16.8.16

உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!


உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!

அரிசி தமிழர் உணவுகளின் தவிர்க்கமுடியாத முக்கிய உணவு. உடல் பருமனோ, நீரிழிவோ வந்துவிட்டால் மருத்துவர்கள், டயட்டீசியன்கள் முதலில் நம் உணவில் குறைக்கச் சொல்வது அரிசியால் செய்யப் படும் உணவுகளைத்தான்! குறிப்பாக, அரிசிச் சோறு!

பசுமைப் புரட்சிக்கு முன்பான நெட்டை ரக அரிசிகள், இன்றைக்குப் பெரும்பாலும் வழக்கொழிந்து போய் குறுகிய கால குட்டை அரிசி ரகங்களே
பெரும்பாலும் நமக்கு உண்ணக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பரிசோதனைக் கூடங்களில் தயாராகும் இந்த ரகங்களைத் தான் நாம் அன்றாடப் பயன் பாட்டுக்குப் பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் நவீன கால அரிசிகள் பாலீஷ் செய்யப் படுவதால் அதில் முழுவதுமாக நார்ச்சத்து இல்லாமல் போகிறது. கூடவே சிறிதளவு இருக்கக்கூடிய மற்ற சத்துகளும் துடைத்தெறியப் பட்டு ஒரு மாவுச்சத்து நிரம்பிய (கார்போஹைட்ரேட்) வெடிகுண்டாகத்தான் அது நமக்கு உணவாக வந்து சேர்கிறது.

சரி, அதனால் என்ன பிரச்னை?

கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிரம்பிய இந்த அரிசி சார்ந்த உணவை இட்லி, பிரியாணி, தோசை, பனியாரம், தயிர்சாதம், சாம்பார்சாதம், இடியாப்பம் என்று நாம் பல பெயரிட்டு அழைத்து மூன்று வேளையும் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறோம். பெரிய உடல் உழைப்பு இன்றி இவ்வாறு தொடர்ந்து அதிக கார்போ ஹைட்ரேட் உணவை நாம் உண்ணும்போது, இந்த மாவுச் சத்தால் உடலில் அபரிமிதமாக ஏறக்கூடிய ரத்த சர்க்கரை அளவால், கணையத்திற்கு அதிக வேலை தரப்பட்டு நாளடைவில் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸுக்குத் தள்ளப்பட்டு நீரிழிவு குறைபாட்டுக்கு ஆளாகிறோம்.

ஆசிய மக்களின் உணவில் பெரும்பங்கு வகிக்கும் இந்த அரிசி உணவில் அதிகப்படியாக இருக்கும் மாவுச்சத்தைப் பாதியாகக் குறைக்கும் வழிகளை தேடிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஆய்வுப்படி,  அரிசி யில் கிடைக்கக்கூடிய கலோரி களை பாதியாகக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

அரிசியை சமைக்கும் முறை:

முதலில், அரிசியை பலமுறை நீர்விட்டுக் கழுவவேண்டும்.

அதன்பின்னர் அதை குக்கரில் சமைக்கக்கூடாது.

வாயகன்ற பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்கவைத்து, அதில் அரிசியைப் போட்டு, கூடவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி வேகவைத்து, சாதம் தேவையான அளவு வெந்ததும், பின்னர் முழுவதுமாக கஞ்சியை வடித்து எடுத்து, அந்த சாதம் சூடு ஆறிய பிறகு ரெப்ரிஜிரேட் டரில் வைத்துவிட வேண்டும்.

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி உண்ணும்போது அதன் கலோரி அளவுகள் பாதியாகக் குறைந்திருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்!

இன்றைக்கு இதை வெளிநாட்டினர் ஆராய்ச்சி செய்தாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் இப்படித்தான் அரிசிச் சோறு சமைத்தார்கள். அதை உண்டு, பல இடங்களுக்கு நடந்து, ஓடி ஆடி வேலை செய்து, சைக்கிள் மிதித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். சாதம் வடித்து எடுத்த பின்பு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விடும் வழக்கமும் இருந்தது.

இப்படி சமைக்கவும், குட்டை ரக அரிசிகளைவிட நெட்டை ரக அரிசிகள்.. குறிப்பாக, பாரம்பரிய அரிசி ரகங்களே ஏற்றவை. இந்த நெட்டை ரக அரிசி வகைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று பாஸ்மதி.

ஆக, குட்டை ரக அரிசிகளை தவிர்த்து, பாரம்பரிய அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி, கேரளா சிகப்பு மட்ட ரக அரிசி போன்ற வகைகள் வாங்கி, பலமுறை நீர் விட்டுக் கழுவி, அதைக் குக்கரில் வடிக்காமல், பாத்திரத்தில் வேகவைத்து, கஞ்சி வடித்து உண்பதும், சாதத்தின் அளவைக் குறைவாவும், கிழங்கில்லாத காய்கறி மற்றும் தினம் ஒரு கீரையை அதிகம் சேர்த்து உண்பதும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகம் பாதிக்காமல் நீரிழிவினைத் தள்ளிப் போடும்.

‘நல்ல சாப்பாடு & 11’ இதழில் ஷங்கர் ஜி (பேலியோ குரூப்) எழுதிய கட்டுரை..!~அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் குருவே!
    நல்ல கருத்துக்கள்!வரவேற்கிறோம்!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா புதிய விவரங்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நல்ல கருத்துக்கள்!வரவேற்கிறோம்!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  4. ////Blogger Subathra Suba said...
    வணக்கம் ஐயா புதிய விவரங்களுக்கு நன்றி////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com