28.5.11

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

இளைஞர் மலர்

இந்தவார இளைஞர் மலருக்கு யாரும் ஆக்கங்கள் எதையும் அனுப்பாததால், வாத்தியாரே களத்தில் இறங்கியிருக்கிறார். மனதளவில் வாத்தியாரும் இளைஞர்தான் அதை மனதில் வையுங்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ஏன் பெண் உறங்கவில்லை!

கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..

பாடலின் முதல் ஏழு வரிகளைப் பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே  நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே   
சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை .. பெண் உறங்கவில்லை.

இளைஞர்கள் கேட்டது இதுதான்.

"
உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக்
கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள். கடிதங்கள் நூற்றுக் 
கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.

"
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:

"
பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்! அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.

"
இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி
கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"

என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாவாடை சட்டையும் பரமசிவன் வரமும்
ஒரு சம்பவத்தைச் சுவையாகச் சொல்வதில் கதாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்குமிடையே மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. பதினைந்து வரிகளில் சொல்லவேண்டியதை, உணர்வு மேலோங்கிடச் சொல்வதற்குக் கதாசியருக்கு நாற்பது வரிகள் தேவைப்படும்.ஆனால் சிறந்த கவிஞரால் அதை நான்கே வரிகளில் அசத்தலாகச் சொல்லிவிட முடியும்.

எப்படியென்று பார்ப்போம்.

ஒரு ஏழைத் தாய். வறுமைதான் அவளுக்குத் துணைவன்.வீடுகளில் வேலை செய்து அரைவயிற்றுக் கஞ்சியோடு காலத்தை அவள் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், அவளுடைய பதினோரு வயது நிரம்பிய மகள் வயதிற்கு வந்து விட்டாள். அவளுக்கு மகளாகப் பிறந்துவிட்ட அந்தப் பாவப்பட்ட சிறுமிக்கு இருப்பது இரண்டே உடைகள்தான் .ஒன்றை அவள் அணிந்து கொண்டிருக்கின்றாள்.மற்றொன்று வீட்டு வாசலில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது. பூப்படைந்துவிட்ட அந்தப் பெண்ணின் அவசரத் தேவைக்கு மற்றுமொரு மாற்று உடை இல்லாத நிலை. அந்த இருவருக்கும் ஒரே ஆதரவான அந்தப் பெண்மணியின் சகோதரனோ - காலக் கோளாறால் தற்சமயம் சிறையில் இருக்கிறான். அவன் இருந்திருந்தாலாவது இவர்களது வாட்டத்தைப் போக்குவான் அதை எண்ணி அந்த அன்புத்தாய் கண்ணீரோடு குடிசை வாசலில் அமர்ந்திருக்கின்றாள்.

தாயின் இந்தப் பரிதாப நிலைக்கு மனம் உருகி கவிஞர் வைரமுத்து
அவர்கள் பளிச்சென்று நம் மனதில் தைக்கும் விதமாகச் சிலவரிகளிலேயே இப்படிச் சொன்னார்

"
பாவாடை சட்டையோ பரமசிவன் தந்தவரம்!
தாவணிக்கு எங்குபோவேன்?
தாவணி வேணுமின்னா மாமன் வரவேணும்
மாமன் வரவேணுமின்னா - ஜாமீனில் வரவேணும்!"

என்ன அற்புதமான வெளிப்பாடு பாருங்கள்!

நச்' சென்று இருக்கிறதல்லவா?
----------------------------------------------------------------------------------
 அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

8 comments:

  1. ஜாமீனில் வந்தாலும் மாமன் மாமன்தான். எங்கள் வகுப்பில் யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் சமூகப் புறக்கணிப்புக்குத் தயாராக இருக்க வேண்டும்.உறவினர்களும் கூட அந்த நபரிடம் பேச அஞ்சுவார்கள்."சுவையாக எழுதுவது எப்படி?" என்று புத்தகம் எழுதினால் உங்கள் ஆக்கங்களைத்தான் அதிகம் மேற்கோள் காட்ட வேண்டிவரும்.

    ReplyDelete
  2. பாவாடை பற்றி தமிழ்
    பா ஆடை புனைந்ததும்

    தூக்கத்தின் கால் குறைந்தால்
    துக்கமே மீதமென சொன்ன

    நடையும் நளினமும் இளைப
    படையின் தளபதியாக

    இளைகஞர் மலரை நீங்களே
    இன்று கையாண்டதும்அருமை

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார் ஐயா,

    //நச்' சென்று இருக்கிறதல்லவா?//

    வாத்தியாரின் ஆக்கங்கள் எப்போதுமே நச் என்று தான் இருக்கும்.. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை..

    ஆனால் இன்று முன்னுரையில் சொன்னீர்கள் பாருங்கள்...

    ஆம்.

    //இந்தவார இளைஞர் மலருக்கு யாரும் ஆக்கங்கள் எதையும் அனுப்பாததால், வாத்தியாரே களத்தில் இறங்கியிருக்கிறார். மனதளவில் வாத்தியாரும் இளைஞர்தான் அதை மனதில் வையுங்கள்//

    இதுதான் நச்சோ நச்...

    என்றும் 16 ஆக இருந்து எங்களுக்கு நல்லபல ஆக்கங்களைத் தரவேண்டுகிறோம்.

    நன்றி..

    ReplyDelete
  4. உணர்ச்சியின் உட்சத்திற்கு செல்பவன் கவிஞன் (கலைஞன்)
    அதை முழுதாக உணர்ந்து ரசிப்பவன் நல்ல ரசிகன்...

    கவிஞன் பாடு பொருளோடு தன்னை இணைத்துக் கொள்வதால்
    இல்லை பாடும் பொருளின் ஜீவனாகிப் போனதால் !.. பாடும் போதெல்லாம்
    கருவுற்று, பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, காதல்கொண்டு, மணந்து, பெற்று
    தளர்ந்து, மறித்து பின்பு கருவுற்று.... ஆயிரம் ஆயிரமுறை அவதரிக்கிறான்...

    அவன் பருவத்தை நிர்ணயிப்பது அவனது ஆக்கமே!

    வகுப்பறை இன்றையப் படைப்பும் அப்படியே.... அருமை...
    ரசிகனின் கேள்வியும்.. கவிஞனின் பதிலும்....

    இங்கே வைரமுத்தும் வந்தமையால்....
    இவர்களோடு உலா வரும் இன்னொரு சிற்பியின் அற்புத வரிகளையும்
    பகிர்கிறேன்....

    இளம் பெண்களின்
    தீராத கதைகளுக்கு
    என் நாயகரே நாயகர்!

    மாசாத்து வணிகன்
    மகன் பற்றிப் பேசினால்
    ஆரவாரப் பெண்களிடம்
    அமைதி கொலுவேறும்!
    கொண்டாய் ஊசி விழுந்தாலும்
    கேட்காமல் போகாது
    மேகலை (யே) விழுந்தாலும்
    வெட்கம் தெரியாது....
    (ஒருவேளை கட்டவிழ்ந்த தாமரைகளுக்கு வெட்கம் தெரியாது போலும்... கவிஞரின் கற்பனை அருமை!!)

    ReplyDelete
  5. கண்ணதாசன் புலமைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது

    ReplyDelete
  6. வைரமுத்துவின் கவிதை சுபெர்ப்.

    ReplyDelete
  7. தாவணியின் மகிமையை மீண்டும் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை 'களவாணி' பட இயக்குனர் சற்குணத்தையே சாரும்..
    அந்த 'தாவணிக்கனவுகள்' பற்றிய வைரமுத்துவின் வரிகளில் இழையோடும் உணர்வுகளை ரசித்து வெளியிட்ட வாத்தியாருக்கு ஒரு 'ஓ'........

    ReplyDelete
  8. நச்சுன்னு இருக்கு sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com