20.3.11

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே!

----------------------------------------------------------------------------------
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே!


இன்றைய வாரமலரை நமது வகுப்பறை மூத்த மாணவர் ஒருவரின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
நினைக்கத்தெரிந்த மனமே உன‌க்கு மறக்கத் தெரியாதா?' என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு.சில நிகழ்வுகளை மறக்கவே முடியவில்லை. அப்படித்தான் சில மனிதர்களையும்.மனித‌ர்களும் நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதால் மனிதரை நினைத்தால் நிகழ்வும்,நிகழ்வை நினைத்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதரும் மனத்திரையில் தோன்றி ஆட்டம் போடுகிறார்கள்

.நான் என்ன செய்யட்டும்? அதுதான் ஒரு வடிகாலாக வகுப்பறைiயில் வந்து என் மனச் சுமைகளை இறக்கி வைக்கிறேன். "மூத்த குடிமகன்" என்ற பட்டத்தையும், கட்டணச் சலுகையையும் இரயில்வேக்காரர்கள் கொடுத்திருக்கிறார்கள். 'பெரிசு'களுக்கே உரிய ஆதங்கங்கள் அதிகமாகி விட்டது.

என்னுடைய ஆக்கங்க‌ளில் பலவிதமான நிகழ்வுகளையும்,நான் சந்தித்த நிஜ மனிதர்களையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மறதி என்ற ஒன்றை மட்டும் இறைவன் வைக்கவில்லை என்றால் பலரும் பைத்தியம் பிடித்துத்தான் அலைவோம். 'தெரிந்து எடுக்கப்பட்ட மறதி' (SELECTIVE AMNESIA) என்று ஒன்று சொல்வார்கள்.அது என்னவென்றால், எல்லாம் நினைவு இருக்கும்;ஆனால் மறந்து விட்டாதாக வெளியில் நாடகம் ஆடுவது.

என்னுடைய பிரச்சனை என்னவென்றால் மறதி குறைவாகவும், நினைவில் நிற்பவை அதிகமாகவும் உள்ளது. .

இப்போதும் ஒரு மறக்க முடியாத நிகழ்வைச் சொல்கிறேன்.அதனுடன் சம்பந்தப்பட்டவர் யார் தெரியுமா?

மனுநீதிச்சோழர், திருக்குவளை தந்த திருச்செல்வர்,முத்தமிழ் வித்தகர், வாழும் வள்ளுவர்,தற்காலத் தொல்காப்பியர் (இப்படியெல்லாம் அவரை கூப்பிடக்கூடாது என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார்; அதற்காக நாம் கூப்பிடாமல் இருக்க முடியுமா?) மூத்த அரசியல் சாணக்கியர், மத்திய அரசை தன் கைப்பிடியில் வைத்திருப்பவர்(சூத்ரதாரி),தமிழ் இனக் காவலர், தமிழக முதல்வர் (இன்னும் என்னென்ன‌வோ உண்டு)
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

ஒரு படத்தில் போக்குவரத்துக் காவலர்களிடம் விவேக் பீலாவுடுவார் "எனக்கு ஐ ஜியைத் தெரியும்!"  காவலர்கள் உடனே சல்யூட் அடிப்பார்கள். "ஐ ஜிக்கு என்னைத் தெரியாது!"என்பார் விவேக். அவ்வளவுதான், தாங்கோ தாங்குதான்.

அது போலத்தான் நானும். எனக்கு டாக்டர் கலைஞரைத் தெரியும். அவ‌ருக்கு என்னைத் தெரியாது. அப்படி என்னைத் தெரியாமல் இருந்தும் என் வாழ்க்கைப் பாதையையே அறவே மாற்றி விட்டு விட்டார் கலைஞர்.அவரை நான் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது? சொல்கிறேன் அய்யா சொல்கிறேன். அதற்கு முன்னால் கொஞ்சம் அஸ்திவாரம் போட வேண்டியுள்ளது.

சேலம் அரசுக் கல்லூரியில் என்னுடன் பிஎஸ்ஸி (கெமிஸ்டிரி) படித்தவர் சி.பாண்டியன்.அவருடைய தந்தையார் சித்தையன் பெரியார் பக்தர். நான் கல்லூரி படித்த சமயம் தி மு க ஆட்சிக்கு வந்து விட்டது. எனவே நண்பர் பாண்டியனின் குடும்பத்தாருக்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் எல்லாம் நல்ல பழக்கம்.இளங்கலை முடித்தபின்னர் பாண்டியன் சென்னை வந்து அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் எம் எஸ் சி பயோகெமிஸ்டிரியில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டு, என்னைக் காண வந்தார். அப்போது என் மறைந்த மூத்த அண்ணன் வீட்டில் என் பெற்றோருடன் சென்னை கோட்டூர் அடையாரில் வசித்து வந்தேன். ஏ சி டெக் குக்கும் என் வீட்டிற்கும் கூப்பிடு தூரம்.  பட்டப் படிப்புக்குப் பின் என்ன செய்வது என்று குழ‌ப்பத்தில் நான் இருந்த போது பாண்டியன் வந்தார்.தான் ஏ சி டெக்கில் சேர்ந்து விட்டதைக் கூறினார்.
"உனக்கென்னப்பா!.உங்கள் ஆட்சி நடக்கிறது. எனக்கெல்லாம் எங்கே இடம் கிடைக்கும்?" என்று பெருமூச்சுடன் கூறினேன்.

"என்ன,முத்து! இப்படி சலித்துக் கொள்கிறாய்?!உனக்கும் சேர விருப்பமா? உடனே வா!சான்றிதழையெல்லாம் கொண்டுவா!உடனே பேராசிரியரைப் போய் பார்ப்போம்!" என்றார். 'சரி' என்று அவருடன் போனேன்.கல்லூரியில் அங்கும் இங்கும் அலைந்து, பலரையும் பார்த்து, தன் அப்பா பெயரைச் சொல்லி, இறுதியாக முடிவு எடுக்க வேண்டிய பேராசிரியரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஒன்றும் பேசாமல்,"நாளை பிற்பகலுக்குள் கட்டணத்தைக் கட்டி விடு.நாளை மறுநாள் வகுப்புத் துவங்குகிறது.பிற்பகல் ஒரு மணிக்குள் நீ தொகை செலுத்தாவிட்டால் வேறு மாண‌வனுக்கு 'சீட்' போய் விடும்.கட்டண ரசீது, உன்னுடைய அசல் சான்றிதழ் எல்லாவற்றையும் நாளை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.மகிழ்ச்சியுடன் வீடு வந்த்து சேர்ந்தேன்.

அப்பாவிடமும் அண்ணனிடமும் செய்தியைக் கூறினேன்."சரி நாளை காலை சீக்கிரம் கிளம்பி நந்தனத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் போய் உன் பட்டப் படிப்பைப் பதிவு செய்து விட்டு, பின்னர் கல்லூரியில் வந்து சான்றிதழ்களை ஒப்படைத்துவிடு" என்று அண்ணன் ஆலோசனை கூறினார்.

மறு நாள் காலை திட்டமிட்டபடி நந்தனம் வேலை வாய்ப்பு அலுவலகம் சென்றேன். விரைவில் பதிவு செய்ய முடிந்தது. செய்து விட்டு அந்த அலுவலக வாசலுக்கு வந்து நின்றேன்.அவ்வளவுதான் தெரியும். ஒரு பெருங் கூட்டத்தால் மோதித் தள்ளப்ப‌ட்டேன். நான் ஒரு புறமும் என் கையில் வைத்திருந்த சன்றிதழ் கோப்பு ஒரு புறமும் தூக்கி எறியப் பட்டோம்.என் கண்ணுக்கு முன்னால் என் சான்றிதழ்கள் கூட்டத்தாரின் கால்களில் பந்தாடப்பட்டு சிதறி சின்னாபின்னமாகிக் கண் காணாமல் போய் விட்டது.

ஏன் அந்தக் கூட்டம்? டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முதலாக அமெரிக்கா சென்று திரும்பிய வரை மீனம்பாக்கத்தில் வரவேற்று நகருக்குள் அழைத்துச் செல்வோரின் பெருங்கூட்டத்துக்குள் சுனாமி போல் இழுத்துச் செல்லப்ட்டு சீர் அழிந்தேன்.

வேதனையுடன் கல்லூரிக்குச் சென்று நடந்ததை சொல்லி அழுதேன்.

"வெரி சாரி!ஏற்கனவே நாங்க‌ள் பாடம் துவங்க வேண்டிய நாள் தள்ளிப் போய்விட்டது.உனக்காகக் காத்திருக்க முடியாது" என்று சொல்லி விட்டு வரிசையில் அடுத்துத் தயாராக இருந்த மாணவனைப் பணம் கட்டச் சொல்லி விட்டார். நண்பர் பாண்டியன் மிகவும் வருந்தினார். "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே" என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

எங்க‌ள் பாதை மாறிவிட்டது.நண்பர் பாண்டியன் பட்ட மேற்படிப்பு முடித்து, பி ஹெச் டி முடித்து டெல்லி ஜவஹர்லால் நேரு ப‌ல்கலையில் பேராசிரியராகச் சேர்ந்தார். 1978 வரை அவருடன் தொடர்பு இருந்தது.இப்போது எங்கே இருக்கிறாரோ? எங்காவ‌து அமெரிக்கப் பல்கலையில் இருக்கலாம். நான் ஒரு எழுத்தராக என் பணிக் காலம் முழுதும் உழன்றேன்.

எல்லாம் சரி! டாக்டர் கலைஞர் இதில் எப்படி சம்பந்தம் என்கிறீர்களா?

சம்பந்தம் உள்ளதோ இல்லையோ, நான் நண்பர் பாண்டியனைப் போலப் பேராசிரியராக முடியவில்லையே என்று நினைக்கும் போதெல்லாம்,டாக்டர் கலைஞர் என் நினைவில் வருவதைத் தவிர்க்க் முடியவில்லை. ஏன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


 கட்டுரையாளர் கல்லூரியில் படித்த காலத்தில் 
எடுக்கப்பெற்ற புகைப்படம்!
==================================================================
ஹி..ஹி.. வேறொன்றுமில்லை.  வாகனத் திருட்டைத் தடுப்பதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது.
சரி.. உயிரைப்  பூட்டி வைக்க ஏதேனும் வழியுண்டா?




வாழ்க வளமுடன்!

20 comments:

  1. மீண்டும் மீண்டும் சலிக்காமல் என் ஆக்கங்க‌ளுக்கு இடம் அளித்து வரும் அய்யாவுக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்னால்?அவரும் அவ‌ருடைய சந்ததியினரும் இறை அருள் பெற்றுப் பல்லாண்டு வாழ என் குலதெய்வங்க‌ளை வேண்டுகிறேன்.


    கணபதி நடராஜன் சார்! வணக்கம்!நானும் துணைவியாரும் 24,25, 26 மார்ச் 2011ல் நெல்லை வந்து தங்கி குலதெய்வம் கோவில்களுக்கு வள்ளியூர் பக்கம் போக உள்ளோம். தங்க‌ள் முகவரியை அருள் கூர்ந்து தெரிவித்தால், நேரில் சந்திக்க விருப்பம்.தெரிவிப்பீர்களா! மின் அஞ்சல் அனுப்பவும்.
    kmrk1949@gmail.com
    cell:90475 16699

    ReplyDelete
  2. இது தான் விதியா?

    ReplyDelete
  3. ////எல்லாம் சரி! டாக்டர் கலைஞர் இதில் எப்படி சம்பந்தம் என்கிறீர்களா?

    சம்பந்தம் உள்ளதோ இல்லையோ, நான் நண்பர் பாண்டியனைப் போலப் பேராசிரியராக முடியவில்லையே என்று நினைக்கும் போதெல்லாம்,டாக்டர் கலைஞர் என் நினைவில் வருவதைத் தவிர்க்க் முடியவில்லை. ஏன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்/////

    ஒரு சராசரி மனிதராக இதை பற்றிய சிந்தனையில் இருக்கும் போது நடந்த நிகழ்வுக்கு மூலக் காரணம் எது? யார்? என்று மனம் இப்படி ஒன்றின் மேல் தீராத வருத்தம்/கோபம்/ஆதங்கம் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு உழலும்....
    இன்னும் சற்று ஆழ்ந்து யோசிக்கப் போனால்; எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... என்ற கீதாச் சாரம் நினைவில் வந்து சாந்தப் படுத்தும்.. அப்படி தான் தாங்களும் பல சமயங்களில் சாந்தப் படுவீர்கள் என நம்புகிறேன்....

    எனது வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது; விரக்தியுற்றேன், அழுது தீர்த்தேன், இனி வாழ்வில் எல்லாம் போயிற்று என்று துக்கத்தின் உச்சத்திற்கே போனேன்.. அப்போதும்; ஆனால் ஒன்று ஆண்டவன் மீது கொண்ட தீராத நம்பிக்கையால்... "இறைவா! நான் கருவி மட்டுமே, என்னை இயக்குவது நீ..... உன்னையன்றி வேறு யார் அறிவார் ஆகவே என்னை என்ன செய்ய விரும்புகிறாயோ? அதை செய்!. நான் ஏற்றுக் கொள்கிறேன். உன்னை குறை கூற எனக்கு என்னத் தகுதி இருக்கிறது. ஆனால் முழுமையாக நம்புகிறேன் நீ செய்யும் எதுவும் என் நன்மைக்கே என்றே இருந்தேன்.., அப்படி அந்த நிகழ்வை அவன் நடத்தியதன் காரணம்... அதனால் தான் நான் நல்லதொரு வாய்ப்பு பெற்று சிங்கப்பூரில் பணியில் அமர்ந்தேன் என்பதை பின்னாளில் உணர்ந்தேன்.

    உலகப் பொருள்கள் யாதும் எதற்கும் காரணமாகாது..... என்ற எண்ணத்தை / உண்மையை நெஞ்சிலே செதுக்கிக் கொண்டால்... சோக நுழைவாயில் நுழைந்தாலும் அது நம்மை சொர்கத்துக்கு இழுத்துச் செல்லும் என்பதே உண்மை.... அப்படி நடந்திருந்தால் அப்படி இருந்திருப்பேன் என்பது நமது மனதின் அவா! மாத்திரமே...
    எல்லாத்தையும் தூக்கி சுமக்க.. அந்த பரமாத்த்மா தான் காத்துக் கொண்டு இருக்கிறானே!!!
    நன்றி கிருஷ்ணன் சார்...

    ReplyDelete
  4. குருவி இனமே செல் 'ஃபோன் டவர்' காரணமாக நகரங்களில் இருந்து வேறு எங்கோ இடம் பெயர்ந்து விட்டன‌. ஒரு நிஜக் குருவியை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் படம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

    ஒரு புதிர் போடுகிறேன். படத்தில் காண்பது ஆண் குருவியா, பெண் குருவியா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா வணக்கம்.

    திருவாளர் முத்துராமகிருஷ்ணன் சார்.

    தாங்கள் இழந்தது என்னவோ பெரிய இழப்பு தான், அதற்க்கு இழப்பிடு தர முடியுமா என்பது சந்தேகமே .

    ஏனெனில் எத்தனையோ ஆபாயகரமான வளைவான பாதைகளை தாண்டி சிகரத்தை
    நோக்கி செல்லும் கார் பயணத்தில் எதிர்பாராது ரோட்டின் குறுக்கே வந்து,
    பாதை பயணத்தையே மாற்றிய

    " காட்டு மிலா ", என்னும்
    " எருமை மாட்டு "," விலங்கினை ",

    பற்றி என்ன வென்று கூற முடியும் .

    தாங்களை போன்றே பாதிக்க பட்டவரில் எம்முடைய மொத்த குடும்பமும் உண்டு ஐயா.

    அதனில் ஒரு உயிர் பலியான சம்பவும் அடங்கும்.

    அண்ணன் தம்பியாக ,
    மைத்துனன் மாமனாக ,
    அரசியல் வாடையே தெரியாது பெயர் போன கௌரவம் maaka இருந்தவர்களிடம்,

    1996 உள்ளாட்சி என்னும் தேர்தலில் கூட்டணி கட்சிக்கு சீட்டு ஒதிக்கீடு தந்து, கடைசியில் ஒரு சீட்டு கூட தராமல் ஏமாற்றி விட்டு,

    பல லட்சங்களை வாரி இறைக்க வைத்து கடன்காரனாக ஆக்கிய மாபெரும் பெருமை, புண்ணியம் , பாக்கியம் தாங்கள் கூறும் ஆளுக்கே சேரும் ஐயா .

    எல்லாம் நமது தலை எழுத்து வேறு என்னத்த சொல்ல ?

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம் தங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்..!!!
    நல்ல வேளை அவர் வந்தார் இதோடு போனது வேறு ஒரு நபர் வந்தால் நீங்களே இருக்கமாட்டீர்கள்!!! .திரு அலாசியம் சரியாகசொன்னார்!!!!.எங்களுக்கு இது போன்ற ஒரு முது பெரும் சக மாணாக்கர் கிடைக்குமா!!!.

    ReplyDelete
  7. சிந்தனைக்கு இதோ பைபிள் வாக்கியங்கள்..

    When God leads you to cliff, trust Him fully and let go,
    only one of two things will happen, either
    He will CATCH you when you fall, or
    TEACH you how to fly!

    ReplyDelete
  8. கள்ள மனம் இல்லாத
    'நெல்லை'யில் பூத்த முல்லையே..


    அலுப்பின்றி அவ்வப்போது புத்
    ஆக்கங்களை படைப்பதற்கு நன்றி..


    'வலி வந்து தானே
    வழி பிறக்கும்' என்ற


    அனுபவமே அடிக்கற்கள் என்றறிய
    அன்புடன் பதிவிடும் வாத்திக்கு நன்றி

    தொடரும் குலதெய்வ வழிபாடு..


    நீண்ட ஆயுளுடன்
    நிலைத்த பெருமையையும்


    நீடித்த ஆரோக்கியத்தையும்
    நிகரில்லா நட்பினையும்


    நிலையாக என்றும்
    நீவிர் பெற்றிட


    திருமுன் வேண்டி நிற்கிறோம்
    திருவருள் கூட்டிவிப்பதாக..

    ReplyDelete
  9. அன்புடன் வணக்கம் திரு kmrk....அவர்கள் .
    அந்த குருவி பெண் ..தினமும் அடியேன் அரிசி போடுகிறேன் !!! இந்த குருவி இனம் அழியக்கூடாது என்பதற்காக !! ஆண் குருவிக்கு கழுத்தில் கருப்பாக அடையாளம் இருக்கும்... அழகா!!! பொதுவாக இறைவன் படைப்பில் பிராணிகள் அனைத்தும் ஆண் இனம் அழகாக இருக்கும் !!! மயில். சிங்கம்,ரிஷபம் ,இன்னும் ....

    ReplyDelete
  10. எல்லோருக்கும் வணக்கம் '' அட அட அடா திரு அய்யர் சார் பின்னிட்டீங்க !!! நெல்லைல் பூத்த முல்லை !!!"""வலைத்தளம் முழுக்க மணம் பரப்புகிறது."""!!! சபாஷ் !!! மட்டற்ற மகிழ்ச்சி !!!!

    ReplyDelete
  11. விதியேதான் ரெத்தினவேல்!வேறு என்னத்தைச் சொல்வேன்?

    ReplyDelete
  12. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... என்ற கீதாச் சாரம் நினைவில் வந்து சாந்தப் படுத்தும்.. அப்படி தான் தாங்களும் பல சமயங்களில் சாந்தப் படுவீர்கள் என நம்புகிறேன்...."///

    ச‌ராச‌ரி ம‌னித‌னாக‌ இருக்கும்போது அப்ப‌டி ஆக‌வில்லையே, இப்ப‌டி ந‌ட‌க்க‌வில்லையே என்று சிந்திப்ப‌து உண்டு என்றாலும், த‌ஞ்சையில் ஆணி அடித்தது போல‌ அம‌ர்ந்து இருந்து ப‌ல‌ ந‌ற்செய‌ல்க‌ளில் ஈடுப‌ட‌ முடிந்த‌து.அந்த ஆக்கங்களை நினைக்கும் போது, கிடைக்காமல் போன பல‌ இழப்புக்கள் சிறு துரும்பாகத்தான் தெரியும்.நான் செய்ய வேண்டிய பொதுப் பணிகள் பல இருக்க,என் தனிப்பட்ட சுயநல வளர்ச்சியை எப்படி ஆண்டவன் அனுமதிப்பார்? பின்னூட்டத்திற்கு நன்றி Haalaasyamji!

    ReplyDelete
  13. //எல்லாம் நமது தலை எழுத்து வேறு என்னத்த சொல்ல?///

    அமாம், க‌ண்ணன் ஜி!அதை‌த்தான் விதி என்கிறார்க‌ள்? க‌பால‌த்தில் த‌லையெழுத்து இருக்கிற‌து. நான் ப‌ல‌ இர‌ண்டாம் நாள் மயான பால் தெளித்தல் நிகழ்ச்சியில் கபாலத்தைப் பார்த்து இருக்கிறேன். ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அது பெருவிர‌ல் போல‌ ஒரு தனி ந‌ப‌ர் அடையாள‌மாக‌ குற்றப் புல‌ன் ஆய்வில் எடுத்துக் கொள்கிறார்க‌ள்.

    ReplyDelete
  14. தங்கள் மின்னஞ்சல் பார்த்துவிட்டேன். ஏற்கனவே 25 வெள்ளி கோமதி அம்மன் தரிசனம் திட்டத்தில் உண்டு.சந்திக்கும் முன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் Ganapthi ,Sir!

    ReplyDelete
  15. ஒன்றுக்கு இரெண்டாகப் பின்னூட்டம் இட்டு ஊக்கம் அளித்த ஐயர் அவர்களே
    நீங்கள் வாழ்க வளமுடன். விரைவில் ஒரு ஆக்கத்தைத் தாருங்கள். தங்களின் கோணங்களை/
    பரிமாணங்களை அறிய ஆவலுடன்
    காத்திருகிறேன்.என் ஆக்கம் எல்லாம் சொந்தக்கதை/ சோகக் கதைகள் தான். ஆனால் தாங்கள் அளிக்கக் கூடியதோ, சைவ சித்தாந்தம்,
    பைபிள்,ஓஷோ, பாரதி.....
    இன்னும்பல.

    ReplyDelete
  16. ஆமாம் கணபதி சார்! ஆண் குருவிக்குக் கழுத்தில் சிவ பெருமானைப் போல‌
    கருப்புப் பொட்டு உண்டு.கழுத்தைத் திருப்பும் போதெல்லாம் மினுமினுக்கும்.

    படத்தில் உள்ள குருவியைப் பாருங்கள். கழுத்தில் கருப்பு உள்ளது.எனவே இது ஆண் குருவிதான் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  17. நல்ல ஆக்கம் ஐயா ,

    இதை படித்தபோது அனுபவஜோதிடம்
    வலைப்பூ ஆசிரியர் முருகேசன் அவர்கள்
    இன்று எழுதியிருக்கும் திமுக தேர்தல்
    அறிக்கை என்னும் கட்டுரையை எல்லோரும் படிங்க தமாசாக இருக்கும்.. மனசு ரிலாக்சாகும் ,,

    முக்கியமா kmrk சாரும்,
    தோழர் கண்ணனும் படிக்கவேண்டிய கட்டுரை

    http://anubavajothidam.com/vaakkurthi/#comment-2535

    ReplyDelete
  18. ஆக்கம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  19. எட‌ப்பாடியாரே!
    நீங்கள் சொல்லியுள்ள அனுபவ ஜோதிடம் வலை தளத்தைப் பார்த்தேன்.சரி. நகைச்சுவை என்ற பெயரில் ஏதேதோ சொல்கிறார். தேவையே இல்லாமல் பிராமண எதிர்ப்பைக் கையில் எடுக்கிறார். இன்றைய நிலையில் முன்பு அரசியலூக்காக்ச் சொல்லப்பட்ட பிராமண எதிர்ப்புக் காரணங்கள் எதுவும் இல்லாத ஒரு தலைமுறை, பிராமணர்களில் வளர்ந்து வந்துள்ளது. கடந்த 44 ஆண்டுகளாக ஏன் அதற்கும் முன்பிருந்தே அரசாஙக‌த்தின் எந்த உதவியும் இல்லாமல் தன் காலில் நின்று 100 சதவிகித எழுத்தறிவும், தன் பிழைப்புக்கு
    உண்டான வழியைத் தானே பார்த்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறது பிராமண சமூகம்.பிராமணத் தனி அடையாளங்களாக எதுவும் இல்லாத சூழல்தான் பிராமண‌ர் வீடுகளில் இன்று நிலவுகிறது.அப்படியிருக்கும் போது ஏன் தான் இந்த வெறுப்புணர்வோ?

    ReplyDelete
  20. kmr Krishnan அவர்களே,
    நம்முது அண்ணாவழி. பிராமணீயத்தை தான் எதிர்க்கிறோம்.

    பிராமணர்களை அல்ல. பிராமணீயம் என்பது ஒரு பிராமண சாதிக்கு மட்டும் உரியதல்ல.

    ஏட்டை எஸ்.ஐ டார்ச்சர் பண்ணா ஏட்டு கான்ஸ்டபிளை டார்ச்சர் பண்ணுவார். கான்ஸ்டபிள் பொதுசனத்தை டார்ச்சர் பண்ணுவார்.

    அதுமாதிரி பிராமணீயத்தால் பாதிக்கப்பட்டவர்களே தமக்கு கீழே உள்ளதாக தாம் கருதும் மக்களின் பால் பிராமணீயத்தை எக்சிபிட் செய்வது தான் சோகம்.

    கடந்த கால தவறுகளுக்கு வருந்துகிறோம்னு பிராமணாளை மொதல்ல அறிவிக்க சொல்லிருங்க.

    நாங்கள் சுயம்புகள் கடந்த காலத்தின் தொடர்ச்சி அல்ல. அதன் எச்சம் எங்களில் இல்லை என்று தெரிவிக்க சொல்லிருங்க.

    நானும் பிராமினும் பாய் பாய் ( ஐ மீன் ப்ரதர்ஸ்)

    அவிக அந்த தொடர்ச்சியை விடமாட்டேங்கறாய்ங்களே அதானே நம்ம எதிர்ப்புக்கு காரணம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com