27.5.11

எது தானாக வரவேண்டும்?

 -----------------------------------------------------------------------------------------
 ============================================================
எது தானாக வரவேண்டும்?

பக்தி மலர்

வங்கத்தில் ஸ்ரீகிருஷ்ண சைத்த‌ன்யரைக் கண்ணனின் ஓர் அவதாரமாகவே கொண்டாடுகின்றனர்.அவரை மஹாப்பிரபு என்பார்கள்.கெளராங்க‌ர் என்றும் கொண்டாடுவார்கள்.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைத்த‌ன்ய மஹாபிரபு வங்கத்தில் நாடியா வட்டத்தில் நவத்வீபம் என்ற இடத்தில் அந்தணக் குடும்பத்தில் அவதரித்தார்.

கெளடியா மடம் என்று இன்று அறியப்படுவது சைத்தன்யருடைய வழி வந்த ஒரு நிறுவனமே.அதன் சென்னைக் கிளை ராயப்பேட்டையில் உள்ளது.

ஸ்ரீ பக்தி வேதாந்தப்பிரபு பாதா,  'ஹரே கிருஷ்ண இயக்கம்' என்று எல்லோருக்கும் அறிமுகமாகியுள்ள  "இஸ்கான்" இயக்கத்தை உலக அளவில் பர‌ப்பியவர். அந்த மஹான் சைத்தன்ய மார்க்கத்தைச் சார்ந்தவரே.

வடக்கில் உள்ள வைணவ சம்பிரதாய குழுக்களுக்கு நம் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் ஒரு யாத்திரை ஸ்தலம்.அதுவும்  சைத்தன்ய மார்க்கிகளுக்கு அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோவில் திருவரங்கம். இன்றும் கூட ஸ்ரீரங்கத்தில்  வாழும் மக்கள் அடிக்கடி வடநாட்டு பஜனை கோஷ்டிகள் டோலக் போன்ற தாள வத்தியங்களுடன் கோவிலைச் சுற்றி ஆட்டம் பாட்டத்துடன் பாடி வலம் வருவதை அடிக்கடிப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்யரே திருவரங்கத்துக்கு வந்துள்ளார். அவருடைய பாதம் பதிந்த ஓர் இடத்தில்  மண்டபம்  கூட உள்ளது. பெரிய கோபுரத்திற்கு எதிரில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் அந்தப் பாதம் உள்ளது.

ஸ்ரீ சைத்தன்ய மஹாப்பிரபு திருவரங்கத்தில் வெளிப் பிரஹாரத்தில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டு வலம்  வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு ப‌க்கம் கோவில் மதிலும், எதிர் பக்க‌ம் வீடுகளும் உள்ள 4 வீதிகள் அது.இன்றும் அந்த அமைப்பு மாறாமல் அப்படியே உள்ளது.

அப்படி மஹாப்பிரபு ஆடிப்பாடிக் கொண்டு வரும் போது ஒரு  பெரிய
வீட்டு வாசலில் நிறைய வண்டிகள் மாடுகள் அவிழ்த்து விடப்ப‌ட்டு
சாய்ந்த நிலையில் நிற்கின்றன.அந்தவீட்டின் உள்ளிருந்து உபன்யாசம் நடக்கும் குரல் கேட்கிறது. ஸ்ரீ சைத்தன்யர் அந்த உபன்யாசத்தை
சற்றே ஊன்றிக் கவனித்தார். அந்த உபன்யாசம் ஸ்ரீமத் பகவத்கீதை!

பல வண்டிகள் சாய்ந்த நிலையில் நின்றன அல்ல‌வா? அந்த
வண்டிகளின் நுகத்தடிகளின் மீது அந்த அந்த‌ வண்டி ஓட்டிகள் 
அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். முதலாளிகள்
உபன்யாசம் முடிந்து வரும் வரைவேறு என்னதான் செய்வது?
வெற்றிலை போட்டுத் துப்புவது, வம்பு பேசுவதுமாக இருந்தார்கள்.

ஸ்ரீ சைத்தன்யர் இவர்கள் எல்லாம் பகவன் நாமாவைச் சொல்லாமல் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறார்களே  என்று ஏங்கி அவர்கள்
அருகில் சென்றார்.அங்கே இருந்த ஒரு வண்டியோட்டுபவர் மட்டும் கூட்டத்தில் சேராமல் தனியே  இருந்தார். அவருடைய கண்களில்
இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. 'சரி!

அவருக்கு ஏதோ துக்கம் போல' என்று எண்ணிய ஸ்ரீ சைத்தனயர், அழுது கொண்டிருந்த வண்டியோட்டியின்  அருகில் சென்று அமர்ந்து அவருடைய கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார்.

"சகோதரரே! உங்க‌ளுக்கு என்ன துக்கம்? ஏன் அழுகிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்"  என்றார் மஹாப்பிரபு.

"இது அழுகை இல்லைங்க!ஆனந்தக்கண்ணீர்!"

"அப்படியா! உங்க‌ள் ஆனந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டால் நானும் ஆனந்தம் கொள்வேனே!"

"அந்த வீட்டின் உள்ளே பல பெரியவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்டுக்கிட்டு இருக்காங்க இல்லீங்களா?"

"ஆம்!அதற்கென்ன?"

"அவங்க‌ கேட்குற‌ பாடம் என்னன்னு  தெரியுமா?"

"அதுவா? பகவத் கீதை!"

"அதைச் சொன்னவரு யாரு?"

"அவ‌ர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!"

"அவரு அந்த கீதையைச் சொன்னப்ப‌  எங்கே இருந்தாரு?"

"யுத்தகளத்தில்.."

"அதில்லீங்க! கிருஸ்ணரு எங்க‌ன உட்கார்ந்து கீதையைச்சொன்னாரு?"

"ரதத்தின் முன்னால் உள்ள இடத்தில்..."

"அதாவது, இதைப்போல ஒரு வண்டியோட நுகத்தடியில உட்கார்ந்துதான் கீதையைச்சொன்னாரு, இல்லையா..?"

"ஆமாம் ஆமாம்...."

"கிருஸ்னரும் என்னைப் போல ஒரு வண்டியோட்டி! அவரும் இப்போ நா குந்தியிருக்கிற மாதிரி நுகத்தடியில  உட்கார்ந்து கீதையைச்சொன்னாரு இல்லீங்களா?"

"ஆமாம் சகோதரா!"

"அப்ப கிருஸ்னரும் நானும் ஒரே சாதி! ஒரே கூட்டம் !இதை நினைச்சேன் பாருங்க...! எங்காளு சொன்ன வார்த்தைய இத்தனை பெரிய ஆளுங்க கேக்கறாஙளேன்னு தோணிச்சு கண்ணுல குப்புன்னு தண்ணி வந்திடிச்சி!
நிமிந்து பாத்தா அந்த மாயக் கண்ணன் தார்க் குச்சியோட என்னைப்பார்த்து சிரிக்கிறான். அந்தக் காட்சி எனக்கு  கிடைச்சி பரவசமாயிட்டேன். ஆனந்தக் கண்ணீரு கொட்டுது...!"

ஸ்ரீ சைத்தன்யர் அந்த வண்டியோட்டியைக் கட்டிப் பிடித்து வணங்கினாராம்.

ஞானம் வந்து விடலாம். ஆனால் இது போல அனன்ய (அன்னியோன்ய) பக்தி வருவது கடின‌ம்.

இறைவன் "பக்திவலையில் படுவோன் காண்க‌"

பக்தி என்ற வலையை வீசி  இறைவனைச் மீன் பிடிப்பது போல சுலபமாகப் பிடித்துவிடலாம். அப்புறம் பாடலாம்."....சிக்கெனப்பிடித்தேன்... எங்கு எழுந்து அருளுவது இனியே..!"

இறைவா பக்தியை மட்டும் அருள்வாயாக! மற்றவைதானாக வரட்டும்!!
------------------------------------------------------------------------------------------------
நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி




வாழ்க வளமுடன்!

6 comments:

  1. ///ஞானம் வந்து விடலாம். ஆனால் இது போல அனன்ய (அன்னியோன்ய) பக்தி வருவது கடின‌ம்.
    இறைவன் "பக்திவலையில் படுவோன் காண்க‌" ///

    உண்மை!

    ///இறைவா பக்தியை மட்டும் அருள்வாயாக! மற்றவைதானாக வரட்டும்!!///

    அருமை!!

    ReplyDelete
  2. வணக்கம் கேஎம்ஆர்கே சார்,

    நல்ல அருமையான ஆக்கம்..

    அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    ஸ்ரீ பக்தி வேதாந்தப்பிரபு பாதா, 'ஹரே கிருஷ்ண இயக்கம்' என்று எல்லோருக்கும் அறிமுகமாகியுள்ள "இஸ்கான்" இயக்கத்தை உலக அளவில் பர‌ப்பியவர்.//

    என் அலுவலக chairman 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்திலையும் இணைந்திருக்கிறார் (அங்கேயும் ஒரு பெரிய பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது). அதனால் அலுவலகத்தில் தீபாவளி மற்றும் புதுவருடப்பிறப்பன்று ஹோமம் வளர்த்து அந்த இயக்கத்தினர் வந்து பூஜை செய்வர். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் தன்னை மறந்து, சுற்றி இருப்பவர்களையும் பொருட்படுத்தாமல் பஜனை செய்வதைப்பார்த்திருக்கிறேன்.

    ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் டெல்லி / NCR ல் இருக்கும் அரசினர் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர் (வறுமையினால் அவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன்). தினமும் நாலரை லட்சம் பிள்ளைகளுக்கு மதிய உணவு அவர்களின் வேன்களில் சென்று கொடுக்கப்படுகிறது. இந்த உயர்ந்த பணியில் பங்களிக்க விரும்புபவர்கள் செய்யலாம்.

    ReplyDelete
  4. கதை அருமை. இப்படி நிறைய பக்தி கதைகள் தங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து வந்து படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com