1.12.20

பல திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து எடுத்த திரைப்படம்!!!


பல திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து எடுத்த திரைப்படம்!!!

மும்பை அரோரா தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் 61ல் ரிலீஸானது.இரு சகோதரிகள் அந்தப் படத்தைப் பார்க்க இருட்டில் மெதுவாக வருகிறார்கள்.இருட்டில் வரக் காரணம் இருவருமே புகழ் பெற்ற பிரபலங்கள்.படம் ஓட ஓட அதிலேயே ஒன்றிப் போன சகோதரிகள் இமை கொட்டாமல் பார்க்கிறார்கள்.இடைவேளை விடுகிறது.விளக்குகள் ஒளிர அருகிலிருந்த சகோதரியை எதேச்சையாகப் பார்க்க அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.என்னாச்சு என பதறிய சகோதரியிடம் ரஹீம் என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டார் என்கிறார்.எனக்கும் தான் என்கிறார் இன்னொரு சகோதரி.யார் இந்த ரஹீம்?. கலங்கிய சகோதரிகள் கடைசி வரை ரஹீமோடு உறவாட காரணமான படம் எது?.

கலங்கிய சகோதரிகள் லதா ஆஷா.இந்திப் படவுலகின் புகழ் பெற்ற சகோதரிகள்.ரஹீம் நமது நடிகர் திலகம்.பாதித்த படம் பாவ மன்னிப்பு.நேராக சென்னை சென்று அன்றைய ரக்ஷாபந்தன் தினத்தில் அந்த ரஹீமை தங்களது அண்ணனாக ஏற்றுக்கொண்டது தான் இந்தப் படத்தின் வெற்றி.நடிகர் திலகம் ரஹீமாகவே வாழ்ந்து காட்டிய படம்.இந்தப் படத்தின் கதை உருவான வரலாறு சுவாரசியமானது.

இது சந்திரபாபுவின் கதை என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்.அவரது வாழ்க்கைக் கதையல்ல.தான் நாயகனாக நடிக்க அவர் தயாரித்து வைத்திருந்த கதை.கதையின் பெயர் அப்துல்லா.பீம்சிங்கை அணுகி அவரிடம் கதை சொன்ன சந்திரபாபு படம் எடுத்துத் தருமாறு கேட்க பீம்சிங்கும் ஒரு இரண்டாயிரம் அடி எடுத்து போட்டுப் பார்க்க சந்திரபாபுவிற்கு இது செட்டாகாது இன்னும் கொஞ்சம் டெவலப் செய்தால் சூப்பரான படமாக மாறும் என்ன செய்யலாம் என யோசிக்க படத்தின் பைனான்ஸியரான சரவணன் கதையில் இம்ப்ரஸாகி எங்களையும் இணை தயாரிப்பாளராகப் போட்டு நடிகர் திலகத்தை வைத்து எடுக்கலாம் என ஐடியா கொடுக்க சந்திரபாபுவிற்கு இன்னொரு வேடம் கொடுக்கலாமா?. அதுவும் செட்டாகாதே.பாவம் பாபு கதையைக் கொடுத்து பணம் வாங்கிக்கொண்டு போக பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றினார்கள்.

நடிகர் திலகத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்கள்.அவரது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு வந்திருந்த காதல் மன்னனிடம் கதை சொல்லி இன்னொரு முக்கிய கேரக்டருக்கு அவரையும் ஒப்பந்தம் செய்தார்கள்.அவருக்கு ஜோடியாக அவரது மனைவியைப் போட நடிகர் திலகத்திற்கு அன்றைய புதுமுகமான தேவிகாவைப் போட முக்கிய கேரிக்டருக்கு நடிகவேள் ஒப்பந்தமாகி அப்படியே படம் ரெடியாகத் தொடங்கியது.அப்படி என்ன தான் அந்தக் கதை என்று பார்க்கலாம்.

ஆளவந்தான் ஒரு அடாவடிப் பேர்வழி.பணத்தாசை பிடித்தவர்.தங்க வியாபாரத்தில் பணம் கொட்ட அவரிடம் வைரம் விற்க வந்தவரை கொலை செய்து வைரத்தை அபகரிக்க கொலைப்பழியைத் தூக்கி தன்னிடம் வேலை செய்யும் மாணிக்கம் பிள்ளை மேல் போடுகிறார்.ஆளவந்தானின் மனைவி மரகதம் இரு மகன்கள் ராமு ராஜன்.மாணிக்கம் பிள்ளைக்கு மனைவி மகள் தங்கம்.கர்ப்பிணி மனைவி தனது கணவன் சிறை செல்ல அந்த அதிர்ச்சியில்  பெண் குழந்தை ஒன்றை பெற்றுப் போட்டு விட்டு கண்ணை மூட குழந்தையை எடுத்து பக்கத்து வீட்டுப் பெண் ஜேம்ஸ் என்ற பணக்காரரிடம் ஒப்படைத்து இன்னொரு பெண்ணை தானே வளர்க்கிறார்.மாணிக்கம் பிள்ளை தனது எஜமான் செய்த துரோகத்திற்காக அவரது ஒரு மகனான ராமுவை தூக்கி வந்து ரெயில்வே டிரக்கில் போட ஒரு முஸ்லீம் வைத்தியர் கண்ணில் பட்டு அங்கேயே வளர்கிறான்.எல்லோருமே பெரியவர்களாகி எப்படி இணைந்தார்கள் என்பது தான் மீதிக்கதை.

இந்தப் படம் ஒரு அருமையான மெஸ்ஸேஜை மக்களுக்குச் சொன்னது.மனிதன் படைத்த மதத்தை இறைவன் படைத்ததாகக் கூறிக்கொண்டு அடித்துக்கொள்ளும் அறியாமைக்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்தது.பெயரில் தான் வித்தியாசமே தவிர அனைவருமே இறைவனின் குழந்தைகள் தான்.எங்கு பிறந்தும் எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உண்மையை இந்தப் படம் எடுத்துச் சொன்னது.

எல்லாத் தளத்திலும் வெற்றி வாகை சூடிய படம்.நடிப்பா? . யாருமே நடிக்கவில்லை.வாழ்ந்துவிட்டே போனார்கள்.இசையா? . இன்னொரு படம் இப்படி அமையுமா என்றது.இயக்கமா? . என்ன குறை என்றது.பாடலா? . சத்தியமாக எவருமே இப்படி எழுத முடியாது என்றது.அத்தனைக்கும் சேர்த்து படம் வெள்ளி விழாக் கண்டது.

நடிகர் திலகம் தனது தியேட்டரான சாந்தியில் தனது முதல் படமாக இந்தப் படத்தை பதிவு செய்தார்.ஜி.உமாபதியோடு இணைந்து தான் தியேட்டரைக் கட்டினார்.போகப்போக மொத்த பங்குகளையும் தனதாக்கி சென்னையின் அடையாளமாக இந்தத் தியேட்டரை ஜனவரி 12 ,1961ல் அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமை தாங்க இந்திய நிதி அமைச்சர் சி.எஸ்.தியேட்டரை திறந்து வைத்தார்.ஓப்பனிங் ஷோ ஸ்ரீனிவாச கல்யாணம்.அடுத்த ஷோ நாகேஸ்வரராவ் சாவித்திரி நடித்த தூய உள்ளம்.அடுத்து அசோக் குமார் நடித்த கல்பனா.அதற்குள் பாவ மன்னிப்பு ரெடியாக மார்ச் 16ல் தனது திரையில் நடிகர் திலகம் தோன்றினார்.மொத்தம் 82 அவரது படங்கள் பிற் காலத்தில் ஓடியது.பாவ மன்னிப்போடு சேர்த்து திருவிளையாடல் வசந்த மாளிகை தங்கப் பதக்கம் திரிசூலம் முதல் மரியாதை ஆகியவை வெள்ளி விழாவை இங்கு தான் கொண்டாடின.

பாவ மன்னிப்பிற்கு .வி.எம்.பிரிமியர் நடத்தியது சித்ரா தியேட்டரில்.பிறகு தான் சாந்திக்குப் போனது.விளம்பர யுக்தியாக ஜப்பானிலிருந்து மிகப் பெரிய ஹீலியம் பலூன் வரவழைத்து தியேட்டர் மொட்டை மாடியில் பறக்கவிட்டார் செட்டியார்.எங்கிருந்து பார்த்தாலும் .வி.எம்.பாவமன்னிப்பு லெட்டர் தெரிந்தது.விமான போக்குவரத்து நோட்டீஸூம் வந்தது.சரவணன் முதன்முதலாக புரடக்ஷன் எக்ஸிகியூட்டாவாக பணியாற்றிய படம்.

பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்ப .வி.எம்.பத்தாயிரம் பரிசொன்றை அறிவித்தார்.சூப்பரான பாடல்களை நாங்கள் வரிசைப்படிதேர்வு செய்து வைத்துள்ளோம்.யார் சரியாக சொல்கிறார் பார்க்கலாம்?. நாலு லட்சம் பேர் கலந்து கொள்ள பானுமதி என்ற பெண் பரிசுப் பணம் பத்தாயிரத்தை தட்டிச் சென்றார்.

பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.மெல்லிசை மன்னர்கள் புகுந்து விளையாடினார்கள்.கவியரசு அதை விட விளையாடினார்.வந்த நாள் முதல் இந்த நாள் வரை காலம் மாறவில்லை.அட்டகாசமான மோகன ராகத்தில் மன்னர்கள் மெட்டுப் போட பூரித்துப் போனார்கள் இசை ரசிகர்கள்.59ல் வெளியான நயா சன்சார் படத்திலும் இதே ஸ்டைலில் ஒரு பாடல் ஹிட்டானது.ராஜேந்திர கிஷன் எழுதி சித்ரகுப்த் இசையமைத்த தின் ராத் பதல்தேஹைன் சாத் சாத் மௌஸம்கீ என்ற பாடல்.பகல் இரவு மாறுது பக்கச் சூழல் மாறுது பருவம் மாறுது என அந்தப் பாடல் போகும்.ஐயா டி.எம்.எஸ்.ரசித்துப் பாட நடிகர் திலகம் அந்தப் பாடலை எங்கேயோ கொண்டு போவார்.

அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் என கவியரசு வியக்க வைத்த இன்னொரு பாடல்.காலங்களில் அவள் வசந்தம் காலம் கடந்தும் பேசும்.பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பாடல் காமெடிக்கும் பயன்படுத்தப்பட்டது.எல்லோரும் கொண்டாடுவோம் இன்னிசை மட்டுமல்ல கவிஞரின் அக்கறையான அறிவுரையும் கொண்ட பாடல்.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நடிகர் திலகம் நடிப்பில் மிளிர்ந்த பாடல்.சாய வேட்டி சலசலங்க என்ற ஜாலியான பாடல் இன்றும் இனிக்கிறது.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பங்கேற்ற மேதைகள்.அவர்களது பாத்திரப் படைப்பு அசத்தலானது.நடிகர் திலகம் ராமு மற்றும் ரஹீமாக வாழ  அவரது ஜோடி மேரியாகவே காட்சியளித்தார்.நடிகவேளின் ஆளவந்தானை இனி யாருமே தொட முடியாது.மனிதர் அப்படியே ஆளவந்தாராக மாறியே போனார்.முஸ்லீம் பெரியவரைக் கண்டவர் நாகையாவை மறந்தே போனார்கள்.ஜேம்ஸைக் கண்டவர்கள் சுப்பையாவை மறந்தே போனார்கள்.மாணிக்கம் பிள்ளை நம்மையெல்லாம் கலங்க வைக்க பாலையா காணாமல் போனார்.பணக்கார படித்த இளைஞனாக காதல் மன்னன் அசத்த அவரது ஜோடி சாவித்திரி கலக்க தாயார் ராஜம்மா ஜொலித்தார்.ஆரம்பத்தில் இந்தக் கேரக்டருக்கு கண்ணாம்பாவையே ஒப்பந்தம் செய்தார்கள்.அவரது உடல் நிலை ஒத்துழைக்க மறுக்க ராஜம்மா மரகதமாக மாறினார்.

சில படங்களைப் பற்றி பேசத் தொடங்கினால் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.ஏகப்பட்ட தகவல்கள் இனியும் உண்டு இந்தப் படத்தைப் பற்றி.பல பரிசுகளை வென்ற படம்.4,500 ரூபாய் சம்பளம் பெற்ற தேவிகா பிற்காலத்தில் ஏகப்பட்ட படங்கள் மூலம் புகழ் பெற்றார்.கொத்த மங்களம் சுப்புவின் கடைசிப் படம் என்ற தகவலும் இந்தப் படத்திற்கு உண்டு.பத்து லட்சத்தில் தயாராகி ஏகப்பட்ட லட்சங்களை வாரிக் குவித்த இந்தப் படத்தை இன்று பார்த்தாலும் வியப்பாக இருக்கும்.

படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார்

==========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே!
    ஆனந்தமும் அதிர்ச்சியும் ஊட்டும் தகவல்கள் வாத்தியாரையா
    !ஒரு திரைப்படம் உருவாவதற்கு முன்பு எத்தனை கட்டங்களைத் தாண்டுகிறது என்பது அதிர்ச்சித் தகவல். அதேபோல் அப்படதீதுக்கு தேவிகா பெற்றது ரூ4500/- என்பதும் அதைவிட அதிர்ச்சித் தகவல்!
    ஆனால் படம் வெளியான பின்
    நடந்த நிகழ்வுகளை ஆனந்தத் தகவல்!
    மிகவும் இரசிக்கத்த்தக்க விருவிருப்பான இன்றையப் பதிவுக்கு விமரிசனம் தரத் துவங்கினால் அதுவே ஒரு பதிவாகிவிடும். அவ்வளவு சூப்பர்!
    ஆசானே!👍🙏

    ReplyDelete
  2. நன்றி உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com