20.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

தொடர் பாடம். பகுதி ஒன்று!

பார்த்தால் பசி தீரும் என்னும் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமான பாடல்
திருமதி. பி .சுசிலா அம்மையார் பாடிய அந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ?

(யாருக்கு மாப்பிள்ளை)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

ஊரறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?

-------------------------------------------------------
சின்ன இடை எண்ணி வருகிறவர்கள்தான் இன்று அதிகம். சீர்வரிசைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய டிக்கெட்டுக்கள்தான் தேடிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியும். அதற்கான ஃபார்முலா ஒன்று உள்ளது. அதை இந்தத் தொடரின் இறுதியில் கொடுக்க உள்ளேன். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு  செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக  ஊற்றினால் சாப்பிடமுடியாது. முதலில் பருப்பு, நெய், அடுத்து சாம்பார், அடுத்து வற்றல்குழம்பு, அடுத்து ரசம், அடுத்து தயிர், அடுத்து பாயாசம் என்று வரிசையாகப் பார்ப்போம் (சாப்பிடுவோம்) எல்லாவற்றையும் தட்டில் ஒன்றாக ஊற்றி, கலக்கி அடியுங்கள் என்றால் எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!

   “சார். திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதுமல்லவா?”

   “திருமணம் ஆனவர்களும் பார்க்கலாம். பொருத்தமில்லாத தேவதையைத்தான் மணந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவளை அனுசரித்துக்கொண்டு  போகலாம் இல்லையா?”

-----------------------------------------------------
1.அஸ்விணி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கு
1. பரணி
2.கார்த்திகை
3 ரோஹிணி
4. புனர்பூசம்
5, பூசம்
6. பூரம்
7. உத்திரம்
8. அனுஷம்
9. பூராடம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி
ஆகிய 13 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம  சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷ நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம்  வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திரட்டாதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 10 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணிக்கு, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அஸ்விணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதம் (மிதுன ராசி)
திருவாதிரை (மிதுன ராசி)
சித்திரை (1 & 2ஆம் பாதம் கன்னி ராசி)
ஆகிய 3 நட்சத்திரங்களும் (பாதங்களைக் கவனிக்க) பொருந்தாது.

கார்த்திகை
மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதம் (ரிஷப ராசி)
புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்கள் (மிதுன ராசி)
உத்திரம் 2, 3 & 4ஆம் பாதம் (கன்னி ராசி)
ஹஸ்தம் (கன்னி ராசி)
சித்திரை 3 & 4ஆம் பாதம் (துலாம் ராசி)
சுவாதி (துலாம் ராசி)
விசாகம்
அவிட்டம்
பூரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை (அதாவது average)
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர்  முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட  முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

15 comments:

  1. Good morning sir. Interesting info. Thank you very much.

    ReplyDelete
  2. குடும்ப நீதி மன்றங்களில்
    குவிந்து கிடக்குது விவாகரத்து வழக்கு

    கூடுதல் நீதி மன்றத்திற்கு ஆலோசனை
    கூறும் நம்மவர்கள் மாற்று வழிகாணதது

    வருத்தமா? இல்லை அடுத்தது பார்க்கும்
    பொருத்தமா? இருக்கட்டும்.

    முன்பெல்லாம்

    பிள்ளைக்கு திருமணம் என
    பத்திரிக்கை வைப்பதுண்டு

    இப்பெல்லாம்

    தனக்கு திருமணம் என
    தம் பிள்ளைகள் பத்திரிகை தருகின்றன

    இதே (பெண்)மனைவியுடன் வாழ்தல்
    இனி கௌரவ குறைச்சலாக கருதபடலாம்

    மண முடிவுகளும்
    மண முறிவுகளும்

    வாடிக்கை நல்ல
    வேடிக்கை

    ReplyDelete
  3. காலை வணக்கம் வாத்தியார் ஐயா
    தாங்கள் உடல் நலம் பெற்று மீண்டும் பதிவிட வந்தமைக்கு எனது குதூகலத்தினை தெரிவிக்கிறேன்
    புவனேஷ்

    ReplyDelete
  4. பாடம் நன்று. அந்த சூத்திரம் தான் முன்னமேயே கொடுத்துள்ளீர்களே. (பரணி தரணி ஆளும் - இது க்ளூ.அந்த பாடத்தினை முன்பே படித்திருந்தால் விளங்கும். இல்லாவிடில் இல்லை).
    மீண்டும் கலியாண பேச்சா? சரி பேசுங்கள்.

    நான் எனது புதிய நிலைப்பாட்டின் படி, பற்றினை ஒழித்து தூய நெஞ்சினனாய் மலர் மிசை ஏகினான் மாணடி பற்றி அமர்ந்துள்ளேன்.

    வேலுண்டு பயமில்லை.

    இங்கே சூர சம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

    எனக்கும் காய்ச்சல் விட்டு விட்டது. பட்டதால் புத்தி வந்து,

    இப்போதெல்லாம் கண்டதை சமைத்து தின்னாமல் அம்மா போட்ட சோற்றை நல்ல பிள்ளையாக முழுங்கி வருகிறேன்.

    அன்புடன் புவனேஷ்

    ReplyDelete
  5. அன்பு ஐயா,
    ஒரு சிறு கருத்தினை இங்கே அடியேன் வெளியிட விரும்புகிறேன்.
    என்ன தான் காதல் பண்ணினாலும், இவனுக்கு விதிக்கப்பட்ட பெண் தான் மனைவியாக வருவாள் இல்லையா.
    சில சமயம் காதல்கள் தானே பிரிகின்றன. இவளை விட மேம்பட்ட மனைவி தான் இவனுக்கு கிட்ட வேண்டும் என்று விதி இருப்பின் (Thinking positivist) காதல்கள் ஈடேறுவது இல்லை. ஏழரை சனி ராகு தசை போன்ற காலங்கள் பூர்வ ஜன்ம கடனை கழிப்பது போல சில பேரை கொண்டு வந்து நிறுத்தும். மனதில் தோன்றும் இனம் புரியாத அன்பு எல்லாம் காதல் ஆகி விடுவதில்லை இது பலருக்கும் பட்ட பின்பு தான் புரிகிறது போலும். மனம் புரிந்து கொண்டவளையே காதலிப்பது ரொம்பவும் பாதுகாப்பானது. சின்ன இதயம் சிதறாமல் இருக்கும் இல்லையா? :)

    ReplyDelete
  6. பாடல் வரிகளில், "ஓடி விட எண்ணமிடுவாரோ" என்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன் ஐயா.

    ReplyDelete
  7. புவனா சொல்வது யதார்த்தம். ஒப்புக்கொள்கிறேன். எனக்கென்று ஒரு மனம் இருப்பதைப் புரியாத ஆளாக இருந்தால் (கல்யாணத்திற்குப் பிறகு ஆண்கள் அதிகம் மாறிவிடுகிறார்கள் என்பதும் யதார்த்தம்), இதைவிட நல்ல ஆள் எனக்கு வித்திதிருக்கிறது என்று புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுவேன்.
    வருவதை எல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு, தன் வாழ்க்கையே காதலித்தால் தெரியும் அப்போது.

    ReplyDelete
  8. ஒரு குறிப்பிட்ட நட்ச்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்ச்சிரத்தை உடையவர் என சொல்லமுடியுமா? முடியும்.......

    ஆகா அய்யா அந்த ரகசியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
  9. அய்யா ஒரு சந்தேகம் ஒரே நட்ச்சத்திரமாக இருந்து தசா சந்திப்பு நடக்கலாமா

    ReplyDelete
  10. குருவிற்கு வணக்கம்
    நல்ல பாடம்,
    நன்றி

    ReplyDelete
  11. அருமை, தேவையான அவசியமான தொடர்.
    நல்லதொரு தொடக்கம்

    ReplyDelete
  12. குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  13. குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,தங்களுக்கு காய்ச்சல் குணமானது மிகவும் மகிழ்ச்சி.மங்களூரில் கதிரி சோமேஷ்வரர் தேவஷ்தானம்(தர்மஷ்தலத்தின் மூலஸ்தானம்) உள்ளது,உங்கள் உடல்நிலை முழுவதும் குணமானவுட்ன் (முடிந்த்தால்)ஒரு முறை வந்து தரிசித்து செல்லுங்கள் ஐயா, நான் உங்களுக்காக அவரிடமே பிரார்த்தனைசெய்தேன்.
    திருமணபொருத்தம் என்பது வாழ்க்கையில்மிகவும்முக்கியமானது,அதைபற்றி அறிந்துகொள்வதுமிகவும்ஆவலாகஉள்ளது,இந்தபாடத்தைமிகவுமபொருமையாகவும்,தெழிவாகவும் படிக்க விரும்புகிறேன், ந்ன்றி ஐயா.

    ReplyDelete
  15. பொருத்தமும் முக்கியம்தான். ஆனால் புரிந்துணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது போன்ற மனப்பான்மை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான விஷயங்கள் இந்த பொருத்தங்களில் தெரிவதில்லை. இதனால் பொருத்தம் பார்ப்பது அவசியம்தானா என்ற கேள்வியும் பல முறை என் மனதில் தோன்றியிருக்கிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com