24.8.22

Lesson 29 Lesson on eighth House Part Two


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Nine
Date 12-8-2022
New Lessons
பாடம் எண் 29

எட்டாம் வீட்டைப்பற்றிய பாடத்தின் தொடர்ச்சி

எட்டாம் வீட்டிற்கு அதன் அதிபதி முக்கியம்
அது போல ஆயுள் காரகன் சனீஷவரனும் முக்கியம்

இருவரும் ஜாதகத்தில் இருக்கிறார்களோ அதை வைத்து பலன்கள் கிடைக்கும்

இன்று எட்டாம் வீட்டு அதிபதி (Owner) எங்கே இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

 எட்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்திற்கான பலன்கள்

1 எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், சொல்லவே வேண்டாம். கடனிலேயே தினமும் முங்கிக் குளிக்க வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை மூன்றும் சட்டைப் பையிலேயே இருக்கும் (அதாவது கூடவே இருக்கும்) எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் (Misfortune) தொடர்ந்து வரும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.

2 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான  உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும் ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும்  தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான்
அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது.அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு  செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது.மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

3 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும்.மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய  கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு  இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

4.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும்  இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும்.சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது.வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள்  சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும்.
ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும்.சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

5 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன்  விரோதப்போக்கு நிலவும்.அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின்  பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும்.அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும்.இந்த சேர்க்கை,  தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால்,சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த  இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும்.இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

6.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி) உடல் ஸ்திரமாக இருக்காது.ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான்.சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும். (அப்பாடா, இதுவரை சொன்ன வற்றில் இது ஒன்றுதான் அம்சமாக,  சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.)

7 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்:
பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள்.இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும்
சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்  இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.

8.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:


9 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்:
பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும்.ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும்.இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!

10 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்:
ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும்.
எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்:
மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.

12 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும்.
சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான்.
எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான் (அட, இது ஒன்றுதாங்க நன்றாக உள்ளது)

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com