22.6.12

Poetry கவிதைச் சோலை: உறவாக வந்தவள்!

 Poetry கவிதைச் சோலை: உறவாக வந்தவள்!

தான்பெற்ற செல்வனை ஏன்பெற்றோம் என்றுதான்
      தாயன்று மாண்டு போனாள்
தந்தையும் இப்பிள்ளை உருப்படா தென்றுதான்
      தணலிலே வெந்து போனான்
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்
      உயரத்தில் ஒளிந்து கொண்டான்
உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டுமே
      உறவாக வந்து நின்றாள்
வான்பெற்ற பேறுபோல் யான்பெற்ற தமிழிலே
      வாழ்கிறேன் வண்ண மயிலே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

22 comments:

  1. வான்பெற்ற பேறுபோல் நீர்பெற்ற தமிழிலே
    வடித்திட்டப் பாக்கள் தான் எத்தனை ஆயிரம்!
    தேன்சொட்டும் கவிதையால் திக்கெட்டும் தித்திக்க
    வான்முட்டும் புகழை வாழும்போதே பார்த்திட்ட
    தென்னாட்டு கவிக்குயிலே கம்பன்வீட்டு கணக்கனே
    எந்நாட்டில் வாழினும் இடர்பட்டு வீழினும்
    பொன்னான நின்பாடல் புதுத்தெம்பைத் தருதையா
    கண்ணனுக்குத் தாசனே கவிதாவிலாசனே!

    ReplyDelete
  2. /////Blogger ஜி ஆலாசியம் said...
    வான்பெற்ற பேறுபோல் நீர்பெற்ற தமிழிலே
    வடித்திட்டப் பாக்கள் தான் எத்தனை ஆயிரம்!
    தேன்சொட்டும் கவிதையால் திக்கெட்டும் தித்திக்க
    வான்முட்டும் புகழை வாழும்போதே பார்த்திட்ட
    தென்னாட்டு கவிக்குயிலே கம்பன்வீட்டு கணக்கனே
    எந்நாட்டில் வாழினும் இடர்பட்டு வீழினும்
    பொன்னான நின்பாடல் புதுத்தெம்பைத் தருதையா
    கண்ணனுக்குத் தாசனே கவிதாவிலாசனே!///////////

    முத்தையாவின் கவிதையால் - அவனுக்கு
    சொத்தாகக் கிடைத்த உள்ளங்கள்
    கொத்தாக இருந்தாலும் தேறும் சில கோடி
    வேலாயுதம் கொண்ட குமரனின் மாமனாம் - நந்த
    லாலாவின் பக்தனாய் பாடல்களைத் தந்தவனுக்கு
    ஆலாசியம் பாடுவார் தினமும் ஒரு தோடி!

    ReplyDelete
  3. பெற்றவளும் உற்றவளும் கைவிட்டாலும் - தான்
    கற்றவித்தை கைகொடுக்கும், கலையே காக்கும்;
    சுற்றமென சூழ்நரிகள் சூதில் வல்லார் - நமை
    அற்றகுளம் ஆக்காமல் தருமம் காக்கும்!

    ReplyDelete
  4. பெற்றவளும் உற்றவளும் கைவிட்டாலும் - தான்
    கற்றவித்தை கைகொடுக்கும், கலையே காக்கும்;
    சுற்றமென சூழ்நரிகள் சூதில் வல்லார் - நமை
    அற்றகுளம் ஆக்காமல் தருமம் காக்கும்!

    கண்ணதாசனின் வாழ்கை காட்டும் பாடம் நான்கு வரிகளில்!

    ReplyDelete
  5. பா திறம் கொண்ட கவிதாவிலாசன் மேல்
    காத்திரம் கொண்ட கவிதை பாடியநல்
    பாத்திரமான மாணவர்தம் நெஞ்சம்போல்
    வாத்தியார் வாழ்வார் ஆண்டுகள் பலகோடி!!!

    ReplyDelete
  6. ஆத்தி!!!! கண்ணதாசனும் பாடி, ஆலாசியமும் பாடி, வாத்தியாரும் பாடினதுக்கப்புறமும் நானும் பாட்டு எழுதவா? யாரு படிப்பாக?

    ReplyDelete
  7. //////Blogger Bhuvaneshwar said...
    பெற்றவளும் உற்றவளும் கைவிட்டாலும் - தான்
    கற்றவித்தை கைகொடுக்கும், கலையே காக்கும்;
    சுற்றமென சூழ்நரிகள் சூதில் வல்லார் - நமை
    அற்றகுளம் ஆக்காமல் தருமம் காக்கும்!/////

    கற்றபாடம் கைகொடுக்க கவிதைகள் படைத்திட்ட
    நற்றமிழன் கண்ணதாசன் போல்யாருண்டு
    சுற்றம் ஒருநூறு சூழ்ந்திருந்தாலும் - அவன்
    பெற்ற ரசிகர்க்கு எவர் ஈடுண்டு

    ReplyDelete
  8. //////Blogger Parvathy Ramachandran said...
    பா திறம் கொண்ட கவிதாவிலாசன் மேல்
    காத்திரம் கொண்ட கவிதை பாடியநல்
    பாத்திரமான மாணவர்தம் நெஞ்சம்போல்
    வாத்தியார் வாழ்வார் ஆண்டுகள் பலகோடி!!!//////

    நான்வேண்டேன் ஒருகோடி நல்லோர் உளம்தேடி
    என்எழுத்து போய்ச் சேரும்காலை - போய்ச்சேர்வேன்
    என்னப்பன் பழநிநாதன் பாதம் நாடி

    ReplyDelete
  9. /////Blogger தேமொழி said...
    ஆத்தி!!!! கண்ணதாசனும் பாடி, ஆலாசியமும் பாடி, வாத்தியாரும் பாடினதுக்கப்புறமும் நானும் பாட்டு எழுதவா? யாரு படிப்பாக?//////

    ஏஏஏன்ன்..............அவ்களுக்கு பத்து சனம் இருந்தா உங்களுக்கும் பத்துப் பேர் இருப்பாகள்ள...... ஆத்தீன்னு சொல்லாம எழுதுங்க ஆத்தா!

    ReplyDelete
  10. பிரச்சனைகளை
    தீர்க்க.. அல்லது தவிர்க்க

    என சொன்ன இரண்டும் அருமை
    உதடுகளை சுருக்கியும் விரித்தும்

    சொல்லும் பாடம் சூப்பர்...

    ReplyDelete
  11. வாத்தியார்:
    சூப்பர் சூப்பர்! :-)))))))))))

    ReplyDelete
  12. தேமொழி:
    இது தான் சான்றோர் அடக்கம் என்பதா? :-))))))
    அட நீங்க எழுதுங்க தாயி, நாங்க படிக்கறோம்!

    ReplyDelete
  13. வாத்தியார்:
    //நான்வேண்டேன் ஒருகோடி நல்லோர் உளம்தேடி
    என்எழுத்து போய்ச் சேரும்காலை - போய்ச்சேர்வேன்
    என்னப்பன் பழநிநாதன் பாதம் நாடி//

    ஏன் சார்? ஏன் இப்படி போய் சேருவதை பற்றி எல்லாம்? இப்படி சோகமா எல்லாம் கவிதை எழுத கூடாது சொல்லிபுட்டேன் ஆமாம் :-))))

    ReplyDelete
  14. //// தேமொழி said...
    ஆத்தி!!!! கண்ணதாசனும் பாடி, ஆலாசியமும் பாடி, வாத்தியாரும் பாடினதுக்கப்புறமும் நானும் பாட்டு எழுதவா? யாரு படிப்பாக?/////

    அடியாத்தி.............! அதென்ன அப்புடி சொல்லிப் புட்டீக! ஆச்சி!
    நல்லாத்தான் போங்க... இப்படிச் சொன்னா எப்புடி
    கண்ணதாசன் பேரச் சொன்னா
    கம்பங்காட்டு குருவியும் கூவிப்பாடுமே
    சோழநாட்டு தமிழ்ச் செல்வி -கவிபாட
    சொல்லியாத் தரனும்!

    இந்தாஞ்ச.... சோலைச்சி நீயுன் தான் சொல்லிப்புடு நா...
    சொல்றது சரித்தானே!
    அட, ஆமாங்கிறேன்...
    கண்ணதாசன் பாட்டக் கேட்டா எல்லோருக்குமே பாட்டு வரும்கிறேன்...
    நான் சொல்றத சொல்லிப் புட்டேன் அம்புட்டுத் தான்..:):)))

    ReplyDelete
  15. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    "தமிழ்"கற்க நல்ல குரு, என்னப்பன் பழநிநாதன் எங்கள் பாக்கியத்திற்கு கொடுத்துள்ள்ன்,
    நன்றி

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    பிரச்சனைகளை
    தீர்க்க.. அல்லது தவிர்க்க
    என சொன்ன இரண்டும் அருமை
    உதடுகளை சுருக்கியும் விரித்தும்
    சொல்லும் பாடம் சூப்பர்.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  17. /////Blogger Bhuvaneshwar said...
    வாத்தியார்:
    சூப்பர் சூப்பர்! :-)))))))))))/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger Bhuvaneshwar said...
    வாத்தியார்:
    //நான்வேண்டேன் ஒருகோடி நல்லோர் உளம்தேடி
    என்எழுத்து போய்ச் சேரும்காலை - போய்ச்சேர்வேன்
    என்னப்பன் பழநிநாதன் பாதம் நாடி//
    ஏன் சார்? ஏன் இப்படி போய் சேருவதை பற்றி எல்லாம்? இப்படி சோகமா எல்லாம் கவிதை எழுத கூடாது சொல்லிபுட்டேன் ஆமாம் :-))))/////

    அப்பனின் பாதம் சேர்வது
    எப்படி சோகம் ஆகும்?

    ReplyDelete
  19. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    "தமிழ்"கற்க நல்ல குரு, என்னப்பன் பழநிநாதன் எங்கள் பாக்கியத்திற்கு கொடுத்துள்ளான்,
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. குழல் ஊதும்
    கண்ணனுக்கு
    தாசனான கண்ணதாசனே
    உனக்கு ஒரு கோடி தாசனைய்யா .

    அந்த கோடியில் நானும் ஒருவன்
    இன்று
    உன் நினைவாய்...

    பூ மாலையிட்டு-பா
    மாலை தொட்டு
    பசும் பாலுமிட்டு உனக்கு

    நீ
    கோலமிட்ட கவி படித்து
    நானும் எழுத வந்தேன்
    அதைப்போல்
    பைத்தியம் பிடித்து .

    ReplyDelete
  21. நாளை கண்ணதாசன் பிறந்தநாள்.அதை நினைவூட்டி,கவிஞரின் பாடலை தந்த வாத்தியார் அய்யாவிற்கு நன்றிகள்.கவிஞரின் பாடலைமட்டுமல்ல,வாத்தியாரின் மற்றும் வகுப்பரை மாணவர்களின் கவிதைகளையும் ரசித்தேன்.அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  22. மரபுக் கவிதையிலும் கவிஞர் எவ்வளவு திறமைசாலி என்பதற்கு நல்ல உதாரணப் படுத்தல்.படிக்க கொடுத்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com