28.3.13

கவிதை நயம்: எதை எது வெல்லும்?


 

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

நீலவான் குடையின் கீழே
   நின்றாடும் உலகம் எங்கும்
கோலமோர் கோடி! ஆடி(க்)
   குலவுமோர் காட்சி கோடி!
காலையும் மாலையும் என்றும்
   கடும்பகல் இராப்போழ் தென்றும்
காலமோ விரைந்து போகும்
   காண்பதோ குறைவே யாகும்!

பூவமை வாசல் கன்னிப்
   புதுமலர் பெண்கள் பாடப்
பாவகை பலமன் றங்கள்
   பல்வகை நடனம்; நெஞ்சில்
ஆவலைக் கிளப்பும்; போதை
   ஆயிரம் மதுக்கிண் ணங்கள்;
காலனும்  வேலி யின்றிக்
   கட்டவிழ்த் தாடும் சங்கம்!

ஆடைகள் புதுவண் ணங்கள்
   ஆங்காங்கு நாடு தோறும்
மேடைகள் பலவண் ணங்கள்
   மெல்லிய மடவார் காட்டும்
ஜாடைகள் பலவா றாகச்
   சமைத்தநற் கறிகள், நீந்த
ஓடைகள் அருவி ஆறு
   உலகமே கலையின் கூடம்!

சில்லென்ற காற்று வந்து
   தேகத்தைத் தழுவும் குன்றம்
புல்லென்ற இறைவன் மெத்தை
   போகத்தின் நினைவை யூட்டிச்
செல்கின்ற மேகக் கூட்டம்
   சிறுமழைத் தூறல் சாரல்
கொல்கின்றாள் இயற்கை அன்னை!
   கொஞ்சத்தான் பருவம் இல்லை!

சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங்
   செல்வம்சேர் கோலா லம்பூர்
இங்கிலாந் தமெரிக் காவோ(டு)
   எழிலான பிரான்ஸூ ஜப்பான்
எங்கெங்கே விமானம் போகும்
   எல்லாமும் காணத் தோன்றும்,
இங்கேநான் வாழும் எல்லை
   இவைகாணும் அளவா யில்லை!

அணைக்கவோ இரண்டே கைகள்
   அனுபவித் துறவை வாழ்வில்
இணைக்கவோ ஒன்றே உள்ளம;
   இயறகையைச் சுகத்தை நித்தம்
பிணைக்கவோ சிலநாள் வாழ்க்கை;
   பெரும்பெரும் நினைவை யெல்லாம்
அணைக்கவோ வருவான் காலன்;
   அளந்துதான் கொடுத்தான் தேவன்!

இருபதே வயதாய் என்னை
   இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
   பார்க்கின்ற அனைத்தும் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
   மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
   உலகத்தை அனுப விப்பேன்!

இறைவனா விடுவான்? என்னை
   இருபாலும் விலங்கு போட்டுக்
குறையுள்ள மனிதனாக்கி
   குரங்கென ஆட்டு வித்து
முறையாக வயது போக
   முதுமையும் நோயும் தந்து
சிறைவாசம் முடிந்த தேபோல்
   ஜீவனை முடித்து வைப்பான்!

இதயத்தை எண்ணம் வெல்லும்
   இளமையை முதுமை வெல்லும்
அதிகமாய்த் தோன்றும் நெஞ்சில்
   ஆசையைக் காலம் வெல்லும்;
மதியினை விதியே வெல்லும்
   வாழ்க்கையைக் கனவே வெல்லும்
வதைபட்ட நிலையில் இந்த
   மனிதனை மரணம் வெல்லும்!

                            - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. இயற்கை அழகைப் பொழிந்தாய் -இங்கே
    இளமைக் கொஞ்சும் இன்னும் பலவும்
    மதுவும் மாதும் மயக்கும் நடனமும்
    அது இதுவென்று அடுக்கிய போதும்
    இளமை போன பின்பும் உனக்குள்
    இன்னும் இத்தனை ஏக்கமா? என்றே
    நான் வியந்தே பார்க்கிறேன்!

    ஆமாம்!
    இளமை போனது உனக்குத்தானே என்றும்
    இளமைத்ததும்பும் உந்தன் கவிதைக்கேது?
    ஆடி ஒடுங்கும் வாழ்க்கையை எத்தனை
    அழகைச் சொன்னாய் கவி அரசனே!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. கவிஞரின் வரிகளில்
    கடைசியாக சொன்ன

    மதியினை விதியே வெல்லும்ன
    வாழ்க்கையை கனவே வெல்லும்

    இந்த வரிகளில் வாதிற்குரிய முரண்
    இன்னமும் தெரிகிறதே..


    ReplyDelete
  3. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ”சிறை வாசம் முடிந்ததே போல்
    ஜீவனை முடித்து வைப்பான்”

    “மதியினை விதியே வெல்லும்
    வாழ்க்கையைக் கனவே வெல்லும்
    வதைபட்ட நிலையில் இந்த
    மனிதனை மரணம் வெல்லும்”

    எத்தனை ஜீவனுள்ள வரிகள்.
    கண்ணதாசன் அவர்களின் பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள்.
    அன்புடன்,
    -Peeyes.

    ReplyDelete
  4. காட்டுக் குயில்களைநீ கவிதை படிக்க வைத்தாய்!
    வீட்டுக் குலமகள்கள் வெளிச்சம் புரிய வைத்தாய்!
    நாட்டுத் தலைவர்களின் தோலை உரித்து வைத்தாய்!
    ஏட்டுக் கல்வியல்ல அனுபவம் என்றுரைத்தாய்!

    - கண்ணதாசா உம் புகழ் ஓங்குக!

    ReplyDelete
  5. கவிச்சக்கரவர்த்தி இன்னும் சிலகாலம் இருந்திருந்தால் எப்படி இருக்கும்

    ReplyDelete
  6. முதுமையும் நோயும் தந்து வாழ்வை முடித்து வைக்கும் இறைவா!கருணையுடன்
    நோயினை மட்டும் தராமல் விலக்கிக்கொள்ளப்பா!

    கவுஞரின் பாடல் மனதை ஓர் கலக்கு கலக்கி விட்டது.

    ReplyDelete
  7. Blogger ஜி ஆலாசியம் said...
    இயற்கை அழகைப் பொழிந்தாய் -இங்கே
    இளமைக் கொஞ்சும் இன்னும் பலவும்
    மதுவும் மாதும் மயக்கும் நடனமும்
    அது இதுவென்று அடுக்கிய போதும்
    இளமை போன பின்பும் உனக்குள்
    இன்னும் இத்தனை ஏக்கமா? என்றே
    நான் வியந்தே பார்க்கிறேன்!

    ஆமாம்!
    இளமை போனது உனக்குத்தானே என்றும்
    இளமைத்ததும்பும் உந்தன் கவிதைக்கேது?
    ஆடி ஒடுங்கும் வாழ்க்கையை எத்தனை
    அழகைச் சொன்னாய் கவி அரசனே!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!///

    மனதை நெகிழ வைக்கும் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. ////Blogger அய்யர் said...
    கவிஞரின் வரிகளில்
    கடைசியாக சொன்ன
    மதியினை விதியே வெல்லும்
    வாழ்க்கையை கனவே வெல்லும்
    இந்த வரிகளில் வாதிற்குரிய முரண்
    இன்னமும் தெரிகிறதே..

    மதியை விதி வெல்லும் சுவாமி, தாங்கள் அறியாததா?
    நீ பார்த்த பார்வைகள் கன்வோடு போகும்
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
    என்று கவிஞர் வாலியும் சொல்லியிருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்?
    நாம் கண்ட கனவுகள் , மனதில் கொண்ட ஆசைகள் நிறைவேறாமல் போகும் என்று சொன்னதில் முரண்பாடு எங்கே உள்ளது சுவாமி?

    ReplyDelete

  9. /////Blogger G C peeyes said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ”சிறை வாசம் முடிந்ததே போல்
    ஜீவனை முடித்து வைப்பான்”
    “மதியினை விதியே வெல்லும்
    வாழ்க்கையைக் கனவே வெல்லும்
    வதைபட்ட நிலையில் இந்த
    மனிதனை மரணம் வெல்லும்”
    எத்தனை ஜீவனுள்ள வரிகள்.
    கண்ணதாசன் அவர்களின் பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள்.
    அன்புடன்,
    -Peeyes./////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger அண்ணாமலை..!! said...
    காட்டுக் குயில்களைநீ கவிதை படிக்க வைத்தாய்!
    வீட்டுக் குலமகள்கள் வெளிச்சம் புரிய வைத்தாய்!
    நாட்டுத் தலைவர்களின் தோலை உரித்து வைத்தாய்!
    ஏட்டுக் கல்வியல்ல அனுபவம் என்றுரைத்தாய்!
    - கண்ணதாசா உம் புகழ் ஓங்குக!/////

    நம்மைப்போன்று அவருடைய தாசர்கள் இருக்கும்வரை, அவருடைய புகழுக்கு ஒரு குறையும் வராது நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger சர்மா said...
    கவிச்சக்கரவர்த்தி இன்னும் சிலகாலம் இருந்திருந்தால் எப்படி இருக்கும்////

    கவிச்சக்கரவர்த்தி என்பது கம்பரைக் குறிக்கும். இவர் கவியரசர். இறைவனின் சித்தம் அவர் இருக்கும்வரை பல அற்புதமான பாடல்களை எழுதுவதற்குப் பணித்தானே - அதுவரை மகிழ்ச்சி கொள்வோம். அவர் பாடல்கள் என்றும் மனதில் நிற்கும்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    முதுமையும் நோயும் தந்து வாழ்வை முடித்து வைக்கும் இறைவா!கருணையுடன்
    நோயினை மட்டும் தராமல் விலக்கிக்கொள்ளப்பா!
    கவுஞரின் பாடல் மனதை ஓர் கலக்கு கலக்கி விட்டது.////

    ஆமாம்! கருணையுடன் நோயைத் தராமல் கூட்டிக்கொள் அப்பா!

    ReplyDelete
  13. ///கருணையுடன் நோயைத் தராமல் கூட்டிக்கொள் அப்பா!..///

    இறைவனுக்கு வேலை
    இதுவல்ல

    நோயை தருபவன் அவன் அல்ல..
    தேவையில்லாததை உண்டு

    திண்பவர் தான் நோயை வரவழைக்கிறார்
    உண்பவர் ஆரோக்கியமாகவே இருப்பர்

    ("திண்பவர்" வேறு "உண்பவர்" வேறு பொருள் விளக்கம் அறிந்து இருப்பீர்கள் தானே)

    தவறுகளை நாம் செய்து விட்டு
    தண்டனைக்குரியவனாக இறைவனை

    சொல்வது கண்டனத்திற்குரியதென
    சொல்லித்தான் ஆக வேண்டும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com