25.8.22

Lesson 30 Lesson on Eighth House Part 3

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 30
New Lessons
பாடம் எண்30

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - 
3 வது பகுதி

 நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்

1
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் ,மகரம் - ஆகியவை சரராசிகள் எனப்படும். 
இந்தச் சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு  அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். 
மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம். அதன் அதிபதி சனி. மேஷத்திற்கு
சனி பாதகாதிபதியாகிறார். கடகத்திற்கு 11-ம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன். கடகத்திற்கு பாதகாதிபதியாகிறார்.   துலாத்திற்கு 11-ம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதியாகிறார். 
பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மரணத்தைக் கொடுப்பார்கள்.
மற்றபடி அவர்கள் வேறு எந்த உபத்திரவத்தையும் கொடுக்க மாட்டார்கள் 
-------------------------------------------------------------------
உதாரணத்திற்கு மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். அதன் பாதக அதிபதி சனி. அதன் லாபாதியும் அவரே! ஜாதகனுக்கு பலவிதங்களில் லாபத்தைக் கொடுத்துக்கொண்டே வருபவர் உரிய நேரம்  வரும்போது ஜாதகனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார். ஜாதகனுக்கு ஹீரோவாக செயல்பட்ட சனி, ஒரே நாளில் வில்லனாகிக் கத்தியை உருவி ஒரே போடாகப் போட்டு மேலே அனுப்பிவிடுவார்,

லாபாதிபதியே பாதகாதிபதியாவது அப்படித்தான் நடக்கும். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல்படுவார். மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கத் தயங்க மாட்டார். கடமை தவறாதவர்கள் கிரகாதிபதிகள்!
-------------------------------------------------------
2
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற்கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர். அவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனி யோககாரகன் ஆவார். அவர் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். 

ஆயினும் ஜாதகனுக்கு ஆயுள் முடியும்போது அவர் தன் கடமையைச் செய்யாமல் விடுவதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நன்மைகளைச் செய்தவர், ஆயுள் முடியம்போது மரணத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை!
---------------------------------------------------------
3
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கு அதிபதி குரு பாதகாதிபதியாகிறார். 
தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில்  திருமணத்தைச் செய்து வைத்து ஜாதகனை மகிழ்வித்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது, ஜாதகனை மேலே  அனுப்பிவைக்கவும் செய்வார்கள். 

மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் என்பதைச் சொல்லிக்கொடுத்துவிட்டேன்.

இனி அடுத்தபாடம்
++++++++++++++++++++++
  “நடக்குமென்பார் நடக்காது
      நடக்காதென்பார் நடந்துவிடும்
   கிடைக்குமென்பார் கிடைக்காது
      கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்”

என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார். அது ஜோதிடத்திற்கு முற்றிலும் பொருந்தும்.

ஜோதிடத்திற்குப் பலவிதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. எல்லாவற்றையும் சீர் துக்கிப் பார்த்துப் பலனைச்  சொல்ல வேண்டும். அதற்கு ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யமும், பொறுமையும் வேண்டும். அதைவிட முக்கியமாக தெய்வ அனுக்கிரகமும் வேண்டும். அப்போதுதான் வாக்குப் பலிதம் இருக்கும். சொன்னது சொன்னபடி நடக்கும்.

இல்லாவிட்டால் ஊற்றிக் கொண்டுவிடும்.

தசாபுத்திப் பலன்களையும், கோள்சாரப் பலனையும், எந்த ஜோதிடன் வேண்டுமென்றாலும் சரியாகச் சொல்வான். மரணத்தைக் கணிப்பதற்கு மட்டும் அதீதத் திறமையும், ஞானமும் வேண்டும்.

என் சொந்தக்காரர் ஒருவருக்கு, ஜோதிடர் ஒருவர், நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அடுத்து வந்த மூன்றாவது மாதமே இறந்துவிட்டார். சும்மா இறக்கவில்லை. வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்பட்டு, பத்து நாட்கள் மருத்துவமனையில், அவதிப்பட்டுவிட்டு இறந்து போனார்.

அதுபோன்று நிறைய உண்மைக் கதைகள் இருக்கின்றன.

அதானால்தான் ஜோதிடம் கற்கும்போது முதல் விதியாக இதைச் சொல்லித் தருவார்கள்:

ஜோதிடத்தால் என்ன நடக்கவுள்ளது என்பதை மட்டுமே ஜோதிடர் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அறுதியிட்டுச் சொல்லக் கூடாது. அந்த சக்தி ஆண்டவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு!
------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம் நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால் குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம். 

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.

அடுத்ததாக அல்பாய்சு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு ஆகியவற்றிற்கான கிரக அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்

இன்றல்ல. 
இதன் தொடர்ச்சியாக அது வராது இன்னொரு  சமயத்தில் வரும். 

இடைப்பட்ட நாட்களில் வேறு பாடங்கள் வெளியாகும்

 தொடர்ந்து சாம்பார் சாதத்தையே சாப்பிட்டுக்கொ வண்டிருக்க  முடியுமா? அதாவது தொடர்ந்து எட்டாம் பாடத்தையே படித்துக் கொண்டிருக்கலாமா?
 இடையில் வற்றல்குழம்பு, ரசம்,  கெட்டித் தயிர், பாயசம் என்று வெரைட்டியாக உணவு இருக்க வேண்டாமா? 

ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!
=================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com