24.9.24

Astrology பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

Astrology பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

ஒரு சந்யாசி இருந்தார். உண்மையிலேயே எல்லாவற்றையும் துறந்தவர். அவர் மேலுள்ள மதிப்பினால், ஊர் மக்களே தங்குவதற்கு ஒரு இடத்துடன் பெரிய ஓடுகள் வேய்ந்த வீட்டையும் கொடுத்திருந்தார்கள். ஆசிரமம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆசிரமத்திற்குப் பின்புறம் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரமம், மரம், செடி கொடிகள் நிறைந்து ரம்மியமாக இருக்கும்.
ஆசிரமத்தில் இருந்த அரச மரத்தடியில் ஒரு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தார். உள்ளூர் மக்களும் வந்து வழிபடுவார்கள். உணவிற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பார்கள்

ஆசிரமத்தில் இருந்த கூறை வேய்ந்த மேடை ஒன்றில் இருந்து வாரம் இரண்டு முறை மக்களுக்கு நல்வழியில் நடக்க போதனைகள் செய்வார். அவருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த சீடர்கள் மூவரும், சந்நியாசியிடன் வந்து,” சுவாமி, நாங்கள் மூன்று நாட்கள் தீர்த்த யாத்திரை செல்ல விரும்புகிறோம்.அருகில் உள்ள புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடிவிட்டு வர விரும்புகிறோம். நீங்களும் வர வேண்டும்” என்றார்கள்

"நம் ஊர் ஆற்றிற்கு என்ன ஆயிற்று?” என்றார்.

“அதில்தான் தினமும் நீராடுகிறோமே - வேறு புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டு வர விரும்புகிறோம்” என்றார்கள்

”நான் வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள்” என்றார்

அவர்கள் வலியுறுத்தி மீண்டும் மீண்டும் சொல்லவே, அருகில் இருந்த பாகற்காய் கொடி ஒன்றைக் காட்டியதுடன், ஒரு காயைப் பறித்துக்கொண்டு வரும்படி சொன்னார். அப்படியே செய்தார்கள்

“இந்தக் காயை நானாக நினைத்துக்கொண்டு நீங்கள் தீர்த்தமாடும், நதிகளிலும், ஊருணிகளிலும் இந்தக் காயை நமச்சிவாய என்று சொல்லி மூன்று முறை முக்கி எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்றார்
  
                                   ++++++++++++++++++++++++

மூன்று நாட்கள் சென்றன. யாத்திரை முடிந்து திரும்பிய அவர்கள், குருவிடம் வந்து தங்கள் பயண அனுபவத்தை விவரித்தார்கள்.

“பாகற்காய் என்ன ஆயிற்று?” என்றார்

“நீங்கள் சொன்னபடி அதற்கு நீராட்டி, பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறோம் சுவாமி” என்றார்கள்

“இன்று சமையலில் அதையும் சேர்த்துவிடுங்கள்” என்றார்.

                                   +++++++++++++++++++++++

மதியம் தன் சீடர்களுடன் சேர்ந்து உணவருந்தும்போது சுவாமிஜி கேட்டார்: “பாகற்காய் எப்படி இருக்கிறது?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்: “எப்போதும் போலவே கசப்பாய் இருக்கிறது.ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை சுவாமி.”

சுவாமிஜி முத்தாய்ப்பாய்ச் சொன்னார்: “எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும் பாகற்காயின் குணம் மாறவில்லை அல்லவா? அதுபோல எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும், மனிதனின் அடிப்படைக் குணம் மாறாது!”

பாகற்காயின் குணம் எப்போதும் மாறாது. மனிதனின் அடிப்படைக் குணமும் எப்போதும் மாறாது. கஞ்சன் எப்போதும் கஞ்சன்தான். காமுகன் எப்போதும் காமுகன்தான்

                                   +++++++++++++++++++++++ 
தீய கிரகங்களுக்கும் அப்படி அடிப்படைக் குணம் உண்டு. தீய கிரகங்கள் தீமையையே பயக்கும். செய்யும்.

பாகற்காயுடன் வெல்லம் போட்டு சமைத்து, அதன் கசப்பைக் குறைப்பார்கள். அதுபோல தீய கிரகங்கள் சுபக் கிரகங்களுடன் சேரும் போது அல்லது பார்வை பெறும்போது, தீமைகள் பெரும் அளவிற்குக் குறையும்.

ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?

ஒரு வீக்காக உள்ள தீய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் - அதாவது கேந்திர கோணங்கள் போன்ற நல்ல வீட்டில் இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 போன்ற தீய வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வான். அதுவும் வலிமையுள்ள ஒரு தீயவனைவிட அதிகமாகவே கெடுதல் செய்வான்.

A weak evil planet in a good house or a bad house, wherever he may be, will spoil the house more than a strong evil planet. 
Evil planets, whereever they may be, spoil the house they occupy. The weaker they are will be more harmful!
                                   -----------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com