடப்பதை நல்லது...இதுவாது நடந்ததே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வாங்கி வந்தவரத்தின்படிதான் நடக்கும்

நயந்தாரா, அனுஷ்கா சர்மா போன்ற அழகான பெண்ணிற்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், காந்திமதி அல்லது சரளா அல்லது மனோரமா போன்ற சராசரி அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

சிட்டி பேங்க், ஸ்டாண்டர்டு சாட்டர்டு பேங்க் போன்ற வங்கி வேலைகளுக்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், பாண்டியன் கிராம வங்கி அல்லது பாலக்காடு கூட்டுறவு வங்கி போன்ற சிறு வங்கிகளில் வேலை கிடைத்தாலும் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்.

உங்களுக்குப் பணப்பிரச்சினை உள்ளது என்றால், அது எதனால் என்று பாருங்கள். வருமானம் குறைவு என்றால் செலவுகளைச் சுருக்குங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கடன் மட்டும் வாங்காதீர்கள். கடன் எப்போதுமே கலக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும். நடுத்தரக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு முதல் எதிரி கிரிடிட் கார்டுதான். ஆகவே அதைப் பயன் படுத்தாதீர்கள்.

அடுத்து உபரி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். மனைவியை வேலைக்கு அனுப்பலாம். சைடு பிஸினசாக சுயதொழில் ஒன்றைச் செய்யலாம். அல்லது விடுமுறை நாட்களில் இன்னொருவருக்கு (சமபளத்திற்குத்தான்) வேலை செய்து கொடுக்கலாம்.

6, 8, 12 ஆம் இடத்து அதிபதிகளின் திசா புத்திகளை விட அங்கே சென்று அமரும் கிரகங்களின் புத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறாது
ஆகவே அந்த புத்திகள் முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான். மகாதிசையின் அதிபதியும், புத்திநாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலைப்பாட்டில்) இருந்தால்  அந்தக் காலகட்டமும் நன்மை பயக்ககூடியதாக இருக்காது.

அவைகள் முடியும்வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்!

உட்கார்ந்து யோசித்தீர்கள் என்றால் எல்லா வழிகளும் புலப்படும்

அன்புடன்
வாத்தியார்


மேலதிகத் தகவல்:

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்
.
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 33

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 33

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 33

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
பூரட்டாதி நட்சத்திரம் 1, 2 & 3ஆம் பாதங்கள் மட்டும். இது கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. ரோகிணி
2. மிருகசீரிஷம்
3. திருவாதிரை
4. மகம்
5. பூரம்
6. சித்திரை
7. மூலம்
8. பூராடம்
9.திருவோணம்
10. அவிட்டம்

ஆகிய 10 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் எந்த நட்சத்திரமும் மேற்படி குறிப்பில் இல்லைஆயில்ய நட்சத்திரம் பொருந்தாது. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு உரிய நட்சத்திரமான திருவோணம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, பூசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி  ஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணி, ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி. அனுஷம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

16.7.13

Astrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் என்ன செய்யும்?

 
Astrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் என்ன செய்யும்?

அலசல் பாடம்

கர்மவீரர் காமராஜர்

காமராஜரைப் பற்றி அறியாதவர் யார் இருக்க முடியும்?

சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்ட இரண்டாவது தலைவர் அவர்தான். (முதல் இடம் எப்போதுமே மகாத்மா காந்திக்குத்தான்!)

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலே தந்தையைப் பறிகொடுத்ததால் வறுமையில் அல்லல் பட்டார். ஆறு வயதில் தன் தந்தையை இழந்தார். தந்தை ஒரு தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் போனது. இளம் வயதில் ஒரு துணிக் கடையில் வேலை செய்தார். 16 வயதில் அரசியலில் நுழைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியின் அரவணைப்பு கிடைத்தது.

கல்கத்தாவிற்கு அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் 2 ஆண்டு காலம் வாசம் செய்ய நேரிட்டது. 1942ல் மீண்டும்  சிறைப்பட்டு அமராவதி நகர் சிறையில் 3 ஆண்டு காலம் வாசம் செய்ய நேர்ந்தது.

13.4.1954ஆம் தேதி தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்

மூடிக்கிடந்த 6,000 பள்ளிகளைத் திறக்க வைத்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத்  திட்டத்தையும் அறிமுகப் படுத்திய முன்னோடி அவரே!

விவசாயத்திற்காக பவானி அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனூர் அணை பரம்பிக்குளம் பொன்ற அணைகள் எல்லாம் அவர் காலத்தில் கட்டப்பட்டவையே!

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்டிகல்ஸ் நிறுவனம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம், மணலி பெட்ரோலிய நிறுவனம், போன்ற பல பெரிய தொழிற் சாலைகளும், அமபத்தூர் தொழிற்பேட்டை போன்றவைகள்  எல்லாம் அவர் காலத்தில் துவங்கப்பட்டவையே. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த அவர் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை. சொந்தவீடு கூட இல்லாமல் இருந்தவர்.

பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்து பதவில்  அமர்த்தியவர் அவரே. அதனால் கிங் மேக்கர் என்னும் பட்டத்தையும் பெற்றார் அவர்.

அவரால் பதவி பெற்றவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மற்றும் திருமதி இந்திரா காந்தி!

(கர்மவீரர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை ஆகியோருடன் அமர்ந்திருக்கும் காட்சி!)

அவரின் பரம பக்தரான கவியரசர் கண்ணதாசன், அவரைப்பற்றி இப்படிக்குறிப்பிட்டார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
 அன்பனே காமராஜா, உன்கையில் அதுவும் இல்லையே!”

என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

1967ல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் துறவறம் பூண்டவர் 2.10.1975ஆம் தேதி  இறைவனடி சேர்ந்தார்

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்!
________________________________________________________


அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்”
என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத்தந்ததுடன், எடுத்த காரியங்களில்  வெற்றிகளையும் பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர பலத்துடன் இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத் தலைமைப் பதவியைப் பெற்றுத்  தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான 3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப் பார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி தசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல் அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள். அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

இது மேல்நிலை வகுப்பில் 2011ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

15.7.13

கர்மகாரகனும் கர்மவீரனும்!

-----------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
கர்மவீரர் காமராஜர்

(இன்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள். அவருடைய நினைவுகளைப் போற்றும் முகமாக இந்தப் பதிவு)

எவ்வளவு நீளமான ஆறாக இருந்தாலும் அது ஒரு நாள் கடலில்
சென்று கலக்க வேண்டும். மனிதனும் அப்படித்தான் ஒரு நாள் மரணத்தைத்
தழுவித்தான் ஆகவேண்டும். ஆனால் 'அந்தக்' கடலில் கலக்கு முன்பாக
அவன் எவ்வளவு மக்களுக்குப் பயன்பட்டிருக்கிறான், எத்தனை மக்கள்
அவனை நேசித்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

விருதுநகரில் ஒரு சாதாரணத் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும்
சிவகாமி அம்மையாருக்கும் 15.7.1903ஆம் நாளன்று பிறந்த காமராஜர்
ஐந்தாம் வகுப்புவரைதான் படித்தவர். என்றாலும் பின்நாளில் Bar at Law
படித்தவர்களுடன் சமமாக உட்கார்ந்து தேசியப் பணி செய்யும் அளவிற்கு
உயர்ந்தவர்.

தமிழகத்தின் முதல் அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.
அதைவிட அற்புதம் அதற்கு மேலே சென்று யாரும் அதுவரை தொட்டிராத
சிகரத்தைத் தொட்டவர்.

ஆமாம், இந்தியாவின் ‘கிங் மேக்கர்' என்று சிறப்பித்துப் பேசப்பட்டவர்.

அவர் அப்படி இருந்த காலத்தில் அவருடைய கடைக்கண் பார்வைக்காகத்
தவமிருந்த அரசியல் தலைவர்கள் (நன்றாகக் கவனிக்கவும் தலைவர்கள்)
எத்தனையோ பேர். அப்புறம் தொண்டர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

அவர் பதவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது கூட உலாத்திய
தொண்டர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர் பதவியை விட்டு
இறங்கிய காலத்திலும் அவருடன் விசுவாசமாக, நேசமாக இருந்த தொண்டர்
களைப் பட்டியல் இட்டால் பலர் இருப்பார்கள்.

அவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன்.

காமராஜர் அவர்களைப் பற்றிக் கவியரசரின் மொழியில் சொல்வதுதான்
சுவையாக இருக்கும்.

கவியரசர் அவரைப் பற்றி இரண்டே வரிகளில் இப்படிச் சொன்னார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
அன்பனே காமராசா உன்கையில் அதுவுமில்லையே!”

எப்படி அசத்தலான வரிகள் பாருங்கள்.

அதோடு, காமராஜருடைய ஊழலற்ற வாழ்க்கைக்கு இதைவிட
வேறு என்ன சான்று வேண்டும்?

“தேமதுரத் தமிழ்பாடும்
திருநாடார் தங்குலத்தில்
வாழையடி வாழையென
வந்ததமிழ்ப் பெருமரபில்
ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீபிறந்தாய்!
நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமர்வான ஓர்குடிலில்
ஐயாநீ வந்துதித்தாய்”

என்று காமராஜரின் பிறப்பைத் தாலாட்டாகச் சொன்னார் கவியரசர்.

அந்தக் கவிதை வரிகளில் சில செய்திகளைக் கவனிக்க வேண்டும்
அவற்றை சிகப்பு வண்ணத்தில் தோய்த்துக் கொடுத்திருக்கிறேன்.

அதேபோல காமராஜரின் எளிய வாழ்க்கையைக் கவியரசர் இப்படிச்
சொன்னார:

“முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன்
பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!”

'நச்'சென்று எப்படி சொன்னார் பார்த்தீர்களா?
அதுதான் காமரசரை நன்கு அறிந்த ஒரு உண்மையான
தொண்டனின் மன வெளிப்பாடு!

ஐந்தாம் வகுப்புவரை படித்த ஒரு மனிதர், ஒரு மாநிலத்தின்
முதல் அமைச்சர் ஆனார் என்றால், அது காமராஜர் ஒருவர்தான்
சுமார் 9 ஆண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த காமராஜர்
2.10.1975 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

காமராஜர் அவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

ஆனால் பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய நேரம் கருதி
ஒரே ஒரு செய்தியைச் சொல்லிக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்

எனக்கு எந்தக் காலத்திலேயுமே அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை
ஆனால் ஆர்வம் இருந்திருக்கிறது.

ஈடுபாடு பவேறு ஆர்வம் வேறு! அந்த ஆர்வத்தால்தான் பல
அரசியல் தலைவர்களை நான் நேசித்தேன்.

அது அவர்களின் அரசியலுக்காக அல்ல - அவர்களுடைய தனி
மனிதப் பண்பிற்காக என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்!

தந்தை பெரியாரின் மீதும் எனக்கு நேசம் உண்டு!
மூதறிஞர் ராஜாஜி மீதும் எனக்கு நேசம் உண்டு
அறிஞர் அண்ணா மீதும் எனக்கு நேசம் உண்டு
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம் எனக்கு நேசம் உண்டு
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வாஜ்பாய் எனக்கு நேசம் உண்டு

அதனால்தான் அவர்களில் சிலரை எழுதத் துணிந்தேன்.
---------------------------------------------------------------------------------
காமராஜ் பற்றிய மற்ற தலைவர்களின் கருத்து.
(உபயம் - விக்கி மகராசா)

"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்
ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர்
சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும்
மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என
நான் நம்புகிறேன்.' நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத
மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு
காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம்
ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த
அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை
மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.

“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும்,
அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும்
அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த
தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக
பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.
அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து
பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."
- சுப்பிரமணிய அய்யர்

"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"
- எம். ஜி. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்
பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி

"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக
இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும்,
நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."
-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
-----------------------------------------------------------------
அது சரி, கர்மவீரரைச் சந்தித்திருக்கிறாயா?

ஆகா...! அந்த பாக்கியம் கிடைத்தது. படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
பார்த்து விட்டுப் போங்கள்.
-----------------------------------------------------------------------------------------------


முன்வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்பது நான்
(படம் எடுத்தது ஜனவரி 1975ஆம் ஆண்டு - தேதி நினைவிலில்லை.
உடன் இருப்பவர்கள் என்னுடைய நண்பர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கர்மவீரர் காமராஜரைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டி கிழே உள்ளது :
http://en.wikipedia.org/wiki/K._Kamaraj
++++++++++++++++++++++++++++++++++++++++
கரமகாரகன் என்றால் யார் என்று ஜோதிடம் கற்கும் நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல கர்ம வீரர் என்றால் காமராஜர் ஒருவர்தான் கர்மவீரர்.
அதாவது செயல்வீரராக இருந்து சிறப்புப் பெற்றவர். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.7.13

பனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்!

பனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்!

பக்தி மலர்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!’ என்னும் அற்பதமான பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்:

சத்தியம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

- பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
---------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/wWgxFMfsC_Y
Our sincere thanks to the person who uploaded the song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 32

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 32

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 32

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
சதய நட்சத்திரம். இது கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரம் ராகுவிற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மிருகசீரிஷம்
2. புனர்பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5. அனுஷம்
6. கேட்டை
7. மூலம்
8. ரேவதி

ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பார்த்தால் ஆயில்ய நட்சத்திரம் பொருந்தாது. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு உரிய நட்சத்திரம் எதுவும் மேலே உள்ள பொருத்தக் கணக்கில் வரவில்லை!கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சதயம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, பூரட்டாதி, உத்திரட்டாதி,  ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம், உத்திராடம், அவிட்டம் ஆகிய 10 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

10.7.13

Astrology கல்லிற்கா இந்த விலை சாமி?

 

Astrology கல்லிற்கா இந்த விலை சாமி?

தெரிந்து கொள்வோம்!

டி பியர்ஸ் நிறுவனம் பற்றித் தெரியுமா? வைரக்கற்கள் உற்பத்தியில் உலகின் நம்பர் ஒன் கம்பெனி அது. அவர்களைப் பற்றிப் படித்தால் தலை சுற்றும். உலகம் முழுவதும் பல நாடுகளில் அவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன. வைரச் சுரங்கங்கள் (தோண்டி எடுத்தல்), வைரங்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல் என்று எல்லா வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேர்கள். ஆண்டு வருமானம், 6,100 கோடி டாலர்கள். 1888ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்றதில் இருந்து இன்று வரை வெற்றியையும் தனக்கென்று ஒரு பெயரையும், மதிப்பையும் கொண்டுள்ள நிறுவனம் அது.

போட்ஸ்வானா, நாம்பியா, சவுத் ஆஃப்ரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அவர்களுடைய வைரச் சுரங்கங்கள் உள்ளன

விக்கி மகாராஜவிடம் கேட்டால் மேலும் பல தகவல்களைத் தருவார். சுட்டி கீழே உள்ளது. தட்டிப் பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/De_Beers
----------------------------------------------------------------------
De Beers De Beers.svg
Type: Private
Industry:    Mining and trading of diamonds
Founded:     1888
Founder(s): Cecil Rhodes
Headquarters: Luxembourg, Luxembourg
Area served: Worldwide
Key people: Nicky Oppenheimer (Chairman)
Philippe Mellier: (CEO)
Gareth Penn:y (Managing Director)
Stuart Brown: (Group Finance Director and Board Member)
Products: Diamonds
Services:    Diamond marketing and promotion. Community development.
Revenue:    Decrease$6,1 Billion (FY 2012)[1]
Employees: 20,000+
------------------------------------------------------------------------
சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அவர்களுடைய காதணிகள், கழுத்தணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்கள் மிகவும் பிரபலமானவை. நம்பி வாங்கலாம்

அதைவிட முக்கியமாக அவர்கள் விற்பனை செய்யும் நவரத்தினக்கற்கள் கூடுதலான மதிப்பு மிக்கவை.

சமீபத்தில் அரிய வகை நீலக்கல் ஒன்றை ஏலத்தின் மூலம் விற்பனை செய்துள்ளார்கள். 5.16 கேரட் எடை கொண்ட ஒரே கல்லான அது சுமார் 28.8 கோடி ரூபாய்க்கு காசாகியிருக்கிறது. (அம்மாடியோவ்.....!)

ஆதாரம்: பத்திரிக்கைச் செய்தி கீழே உள்ளது
நன்றி: தினமலர்

அத்தனை கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்கியவருக்கு அதனால் என்ன லாபம்? எடுத்தவரைக் கேட்டால் அல்லவா தெரியும்! லாபம் இல்லாமல், பயன் இல்லாமலா அவர் வாங்கியிருப்பார்?

பொதுவாக நீலக்கல் என்றால் விவரம் தெரிந்தவர்கள் பயப்படுவார்கள். சனி கிரகத்திற்கு உரிய கல் அது. சனியின் ஆசி உள்ளவர்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ளலாம். அதாவது சனி ராசிநாதனாக அல்லது லக்கினநாதனாக உள்ளவர்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ளலாம். அல்லது சனி திசை நடப்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வைத்துக் கொண்டால் அந்தக்கல் அவர்களைப் போட்டுப் பார்த்துவிடும். உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சிறு நீலக்கல்லை (ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் விலைக்குள் கிடைக்கும்) வாங்கி வைத்துப் பலனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.

என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் மூலம் அது எனக்குத் தெரியும்
----------------------------------------------------------------------
சரி, இந்தக் கற்கள், அதாவது நவரத்தினக் கற்களால் என்ன பலன்? உரிய கற்களை உரியவர்கள், உரிய காலத்தில் அணிந்து கொண்டால் நன்மையானதே!

அது பற்றி பின் ஒரு நாள் விவரமாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

9.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

 
---------------------------------------------------------------------------------------------
Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

ஜோதிடத் தொடர் - பகுதி 2

பணமா? குணமா?

பணம் இல்லை என்றால், இந்தக் காலத்தில் எந்த வேலையும் நடக்காது! ஒரு சின்னக்குழந்தையைத் துவக்கப் பள்ளியில் சேர்ப்பதில் இருந்தே பணம் தன் வேலையை, ஆட்டத்தைத் துவங்கி விடுகிறது.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!”

என்றான் சிந்தனையாளன் ஒருவன்.

உண்மைதான். அதை யாரும் மறுக்க முடியாது.

பணம் அவசியமானதுதான். ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா?

இல்லை!

பணம் என்னும் தலைப்பில், தத்துவஞானி ஓஷோ அவர்கள் எழுதிய நூல் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். பணத்தால் என்னென்ன முடியாது என்பதை அவர் அழகாக விவரித்திருப்பார். பணத்தால் நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம். ஏன், ஒரு அரண்மனையைக் கூட வாங்கலாம். ஆனால் தூக்கத்தைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? உணவை வாங்கலாம். பசியை வாங்க முடியுமா? பெண்ணை வாங்கலாம். தாயை வாங்க முடியுமா? பொழுது போக்கை வாங்கலாம். உண்மையான மகிழ்ச்சியை வாங்க முடியுமா?  நிம்மதியை வாங்க முடியுமா? இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Osho சுருக்கமாக இப்படிச் சொல்வார்: With money you can buy a house; But with money you can't buy love!

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்"

என்று கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு இணங்க குணம்தான் நிரந்தமானது!
----------------------------------------------------------------------------------
எப்படி ஒவ்வொருவருக்கும் முகத் தோற்றம் மாறுபடுகிறதோ, அப்படி குணமும் மாறுபடும்.

அவன் ரொம்ப நல்லவனப்பா’ என்று ஒருவனைப் பற்றிச் சொல்லும் நாம், ‘அவனா, அவன் அயோக்கியன், கிராதகன் என்று வேறு ஒருவனைப் பற்றி சிலாக்கியமாகச் சொல்கிறோம். நமக்கு எப்படித் தெரிந்தது. பழக்கத்தின் மூலம், அனுபவத்தின் மூலம் தெரியும் அது

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளே தோற்றத்திலும், குணத்திலும் ஒன்று போல இருப்பதில்லை. படைப்பின் வினோதம் அது.

உடன் பிறப்புக்களைப் பற்றிக் கிராமங்களில் சொல்வார்கள்: ”ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பதினைந்து வயதில் பங்காளி நாற்பது வயதில் வாதி, பிரதிவாதி”

ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள். இன்று பல குடும்பங்களில் உள்ள சண்டை சச்சரவுகளுக்கே காரணம் பணம். பணம் இருப்பதால், சொத்துக்களை வைத்து அதைப் பங்கு வைத்துக் கொள்வதை வைத்து சண்டைகள். வம்புகள், விரோதங்கள், வழக்குகள்.

அதே பணத்தை வைத்து நீங்களும் நானும் வாழுகின்ற இந்த சமூகத்தில் அந்தஸ்து (Status) பிரச்சினை. வீடு, வாகனம் வைத்திருப்பவன் அதேபோன்று வீடு வாகனம் உள்ளவனைத்தான் மதிப்பான். மரியாதை கொடுப்பான். அன்றாடம் காய்ச்சியை, ஏழைய அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

திருமணச் சந்தையிலும் இந்த ஸ்டேட்டஸ் (அந்தஸ்து) மட்டையோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காதலில் தோல்வி அடைந்தவர்களைக் கேளுங்கள், தங்கள் பெற்றோர்களின் சம்மதம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேளுங்கள். அந்தஸ்து வித்தியாசம் அடித்து நொறுக்கியதைக் கூறுவார்கள். ஜாதிப் பிரச்சினை கூட இரண்டாவது (அது ரன்னராக) கூட்டு ஆட்டக்காரராக வரும்.

ஒரு பெரிய செல்வந்தன், தன் மகளின் காதலுக்காக ஒரு குடிசை வீட்டுக்காரனை, அல்லது ஒரு ஓட்டு வீட்டுக்காரனை தன் சம்பந்தியாக ஏற்றுக்கொள்ள மாட்டான். பெரும்பாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவனின் செல்வ நிலைமை ஜாதகத்தின் ஒன்று, இரண்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீட்டை வைத்து மாறுபடுவதைப் போல குணமும் ஜாதகத்தை வைத்து ஆளாளுக்கு மாறுபடும்.

லக்கினம், லக்கின அதிபதி, நட்சத்திரம், சந்திர ராசி (அதாவது நட்சத்திரம் அமர்ந்திருக்கும் ராசி) சுப கிரகங்கள் என்று  ஜாதத்தின் பல அமைப்புக்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் குணத்தைக் கொடுக்கின்றன.

மனிதனின் வளர்ச்சிக்கு எதிரிகளான சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, கஞ்சத்தனம், இடக்கான போக்கு (Negative aspect) போன்ற பல கெடுதல்கள் அல்லது கேடுகளுக்குக் காரணம் கிரகக்கோளா! ஜாதக அமைப்பே!

உலக மக்களின் இயக்கமும், மனமும் ஒரு ஒழுங்கில் இல்லை (They are not in one order) ஒரு பக்கம் உலக நன்மைக்காக பாடுபடும், உழைக்கும் மக்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகள்.

ஆனால் வானத்தில் உள்ள கிரகங்கள், ஒரு ஒழுங்கு முறையில் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. (The cosmic process is absolutely scientific and intelligible.) நிலையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்த உத்தரவும் அவைகளைக் கட்டுப்படுத்தாது. ஒவ்வொரு கிரகமும் தனது பணியைத் துல்லியமாகச் செய்து, ஆக்கல், நிலைத்தல், அழித்தல் வேலைகளைச் செவ்வனே செய்து கொடிருக்கின்றன

அவைகளின் கட்டுப் பாட்டில்தான் மனித வாழ்க்கையும், மனிதனின் குணங்களும், செயல்பாடுகளும் உள்ளன.

உங்களின் லக்கினத்தை வைத்தும் உங்களின் நட்சத்திரத்தை வைத்தும்தான் உங்களின் குண நலன்கள்

அதுபோல  ஒன்பது கிரகங்களை, 12 லக்கினங்களை, 27 நட்சத்திரங்களை வைத்துத்தான் உங்கள் அனைவரின் குண நலன்கள்

சரி, ஒன்பது கிரகம் 12 லக்கினத்திற்கு எத்தனை விதமான வாழ்க்கை கிடைக்கும்?

Permutations and Combinations Basics தெரியுமா உங்களுக்கு? இல்லை என்றால் கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள்: Nine to the power of Twelve

விடை கிடைக்கும். உங்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்

9 to the 12th power would be 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9  
which would equal 282 429 536 481

அம்மாடியோவ்...................!!!!

மற்றவை அடுத்த பதிவில்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

 

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

ஜோதிடத் தொடர் பாடம் - பகுதி ஒன்று

நம்ம சூப்பர் ஸ்டார் படங்களில், ஒவ்வொரு படத்திலும் ஒரு முத்தான வசனம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். அது போன்று அவர் உதிர்த்த முத்தான் வசனம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். படத்தின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

”கிடைக்கிறது கிடைக்காம இருக்காது: கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!”

உண்மைதான். நமக்குக் கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் தானாகவே கிடைக்கும். அதுபோல நமக்கு மறுக்கப்பட்டதை எத்தனை முயன்றாலும் பெறமுடியாது. அதாவது அது கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவங்களின் மூலம்தான் அதை உணர முடியும்.

நல்ல பெற்றோர்கள், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வீடு, நல்ல வாகனம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல அம்சமும் நமக்கு, நம் விருப்பப்படி கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது தானாகவே அமைய வேண்டும். தேடிப் பிடித்தெல்லாம் பெற முடியாது.

ஜோதிடத்தில் அதை ஜாதக அமைப்பு என்று சொல்வோம். எளிமையாகச் சொன்னால் வாங்கி வந்த வரம் என்போம்.

இன்று மனைவி அமைவது எப்படி என்று பார்ப்போம். அதை மட்டும் பார்ப்போம். அதற்கான அம்சங்களைப் பார்ப்போம். திருமணம் ஆகி குப்பை  கொட்டிக்கொண்டிருப்பவர்கள் ’இனிப் பார்த்து என்ன ஆகப்போகிறது?’ என்று கேட்கலாம். அது உங்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கு உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உதவும் அல்லவா? ஆகவே முகத்தைச் சுளிக்காமல் மேலே படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------
திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் நிலை என்ன?

முன்பு வந்த பத்திரிக்கைச் செய்தி ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்.


(நன்றி: தினமலர் நாளிதழ்)

ஆய்வு ஒன்றின் மூலம், இன்றையப் பெண்கள், அதிக சம்பளம் பெறும் ஆண்களையும், ஆண்கள் அழகான பெண்களையும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்பும் அதுதான்.

முன்பெல்லாம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்பது பெரிய தொகை. இன்று நகரங்களில் உள்ள வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலைவாசி என்று பார்த்தால், முப்பதாயிரத்திற்குக் குறையாமல் சம்பளம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் சமாளிக்க முடியும். ஐம்பதாயிரம் என்பது ஓரளவிற்குக் கவர்ச்சியான சம்பளம்.

சரி, வருமானத்தை மட்டும் பார்த்தால் போதுமா? ஆசாமியின் தோற்றம், அறிவு (Smartness) குடும்பச் சூழ்நிலை, தனித்தன்மை (குணம்) எல்லாம் முக்கியமில்லையா?

நல்ல குணம் என்பதுதான் அதிக முக்கியமானது. தீய பழக்கங்கள் எதுவும் இல்லாததுதான் முக்கியமானது. ‘கட்டிங்’ அடிக்கிற பையனாக, ஸ்த்ரீ லோலனாக இருந்தால் என்ன செய்வார்களாம்?

அதுபோல பெண்கள் சிவந்த நிறத்துடன் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? குணம் முக்கியமில்லையா?

மண் வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய் 
கண் வளர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்’ 
என்ற திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப பெண் இருக்க வேண்டாமா?

எப்போதும் உற்சாகமாக, புன்னகையுடன், யாரையும் எதிர்கொள்ளும் தைரியமும், எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு போகின்ற மனவலிமை யும் உள்ள பெண் வேண்டாமா? அத்தான் என்று அன்புடன், பாசத்துடன் கட்டியனைக்கின்ற பெண் வேண்டாமா?

சிவப்பு என்று கட்டிக்கொண்டுவந்து தினமும் அவளிடம் செருப்படி பட்டுக்கொண்டிருக்கிறான்’ என்று மற்றவர்கள் ஏளனம் செய்யும்படியான வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும்?

சற்று யோசித்துப் பாருங்கள்

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் குணம்தான் அதிக முக்கியமானதாகும்!

ஹீரோ அல்லது ஹீரோயினாக இருக்க வேண்டும். வில்லன் அல்லது வில்லியாக இருந்தால், அவதி இல்லையா?

திருமணம் என்பது மகிழ்ச்சிக்கா? அல்லது அவதிக்கா?

சரி குணத்தை எப்படித் தெரிந்து கொள்வது?

ஜாதகத்தில் லக்கினத்தை வைத்தும், சந்திர ராசியை வைத்தும், சுபக்கிரகங்களை வைத்தும் குண நலன்கள் தெரியவரும்

அதை வைத்து ஒரு தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.

முதல் அத்தியாயம் நாளை!

பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.7.13

வேலுண்டு வினையில்லை முருகா!

 

’முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்”

             - நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படைப் பாடல்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
வேலுண்டு வினையில்லை முருகா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை  “வேலுண்டு வினையில்லை முருகா!”  என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------- 
பாடலின் காணொளி வடிவம்!
 http://youtu.be/Bmf2jGVhgaM
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++=====

4.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 31

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில்  எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.

கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++