30.11.12

காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!







 
காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும்  கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.11.12

இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!


 இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.

”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்

ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச் சாடிச் சொல்கிறார்:

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:

”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”

முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------
கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!


தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3
ஜோதிடத் தொடர் - பகுதி 3

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
3. கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் (மேஷ ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்கு,

1. அஸ்விணி
2. பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5 ஹஸ்தம்
6. சுவாதி
7. அனுஷம்
8. கேட்டை
9. மூலம்
10. சதயம்
11. ரேவதி
ஆகிய 11 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் ஹஸ்தம் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷம், கேட்டை நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

1. பரணி
2. ரோஹிணி
3. திருவாதிரை
4. பூரம்
5. சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி) பொருந்தாது. சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலாம் ராசி) மத்திம பொருத்தம்
6. திருவோணம்
7. அவிட்டம்
8. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

தேவையில்லை. விவரம் முன் பதிவில் உள்ளது  இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 2

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 2

ஜோதிடத் தொடர் - பகுதி 2

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
2. பரணி நட்சத்திரம் (மேஷ ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.இந்த நட்சத்திரத்திற்கு,

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. உத்திரம்
8. சுவாதி
9. கேட்டை
10. மூலம்
11. உத்திராடம்
12. திருவோணம்
13. சதயம்
14. ரேவதி
ஆகிய 14 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கேட்டை நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு  மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணிக்கு பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி  விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பரணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்குக் கிடையாது.. ஆகவே அதை விலக்கி  விடுவது நல்லது.

திருவாதிரை (மிதுன ராசி) பொருந்தாது.

1. ரோஹிணி (ரிஷபம்)
2. புனர்பூசம் (1,2,3ஆம் பாதங்கள் - மிதுன ராசி மட்டும்)
3. ஹஸ்தம் (கன்னி ராசி)
4. சித்திரை
5. விசாகம்
6. அவிட்டம்
7. பூரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல்  அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 7ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

நான் சென்ற பதிவில் சொல்லியதையே மீண்டும் சொல்கிறேன். எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு,
மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க
வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? இல்லை அவள்தான் விட்டு விடுவாளா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன்/காதலி ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-))))

அவர்களுக்கான, அதாவது காதலுக்கான,  ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.11.12

Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?


Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?

தலைப்பில் உள்ள ‘டா’ எனக்காக நான் எழுதிக்கொள்வது. அப்போதுதான் எழுதுவதற்கு ஒரு உற்சாகம பிறக்கிறது!

பயிற்சிப்பாடம்

ஜோதிடம் கற்றுக் கொள்வது எளிதன்று. கடுமையான முயற்சி செய்து ஜோதிடப்பாடங்களைப் படிப்பதோடு, படித்ததை மனதில் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, அதில் தேர்ச்சி பெறமுடியும்.

படிக்கின்ற அத்தனை பாடங்களையும், அத்தனை, விதிகளையும் மனதில் தக்கவைக்க முடியாது. ஆனால் முக்கியமான விதிகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது மனதில் நிறுத்திவைக்கலாம்.

முக்கியமான பாடங்கள் எது? அவற்றை எப்படித் தக்கவைப்பது எப்படி என்பதே இந்தப் பயிற்சி வகுப்பின் (மேல்நிலை வகுப்பின்) நோக்கமாகும்.

இது மேல் நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் படட்டும் என்பதற்காக இன்று  இங்கே பதிவிட்டுள்ளேன்.

பாடங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல், பல ஜாதகங்களை பரிசீலித்துப் பார்ப்பதுடன், ஜோதிடம் தெரிந்த சிலருடன் அடிக்கடி உரையாடுவதன் மூலமும் நாம் அனுபவங்களைப் பெறமுடியும். அனுபவங்கள் மனதில் தங்கிவிடும்.

கிடைக்கும் உதாரண ஜாதகங்களை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டாம். கிடைக்கின்றபோது அவற்றைச் சேகரித்துவைத்துக்கொள்ளலாம். முன்பு எல்லாம் நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்துக்கொண்டே வருவார்கள். இப்போது அந்தத் தொல்லை இல்லை. கணினியில் ஒரு Main Folder, Various Sub Folderகளை உருவாக்கி அவைகளைச் சேர்த்துக்கொண்டே வரலாம். அந்த வசதி ஒரு அற்புதமான வசதியாகும். அனைவரையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன். பல உதாரண ஜாதகங்களை நான் உங்களுக்குத் தரவுள்ளேன். அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அவைகள் வரும். பொறுத்திருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான கேள்வி உண்டு. "நான் கஷ்டப்படுகிறேன். எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?"

கஷ்டப்படாத மனிதர்களே கிடையாது. கஷ்டங்கள் பலருக்கும் பலவிதமாக இருக்கும்.

கஷ்டங்களை அல்லது துன்பங்களை அல்லது துயரங்களை அல்லது தொல்லைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.

1. நிரந்தரக் கஷ்டம். மாற்ற முடியாத நிரந்தரக் கஷ்டம்
2. தற்காலிகமான (Temporary) கஷ்டம்

இதிலும் ஒவ்வொரு வீட்டை வைத்தும், கிரகத்தைவைத்தும், கஷ்டங்கள் பலவகைப்படும். ஒவ்வொன்றாக அலசுவோம்.

முதலில் சூரியனை வைத்துப்பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சூரியன் உடல்காரகன். சூரியனை வைத்து வரும் கஷ்டங்கள் எப்படி வகைப்படும்?

1. உடல் ஊனம் இருந்தால், ஆஸ்த்துமா போன்ற நோய்கள் இருந்தால் அது நிரந்தரக் கஷ்டம்.
2. சிக்கன் குனியா காய்ச்சல், பல்வலி, மூட்டுவலி போன்றவைகள் தற்காலிகக் கஷ்டங்கள்.

அதுபோல சூரியன் தந்தைக்குக் காரகன்.

1. இளம் வயதிலேயே தந்தை இல்லாமல் இருந்தால், அல்லது தந்தையால் பலன் எதுவும் இல்லை என்றால் அது
நிரந்தரக் கஷ்டம்.
2. தந்தையோடு மனஸ்தாபம், அல்லது தந்தையாரோடு விரோதப்போக்கு என்றால் அது தற்காலிகக் கஷ்டம்

வீடுகளும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனித உடற்பகுதிகளும்:

1 ஆம் வீடு (லக்கினம்): தலை, மூளை, தலைமுடி, தோற்றம் Head, Brain, Hair, Appearance

2 ஆம் வீடு: முகம், கழுத்து, தொண்டை, கண்கள், பற்கள், நாக்கு,  மூக்கு,தைராய்ட் சுரப்பி, குரல்வளை Face, Right Eye, Neck, Throat, Teeth, Tongue, Nose, Mouth, Speech, Nails

3 ஆம் வீடு: காது,நுரையீரல், கைகள், தோள்பட்டைகள், கைகள், நரம்பு மண்டலம் Ears, Right Ear, Lungs, Shoulders, Arms, Hands, Upper part of Eusophagus, Clavicles, Mobility

4 ஆம் வீடு: மார்பு, இதயம், உணவு மற்றும் மூச்சுக்குழல்கள் Breasts, Chest, Lungs, Heart, Diaphragm

5 ஆம் வீடு: வயிறு,, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி Upper Abdomen, Stomach, Liver, Gall Bladder, Spleen, Pancreas, Duodenum

6 ஆம் வீடு: குடற்பகுதிகள்,intestines, spleen, and nervous system Intestines, Digestion, Absorption, Appendix, Lowerback, Injuries, Wounds

7. 7ஆம் வீடு: ஜீரண உறுப்புக்கள், சிறுநீரகம், Urinary Tract, Kidneys, Sexual Organs, Uterus, Ovaries, Testicles, Semen, Lower Back

8. 8ஆம் வீடு:  தோல், புஜம் External Genital Organs, Anus, Perineum

9. 9ஆம் வீடு: இடுப்பு, தொடைப்பகுதிகள், Hips, Thighs, reproductive system, sexual organs, bowels, and excretory system
 
10. 10ஆம் வீடு:  கல்லீரல்  hips, thighs, liver, and sciatic nerve

11. 11ஆம் வீடு: முழங்கால், இணைப்பு எலும்புகள் மற்றும் skeletal system,calves, and circulatory system Left Ear, Calves, Ankles, Lower Legs

12. 12ஆம் வீடு: கால்கள், பாதம், Feet lymphatic system, and adipose tissue

உடல் ஆரோக்கியத்தில் சனியின் பங்கு! Saturn and Health

அதீதமான துரதிர்ஷ்டத்தை அளிப்பவர் சனீஷ்வரன். துன்பங்கள், தடைகள் ஆகியவற்றிற்கும் காரணகர்த்தா அவர்தான். மனிதனுக்குப் பலவிதமான நோய்களைக் கொடுப்பவர் அவர்தான். (Saturn is the chief planet in producing diseases)

6, 8, 12ஆம் வீடுகளுக்கு அவர்தான் காரகர் (authority) சிறிய, பெரிய நோய்களுக்கும் மருத்துவமனையில் படுப்பதற்கும் தொடர்பு உடைய வீடுகள் அவைகள் (6th, 8th and 12th houses are connected with short or long ailments and hospitalization)

சூரியனுக்குக் கடும் பகைவர் அவர். சூரியனுடன் அவர் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியனுக்கு 7ஆம் வீட்டில் நேரடிப் பார்வையில் இருந்தாலும், அவர் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உரிய (அதாவது சூரியன் இருக்கும் பகுதிக்குரிய உடற்பகுதியில்) ஊனத்தை அல்லது கடும் நோயை ஏற்படுத்துவார்.

உதாரணத்திற்குப் பன்னிரெண்டில் சூரியன் இருந்து, 6ஆம் வீட்டில் சனியிருந்தால், ஜாதகனுக்குப் பாதத்தில் ஊனம் அல்லது தீராத நோய் இருக்கும். தற்சமயம் இல்லை என்றாலும் சனி திசை சூரிய புத்தியில் அல்லது சூரிய தசை சனிபுத்தியில் உண்டாகும்.

ஏழில் சூரியன் இருந்து, சனியின் பார்வையும் அவர்மேல் இருந்தால், கிட்னியில் பிரச்சினைகள் உண்டாகும். அதுபோல அந்த வீட்டுடன் சம்பந்தப்பட்ட உடற்பகுதியிலும் பிரச்சினைகள் உண்டாகும். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் பார்த்த்துக்கொள்ளுங்கள்.

சூரியன் சனியின் நேரடி பார்வையில் இருக்கக்கூடாது. இருந்தால் சூரியன் இருக்கும் வீடும் அது சம்பந்தப்பட்ட உடலின் பகுதியும் பாதிக்கப்படும்

அதுபோல சூரியனுடன் சனி அல்லது ராகு கூட்டணி போட்டிருந்தாலும் உடற்கோளாறுகள் உண்டாகும்.

நல்ல ஆரோக்கியமான உடம்பிற்கு சூரியன் ஜாதகத்தில் நீசமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்!

சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடந்து தனது சுற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிறைவு செய்யும். சித்திரை ஒன்றாம் தேதி (தமிழ்வருடப்பிறப்பு அன்று) மேஷ ராசியில் அடியெடுத்துவைக்கும் சூரியன் ஒரு மாதகாலம் அங்கே இருந்து விட்டு வைகாசி மாதம் முதற் தேதியில் ரிஷப ராசிக்கு வரும்

1.சித்திரை மாதத்தில் - மேஷம்
2.வைகாசி மாதத்தில் - ரிஷபம்
3.ஆனி மாதத்தில் - மிதுனம்
4.ஆடி மாதத்தில் - கடகம்
5.ஆவணி மாதத்தில் - சிம்மம்
6.புரட்டாசி மாதத்தில் - கன்னி
7.ஐப்பசி மாதத்தில் - துலாம்
8.கார்த்திகை மாதத்தில் - விருச்சிகம்
9.மார்கழி மாதத்தில் - தனுசு
10.தை மாதத்தில் - மகரம்
11.மாசி மாதத்தில் - கும்பம்
12.பங்குனி மாதத்தில் - மீனம்

இப்படிச் சூரியன் வலம் வரும்போது, தனது சுயவர்க்கத்தில் எந்த இடத்தில் பரல்கள் மிகவும் குறைவாக உள்ளதோ, அந்த இடத்தில் இருக்கும் ஒரு மாத காலத்தில், அதற்குள்ளான காலத்தில், தற்காலிக நோய்களைக் கொடுப்பான். காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை என்பது போன்று அது எந்த வடிவில் வேண்டுமென்றாலும் வரும்.

அந்தக் காலகட்டத்தில் ஜாதகனுக்கு தற்காலிக உடல் உபாதைகள் ஏற்படும். அது காய்ச்சலில் இருந்து constipationவரை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

22.11.12

இலக்கியச்சோலை: பாப்பையாவும் விரல் சூப்புகின்ற குழந்தையும்!

இலக்கியச்சோலை: பாப்பையாவும் விரல் சூப்புகின்ற குழந்தையும்!

எனது நண்பர் கவித்தென்றல் காசுமணியன் அவர்கள் சிறந்த கவிஞர். “நெஞ்சத்தில் கருவுற்றால் நிமிடத்தில் பெற்றெடுப்பான். என்று கவியரசர் கண்ணதாசனின் பாராட்டைப் பெற்ற கவிஞர். எங்கள் பகுதியில் நடைபெறும் பிரபலமான விழாக்களில் அவரைத்தான் தொகுப்புரை வழங்க அன்புடன் அழைப்பார்கள். அவரும் மனமுவந்து செல்வார். அவர் வழங்கிய தொகுப்ப்ரைக் கவிதைகள் ஏராளமாக உள்ளன். அவற்றில் சிலவற்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
1
பட்டிமன்ற வித்தகர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் பற்றிக் கவித்தென்றல்
சொல்லிச் சபையைக் கலகலக்க வைத்த தொகுப்புரை:

பாப்பையா என்றாலே           
  பத்துமாதம் பிறந்துவிரல்          
சூப்புகின்ற குழந்தைகூட        
  தூக்கத்தை விட்டுவிட்டு          
பாப்பையா பட்டிமன்றம்         
  பார்ப்பதற்காய் எழுந்தமரும்     
                                 
இதயத்தில் தமிழைவைத்தார்       
  ஏற்றத்தைக் குரலில்வைத்தார்
திருமாலை நிறத்தில்வைத்தார்
  சிரிப்பை உரையில்வைத்தார்

மூக்கின் கூர்மையினை
  மூவர்ணக் கிளியில்வைத்தார்
பச்சரிசி அடிக்கினாற்போல்
  பல்வரிசை அமைந்திருக்கும்
உச்சரிப்பில் மன்னராவார்
 உங்கள்முன் நடுவராக
கச்சிதமாய் தீர்ப்புத்தர
 கைதட்டி வரவேற்போம்!

2
மேடைப் பேச்சில் மேதையான திரு.பழ.கருப்பையா அவர்களைப்பற்றிக்
கவித்தென்றல் சிறப்பாகச் சொன்னது:

பழ.கருப்பையா உங்கள்           
  பழகுதமிழ் இனிப்பையா            
நல்லசுவைத் தமிழிருக்கும்          
  நகைச்சுவை கலந்திருக்கும்          
வெள்ளமாய்க் கருத்திருக்கும்       
  வேகமாய் நடையிருக்கும்          
                      
குடிநீர்க் காவலர்                      
  கொஞ்சுதமிழ்ப் பாவலர்                                        
விடியும்வரை பேசினாலும்                               
  விருப்பமுடன் பேசிடுவார்
ஆத்தா பேச்சுக்களை
  ஆச்சிகளின் இயல்புகளை
அப்பச்சி நடைமுறையை
  அப்படியே பேச்சுக்களில்
நகைச்சுவை கலந்துவிட்டு 
  நாட்டுவதில் வல்லவர்கள்
சிரிக்க வைப்பார்கள் - அதேசமயம்                                  
  சிந்திக்க வைப்பார்கள்!


3
பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்களைப்பற்றிக் கவித்தென்றல்
அருமையாக உரைத்தது:

தியாகராயர் கல்லூரியில்          
  திறமையாகப் பணியாற்றி          
வங்கித் துறையினிலே            
  வாழ்க்கைப் புகழ்சேர்த்து           
பட்டிமன்ற நிகழ்ச்சிவழி           
  பரிணமித்த அறிஞரிவர்             
இயல்பான நகைச்சுவைகள்
  இவர்பேச்சில் நிறைந்திருக்கும்
சுவையாகப்  பேசும்எங்கள்
  சொல்லறிஞரே  வருக!
பழநியப்பர் பற்றியிங்கு
  பாராட்டு  உரைதருக!

               
    கவித்தென்றல் கலந்து கொண்டு சிறப்பித்த மன்றங்களில், அவரால் தொகுத்துச்
சொல்லப்பட்ட ஏராளமான தொகுப்புக் கவிதைகளில் இடம் கருதி சிலவற்றை மட்டுமே
தந்துள்ளேன்.

++++++++++++++++++++++++++++++++++++
4
தென்றல் புயலாகிப் பாடியது.

ஒரு கவிஞன்  இப்படிச் சொன்னான்

        "இருக்கும்போது காற்றாக இருப்போம்
            எழுந்து புறப்பட்டால் புயலாகிவிடுவோம்!"

இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஒரு முறை கோவை மணி மேல் நிலைப்பள்ளியில் கவியரசர் வைரமுத்து அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தனக்கு முன்பு  கவிதை பாடியவர் வைரமுத்து அவர்களைக் 'கருப்புக் கம்பன்' என்று வர்ணித்ததைக் கேட்டுவிட்டு, அவருக்கு அடுத்ததாக வாழ்த்துக்கவிபாட வந்த கவித்தென்றல்,
புயலாகமாறிப் பாடிய கவிதை வரிகள்:

கருப்புக்கம்பன் என்று                   
   கவியரசைச் சொன்னீரே                 
கருப்பென்ன? சிவப்பென்ன?              
   கட்டியுள்ள ஆடை                      
வெள்ளை நிறத்தைப்பார்                
   உள்ளம் அதில் தெரியும்                 

வெள்ளை வேட்டியென்ன?               
  வெளிர்கெண்டைக்  கரையென்ன?          
முல்லைச் சிரிப்பென்ன?                     
  முழுமதியின் அழகென்ன?                
அத்தனையும் விட்டுவிட்டு              
  அன்புக் கவியரசைக்                    
கருப்புக் கம்பனென்று                        
    கவிதையிலே சொன்னீரே!
          
        - போகட்டும்

கம்பன் சிவப்பென்று
   கண்டவர் யாரைய்யா?
பட்டிமன்றம் இதுவல்ல
   பாராட்டு விழாவென்று
விட்டுவிட்டுச் செல்கின்றேன்
    வேறிடத்தில் சொல்லாதீர்

நீங்கள்எல்லாம் அறிவீர்கள்
   நிலக்கரி கருப்புத்தான்
நெருப்பிலிட்டால் சிவப்பாகும்
   நீரிலிட்டால் கருப்பாகும்                       
அதுபோலத்தான் எங்கள்                                     
   அன்புக் கவியரசர்
செந்தமிழை  எழுதச்
    சிவப்பாகமாறிடுவார் - இப்படி
வந்து அமர்ந்திட்டால்
    வண்ணம் கருப்பாவார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

20.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

தொடர் பாடம். பகுதி ஒன்று!

பார்த்தால் பசி தீரும் என்னும் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமான பாடல்
திருமதி. பி .சுசிலா அம்மையார் பாடிய அந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ?

(யாருக்கு மாப்பிள்ளை)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

ஊரறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?

-------------------------------------------------------
சின்ன இடை எண்ணி வருகிறவர்கள்தான் இன்று அதிகம். சீர்வரிசைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய டிக்கெட்டுக்கள்தான் தேடிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியும். அதற்கான ஃபார்முலா ஒன்று உள்ளது. அதை இந்தத் தொடரின் இறுதியில் கொடுக்க உள்ளேன். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு  செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக  ஊற்றினால் சாப்பிடமுடியாது. முதலில் பருப்பு, நெய், அடுத்து சாம்பார், அடுத்து வற்றல்குழம்பு, அடுத்து ரசம், அடுத்து தயிர், அடுத்து பாயாசம் என்று வரிசையாகப் பார்ப்போம் (சாப்பிடுவோம்) எல்லாவற்றையும் தட்டில் ஒன்றாக ஊற்றி, கலக்கி அடியுங்கள் என்றால் எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!

   “சார். திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதுமல்லவா?”

   “திருமணம் ஆனவர்களும் பார்க்கலாம். பொருத்தமில்லாத தேவதையைத்தான் மணந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவளை அனுசரித்துக்கொண்டு  போகலாம் இல்லையா?”

-----------------------------------------------------
1.அஸ்விணி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கு
1. பரணி
2.கார்த்திகை
3 ரோஹிணி
4. புனர்பூசம்
5, பூசம்
6. பூரம்
7. உத்திரம்
8. அனுஷம்
9. பூராடம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி
ஆகிய 13 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம  சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷ நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம்  வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திரட்டாதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 10 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணிக்கு, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அஸ்விணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதம் (மிதுன ராசி)
திருவாதிரை (மிதுன ராசி)
சித்திரை (1 & 2ஆம் பாதம் கன்னி ராசி)
ஆகிய 3 நட்சத்திரங்களும் (பாதங்களைக் கவனிக்க) பொருந்தாது.

கார்த்திகை
மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதம் (ரிஷப ராசி)
புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்கள் (மிதுன ராசி)
உத்திரம் 2, 3 & 4ஆம் பாதம் (கன்னி ராசி)
ஹஸ்தம் (கன்னி ராசி)
சித்திரை 3 & 4ஆம் பாதம் (துலாம் ராசி)
சுவாதி (துலாம் ராசி)
விசாகம்
அவிட்டம்
பூரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை (அதாவது average)
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர்  முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட  முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

19.11.12

Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?


Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?
அலசல் பாடம்!

வாரியார் சுவாமிகள் அடிக்கடி சொல்வார். “உருவத்தால் உயர்ந்த மரங்களேயாயினும், பருவத்தால் அன்றிப் பழுக்காது”

அதாவது பழுக்கும் காலம் வந்தால்தான், பூக்கும், காய்க்கும், பழுக்கும்.

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குதல் போன்ற முக்கியமான செயல்கள், ஜாதகப்படி, அதற்கு உரிய நேரம் வரும்போதுதான் நடக்கும். ஜாதகன் தானாக என்ன முக்கினாலும், அல்லது முயற்சி செய்தாலும் நடக்காது!

அதை மேலோட்டமாக இன்று பார்ப்போம்
--------------------------------------------------------
என்ன முயற்சி செய்தும் ஒரு ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஜாதகப்படி காரணம் என்ன? எப்போது கிடைக்கும்?

பல இளைஞர்களை வாட்டும் முக்கியமான நிலைப்பாடு (சூழல்) இது.

இன்று அதை அலசுவோம். அதாவது அந்த நிலைமைக்கான காரணங்களை அலசுவோம்
--------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


சிம்ம லக்கினம். லக்கினத்தில் கேது.
விரையாதிபதி - 12ஆம் இடத்து அதிபதி சந்திரன். 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
லக்கினாதிபதி சூரியன் நீசம்.இந்தக் காரணஙகளால் லக்கினாதிபதியும், லக்கினமும் வலுவாக இல்லை.
நான் எப்போதும் சொல்வதைப் போல, லக்கினம் வலுவாக இல்லை என்றால் ஜாதகன் கஷ்டப்பட நேரிடும். உரிய நேரத்தில் எதுவும் கிடைக்காது. அல்லது அமையாது.

தொழில்காரகன் சனி நீசம் (He is the authority for work)
அத்துடன் அவர் தொழில் மற்றும் வேலை ஸ்தானத்திற்கு, அதாவது அந்த இடத்திற்குப் பன்னிரெண்டில் இருக்கிறார்.
அது நல்ல நிலைமை இல்லை.

ஜாதகனுக்கு அவனுடைய 38ஆவ்து வயதுவரை சனி மகா திசை.
தொழில் ஸ்தானத்து அதிபதி சுக்கிரன் நீசம்,
அவனுக்கும் தசாநாதனுக்கும் உள்ள உறவு 6/8 positionல் உள்ளது.

கிரக நிலைகளும், தசா நிலைமையும் ஜாதகனுக்கு ஆதரவாக இல்லை. அதனால் உரிய வேலையின்றி ஜாதகன் அல்லல்பட நேர்ந்த்து.

அடுத்து வந்த புதன் மகா திசை ஜாதகனுக்குக் கை கொடுத்தது. ஜாதகன் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான்.

புதன் உச்சம் பெற்று இருப்பதுடன், 10ஆம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டாகச் சேர்ந்து லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள்.

இப்படித்தான் ஒரு ஜாதகத்தை அலச வேண்டும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.11.12

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!




நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் அந்த நீர் புகுந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.  “அதுபோல  வாழ்வின் எந்தப் பிரச்சினையும் உங்களைப் பாதிக்கவே முடியாது. நீங்கள் அனுமதித்தால் தவிர!”

முகநூல் நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் வரிகள் இவைகள். உண்மைதான். மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வரிகள் அவைகள்.

ஆனால் கடன், நோய் போன்ற உபாதைகள் எல்லாம் உங்கள் அனுமதியின்றே, உங்கள் வாழ்க்கைக்குள் நுழையும் வலிமை உடையவை, அதை மனதில் வையுங்கள்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒருவனுக்கு, அவன் செல்லும் வாகனம் எத்தனை புதிதாக இருந்தாலும், அவன் எத்தனை திறமையான ஓட்டுனராக இருந்தாலும், விபத்து  நேரிடுவது அவன் கையிலா இருக்கிறது? எதிரில் வரும் ஒரு வாகன ஓட்டியின் சிறு தவறுகூட, அவனை சாய்த்து விட்டுப் போய்விடும. சமயத்தில் வ்ண்டியுடன், அவனை  மேலே அனுப்பி வைத்துவிட்டுப் போய்விடும்!

இறையுணர்வும், தெளிந்த பக்தியும், நல்ல நேரமும் மட்டுமே ஒருவனை எந்த நேரத்திலும் காப்பாற்றும்.

விதியின் விளையாட்டில், கடும் புயலையும், காற்றழுத்ததையும் தாக்குப் பிடித்து நிற்பது என்பது, எந்தக் கப்பலுக்கும் சாத்தியமில்லாததாகும். மனிதன் மட்டும் அதற்கு  விதிவிலக்கா என்ன?

   “நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
         நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!”

என்று நம்பிக்கை தரும் வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்துவிட்டுப்போனார்

அந்த நம்பிக்கையில்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

பத்து நாட்களாக வாத்தியாரை முடக்கிப் போட்டிருந்த காய்ச்சல் 90% குணமாகிவிட்டது.

பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், வாத்தியாரின் மேல தங்களுடைய மேலான அன்பையும், பரிவையும் காட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் பொறுமைக்கும், புரிந்துணர்விற்கும் விசேடமாக மீண்டும் ஒரு நன்றி!

பாடங்கள் மீண்டும் 19.11.2012 திங்கட்கிழமை முதல் துவங்கும். வழக்கம்போல வாத்தியாரின் உத்வேகத்துடன் அவை இருக்கும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

11.11.12

காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!


 காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!

அன்பர்களே, அன்பு உள்ளங்களே,

கடந்த ஒரு வார காலமாக வாத்தியாருக்குக் கடும காய்ச்சல். virus fever. Blood test முதல் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். காய்ச்சல் தணிந்துள்ளது. ஆனாலும் முற்றிலுமாகக் குணமாக வில்லை. முற்றிலுமாகத் தேறி, பழைய நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகலாம். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்.

அடுத்த வாரம் முதல் பழைய உத்வேகத்துடன் பாடங்களை எழுத உள்ளேன். இழந்த நேரங்கள் சரி செய்யப்படும். கோவையில் தற்சமயம் நிலவும் 12 மணி நேர மின்வெட்டு, எவரையும் உற்சாகப் படுத்துவதாக இல்லை. அதையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. யு.பி.எஸ் உள்ளது. இருந்தும் பயன் இல்லை.  யு.பி.எஸ் சார்ஜ் ஆவதற்கும் மின்சாரம் வேண்டுமல்லவா? அதுவும் ஒரு பெரிய குறைதான்.

வருவதை எதிர்கொள்வோம். அனைவரையும் பொறுமையாக இருக்கும்படியும். வாத்தியாருக்கு, உங்களுடைய ஒத்துழைப்பை நல்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.11.12

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Popcorn Post No.30
பாப்கார்ன் பதிவுகள் - எண்.30


தேதி 6.11.2012 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
எனக்கு வரும் மின்ஞசல்களில் சில இப்ப்டியிருக்கும்:

“சார், என் தாயார் சென்ற வருடம் 30.11.2011 அன்று காலமானார்கள். அவர்களுக்குத் தலைத் திதியைக் (ஆண்டுத் திதியைக்)
கொடுக்க விருபுகிறேன். இந்த ஆண்டு எந்தத் தேதியில் அதைச் செய்ய வேண்டும்?”

அவர்கள் இறந்தபோது, அன்றையத் திதியக் குறித்து வைத்துக்கொளாததினால் ஏற்படும் கோளாறு இது

அன்றையத் தேதியில் வளர்பிறை சஷடி திதி

இந்த ஆண்டு அதே ஐப்பசி வளர்பிறை சஷ்டித் திதி 19.11.2012 அன்று வரும். அன்றையத் தேதியில் செய்ய வேண்டும்

பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்றால், வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனபடி நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் கொண்டாடலாம். ஆனால் கோவிலுக்குச் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், தமிழ் நாட்காட்டியின்படி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் நீங்கள் பீறந்த நட்சத்திரம் எந்தத் தேதியில் வருகிற்தோ, அந்தத் தேதியில் தான் செய்ய வேண்டும்!

உதாரணத்திற்கு, நீங்கள் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில், பிறந்தவர் என்றால், அந்தத் தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய வேண்டும்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------
திதியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும். திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும் விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள் பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.11.12

Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?


Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?

Popcorn Post No.29
பாப்கார்ன் பதிவுகள் - எண்.29


தேதி 5.11.2012 திங்கட்கிழமை
---------------------------------
சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

அப்புறம் எப்படிக் கொடுப்பான்?

அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.

அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?

உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.

எல்லோருக்கும் அப்படியா?

இல்லை!

சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.

4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.

இது பாப்கார்ன் பதிவு. இதில் என்ன அளவு தர முடியுமோ, அதைத் தந்துள்ளேன். சனியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் பழைய பாடங்களில் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.11.12

Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!






Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!
பக்தி மலர்

இசைப்பவர்: தேனினும் இனிய குரலால் பாடும் வல்லமை பெற்றவர். ஆமாம். திரு. கே.ஜே. ஜேசுதாஸ்தான் அவர். இன்றைய பக்தி மலரை அவர் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. இசைக்கு ஏது மொழி? அதுவும் தெய்வீகப் பாடலுக்கு ஏது மொழி? தமிழில் இல்லையே என்ற குறையில்லாமல் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------
ஸ்ரீஹரிஹராமஜ் அஷ்டகம  என்பது மிகவௌம் பிரபலமான ஹரிஹராசனம் என்னும் தாலாட்டுப் பாடல் ஆகும் (Sri Hariharatmaj ashtakam is popularly known as "Harivarasanam" is the lullaby for Lord Ayyappa. "Mantra" comprising eight stanzas.The Indian spiritual arena for it s pride has many Ashtakams. Examples are Lingashtakam (praising Lord Shiva and Mahalakshmi ashtakam (praising Mahalakshmi)

ஹரிவராசனம் வரிகளை நேரமின்மை காரணமாக ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தேன். அதைத் தமிழ் எழுத்துக்களில், நமது நண்பர் தஞ்சாவூர்ப் பெரியவர் திரு கோபாலன் அவர்கள்  கொடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே கொடுத்துள்ளேன். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!.

ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அருவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

சரணகீர்த்தனம் சக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தநாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

துரகவாஹனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்னிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

த்ரிபுவனர்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிடஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

பவபயப்பஹம் பாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

கலம்ருதஸ்மிதம் சுந்தரானனம்
கலபகோமளம் கத்ரமோஹனம்
கலபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!


-----------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the song in the net






வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.11.12

Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

 Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

1.11.2012 வியாழன்

பொதுவாக எல்லோருக்கும் முதல் ஆசை நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் என்பது. அதில் தவறில்லை. ஜோதிடரைப் பார்க்கும்போது அதைத்தான்
கேட்பார்கள்.

ஜோதிடரும் ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்ல வேண்டும். பல ஜோதிடர்களுக்கு அதற்கு நேரமில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தவனை அனுப்பி விட்டு அடுத்தவனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களால்தான் அவர்களுக்கு வருமானம். வரும்போது ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களைக் கொண்டு வருவான். சிலர் பத்து  அல்லது பன்னிரெண்டைக்கூட கொண்டு வருவார்கள். கொண்டு வந்ததில் தங்கள் மகனுக்கு எது பொருத்தமாக உள்ளது என்று கேட்பார்கள். ஜோதிடர் நன்றாக  அலசி அவற்றில் ஒன்று அல்லது இரண்டைத் தெரிவு செய்து கொடுப்பார். அத்துடன் வந்தவன் ஜோதிடர் கேட்கும் தொகையை (ரூ.300 ல் இருந்து ஆயிரம் வரை) கொடுத்துவிட்டுப் போவான். அத்துடன் அவர் தெரிவு செய்து கொடுத்த வரன் படியாவிட்டால் மீண்டும் வருவான். சிலர் மீண்டும், மீண்டும் வருவார்கள்.

காரணம் ஜாதகம் பொருந்தினாலும் பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டுமே? அல்லது பெண்ணிற்குப் பையனைப் பிடிக்க வேண்டுமே? இப்போது சம்மதம்

சொல்வதில் இருபாலருக்குமே சம உரிமை மற்றும் சம வாய்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் பல பெண்களும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

திருமண பந்தத்தில் பெற்றவர்கள் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் தோற்றத்திற்கு (appearance)  முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

பையன், பெண் நயன்தாரா அல்லது திரிஷா அல்லது அனுஷ்கா சர்மா மாதிரி இருக்க வேண்டும் என்பான். ஆனால் அவன் சூர்யா அல்லது ஆர்யா அல்லது
கார்த்திக் மாதிரியான தோற்றத்தில் இருக்க மாட்டான். சண்டைக் காட்சிகளில் வரும் அடியாட்கள் போல இருப்பான். அதுதான் கஷ்டம்!

ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நூறில் இருந்து முந்நூறு ஜாதகங்கள் வரை பொருத்தம் பார்த்து நொந்துபோன பெற்றோர்களை எல்லாம் நான்
அறிவேன்.

அந்த மாதிரிப் பெற்றேர்களால்தான் ஜோதிடரின் காட்டில் மழை பெய்யும்!

ஒரு நூறு ரூபாய் அல்லது ஐநூறு ரூபாயைக் கட்டணமாகக் கொடுத்து விட்டுத் தன் ஜாதகத்தை வைத்து விதம் விதமான கேள்விகளைக் கேட்பதோடு
(எழுதிக் கொண்டு வந்திருப்பான்) அவருடைய ஒரு நாள் பொழுதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பொழுதை வீணாக்குபவனை எல்லாம் ஜோதிடர்கள் விரும்புவதில்லை.

அப்படி எழுதிக் கொண்டு வந்தவனும் திருப்தியாகப் போக மாட்டான். அதுதான் கஷ்டம்.
-----------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன்.

ஆயுள் பாவத்தைப் பற்றி (எட்டாம் வீட்டைப் பற்றி) எட்டு அத்தியாயங்களைப் பாடமாக எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் பதிவில், பழைய பாடங்களில்
உள்ளன

இப்போது சுருக்கமாகச் சொல்ல விழைவது. நீண்ட ஆயுளைப் பற்றி!

ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருந்தால் மட்டும் போதாது. கடைசி மூச்சு வரை நல்ல ஆரோக்கியமும் இருக்க வேண்டும். அத்துடன் கையில் இருப்பும் இருக்க  வேண்டும். அவை இரண்டும் இல்லாம்ல நீண்ட ஆயுளுடன் இருப்பது. கதை இல்லாத படத்தில் கதாநாயகனாக நடிப்பதைப் போன்றதாகும் அதையும் மனதில்  வையுங்கள்!

1. ஆயுள் காரகன் சனியின் வலுவான பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மேல் விழ வேண்டும்.
2. லக்கினாதிபதி பதினொன்றில் வலுவாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு
3. சனி எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் சுப்க்கிரங்கள் ஒன்றுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும்.

இப்படி நீண்ட ஆயுளுக்கு மேலும் சில விதிகள் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++