18.12.19

உலகத்திற்கான பொதுமொழி எது?


உலகத்திற்கான பொதுமொழி எது?

மௌனம்..

மெளனம், ஒட்டு மொத்த உலகத்திற்கானப் பொது மொழி. ஓசை
எழுப்பாத ஒரு மொழி. பேசாமல் அமைதி  காப்பது மெளனத்தின்
ஒரு வகை. பேசக்கூடாத இடத்திலும், பேசத் தேவையில்லாத
இடத்திலும் இந்த "மெளனம்" நமக்கு  மிகவும் அவசியம்.

இரண்டாவது, "பூரணமான மெளனம்" என்பது வாயால் பேசாமலும்,
மனதால் எண்ணாமலும் இருப்பதே.  இப்படிப்பட்ட மௌனம்
ஆழமான ஒரு வகை தியானம். யோகா, மற்றும் தியான வகுப்புகளில்,
இது போன்ற மெளனம்  கடைப்பிடிக்கப் படுகிறது.

மூன்றாவது "பரிபூரண மெளனம்" ஐம் புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாவதே பரிபூரண  மெளனம். இது தவம் செய்பவர்கள் கடைப்பிடிக்கும் மெளனம்.

நம் பேச்சால், ஒருவர் மனம் புண்படும் நிலை ஏற்படும் என்றால்,
அப்பொழுது மெளனமே சாலச் சிறந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் பொய்யுரைக்க வேண்டிய நிலை வந்தால் அதைத் தவிர்க்க
மெளனத்தைக் கையில் எடுக்கலாம்.

மெளனம் அமைதிக்கான ஆரம்பம்.

இந்த வார்த்தைக்கு, பல  அர்த்தங்கள் உள்ளன.

கேள்வி கேட்கப்படும் நேரத்தில், 'மௌனம்' "சம்மதம்"
நாம் நேசித்த சில உறவுகளைப் பிரியும்  போது, 'மௌனம்'
"துன்பம்"
இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின்
போது 'மௌனம்' "நம்பிக்கை"
நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில், 'மௌனம்' "சித்ரவதை"
நாம், தோல்வி கண்டு, வெற்றிக்கு வழிதேடும் போது, 'மௌனம்'
"பொறுமை"
நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் 'மௌனம்', "அடக்கம்"
திருமணக் கோலத்தில் உள்ள அமைதியின் போது, 'மௌனம்', "வெட்கம்"
தவறுதலாக, தவறு செய்த போது, 'மௌனம்', "பயம்"
ஆசைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் போது, 'மௌனம்', "எதிர்பார்ப்பு"
கோபத்தைக் குறைக்காமல் அடக்கும் போது 'மௌனம்', "ரத்தக்கொதிப்பு"
இலக்கை அடைய நினைத்து, ஒருமுகப்படுத்தும் போது, 'மௌனம்', "சக்தி"
தீவிரமாகப் போராடும் போது, 'மௌனம்', "வலிமை"
பிடிக்காத விஷயங்களை, ஒத்துக்கொள்ளாத போது, 'மௌனம்', "எதிர்ப்பு"
கல்யாண வீட்டில் கால் இடறி விழுந்த பின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது, 'மௌனம்', "அவமானம்".
நம்மை விட்டுப் பிரிந்தவர்களை, பாசத்தோடு நினைக்கும் போது, 'மௌனம்', "துக்கம்...!"
நம் குடி கெடுத்தவர்களை, பழிவாங்க நினைக்கும் போது, 'மௌனம்', "ஆத்திரம்."
கற்ற வித்தையைக் கையாளும் போது, 'மௌனம்', *"ஆனந்தம்."*
அயர்ந்த வேளையில், அமைதியான அந்த 'மௌனம்' "உறக்கம்."
உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க, உடலோ, அசையாமல் அயர்ந்திருக்க, அண்டை அயலார் சூழ்த்திருக்க, 'மௌனம்' "மரணம்...!"

வார்த்தைகள் இல்லாத புத்தகம் 'மௌனம்'. ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.
"மௌனம் என்பது வெளிச்சம்" நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.
"மௌனம் என்பது இருட்டு" எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம்.
"மௌனம் என்பது மூடி"! 
இதைத் தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம்.
"மௌனம் என்பது போதி மரம்" 
இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும்.
"மௌனம் என்பது தவம்" இதில் ஆழ்ந்தால் அமைதி  நிச்சயம்.
'மௌனம் என்பது வரம்' நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு 
சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும்.
இதழ்களை இறுக மூடி, நாம் நமக்குள் இறங்குவோம்!

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் உங்கள் பேச்சு, மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது...
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com