14.8.19

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை


கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார்.  அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல,
அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.
_________

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. 'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார், *'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.
___________

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல்
வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,
கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,
கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
____________

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!

அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

கிவாஜ - *இன்னிக்கு வேணாமே!* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..

அந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்: *"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே,
    கிவாஜ அவர்களைப் பற்றிய
    தகவல்கள் அனைத்துமே அருமை!
    என் ஞாபகத்தில் தித்திப்பாக உள்ள ஒன்று:
    என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில், டி.ஏ.மதுரம் அவர்கள் இவரை உபசரித்து குடிப்பதற்கு
    என்ன வேண்டும் "டீயா, காஃபியா"
    கிவாஜ அவர்கள் அளித்த பதில்:
    "டீயே மதுரம"!😊
    சிலேடை மன்னன்!👌💐💐

    ReplyDelete
  2. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு"


    Super Sir Tq.

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Super Sir.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  4. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    கிவாஜ அவர்களைப் பற்றிய
    தகவல்கள் அனைத்துமே அருமை!
    என் ஞாபகத்தில் தித்திப்பாக உள்ள ஒன்று:
    என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில், டி.ஏ.மதுரம் அவர்கள் இவரை உபசரித்து குடிப்பதற்கு
    என்ன வேண்டும் "டீயா, காஃபியா"
    கிவாஜ அவர்கள் அளித்த பதில்:
    "டீயே மதுரம"!😊
    சிலேடை மன்னன்!👌💐💐//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger vicknasai said...
    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு"
    Super Sir Tq.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com