15.7.13

கர்மகாரகனும் கர்மவீரனும்!

-----------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
கர்மவீரர் காமராஜர்

(இன்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள். அவருடைய நினைவுகளைப் போற்றும் முகமாக இந்தப் பதிவு)

எவ்வளவு நீளமான ஆறாக இருந்தாலும் அது ஒரு நாள் கடலில்
சென்று கலக்க வேண்டும். மனிதனும் அப்படித்தான் ஒரு நாள் மரணத்தைத்
தழுவித்தான் ஆகவேண்டும். ஆனால் 'அந்தக்' கடலில் கலக்கு முன்பாக
அவன் எவ்வளவு மக்களுக்குப் பயன்பட்டிருக்கிறான், எத்தனை மக்கள்
அவனை நேசித்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

விருதுநகரில் ஒரு சாதாரணத் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும்
சிவகாமி அம்மையாருக்கும் 15.7.1903ஆம் நாளன்று பிறந்த காமராஜர்
ஐந்தாம் வகுப்புவரைதான் படித்தவர். என்றாலும் பின்நாளில் Bar at Law
படித்தவர்களுடன் சமமாக உட்கார்ந்து தேசியப் பணி செய்யும் அளவிற்கு
உயர்ந்தவர்.

தமிழகத்தின் முதல் அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.
அதைவிட அற்புதம் அதற்கு மேலே சென்று யாரும் அதுவரை தொட்டிராத
சிகரத்தைத் தொட்டவர்.

ஆமாம், இந்தியாவின் ‘கிங் மேக்கர்' என்று சிறப்பித்துப் பேசப்பட்டவர்.

அவர் அப்படி இருந்த காலத்தில் அவருடைய கடைக்கண் பார்வைக்காகத்
தவமிருந்த அரசியல் தலைவர்கள் (நன்றாகக் கவனிக்கவும் தலைவர்கள்)
எத்தனையோ பேர். அப்புறம் தொண்டர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

அவர் பதவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது கூட உலாத்திய
தொண்டர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர் பதவியை விட்டு
இறங்கிய காலத்திலும் அவருடன் விசுவாசமாக, நேசமாக இருந்த தொண்டர்
களைப் பட்டியல் இட்டால் பலர் இருப்பார்கள்.

அவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன்.

காமராஜர் அவர்களைப் பற்றிக் கவியரசரின் மொழியில் சொல்வதுதான்
சுவையாக இருக்கும்.

கவியரசர் அவரைப் பற்றி இரண்டே வரிகளில் இப்படிச் சொன்னார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
அன்பனே காமராசா உன்கையில் அதுவுமில்லையே!”

எப்படி அசத்தலான வரிகள் பாருங்கள்.

அதோடு, காமராஜருடைய ஊழலற்ற வாழ்க்கைக்கு இதைவிட
வேறு என்ன சான்று வேண்டும்?

“தேமதுரத் தமிழ்பாடும்
திருநாடார் தங்குலத்தில்
வாழையடி வாழையென
வந்ததமிழ்ப் பெருமரபில்
ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீபிறந்தாய்!
நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமர்வான ஓர்குடிலில்
ஐயாநீ வந்துதித்தாய்”

என்று காமராஜரின் பிறப்பைத் தாலாட்டாகச் சொன்னார் கவியரசர்.

அந்தக் கவிதை வரிகளில் சில செய்திகளைக் கவனிக்க வேண்டும்
அவற்றை சிகப்பு வண்ணத்தில் தோய்த்துக் கொடுத்திருக்கிறேன்.

அதேபோல காமராஜரின் எளிய வாழ்க்கையைக் கவியரசர் இப்படிச்
சொன்னார:

“முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன்
பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!”

'நச்'சென்று எப்படி சொன்னார் பார்த்தீர்களா?
அதுதான் காமரசரை நன்கு அறிந்த ஒரு உண்மையான
தொண்டனின் மன வெளிப்பாடு!

ஐந்தாம் வகுப்புவரை படித்த ஒரு மனிதர், ஒரு மாநிலத்தின்
முதல் அமைச்சர் ஆனார் என்றால், அது காமராஜர் ஒருவர்தான்
சுமார் 9 ஆண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த காமராஜர்
2.10.1975 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

காமராஜர் அவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

ஆனால் பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய நேரம் கருதி
ஒரே ஒரு செய்தியைச் சொல்லிக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்

எனக்கு எந்தக் காலத்திலேயுமே அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை
ஆனால் ஆர்வம் இருந்திருக்கிறது.

ஈடுபாடு பவேறு ஆர்வம் வேறு! அந்த ஆர்வத்தால்தான் பல
அரசியல் தலைவர்களை நான் நேசித்தேன்.

அது அவர்களின் அரசியலுக்காக அல்ல - அவர்களுடைய தனி
மனிதப் பண்பிற்காக என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்!

தந்தை பெரியாரின் மீதும் எனக்கு நேசம் உண்டு!
மூதறிஞர் ராஜாஜி மீதும் எனக்கு நேசம் உண்டு
அறிஞர் அண்ணா மீதும் எனக்கு நேசம் உண்டு
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம் எனக்கு நேசம் உண்டு
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வாஜ்பாய் எனக்கு நேசம் உண்டு

அதனால்தான் அவர்களில் சிலரை எழுதத் துணிந்தேன்.
---------------------------------------------------------------------------------
காமராஜ் பற்றிய மற்ற தலைவர்களின் கருத்து.
(உபயம் - விக்கி மகராசா)

"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்
ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர்
சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும்
மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என
நான் நம்புகிறேன்.' நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத
மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு
காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம்
ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த
அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை
மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.

“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும்,
அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும்
அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த
தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக
பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.
அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து
பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."
- சுப்பிரமணிய அய்யர்

"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"
- எம். ஜி. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்
பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி

"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக
இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும்,
நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."
-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
-----------------------------------------------------------------
அது சரி, கர்மவீரரைச் சந்தித்திருக்கிறாயா?

ஆகா...! அந்த பாக்கியம் கிடைத்தது. படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
பார்த்து விட்டுப் போங்கள்.
-----------------------------------------------------------------------------------------------


முன்வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்பது நான்
(படம் எடுத்தது ஜனவரி 1975ஆம் ஆண்டு - தேதி நினைவிலில்லை.
உடன் இருப்பவர்கள் என்னுடைய நண்பர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கர்மவீரர் காமராஜரைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டி கிழே உள்ளது :
http://en.wikipedia.org/wiki/K._Kamaraj
++++++++++++++++++++++++++++++++++++++++
கரமகாரகன் என்றால் யார் என்று ஜோதிடம் கற்கும் நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல கர்ம வீரர் என்றால் காமராஜர் ஒருவர்தான் கர்மவீரர்.
அதாவது செயல்வீரராக இருந்து சிறப்புப் பெற்றவர். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. அறிவு வேறு படிப்பு வேறு என
    அன்று சொன்னதை சொல்லியது பதிவு

    தலையை வணங்கும்
    தலைக்கும் வணக்கம்

    கண் போன போக்கிலே
    கால் போகலாமா

    கால் போன போக்கிலே
    மனம் போகலாமா

    மனம் போன போக்கிலே
    மனிதன் போகலாமா

    மனம் போன போக்கிலே
    மனிதன் போகலாமா

    மனிதன் போன பாதையை
    மறந்து போகலாமா

    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்

    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்

    அது சரி

    நீங்கள் நேசிக்கும் தலைவர் பட்டியலில்
    காங்கிரசை காணோமே..

    (இன்னொரு) சரி....
    கையை கட்டும் body language சொல்லித்தந்தது யாரு?

    ReplyDelete
  2. அய்யா
    காமராஜரின் பிறந்தநாளை கல்வி நாள் என்று கொண்டாடலாம்

    ReplyDelete
  3. இதுவரை சொல்லாத தகவலும் புகைப்படமும்! கர்மவீரருடன் புகைப்படம் எடுக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    காமராஜர் போன்ற‌வர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவரைப் பற்றி எழுதும்போது கட்சிச் சாயம் மேலே பற்றிக் கொள்ளுமோ என்ற ஐயம் தேவை இல்லை.

    சாராய ராஜ்ஜியமும், ஊழலும், வன்முறையும், நில அபகரிப்பும் மலிந்துவிட்ட இக்காலச் சூழலில், காமராஜர் காலம் ஒரு கனாக் காலம்தான். அது ஒரு கனாக் கால்ம்.'பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே...!'

    வேப்பிலை சுவாமிகளே! வாஜ்பாயியைத் தவிர மற்ற அனைவரும் காந்திகால‌ காங்கிரஸ்காரர்களே!

    ReplyDelete
  4. அவரைப் பற்றி நினைக்கும் போதும் கண்கள் பனிக்கின்றன..உண்மையில் காமராஜர் தான் மனிதருள் மாணிக்கம்!.

    ReplyDelete
  5. Blogger eswari sekar said...
    vanakamsir

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. //////Blogger வேப்பிலை said...
    அறிவு வேறு படிப்பு வேறு என
    அன்று சொன்னதை சொல்லியது பதிவு
    தலையை வணங்கும்
    தலைக்கும் வணக்கம்

    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்

    அது சரி
    நீங்கள் நேசிக்கும் தலைவர் பட்டியலில்
    காங்கிரசை காணோமே../////

    யாரைச் சொல்கிறீர்கள்? எதைச் சொல்கிறீர்கள்? புரியவில்லை வேப்பிலையாரே!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////(இன்னொரு) சரி....
    கையை கட்டும் body language சொல்லித்தந்தது யாரு?/////

    பெரியவர்கள், மதிப்புக்கு உரியவர்கள் முன்னிலையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்பது சரியா? அல்லது தவறா? அதைச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  7. ///Blogger Kalai Rajan said...
    அய்யா
    காமராஜரின் பிறந்தநாளை கல்வி நாள் என்று கொண்டாடலாம்////

    முதன் முதலில் அனைவருக்கும் கல்வி, கட்டணம் இல்லாத கல்வி போன்ற அரிய திட்டங்களை எல்லாம் செயல் படுத்தியவர் அவர்தான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //////Blogger kmr.krishnan said...
    இதுவரை சொல்லாத தகவலும் புகைப்படமும்! கர்மவீரருடன் புகைப்படம் எடுக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    காமராஜர் போன்ற‌வர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவரைப் பற்றி எழுதும்போது கட்சிச் சாயம் மேலே பற்றிக் கொள்ளுமோ என்ற ஐயம் தேவை இல்லை.
    சாராய ராஜ்ஜியமும், ஊழலும், வன்முறையும், நில அபகரிப்பும் மலிந்துவிட்ட இக்காலச் சூழலில், காமராஜர் காலம் ஒரு கனாக் காலம்தான். அது ஒரு கனாக் காலம்.'பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே...!'
    வேப்பிலை சுவாமிகளே! வாஜ்பாயியைத் தவிர மற்ற அனைவரும் காந்திகால‌ காங்கிரஸ்காரர்களே!//////

    நிறைவான மன வெளிப்பாட்டுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger துரை செல்வராஜூ said...
    அவரைப் பற்றி நினைக்கும் போதும் கண்கள் பனிக்கின்றன..உண்மையில் காமராஜர் தான் மனிதருள் மாணிக்கம்!./////

    உண்மைதான்! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. அரசியலில் ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். (எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இன்று பலர் உதாரணமாக இருக்கிறார்கள்). காமராஜர் திரைப்படத்தின் மூலம்தான் அவரைப் பற்றிய பல விபரங்களைத் தெரிந்துக் கொண்டேன்.

    ReplyDelete
  11. ////Blogger Ak Ananth said...
    அரசியலில் ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். (எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இன்று பலர் உதாரணமாக இருக்கிறார்கள்). காமராஜர் திரைப்படத்தின் மூலம்தான் அவரைப் பற்றிய பல விபரங்களைத் தெரிந்துக் கொண்டேன்.////

    நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால், இந்த அளவு தெரிந்து வைத்திருப்பதே பெரிய விஷயம். நன்றி ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com