13.2.11

பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?

இன்றைய வாரமலரை நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக் கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?
அப்பாவுக்கு சன்யாசிகளின் தொடர்பு அதிகம். 50 வயது ஆன பின்னர் திருக்கோயிலூர் ஞானாநந்த சுவாமிகள், வடகுமரை அப்பண்ண
சுவாமிகள், திருவண்ணாமலை யோகி ராம்சூரத் குமார் சுவாமிகள், புதுக்கோட்டை சாந்தாநந்த சுவாமிகள் ஆகியோரிடம் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி இவர்களைச் சந்திக்கச் செல்வார். அந்த சுவாமிகள் அனைவருக்கும் அப்பாவைப் பார்த்தவுடன் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவுக்கு நெருக்கம்.அவர்கள் ஆசிரமத் தேவைகளுக்கும், விழாக்கால ஏற்பாடுகளிலும் அப்பாவை ஈடுபடுத்துவார்கள். அப்பாவும் உற்சாகமாக ஈடுபடுவார்.

ஒரு முறை அப்பா ஞானாநந்த சுவாமிகளை சந்தித்தபோது,"அவ்விடத்தில் திருவலத்து சுவாமிகளை இன்னும் தரிசிக்கவில்லை இல்லையா?"என்று கேட்டார்.

"ஆமாம் சுவாமி!"

"அப்போ ஒருதரம் அந்த சுவாமிகளைப் போய் பார்த்து ஆசி பெற்று வரவும்."

"உத்தரவு சுவாமி!"

ஞானான‌ந்தரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு திருவலம் என்ற ஊருக்குச் சென்றார் அப்பா.  திருவலம்  வேலூருக்கு மிக அருகில் உள்ள சிற்றூர்.அங்குள்ள‌ அருள்மிகு வலந்தீஸ்வர சுவாமியைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளார் ஞான சம்பந்தர்.

இத் திருத்தலத்தில்தான் விநாயகரும், ஆறுமுகரும் மாங்கனிக்காக உலகை வலம் வரும் போட்டியில் ஈடுபட்டனராம். விநாயகர் அம்மை அப்பனை வலம் வந்து கனியைப்பெற்றுக்கொண்டதும்,ஆறுமுகர் உலகைச் சுற்றி வலம் வந்து, பின்னர் விநாயகரின் வெற்றியை அறிந்து கோபித்து, பழனிமலைஏறி ஆண்டிக்கோலம் கொண்ட தலவரலாறு கொண்ட தலம் திருவலம். இறைவனைத் தெய்வீகப் பிள்ளைகள் வலம் வந்ததால் ஊருக்கே திருவலம் என்று பெயர் வந்தது. அருள்மிகு வலந்தீஸ்வ‌ரசுவாமி கோவிலின் வாயிலின் அருகில் ஓர் திண்ணயையே தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் மெளன சுவாமிகள்.ஒரு காலத்தில் காஷ்ட மெளனமாக சுவாமி இருந்துள்ளார்.அப்போது மக்கள் அவரை மெளனி என்று அழைத்துள்ளனர்.

அவர் பேசத்துவங்கியும் கூட அவருக்கு மெளனசுவாமி என்ற பெயரே நிலைத்துவிட்டது. சுவாமிகளுடைய வகுப்பு தேர் கட்டும் ஆசாரிகளின்
வகுப்பு என்பர்.விஸ்வ கர்ம  வகுப்பில்  பொற்கொல்லர்கள், மரத்தச்சர்கள், இரும்புக் கொல்லர்கள்,சிற்பி அல்லது ஸ்தபதி ஆகியோர் அடங்குவர். தேர் கட்டும் ஆகமவிதிகளில் நல்ல‌ பயிற்சியும் பட்டறிவும் உடையவர் சுவாமிகள். திருப்பதிபோன்ற பெரிய‌ கோவில்களுக்குக்கூட சுவாமிகள் தேர் அமைத்தார் என்று வாய் மொழிச்செய்தி உண்டு.தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம் என்பதும்,
இப்பிறப்பிலேயே இறைவனிடம் கலந்து உறவாடும் ஆனந்த நிலையில் மூழ்கித்திளைக்கலாம் என்பதற்கும் மெளன சுவாமிகள் நல்ல எடுத்துக்காட்டு.

நவீன படிப்பறிவு இல்லாதவர். வேத வேதாந்தங்கள் எதுவும் பாடசாலையில் கற்காதவர்.ஆயினும் இறை அனுபூதி கைவரப்பெற்ற மஹான்.அந்த ஊர் மக்களை குடிப்பழக்கம், புலால் இரண்டையும் தவிர்க்கச் சொல்லி
எல்லாக்குடும்பங்களிடமும் சத்தியம் பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றவர். சத்தியத்தை யாராவது மீறியது தெரிந்தால்  கோவில் கோபுரத்தில் ஏறிக் குதித்து விடுவதாக அச்சம் கொடுத்துக் கூடப் பலரையும் திருத்திய வரலாறு சொல்வார்கள்.

முன்னர் கூறியது போல இந்த சுவாமிகளைப் தரிசிக்க அப்பாவும் அம்மாவும் சென்றார்கள்.ஒரு சாக்குத் துணியை மட்டும் கெளபீனமாக அணிந்து கொண்டு ஆனந்தமாக ஒரு குட்டித் திண்ணையில் அமர்ந்து இருந்துள்ளார் சுவாமிகள். மலஜலத்திற்குக்கூட அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லாதவர்.அவ‌ர் மலம் துடைத்துப் போட்ட கற்கள் அங்கேயே காணக்கிடக்கின்ற‌ன. முதல் பார்வைக் குப் பைத்தியத்தைப்போன்ற தோற்றம்.

அப்பாவைப் பார்த்து "யாரு?"என்று கேட்டுள்ளார்.அப்பா ஊர் பேரெல்லாம் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார்.பின்னர்,"திருக்கோயிலூர் சுவாமிகள் அனுப்பினார்" என்றவுடன் "ஆமா!அந்த சாமி கல்லையும் மண்ணையும் கட்டிக்கிட்டு அழுவுது. அதும் வேலையிலே நீ போய் குறுக்காட்டினா உன்ன 'இங்க‌ போ அங்க‌ போ'ன்னு விரட்டி உட்டுடும்.உனக்கு அந்த சாமிதான் சரி. அது விவரமா படிச்சசாமி. நாம சும்மா படிக்காத ஆளு.உன்னப் போன்ற‌ அய்யமாருக்கெல்லாம் உபதேசமெல்லாம் பண்ணத் தெரியாது இதுக்கு"

என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பா திகைத்து நிற்க, சுவாமிகள் மீண்டும் புதிராகப் பேசியுள்ளர்."ஒரு பொண்ணை மொறையா கலயாணம் கட்டி குடித்தனம் போட்டவன் பேரு என்ன?"

அப்பா:"கிரஹஸ்தன்".

சுவாமி: "அதுசரி! பல பொம்மனாட்டிக் கூட‌ சுத்தறவன் யாரய்யா? அவன் பேரு என்ன?" அப்பா மெளனம் சாதித்துள்ளார்.சுவாமிகள் "சும்மாச் சொல்லய்யா!" என்று கேட்டுள்ளார்.

அப்பா:"நான் அப்படிப்ப‌ட்ட எந்தத் தப்பும் செய்யவில்லையே" என்று கூறித் திகைத்துள்ளார்.

சுவாமிகள்: "அட!போமய்யா! படிச்ச அய்யரு! இதுகூடப் புரியலயா? ஒரு பொண்ணோடு வாழற மாதிரி ஒரு குருவோடதான் இருக்கணும். என்ன சரியா?"

இப்படி சம்பாஷணை நடந்து கொண்டு இருந்த போது, ஒரு பிரமுகர் மகிழ்வுந்தில் வந்து இற‌ங்குகிறார்.

பெரிய கூடையில் பழத்தைக் காரோட்டி எடுத்து வந்து சுவாமிகள் காலடியில் வைக்கிறார். பிரமுகரைப் பார்த்து, "என்னாடா?" என்கிறார் சுவாமிகள்.

"நீ சொன்ன மாதிரியே தேர்தல்ல செயிச்சுப்புட்டேன் சாமி. அதான் உனக்கு சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்"

"எங்கிட்ட ஏன்டா சொல்ற? உள்ளாற இருக்குப் பாரு சாமி, அதுகிட்டப் போய் சொல்லிட்டுப்போ"

பிரமுகர்:"அதான் பேசற சாமி நீ இருக்கச்சொல்ல பேசாத கல்லு சாமி கிட்ட‌ நான் ஏன் போவணும்?"

சுவாமிகள்:"என்னடா சொன்ன!?அது பேசாத கல்லு சாமியா?"

பிரமுகர்:"ஆமா!கல்லு சாமிதானே!?"

சுவாமிகளுடைய முகம் ரெளத்ரமாக மாறிவிட்டது.பிரமுகரைப் பார்த்து அங்கே கிடக்கும் கற்களைக் காட்டி கேட்கிறார்:"இந்தக் கல்லெல்லாம் என்னடா?"

"நீ தொடச்சிப்போட்ட கல்லு!"

"கோயிலுக்குள்ள இருக்கிற கல்லு என்னாடா?"

"நீ சாமின்னு சொல்ற பேசாத கல்லு"

"அதுசரி! இந்தக் கல்லெல்லாம் நீயடா!உள்ளாற இருக்கற கல்லு நானடா!"

பிரமுகரின் பழக்கூடையைக் காலால் எட்டித் தள்ளிவிட்டு சுவாமிகள் மெள‌னமாக முகம் திருப்பிக் கொண்டு படுத்துவிட்டாராம். நீண்ட நேரம் நின்று பார்த்துவிட்டு அப்பாவும் அம்மாவும் ஊர் திரும்பிவிட்டார்கள்.

"எந்தரோ மஹானு பாவலு அந்தரிக்கி வந்தனுமுலு" (சத்குரு தியாகராசரின் கீர்த்தனை)

பொருள்:"எத்தனை மஹான்களோ அத்தனை பேருக்கும் வணக்கம்"

ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2
"கல்யாண சமையல் சாதம்"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========================
மாயாபஜார் என்று ஒரு படம். அதில் ரெங்க‌ராவ் நடித்து "ஹஹ்ஹஹ்ஹாஆ" என்று பாடிய"கல்யாணசமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்..."என்றபாட்டு மிகவும் பிரபலம்.

வாத்தியார் அடிக்கடி நம்மையெல்லாம் சமர்த்தாகப் பாடஙகளை மீள்பார்வை செய்யச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியாகச் செட்டிநாட்டுக்குப் போய் க‌ல்யாண சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு கமுக்கமாய்ப் பாடஙகளைத் தொடர்வார்.என்னைப் போன்ற சாப்பாட்டு ரசிகர்கள்(சாப்பாட்டு ராமன்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் கெள‌ரவம் பார்க்கிறீர்களோ என்பார் டோக்கியோ)  கேட்டால் மட்டுமே மெனுவைச் சொல்வார்.

"பிராமணாஹா போஜனப் ப்ரியாஹா"என்பது வடமொழிச் சொல்லடை.பொருள் என்னவென்றால்,"பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள்" என்பதாகும்.இந்த சொல்லடையை மஹாகவி பாரதியார் விமர்சித்தார். சாதி வித்தியாசம் பார்க்காத மஹாகவி இந்த ஒரு விஷயத்தில் தான் ஒரு பிராமணர் என்ற உணர்வைக் கொண்டாரோ என்று என் குயுக்தி மூளைக்குத் தோன்றும்.

அந்த சொல்லடையை மாற்றி"சர்வேஜனாஹா போஜனப்பிரியாஹா" என்பதே சரி என்று எழுதினார்.அதாவது எல்லா மக்களும் சாப்பாட்டுப் பிரியர்களே என்பது அவர் கருத்து.இருந்தாலும் அறுசுவை உணவு விதவிதமாக செய்து உண்பதில் அந்தணர்கள் முக்கியமானவர்களே.எல்லா ஊர்களிலும் ஒரு "மாமி மெஸ்" இருக்கும். மதுரை முனியாண்டிவிலாஸ் என்றபெயர் பயன் படுத்த முனியாண்டி கோவிலில் தொகை செலுத்தி அச்சாரம் வாங்க வேண்டும்.மாமி மெஸ் என்றபெயருக்குப் 'பேடன்ட்' எதுவும் இல்லை.

ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமனியம்சாமி போஃப‌ர்ஸ்,ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் போன்ற‌ மெகா ஊழல் பற்றி விரிவாக‌ பேசும் அறிவு பெற்றவர்.அவ‌ரே நேரடியாக மதுரையில் "முருகன் இட்லி" கடைக்காகப் போராட்டம் நடத்தினார் என்றால் சாப்பாடு எவ்வளவு முக்கியம் பாருங்கள்.

வாத்தியார் செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளைச் சிலாகிப்பார்.ஒரு முறை தன் தந்தையார் மேற்பார்வை பார்த்த ஒரு திருமண விருந்தில் பொங்க‌லில் டின்டின்னாக நெய்யை ஊற்றிய அந்தண தலைமைச் சமையல் கலைஞரைப் பற்றியும் சிலாகித்தார்.பீம பாகம் என்பார்கள்.நள பாகம் என்பார்கள்.பீம பாகம் என்றால் 'மெகா' சமையல்!நளபாகம் என்றால் வீட்டுச்சமையல் அளவு.

நாகைந‌ல்லூர் என்று நாமக்கல் அருகில் ஓர் ஊர். அந்த ஊர் சமையல் கலைஞர்கள் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள். சென்னையில் அறுசுவை நடராஜன் எவ்வளவு புகழ் பெற்றார்! சரவண பவன் சமீப காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் தஞ்சையைக் காலி செய்து விட்டு கிள‌ம்பி வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து விட்டேன்.அதனால் வீட்டில் தேவையற்றவைகளைப் பார்த்துப் பார்த்து ஒழித்து வருகிறோம்.அப்போது கிழிபட இருந்த தாள்களில் என் இரண்டாவது பெண்ணின் திருமண சமையல் பட்டியல் கிடைத்தது.அந்தச் சமயம் பார்த்து வகுப்பறையில் சாப்பாட்டைப் பற்றி சம்பாஷ‌ணை நடந்ததா, அதனால் தூண்டப்பட்டு இந்தப் பட்டியலை வெளியிட நினைத்தேன்.

இதனால் யாருக்கு என்ன பயன் என்று ஜப்பானில் இருந்து குரல் கேட்கிறது. முதல் பயன் கண்ணன் + ராதை திருமணம் சித்திரைமாதம் நடக்க உள்ளது. அதற்கு விருந்துக்குப் பயன் படும்.உடனடியாக வீட்டில் திருமணம் இல்லாதவர்கள் இந்தப் பட்டியலை சேமித்துக் கொண்டால் பின்னர் நடக்க உள்ள நிகழ்வுகளுக்கு மெனு போடத் திகைக்க வேண்டாம்.

எங்கள் இல்லத்து 8 (அஷ்ட லக்ஷ்மிகள்) பெண்களுக்குத் திருமணம் செய்த அனுபவஸ்தன் நான் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

அந்தணர் இல்லத் திருமணங்கள் முன்பெல்லாம் 10 நாட்கள் நடைபெறும். கடந்த 50 ஆண்டுகளாக 3 நட்களாகச் சுருங்கியது.இப்போது சென்னை போன்ற நகரங்களில் 2 நாட்களாகச் சுருங்கி விட்டது.திருமணச்செலவு முழுவதும் பெண்வீட்டார் மட்டுமே செய்ய வேண்டும்.மாப்பிள்ளை வீட்டார் வந்து போகும் செலவு கூடப் பெண் வீட்டார் கொடுக்க வேண்டும்.வந்து நன்றாக ஓய்வெடுத்து, உறவினர்களுடன் சம்பாஷித்து உறவாடி, அலங்காரம் செய்து கொண்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு, விருந்து உண்டு மகிழலாம் மாப்பிள்ளை வீட்டார். கவலையும், பதட்டமும் பெண்ணைப்  ற்றவர்களுக்கே!அருமையான உணவு வகைகள் சுவையாக இல்லாமல் தோன்றுவது பெண்ணின் தாய் தந்தைக்கு மட்டுமே.நன்றாக சுவைத்துவிட்டு அப்படியும் குறை சொல்வது மாப்பிள்ளயின் அத்தை, மாமா ஆகியோர்களே!

இனி பட்டியல்:

 12 பிப்ரவரி 2003 இரவு 8 மணி 30 நபர்
‍‍‍‍‍‍‍‍====================================
உப்புமா, சட்னி, பால்

13 பிப்'03 காலை 5.30 100 நபர்
==============================
பெட் காப்பி

காலை 8 மணி 150 நபர்
=========================
கேசரி, இட்லி, வெண்பொங்கல், வடை,கொஸ்து, சட்னி, காப்பி/டீ

மதியம் 12 மணி 150 பேர்
========================
மைசூர் பாகு,பால் பாயசம்,தயிர் பச்சடி,வாழைக்காய் கறி,அவரைக்காய்கறி, செள‌செள, கேரட் கூட்டு, பருப்பு, நெய்,அப்பள‌ம்,பூசணிக்காய் சாம்பார்,தக்காளிரசம், தயிர்

மாலை 4மணி டிபன் 250 நபர்
============================
அசோகா,ரவாதோசை,தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை,போண்டா,சாம்பார்,சட்னி,காப்பி/டீ

இரவு 7=30 மணி 400 நபர்
==========================
ஜாங்கிரி, சேமியா பால்பாயசம்,தேங்காய்ப் போளி, டாங்கர், தயிர்பச்சடி,கோசுமரி,கோஸ்கறி,கதம்பக்கூட்டு,உருளை சிப்ஸ்,கத்தரிக்காய் ரோஸ்ட்,ஆம வடை,அப்பளம்,ஊறுகாய்,பருப்பு நெய்,முருங்கைக்காய், சாம்பார், தக்காளி ரசம், கெட்டிமோர்,ஐஸ்க்ரீம்

14 பிப்ரவரி 2003
==================
காலை 5.30 மணி: பெட் காப்பி 150 நபர்

காலை டிபன் 7=30 மணி 500 நபர்கள்
=====================================
கோதுமைஹல்வா,இட்லி,ரவாகிச்சடி,வடை, பூரிமசால்,ஊத்தப்பம், சட்னி, சாம்பார், காப்பி/டீ/போர்ன்விட்டா/ விவா

முஹூர்த்த நேரம்
===================
கிரேப் ஜூஸ் 750 நபர்.

மதிய சாப்பாடு காலை10=30 முதல் 600 நபர்
==================================
லட்டு,கடலைப்பருப்பு வெல்லப்பாயசம்,தயிர் பச்சடி,பழப்பச்சடி,வாழைக்காய் பொடிமாஸ்,பீன்ஸ்,  உசிலி, அவியல், சேனை சிப்ஸ், தயிர்வடை, அப்பளம் ஊறுகாய்,சாம்பார், மோர்க்குழம்பு,அன்னாசி ரசம், கெட்டி மோர்

மாலை 4 மணி டிபன் 150 நபர்
============================
பாதுஷா‍ மிக்சர்‍ காப்பி/டீ

இரவு சாப்பாடு 7=30 மணி முதல் 250 நபர்
==========================================
அக்காரவடிசல்,மில்க் கேக்,பாதாங்கீர்,பிசி பேளா ஹூளி,தேங்காய் சாதம்,விஜிடபுள் பிரியாணி,அல்லது கறிவேப்பிலை சாதம்,பகாளாபாத், உருளைக் காரக்கறி,நேந்திரங்காய் சிப்ஸ்,பீட்ரூட் ஜாம்,ஊறுகாய், வெள்ளைசாதம்‍, ரசம்.

15 பிப்ரவரி 2003
=====================
காலை 6=30 மணி பெட் காப்பி 100 நபர்

காலை 10 மணி சாப்பாடு(காலை டிபன் கிடையாது)
=======================
குலோப்ஜாம்மூன்,பாயசம்,தயிர்பச்சடி,கதம்பக்கறி, கதம்பக்கூட்டு, பருப்பு, நெய்,அப்பளம்,ஊறுகாய்,கதம்ப சாம்பார்,வற்றல் குழம்பு,ரசம்,தயிர்.

கட்டுசாதக்கூடை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍==================
புளியோதரை, தயிர்சாதம், இட்லி, மிளகாய்ப்பொடி+ நல்லெண்ணை.
====================================================================
இந்த மெனு போதுமா!? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------------

 கட்டுரையாளர் தன் துணைவியாருடன் இருக்கும் காட்சி! பழைய படம்!

கட்டுரையாளர் அனுப்பியிருந்த
திருவலம் சுவாமிஜியின் படத்தின் கோப்பு சிதிலமாகி இருந்ததால் வலையில் ஏற்றமுடியவில்லை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

57 comments:

  1. வயிற்றூப்ப்சிக்கும் உண்வு, ஆன்மிகபசிக்கும் உணவு.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அய்யா!இரண்டு வாரம் போடுவீர்கள் என்று நினைத்தேன்.ஒரே
    வாரத்தில் இர‌ண்டு கட்டுரைகளையும் வெளியிட்டு என்னை திக்கு முக்கு அடையச் செய்து விட்டீர்கள்.வகுப்பறை நண்பர்கள் ஓர வஞ்சனை
    என்று உங்களைச் சொல்லி விடப் போகிறார்கள், ஐயா!

    வெளியிட்டுள்ள புகைப்படம் எங்கள் சீமந்த நிகழ்வில் எடுக்கப்பட்டது. டிஸம்பர் 1975!

    பதிவில் சொல்லியுள்ளபடி இட/ஊர் மாற்றம் செய்கிறேன்.அதனால் 15 பிப்ரவரி அன்று தொலை பேசி, இணைய இணைப்புக்களைத் துண்டிக்க மனுச்செய்யப் போகிறேன். செல்லும் ஊரில் இணைப்புக் கிடைத்து நன்றாகப் பழக்கத்திற்கு வந்த பின்னர்தான் மீண்டும் வகுப்பறையில் என்னைக் காணலாம்.(உஸ்..அப்பாடி..நல்ல செய்திதான்.. என்று ஜப்பான், சிங்க‌ப்பூர்,துபாய், டெல்லி ஆகிய இடங்களில் பெருமூச்சு விடும் சத்தம் கேட்கிறது..!)

    மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுவது உங்க‌ள்
    வீட்டுப்பிள்ளை(வில்லங்கம் என்பதுதான் சரி என்பார் டோக்கியோ)kmrk!!!!!!!!!!KMRK!!!!!

    ReplyDelete
  3. வணக்கம் சார்.
    Too many cooks spoil the broth
    என்றொரு இடியம் புழக்கத்தில்
    உண்டல்லவா?
    இதைத்தான் மெளனசாமி
    சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்.
    உங்கள் மகளின் திருமண விருந்து
    மெனுவைப் படித்ததுவே உங்கள்
    வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டதுபோல்
    ஓர் நிறைவு.
    தஞ்சையை விட்டு கிளம்புகிறீர்களா?

    ReplyDelete
  4. படித்தேன்.. சிலிர்த்தேன்..

    ஒருவனுக்கு ஒரு குருதான்..!

    ஒரு மாணவனுக்கு ஒரு வாத்தியார்தான்.. அது நீங்கதான்..!

    நன்றி வாத்தியாரே..!

    ReplyDelete
  5. ஆஹா... மெனு பிரமாதம்... நாக்கில் எச்சி ஊறுகிறது... அடுத்த முறை உங்கள் வீட்டு விசேசத்திற்கு மறக்காமல் கடுதாசி போடவும்... அதிர்ஷ்டம் இருந்தால் நான் வந்து பு(ரு)சித்து விட்டு போகிறேன்!. ‍
    -ஜாவா, ஆஸி

    ReplyDelete
  6. Awesome KMRK
    VANNAKKAM VATHIYARE PINNITIGA

    ReplyDelete
  7. //////////
    kmr.krishnan said...

    செல்லும் ஊரில் இணைப்புக் கிடைத்து நன்றாகப் பழக்கத்திற்கு வந்த பின்னர்தான் மீண்டும் வகுப்பறையில் என்னைக் காணலாம்.(உஸ்..அப்பாடி..நல்ல செய்திதான்.. என்று ஜப்பான், சிங்க‌ப்பூர்,துபாய், டெல்லி ஆகிய இடங்களில் பெருமூச்சு விடும் சத்தம் கேட்கிறது..!)\\\\\\\\\\\\

    எப்படி இப்பிடி..உங்களுக்கு mind reading பயங்கரமாத் தெரியுதே.ஒருவேளை வெத்திலையிலே மை போட்டுப் பார்த்தீங்களோ?

    ReplyDelete
  8. ////தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம் என்பதும்,
    இப்பிறப்பிலேயே இறைவனிடம் கலந்து உறவாடும் ஆனந்த நிலையில் மூழ்கித்திளைக்கலாம் என்பதற்கும் மெளன சுவாமிகள் நல்ல எடுத்துக்காட்டு.//////

    மூதறிஞர் ராஜாஜியுடன் தொடர்பிலிருந்ததால் இப்படி நீங்கள் எழுதியிருப்பதொன்றும் ஆச்சரியமளிக்கவில்லை..

    இந்த வகையில் நீங்களே பதிலையும் இப்படி கீழ்கண்ட கமேன்ட்டாகச் சொல்லிவிட்டபடியால்

    //////மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுவது உங்க‌ள்
    வீட்டுப்பிள்ளை(வில்லங்கம் என்பதுதான் சரி என்பார் டோக்கியோ)kmrk!!!!!!!!!!KMRK!!!!!\\\\\\\

    வில்லங்கத்தின் மொத்த உருவம் என்று அழைப்பதே சாலப் பொருந்தும்..

    ReplyDelete
  9. இங்கெல்லாம்(உதாரணத்துக்கு ஜப்பான்) வர்ணாசிரமத் தர்ம முறையிலான வகுப்புகள் என்பது இல்லை..

    இவர்களுக்கெல்லாம் எந்த அடிப்படியில் சொர்க்கலோக விசா கொடுக்கப்படுகிறதென்று புரியவில்லை..

    இந்த இந்திய சமுதாய அடுக்கின் பாதிப்பு எந்த அளவிற்கு மனித உரிமைகளைப் பாதிக்கிறது

    என்கிற ரீதியில் இதனைப் பற்றி இன்னமும் ஜப்பானியப் பள்ளிகளில் பாடமாக இந்தியாவை எடுத்துக் காட்டி எதிர்காலத்தூண்களுக்கு
    பாடம் புகட்டப்படுவதாக ஜப்பானீஸ் நண்பர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்..

    உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்று நாமும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

    ReplyDelete
  10. மெனு சூப்பர்ப்.....இதிலே டாங்கர் என்ன என்று தெரியவில்லை..நேற்றே பரோட்டா பத்தி பேசி,
    எழுதி எங்களைப் போன்று இப்படிப்பதார்த்தங்களை ருசிக்க வழியில்லாமல் வெளிநாட்டில் வசிக்கும்
    நண்பர்களின் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டது போதாதென்று இன்று தனி லிஸ்டே போட்டு விட்டீர்கள்..
    என்னமோ போங்க..உங்களுக்கு வயித்து வலி வராமப் பார்த்துக்குங்கோ..
    மாமிகிட்டே சொல்லி வைங்கோ..ஆமா..சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  11. அற்புதமான செய்தி ஐயா,

    அதுவும் குருவைப் பற்றிய செய்தி மிகமிக நன்று,

    கற்பு என்பது ஆண் பெண் உறவில் மட்டுமல்ல ,,

    அது கடவுள் விசயத்திலும் இருக்க வேண்டும எனப் படித்திருக்கிறேன், அதாவது ஒரு கடவுள் வழிபாட்டுக் கொள்கை ,,,

    அதுபோல குருவும் ஒருவராகத் தான்
    இருக்க வேண்டும் என்ற மௌன சாமிகளின் அறிவுரை அற்புதமான அறவுரை ...

    திருமூலரின் திருமந்திரத்தில் குருவின்
    பெருமையை விளக்கக் கூடிய பாடல்கள் நிறைய உள்ளன, அதில் ஒன்று.

    குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
    குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
    குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
    குருவே உரையுணர்வு அற்றதோர் கோவே,

    ReplyDelete
  12. அன்புள்ள அய்யா,
    தற்பொழுது ஜோதிடம் பயின்று வ‌ருகிறேன். தங்களுடைய ஜோதிடம் புத்தகம் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  13. /////தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம்/////
    ஹா... ஹா.. ஹா.. இதைத் தெரியாம நீச பாஷையை கத்துக்கிட்டு நீசர்களோடு நீசர்களாக (நீசன் - உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உண்பவன்) வாழ்ந்துவரும் லட்சோப லட்ச இந்தியர்களுக்கு முக்தி இல்லை..... (இந்த விஷயம் உங்களுக்கே லேட்டாத் தான் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் உங்க வீட்டுக் குழந்தைகளையே அனுப்பி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் / இல்லை அதையெல்லாம் அடுத்தஜென்மத்திலப் பார்த்துகுவோம்ம்னு கம்முனு இருந்தீட்டிங்களா?.......).

    இது இறைவனின் ஏற்பாடா? அப்படிஎன்றால் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன்; இந்த அமைப்பை இந்தியனுக்கு மாத்திரம் மட்டுமே வைத்திருக்கிறானே.... ஓ.. மற்றவர்களை மறந்துட்டான் போலும்....
    சரி நண்பர் மைனர் கேட்டது போன்று.... மற்ற நாட்டுக்காரனுக்கெல்லாம்.... எப்படி??? மோட்சமே... கிடைப்பது இல்லைன்னு சொல்லுங்க....

    சுவாமி விவேகானந்தர் கூறியது போல்..
    முதலில் ஒரு பிரிவினர் இந்த உலகத்தை ஆண்டார்கள் அவர்கள் புத்திசாலிகள் ஆனால் அவர்கள் தம் மக்களுக்கு மாத்திரமே சாதகமாக அறிவை மறைத்து வாழ்ந்தார்கள்.....
    இரண்டாவதாக ஒருபிரிவினர் இந்த உலகை ஆண்டார்கள் அவர்கள் வீரமானவர்கள்... அவர்கள் புகழ் வெறிபிடித்து இந்த மானுடுத்தையே அழித்தார்கள்....
    மூன்றாவதாக ஒருபிரிவினர் வந்தார்கள்.... வணிகர்கள் இந்த உலகை வாணிபத்தால் ஆண்டார்கள்... அவர்கள் பொருள் ஈட்ட உழைத்தார்கள் ஈட்டிய பொருளை தனக்கென்று கொண்டார்கள்....
    கடைசியாக ஒரு பிரிவினர் !!!!!!!!!"வருவார்கள்"!!!!!!!!! அவர்கள் இந்த உலகை ஆழ்வார்கள் அவர்களின் நோக்கம் சமநீதியாக இருக்கும் ஆனால் அதில் கொடுமை என்னவென்றால் அப்போது தர்ம நியாயம் தாழ்வுரும்....... சரியாக நடந்துகொண்டு வருகிறது என்பது உண்மையே....

    ஆக இந்த நால்வரிடமும் இருக்கும் அறிவு... வீரம்.... தொழில்... சமநீதி... இவைகள் மட்டும் மொத்தமாக இந்த சமூகத்திற்கு தேவை ஆனால் அது நடப்பது (கிடைப்பது)மிகவும் கடினம் என்று கூறிச் சென்றுள்ளார்....
    ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைத்தபோது சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதே இவரின் எண்ணமாக இருந்தது....

    வரும் காலத்தில் சாதிவாரியாக ஊர்களைக் (இந்தியாவில்) கூருபோடப் போகும் காலம் வருகிறது.... உலகம் முன்னோக்கிப் போகிறது.... ஆனால் இந்தியா பின்னோக்கி போகவேண்டும் என்றிருக்கிறது போலும்.....
    நீங்கள் கூறுவதைப் பார்த்தால் கடைசியில் மகாத்மாவிற்கே மோட்சம் இல்லாமல் ஆகிவிட்டதே பாவம்......

    அடுத்தமுறை சந்திக்கும் போது இந்த வகுப்பறைக்கு தகுந்தமாதிரி நிறைய ஆக்கங்களை செய்து கொண்டு வாருங்கள்... நன்றி மீண்டும் சந்திப்போம்.....

    ReplyDelete
  14. தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம் என்பதும்//

    நரேந்திர மோடி சொன்னதுக்கும், நீங்க சொல்றதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    இந்த வர்ணாசிரம முறை என்னைப்பொறுத்தவரை அபத்தமான ஒன்று. இப்போது நடைமுறையில் இல்லவே இல்லாத விஷயம். ஒரு மனிதன் சக மனிதனை மதிக்காமல் போனதற்கும் / அடக்கி ஆண்டதற்கும் / அடிமைப்பட்டுக் கிடந்ததற்கும் காரணமான இதைப் பற்றி நீங்க எழுதியிருக்கவே வேண்டாம்னுதான் எனக்குத் தோன்றியது.

    நீங்க சொன்ன விதிப்படி பார்த்தா ஒரு பிராமணனுக்குக் கூட முக்தி கிடைக்காது. எடுத்துக்காட்டா அவர்கள் தன் தேவைகளுக்காக சம்பாதிக்ககூடாது என்ற ஒரு விதி இருக்கு. அந்த ஒண்ணை வெச்சுப் பார்த்தாலே ஆல் அவுட்.

    மற்றபடி எந்த மதம் / ஜாதியில் பிறந்திருந்தாலும் இறைவனை முழு மனதோடு சரணடைபவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும். என்னுடைய புரிதல் இதுதான். நான் போகும் வழியும் இதுதான்.

    ReplyDelete
  15. இன்னொன்னு எழுத விட்டுட்டேன். முக்கியமா மனிதாபிமானம், அதோட எல்லா உயிர்களையும் சமமாக நோக்கும் தன்மை இருந்தாலே போதும்.

    ReplyDelete
  16. அதுசரி! இந்தக் கல்லெல்லாம் நீயடா!உள்ளாற இருக்கற கல்லு நானடா!"

    பிரமுகரின் பழக்கூடையைக் காலால் எட்டித் தள்ளிவிட்டு சுவாமிகள் மெள‌னமாக முகம் திருப்பிக் கொண்டு படுத்துவிட்டாராம்.//

    ம்ஹூம், இந்த ஆக்கத்தில எதுவுமே ரசிக்கிற மாதிரி இல்ல. என்னுடைய வெளிப்படையான கருத்தை மன்னிக்கவும்.

    ReplyDelete
  17. சரி நமக்குப் பிடிச்ச விஷயத்துக்கு வருவோம்:

    கேசரி, வடை, பால் பாயசம், அசோகா,ரவாதோசை, எலுமிச்சை சேவை,போண்டா, ஜாங்கிரி, ஊறுகாய், கோதுமைஹல்வா, பூரிமசால்,ஊத்தப்பம், பீன்ஸ், உசிலி, அவியல், சேனை சிப்ஸ், தயிர்வடை, அன்னாசி ரசம் (இது நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை), பாதுஷா (எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப..... பிடிச்ச ஸ்வீட்),‍ மிக்சர், மில்க் கேக்,பாதாங்கீர், விஜிடபுள் பிரியாணி, நேந்திரங்காய் சிப்ஸ்,பீட்ரூட் ஜாம், குலோப்ஜாம்மூன், வற்றல் குழம்பு, புளியோதரை, இட்லி, மிளகாய்ப்பொடி+ நல்லெண்ணை‍ - இதெல்லாம் எதுக்கு வேலை மெனக்கெட்டு copy பேஸ்ட் பண்ணேன்னு கேட்காதீங்கோ. மாமிகிட்ட சொல்லி நான் உங்காத்துக்கு வரும்போது சித்த கவனிக்கச் சொல்லுங்கோ.

    ReplyDelete
  18. உமா நீங்கள் உங்கள் எண்ணத்தை அப்படியே பின்னூட்டத்தில் இட்டு தெளிந்த சிந்தனைக்கு அச்சமென்பது அணு அளவிலும் இல்லை என்று காண்பித்துவிட்டீர்கள்... உங்களின் நேர்மையான துணிச்சலானக் கருத்திற்கு (என்னைவிட இளையவர் என்ற போதிலும்) தலைவணங்குகிறேன் ... நீங்கள் தான் பாரதிக்கண்டப் புதுமைப் பெண்...

    ReplyDelete
  19. கிருஷ்ணன் சார், எந்த ஊருக்குப் போகிறீர்கள்னு சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  20. ஒரு மாணவனுக்கு ஒரு வாத்தியார்தான்.. அது நீங்கதான்..!//

    உண்மைத்தமிழன் சார் வாத்தியாருக்கு ரொம்ப புல்லரிச்சிருக்கும். உண்மையான மாணவன்னா அது நீங்கதான்.

    ReplyDelete
  21. ஒருவேளை வெத்திலையிலே மை போட்டுப் //

    ரிப்பீட்டே

    ReplyDelete
  22. டாங்கர் என்ன என்று //

    அது ஒரு பச்சடி. உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்துட்டு பவுடர் பண்ணி (மிக்சில) தயிர்ல கலந்து உப்பு போடணும். அதன்பின் கடுகு தாளிக்கணும். சாம்பார் சாதம், வற்றல் குழம்புக்கு நல்ல சைடு டிஷ். ரொம்ப taste ஆ இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டு, மன்னிக்கவும் (ச்சே பாண்டியன் கம்ப்யூட்டர் மாதிரியே என்னோட கம்ப்யூட்டர் ம் தப்புத் தப்பா டைப் பண்ணுது) வீட்டில செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பார்த்துட்டு feedback எழுதவும்.

    ReplyDelete
  23. ஆலாசியம் நன்றி.

    ReplyDelete
  24. அன்புடன் வணக்கம் ஆதி காலத்தில் போதாக ஆசிரியர் ,சமய ஆசிரியர் ,ஞான ஆசிரியர் என இருந்தனர். போதக ஆசிரியர் என்பவர் வாழ்க்கை பாடங்கள் என்பன போன்றவை போதிப்பார் சமயத்தில் அவரே சமய ஆசிரியராக இருப்பதும் உண்டு. ஞான ஆசிரியர் என்பவர் ஒருவனின் திறம் சோதித்து முக்தி கொண்டு செல்லும் வழிகளை சொல்பவர் [[[மெய்கண்ட தேவர் பெற்றான் சாம்பானுக்கு முக்தி உபதேசம் -;ஸ்ரீ ஞானமஹா நடராஜ பிரபுவின் ஓலை கண்டு-- கொடுத்தது .] ]அது போல ஒரு குருவை""" பார்த்து"" தேர்ந்து எடு எடுத்த பின்பு அவருடியா காலம் வரை அவரையே குருவாக எண்ணி அவர் சொல்லும் வழி நட {{யாழ்பாணம் ஆறுமுக நாவலர் தனது சைவ சமய நெறி என்ற நூலில் கூறி உள்ளார்.]]
    அந்த சாது கூறியது சரி.!!!. ஆகவேதான் உங்கள் தந்தைக்கும் அந்த வசதிபடைத்த மனிதருக்கும் ஏதும் சொல்வதில் என திரும்பிகொண்டார்.முதலில் ஏக பத்தினி விரதனாக இரு !!!.அதன் கருத்து ::-- திருகோவிலூர் ஞானந்தர் சாமி ஏக குருநாதராக வைத்துகொள் என்று சொல்லி இருக்கிறார்கள் ///////அடியேன் கருத்து...

    ReplyDelete
  25. அன்புடன் வணக்கம்
    சாப்பாடு பிரமாதம்...

    ReplyDelete
  26. அன்புடன் வணக்கம் THIRUMATHI UMA
    """இந்த வர்ணாசிரம முறை என்னைப்பொறுத்தவரை அபத்தமான ஒன்று.""//"" மற்றபடி எந்த மதம் / ஜாதியில் பிறந்திருந்தாலும் இறைவனை முழு மனதோடு சரணடைபவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும். என்னுடைய புரிதல் இதுதான். நான் போகும் வழியும்"""" சபாஷ் உமா !!!
    முன் காலத்தில் செயும் தொழிலை வைத்து வர்ணம் பிரித்து வைத்தார்கள் அதுவும் சரியல்ல என்பதே எனது கருத்து எல்லா மனிதர்கள் உடம்பிலும் ரத்தம்தான் ஓடுகிறது எல்லோரும் ஒருநாள் முடிவுக்கு வர்பாவர்களே... யாரும் நிரந்தரம் இல்லை இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் எதுக்கு...எந்த சமயம் சார்ந்தவனாக இருந்தாலும் உனது சமயத்தின் ஈடுபாட்டுடன் இரு அதில் உள்ள தெய்வத்தை நம்பு.. இது என கருத்து !!கிட்டத்தட்ட உங்கள் கருதும் இது போல்தான் உள்ளது சரியா??Thanks...

    ReplyDelete
  27. இன்னும் இணைய/தொலைபேசி இணைப்புக்களை சர‌ண் செய்யாததாலும் கொஞ்சம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் என்னை நானே வைத்துக்
    கொண்டு விட்டதாலும் மீண்டும் வந்திருக்கிறேன்.முதற்கண் மைனர்வாள்,உமாஜி,ஹாலாஸ்யம்ஜி,கண்பதி நடராஜன் அய்யா ஆகியோருக்கு பின்னூட்டத்திற்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்..மற்றவர்களுக்கும் நன்றி.

    மைனர்வாளின் கூற்றுப்படி என்னுடைய கருத்து ராஜாஜியின் தாக்கம் என்பது பற்றிச் சொல்கிறேன்.ராஜாஜி ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தினை அழிக்கவந்த
    ராட்சசன் என்று சனாதனிகளால் வர்ணிக்கப்பட்டவர்.பின்னர் அவர் நினைத்த மாற்றங்களை அவர் சாதித்த பின்னர், சுதந்திரத்திற்குப் பின்னர், அதே சனாதனிகள் அவரை 'ராஜ ரிஷி'என்றும் புகழ்ந்தார்கள்.இரண்டையும் சமமாக பாவித்தார்.அவர் கொண்டுவந்த தொழிற் கல்வித் திட்டத்தினை "குலக்கல்வித் திட்டம்"என்று அரசியல் காரணங்களுக்காகக் கொச்சைப்படுத்தி அவரை வீழ்த்தப் பயன்படுத்திக் கொண்டனர்.அந்தத் திட்டம் பற்றியும் நடந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்தால் அவர் மீது மைனர்வாள் போன்று இளைய சமுதாயத்தினர் கொண்டு இருக்கும் வெறுப்புக் கலந்த அபிப்பிராயங்கள் சற்றேனும் மட்டுப்படும்.பெரியார்=மணியம்மை திருமணத்துக்கும் அவர்தான் காரணம் என்று அவர்மீது அபாண்டம் சுமத்தப் படுகிறது.அதுவும் தவறு என்று 15 ஆண்டுகளுக்கு முன்னரே திரு கி.வீரமணி அவருடைய கடிதங்களை வெளியிட்டுவிட்டார்.இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒருவரைப்பற்றி தெரிந்த அளவு மட்டுமே அவர்களைப்பற்றி முழு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் வெறுப்புக் கொள்ளவும் போதுமானது அல்ல.
    ராஜாஜி இறந்த போது பெரியார்,"காந்தியாருக்கு முன்னரே சாதி ஒழிப்பு,கலப்புத் திருமணம்,சமபந்தி போஜனம், சர்வ ஜாதி கலப்பு போஜனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பெருமளவில் வெற்றியும் பெற்றவர்" என்று புகழ்ந்துள்ளார்.
    சமயம் கிடைத்தால் நீங்கள் விரும்பினால் பின்னர் விரிவாகக் காண்போம்.

    எந்த செய்திக்கும் இருபக்கங்கள் உள்ளன.ஆக்கத்தில் நான் கூறிய‌ ஒரு கருத்து
    வர்ண தர்மத்தில் உள்ள நல்ல முகத்தைப் பற்றியது. அதற்குரிய மறுபக்கத்தை அந்த ஆக்கத்திலேயே நான் சொல்லவில்லை என்பது இடம் பொருள் ஏவல் கருதியே.கர்மயோகத்தினால் (ஊருக்கு உழைத்திடல் யோகம் என்பார் மஹாகவி பாரதியார்)தெய்வத்தை அடையலாம் என்ற கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளேன்."செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்" என்பது வர்ணப் பகுப்பில் வலியுறுத்தப்பட்ட நல்ல கருத்து.அதனைத்தான் அங்கே சொல்லியுள்ளேன். இது ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும்,ஏனைய உலக நாடுகளுக்கும் ஏற்புடையதுதான்.

    வர்ண தர்மம் தவறென்று நமக்கு ஆங்கிலேயர்களால் கற்பிக்கப்பட்டது.அதனை அவர்கள் புரிந்து கொண்ட முறை சரியா,தவறா என்பதெல்லாம் ஆய்வுக்குரியன.இங்கே வந்து பார்த்து பிரித்தாளக் கிடைக்கும் ஒரு சாதனமாக/ஆயுதமாக வர்ணம்/சாதி இருப்பதைக் கண்டார்க‌ள்.அதனை அவர்களுடைய‌
    நிர்வாகத் திறமையால் சரியாகச் செய்து தங்க‌ளுடைய ஆட்சியை நன்கு பலப்படுத்திக் கொண்டார்கள்.வர்ணம் என்பதற்கு "கலர்" என்று பொருள் கொண்டு ஆரியர்கள் வெள்ளை நிறத்தவர்;திராவிடர்கள் கருத்தவர்கள் என்று இனக் கொள்கை சொன்னார்கள். நம் நாட்டில் வெறுப்பை விதைக்க மட்டுமே பயன் பட்ட இனக்கொள்கை, ஜெர்மனியில் பெருந்தீயாக மூண்டு பலர்/ யூதர்கள் மாளவும் உலக யுத்தம் கிளம்பவும் வகை செய்தது வரலாறு.
    இனக் கொள்கை 200 வருட வரலாறுதான். அதற்கு முன்ன‌ர் மக்கள் தாங்கள் எந்த இனம் என்று தெரியாமலேயே வாழ்ந்துள்ளனர்.

    ReplyDelete
  28. (continued)

    உமாஜியின் புது அவதாரம் ஜோர்.வரவேற்கிறேன்.என்னுடைய மவுண்ட் ஹ‌வுஸ் மாமா ஆக்கத்தில் "மாமா பூணூல் போன்ற பிராமணப் புற அடையாளங்களைத் தொலைத்துத் தலை முழுகிவிட்டார்" என்று எழுதி இருந்தேன்.அப்போதும் உமாஜி அதிர்ச்சி அடைந்தார்.தன்னுடைய தமிழைக்
    கையாளுதலில் மறைக்காமல் தான் ஒரு பிராமண ஸ்தீரிதான் என்பதை (பிற சாதியினர் அதனைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டும் கூட)விடாமல் வலியுறுத்திக் கொள்ளும் அளவுக்கு அவர் "முன்னேற்றக்' கருத்து உடையவர்.அவருடைய மின்னஞ்சல்களில் காணும் செய்திகளும் அவர் தன் பிராமண அடையாளங்களை தொலைக்க விரும்பாதவர் என்பது புலப்படும்.இப்போது புது அவதாரம் எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே.ஏன்னெனில் மாற்றங்களைக் கொண்டு வருவது பெண்கள் கைகளிலேயே இருக்கிறது.

    நான் எந்த ஒரு கருத்தையும் ஒரேய‌டியாக தூக்கித் தலையில் வைத்து ஆடுபவனல்ல.ஆய்ந்து பார்த்து நல்லது அல்லது இர‌ண்டையும் கூறும் மனப்பக்குவம் உடையவன்.வர்ணப்பகுப்பு தோன்றிய போது அது பிறப்பால் என்று சொல்லப்படவில்லை என்பது எனது கருத்து.விஸ்வாமித்ரர்‍‍=வஸிஷ்டர்
    புராணச்செய்தி ஒரு சுட்டி. இன்னும் பல கூற இயலும்.

    பின்னர் வந்த கலியுக சுயநல சமுதாயம் வர்ணபகுப்பு என்பது பிறப்பால் என்று
    இரும்பு, கான்கிரீட் அளவுக்குக் கெட்டிப்படுத்தி எல்லோரையும் மூச்சுத் திணற வைத்து விட்டது.பிறப்பால் வர்ணம் என்ற கொள்கையை முற்றிலும் எதிர்கிறேன்.

    இனி ஹாலாஸ்யம்ஜியின் விவேகானந்தர் பற்றிய‌ கருத்து. சுவாமிஜியின் ஆக்கங்கள் பன் முகப் பார்வை கொண்டவை."பிராமண‌ர்கள் நமது குறிக்கோள்(ஐடியல்)அதனை நோக்கி எல்லாச் சமூகங்களும் எப்போதும் முன்னேறிக் கொண்டுள்ளன" என்றும் கூடக் கூறியுள்ளார்.ஆனால் அப்படிப்பட்ட 'ஐடியல்' பிராமணர்கள் யாரும் இக் கலியுகத்தில் இல்லை என்பது நமது துரதிர்ஷ்டமே!
    ஸ்ரீராமகிருஷ்ணர் உருவத்தில் சுவாமிஜிக்கு ஒரு 'ஐடியல்' பிராமணர் வந்தார்.
    அவருக்குக் கிடைத்தது நமக்கு கிடைக்க‌வில்லை.

    இன்னும் பல செய்திகள் உள்ளன. நேர‌ம் இன்மை இட மாறுதலில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகள் காரணமாக நிறுத்திக்கொள்கிறேன்.பின்னர் உங்கள்
    பின்னூட்டங்களைப் பார்த்து பதில் சொல்வேன்.(தொடரும்)

    ReplyDelete
  29. எந்த சமயம் சார்ந்தவனாக இருந்தாலும் உனது சமயத்தின் ஈடுபாட்டுடன் இரு அதில் உள்ள தெய்வத்தை நம்பு.. இது என கருத்து !!கிட்டத்தட்ட உங்கள் கருதும் இது போல்தான் உள்ளது சரியா??//

    ஆமாம், நன்றி கணபதி சார்.

    ReplyDelete
  30. என்னுடைய மவுண்ட் ஹ‌வுஸ் மாமா ஆக்கத்தில் "மாமா பூணூல் போன்ற பிராமணப் புற அடையாளங்களைத் தொலைத்துத் தலை முழுகிவிட்டார்" என்று எழுதி இருந்தேன்.அப்போதும் உமாஜி அதிர்ச்சி அடைந்தார்.//

    நான் எப்ப அதிர்ச்சி அடைஞ்சேன்? நீங்க இதுல ஒரு வரி விட்டுட்டீங்க. (தன்னுடைய நற்குணம் தவிர) ன்னு நீங்க எழுதியிருந்தீங்க. இதப் படிச்சா வேற மாதிரி கருத்து வருதுன்னுதான் எழுதியிருந்தேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம் திரும்பவும் பார்த்தேன். அது மட்டும்தான் எழுதியிருந்தேன். நீங்களும் அது என்னன்னு கேட்கல, நானும் சொல்லல, சரி இதுக்கு மேல அதை விவாதிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்.

    ReplyDelete
  31. தன்னுடைய தமிழைக் கையாளுதலில் மறைக்காமல் தான் ஒரு பிராமண ஸ்தீரிதான் என்பதை (பிற சாதியினர் அதனைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டும் கூட)விடாமல் வலியுறுத்திக் கொள்ளும் அளவுக்கு அவர் "முன்னேற்றக்' கருத்து உடையவர்.//

    எது? நான் பிராமண பாஷையில் எழுதறதுதானே? உலகத்துல எல்லாரும் அவரவர்கள் பாஷையைத்தானே பேசறாங்க? நான் என்னுடைய பாஷையைப் பேசறது தவறுன்னு எப்படி சொல்கிறீர்கள்? ஒரு குடும்ப வழக்கப் படி பேசுவது என்பது பிறவியில் வருவது. அப்படி நான் பேசாமல் அதை நிறுத்திவிட்டு வேற ஒரு பாஷையையோ / ஜாதியையோ / குலத்தையோ ஏற்றுக்கொண்டால் ஒருவேளை அதை முன்னேற்றக்கருத்துன்னு சொல்வீர்களா? எனக்கு நிஜமாவே புரியல.

    வகுப்பறைல அப்படி என்னை யாருமே கிண்டல் பண்ணலையே? சும்மா ஜாலியாத்தானே அவங்களும் திரும்ப அந்த பாஷைல பதில் சொல்றாங்க. எல்லாமே நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. என்னை / உங்களைச் சுத்தி இருக்கிறவர்கள் எல்லாருமே நம்மை அந்த அடையாளங்களோடு ஏற்றுக்கொண்டவர்கள் / விரும்புபவர்கள்தான்.

    ReplyDelete
  32. /////இனி ஹாலாஸ்யம்ஜியின் விவேகானந்தர் பற்றிய‌ கருத்து. சுவாமிஜியின் ஆக்கங்கள் பன் முகப் பார்வை கொண்டவை."பிராமண‌ர்கள் நமது குறிக்கோள்(ஐடியல்)அதனை நோக்கி எல்லாச் சமூகங்களும் எப்போதும் முன்னேறிக் கொண்டுள்ளன" என்றும் கூடக் கூறியுள்ளார்.ஆனால் அப்படிப்பட்ட 'ஐடியல்' பிராமணர்கள் யாரும் இக் கலியுகத்தில் இல்லை என்பது நமது துரதிர்ஷ்டமே!////

    அப்படி அறுதியிட்டு சொல்வதிற்கில்லை.... பிறப்பால் மட்டும் அல்ல பிராமணர் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறைக்குள் வருபவர் யாவரும் பிராமணர்களே என்பது இதிகாசம்..... நான் பெரிதும் மதிக்கும் தஞ்சை திருவாளர் ராஜகோபாலனைக் கூட என்னால் அப்படி கூறமுடியும் அவைகள் அடையாளங்களுக்கு அப்பாற்ப்பட்டது... அவர்கள் காவி உடுத்த வேண்டாம்... மடத்தில் இருக்க வேண்டாம்... சாதாரணமாகவே கூட இருக்கலாம்.... அவர்களின் செயல் அதைச் சொல்லும்.... அவர்கள் உணரப் படவேண்டியவைகள்....

    ReplyDelete
  33. /////ஸ்ரீராமகிருஷ்ணர் உருவத்தில் சுவாமிஜிக்கு ஒரு 'ஐடியல்' பிராமணர் வந்தார்.
    அவருக்குக் கிடைத்தது நமக்கு கிடைக்க‌வில்லை.//////
    வேண்டாம் அவரை நாம் அறிவோம் அல்லாவா அவர் கூறிய வழி பயணிப்போம்... மகாத்மாவின் கொள்கையை பின்பற்ற அவரோடு / அவர் காலத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும் என்று அல்ல... அந்த அத்வைதிகள் வேதாந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.... (நான் நாம ரூபத்தை மட்டும் சொல்கிறேன்.. சென்ற பிறவியில் இருந்த காந்தி என்ற ஆத்மாவின் வயது நம்மில் யாரும் அறியாதது.... ஆக, ஆத்மா அந்த பிரமத்தில் இருந்தே வந்தது.... ஆக நான் தான் அந்த பிரம்மம்.... இதை உணர்ந்தவன் அதை அடைய தகுதி படைத்தவன் ஆகிறான் என்பது வேதாந்தம்...) 'ஐடியல்' பிராமணர் மட்டும் அல்ல அறிவு, வீரம், தொழில், சமநீதி (உழைப்பு / சகிப்பு) என்று ஒருவர் மற்றவரிடம் கற்றுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்பை வைத்து படைத்துள்ளான் கடவுள்... அவன் நாம் அனைவருக்கும் தந்தை.... இதில் தனிப் பட்ட முறையில் யாரும் அவனுக்கு வேண்டியவன் அல்லவே...... நான் கூறும் கருத்தில் எனக்கு ஒரு தெளிவு இருக்கும் போதே அதைப் பற்றி பேசுவேன் அது தவறாகவும் இருக்கலாம்... அதை சரியான விளக்கத்துடன் எனக்கு யார் புரிய வைத்தாலும் ஏற்றுக்கொள்வேன்..... உள்ளே ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தி விட்டு.... அதற்கு எதிர்ப்பு / மறுப்பு வரும் பொது எனக்கும் உடன்பாடு இல்லை என்றுக் கூறுவது எப்படி எடுப்பது??? உங்களின் சுயத்தை எழுதுங்கள்.... அதற்கு மறுப்பு வரும் போது... லாஜிக்குடன் அதை உறுதி படுத்தி வாதிடுங்கள்..... நன்றி..

    ReplyDelete
  34. ////ஏன்னெனில் மாற்றங்களைக் கொண்டு வருவது பெண்கள் கைகளிலேயே இருக்கிறது./////
    //// கடமை

    கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம்;
    கடமை யறிவோம் தொழிலறியோம்;
    கட்டென் பதனை வெட்டென் போம்;
    மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
    வருத்தம்,நோவு,மற்றிவை போல்
    கடமை நினைவுந் தொலைத் திங்கு
    களியுற் றென்றும் வாழ்குவமே.//// மஹாகவி சி.சு.பாரதி...

    /////சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
    சவுரி யங்கள் பலபல செய்வராம்;
    மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
    மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
    காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
    கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
    ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
    இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ! 9 /////
    இந்த பாரதியின் பாடலைப் பாருங்கள்... மகாகவிக்கே இப்படித்தான் தோன்றியது ஆக எந்த இனமென்றாலும் சாதாரண பெண்ணுக்கு கூட அதை அப்படியே ஏற்பதில் உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையே....இவைகள் யாவும் நமது பாரதி தான் பாடியுள்ளான்... அந்த பாரதி தான் பாடியுள்ளான்... ஆக மாற்றம் என்பதில்லை மூடக் கட்டுக்கள் என்று தோன்றும் யாவும் தகர்க்க வேண்டியதே.... அதை செய்த பாரதி கண்ட புதுமைப் பெண் உமா என்பதையும் அவர் இந்த வகுப்பிலே இருப்பது நாம் அனைவருக்கும் பெருமையே... அதில் மாற்றுக் கருத்து இல்லை....

    ReplyDelete
  35. ////நான் எந்த ஒரு கருத்தையும் ஒரேய‌டியாக தூக்கித் தலையில் வைத்து ஆடுபவனல்ல.ஆய்ந்து பார்த்து நல்லது அல்லது இர‌ண்டையும் கூறும் மனப்பக்குவம் உடையவன்.வர்ணப்பகுப்பு தோன்றிய போது அது பிறப்பால் என்று சொல்லப்படவில்லை என்பது எனது கருத்து./////

    பிறப்பால் அல்ல ஒருவனின் செறிய சீரிய நடத்தையால் யாவரும் பிராமணன் ஆகலாம் என்பது வசிஷ்டரின் கருத்தும் என்பது ராமாயணம் கூறுகிறது.... பிறப்பால் வர்ண பேதம் இல்லை... எனும் பொது தொழிலும் அவனின் பிறப்பால் வரவேண்டிய அவசியம் இருக்காது... என்பதை நீவீரே ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படி இருக்க கர்ம கடமை என்று கூற வேண்டியதே இல்லையே.... யாருக்கு என்ன விருப்பமோ தகுதியோ.... ஜாதகம் எதை ஒருவனுக்கு வைத்ததாக அதாவது விதி அதாவது ஒருவைனின் தனிப்பட்ட விருப்பம் வாய்ப்பு... கூறுகிறதோ அதன் படியே போகலாமே....

    ReplyDelete
  36. //////விஸ்வாமித்ரர்‍‍=வஸிஷ்டர் புராணச்செய்தி ஒரு சுட்டி. இன்னும் பல கூற இயலும்.//////

    ஏன் ராவணன் கூட பிராமணன் தான் என்கிறது புராணம் ஆக பிறப்பால் யாரும் உயர்ந்தவன் ஆக முடியாது.... ஊருக்கு உழை என்று மற்றவரை பல பல கதைகளைக் கூறி ஒரு சிலர் சுக போகங்களை அனுபவிக்கவும் முடியாது கூடாது.... அது ஆத்மத் துரோகம், அதுவே பிரம்ம துரோகம்...

    ReplyDelete
  37. ///////பின்னர் வந்த கலியுக சுயநல சமுதாயம் வர்ணபகுப்பு என்பது பிறப்பால் என்று
    இரும்பு, கான்கிரீட் அளவுக்குக் கெட்டிப்படுத்தி எல்லோரையும் மூச்சுத் திணற வைத்து விட்டது.பிறப்பால் வர்ணம் என்ற கொள்கையை முற்றிலும் எதிர்கிறேன்.///////

    தொழில் வழி அமைக்கப் பட்ட சமுதாய அமைப்பு என்பது என்ன.. அதில் தர்மம் இருக்கிறதா??? அப்படி அதை செய் என்று ஒரு சிலர் மற்றவர்களை அவர்கள் விரும்புகிறார்களா?... என்று கூட வினவாமல் அவர்கள் பிறப்பால் அதை செய்.... அது தான் தர்மம் என்று கூறுவதும் அதை ஆதரிப்பதும் எந்த வகையில் தர்மம்.... செய்யச் சொன்னால் என்ன அதை ஆதரித்தால் என்ன... ஆக இது அபத்தம் தானே???

    ReplyDelete
  38. மின்னஞ்சல்களில் காணும் செய்திகளும் அவர் தன் பிராமண அடையாளங்களை தொலைக்க விரும்பாதவர் என்பது புலப்படும்//

    ஒரு மனிதன் தான் பிறந்த குலத்தின் / மதத்தின் / பிரிவின் அடையாளம் கொள்வது என்பது தவறாகாது. ஒருத்தர் அவர்களோட அடையாளங்களைத் தலைமுழுகிட்டு இன்னொண்ணை ஏத்துக்கறது புரட்சி கிடையாது. அதை நான் எந்த காலத்திலும் கண்டிப்பாகச் செய்யமாட்டேன். என் பையனைக்கூடத்தான் தினமும் 'சந்தியாவந்தனம்' செய்யச் சொல்கிறேன். அவனுக்கு பிராமண வழக்கப்படி பூணல் போட்டிருக்கிறோம். இதெல்லாம் கூடாதுன்னு சொல்றீங்களா? நான் பிறந்த குலத்தை எப்படி விரும்பாமல் இருக்க முடியும்? அதற்காக அதை நான் எல்லாவற்றிலும் உயர்வாக நினைக்கவில்லை, மற்றவற்றை கேவலமாக நினைக்கவுமில்லை. சக மனிதனை மதிக்க தன்னுடைய அடையாளங்களைத் தொலைத்துவிடவேண்டிய அவசியமில்லை.

    மற்றபடி எந்த மதம் / ஜாதியில் பிறந்திருந்தாலும் இறைவனை முழு மனதோடு சரணடைபவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும். // இதுதானே நான் எழுதியிருந்தேன். அவரவர்களுக்குத் தெரிந்த முறையில், பிடித்த வழியில் இறைவனைக் கும்பிடலாம் என்று.

    நம்முடைய பிறப்பை எந்த குலம் / மதத்தில் பிறக்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் என்ன வேலை செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கலாமல்லவா? அதை குலத்தை வைத்துப் பிரிப்பதைத்தான் / தீர்மானிப்பதைத்தான் எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  39. இனக் கொள்கை 200 வருட வரலாறுதான். அதற்கு முன்ன‌ர் மக்கள் தாங்கள் எந்த இனம் என்று தெரியாமலேயே வாழ்ந்துள்ளனர்.//

    இது எனக்கு சரியாப் புரியல.

    ReplyDelete
  40. வர்ணப்பகுப்பு தோன்றிய போது அது பிறப்பால் என்று சொல்லப்படவில்லை என்பது எனது கருத்து.விஸ்வாமித்ரர்‍‍=வஸிஷ்டர் புராணச்செய்தி ஒரு சுட்டி//

    இதைக்கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்.

    ReplyDelete
  41. ."செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்" என்பது வர்ணப் பகுப்பில் வலியுறுத்தப்பட்ட நல்ல கருத்து.//

    எங்களை மாதிரி வேலை பார்ப்பவர்களிலேயே பிடிக்காமல் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க உடலுழைப்பு சார்ந்த மற்ற வேலைகள் செய்பவர்கள் அதை சுய விருப்பத்துடன்தான் செய்கிறார்களா?

    ReplyDelete
  42. ///என்னை யாருமே கிண்டல் பண்ணலையே? சும்மா ஜாலியாத்தானே
    அவங்களும் திரும்ப அந்த பாஷைல பதில் சொல்றாங்க///

    உங்கள் நேர்மறைப் பார்வைக்கு ஒரு வணக்கம். அப்படியே இருக்கட்டும். ததாஸ்து. குறைந்த அளவு வகுப்பறையிலாவது நீங்கள் சொல்லும் நல்லெண்ணம் நிலவினால் மகிழ்ச்சியே. நீண்ட நாட்க‌ளாக வடக்கேயே இருப்பதால்,தமிழ்நாட்டு நடைமுறையை நீங்கள் அறியவில்லை என்றே நினைக்கிறேன். "அவாள், இவாள்" "வாங்கோ, போங்கோ" மட்டுமே இங்கு பிராமண அடையாளங்கள்.அவை இங்கே இழிவாகவே பயன் படுத்தப்பட்டு வருகின்றன.கூடியவரை தமிழகப் பிராமணர்கள் பொது இடங்களில் அவ்வாறு
    பேசுவதை தவிர்த்தே வருகின்றோம்

    ReplyDelete
  43. ///"உள்ளே ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தி விட்டு.... அதற்கு எதிர்ப்பு / மறுப்பு வரும் பொது எனக்கும் உடன்பாடு இல்லை என்றுக்
    கூறுவது எப்படி எடுப்பது??? உங்களின் சுயத்தை எழுதுங்கள்...".///

    உங்கள் இந்த சொற்றொடர் மன வலியை ஏற்படுத்துகிறது.நான் உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுகிறேன் என்பது உங்கள் எண்ணமாயின் நான் என்ன
    சொல்லமுடியும்? அப்படியே இருக்கட்டும்

    ReplyDelete
  44. ////"கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம்;
    கடமை யறிவோம் தொழிலறியோம்;
    கட்டென் பதனை வெட்டென் போம்;
    மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
    வருத்தம்,நோவு,மற்றிவை போல்
    கடமை நினைவுந் தொலைத் திங்கு
    களியுற் றென்றும் வாழ்குவமே.//// மஹாகவி சி.சு.பாரதி...///

    இதைத்தான் எப்போதும் இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக என்பேன்.உங்க‌ள்
    வாதத்திற்குப் பாரதியை கைப்பாவை ஆக்கி விட்டீர்கள்.இது வேதாந்த நிலையை
    எட்டியவர்களுடைய நிலை.அத்வைத நிலை. அந்நிலை கண்டவர்கள்
    விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் வர மாட்டார்கள். இதற்கும் வர்ணாஸ்ரம்க் கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    ஒரு விஷயம். பாரதி சாதிகள் இல்லை என்றார்.குலம் உண்டென்றார்.'குலம் உண்டு. ஆனால் அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லால் பாவம்' என்பது அவர்
    கருத்து.கட்டுரைக‌ளில் விரிவாகக் காணலாம். பாப்பா பாட்டில் கொஞ்சம் காணலாம்.

    ReplyDelete
  45. ///"எங்களை மாதிரி வேலை பார்ப்பவர்களிலேயே பிடிக்காமல் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க உடலுழைப்பு சார்ந்த மற்ற வேலைகள் செய்பவர்கள் அதை சுய விருப்பத்துடன்தான் செய்கிறார்களா?"///

    ஒரு நிமிடம் நினைத்துப் பார்போம்.விவசாயம் தவிர்த்து முக்கியமாகக் கருதப்பட்ட பணி கோவில் நிர்மாணித்தல். ஒவ்வொரு கோவிலும் நிர்மாணிக்கப் பட்ட அளவும் அழகும் வேலையில் சலிப்படைந்த்வர்கள் செய்திருந்தால் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்க முடியுமா? அதனைத் தங்க‌ள் தர்மம் என்றும், தெய்வச் செய‌ல் என்றும் கருதியவர்களாலேயே இது சாத்தியமாகும்."நீ கொடுக்கும் சம்பளத்திற்கு எல்லாம் இதுபோதும்" என்ற எண்ணம் இருந்தால் உன்னதமான வேலைகளைச் செய்ய முடியுமா? "இது எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பணி.இதைச்செய்வ்தால் நான் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவேன் என்ற எண்ணம் மேலோங்கினால் சுய விருப்பம் தானாக வரும்.சலிப்புத் தெரியாது.மிஷனரி சியல் என்பது இதுதான்.வருணப் பகுப்பில் தர்மம் என்ற சொல்லே பயன் படுத்தப் படுகிறது.தொழில், வேலை, என்று சொல்லப் படுவதில்லை.லாப நஷ்டக் கணக்கு தர்மத்தில் இல்லை."அது அவர்கள் தொழில் தர்மம்" என்ற சொல் வழக்கு இன்றளவும் புழ்ங்கப் படுகிறது.

    ReplyDelete
  46. ///இனக் கொள்கை 200 வருட வரலாறுதான். அதற்கு முன்ன‌ர் மக்கள் தாங்கள் எந்த இனம் என்று தெரியாமலேயே வாழ்ந்துள்ளனர்.
    இது எனக்கு சரியாப் புரியல."///

    இனம் என்பது ஆங்கிலத்தில் race. ஆரியன்,ஆப்பிரிக்கன், காக்கேஷியன்,
    ஐரோப்பியன்,மங்கோலியன் போன்றவை இனம். anthropology என்ற
    இந்தப் படிப்புத் துவங்கி 200 ஆண்டுக்குள்ளாகவே இருக்கும்.இது ஆங்கிலேயர்கள் காலனி வாசிகளைத் தாழ்வடையச் செய்ய‌ ஒரு சூழ்ச்சி என்று பரவலான கருத்தோட்டம் உண்டு.

    குலம் என்பது எல்லா நாடுகளிலுமே மதகுருமார்கள், அரசர்/போர்வீரர்,வணிகர்/வேளாளர்,தொழிலாளிகள் என்று பிரிக்கப்படுகின்றனர்.

    சாதி என்பது உட்பிரிவுகள்.உதாரணமாகக் கோவிலைப் பெருக்குபவர் தெருவினை பெருக்குபவரைவிடத் தன்னை உயர் சாதியாகக் கற்பித்துக்கொள்வார்.


    'aaa statement on race"

    என்று கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப்படிக்கவும்

    "Ultimately "race" as an ideology about human differences was subsequently spread to other areas of the world. It became a strategy for dividing, ranking, and controlling colonized people used by colonial powers everywhere. But it was not limited to the colonial situation. In the latter part of the 19th century it was employed by Europeans to rank one another and to justify social, economic, and political inequalities among their peoples. During World War II, the Nazis under Adolf Hitler enjoined the expanded ideology of "race" and "racial" differences and took them to a logical end: the extermination of 11 million people of "inferior races" (e.g., Jews, Gypsies, Africans, homosexuals, and so forth) and other unspeakable brutalities of the Holocஔச்ட்"

    ReplyDelete
  47. ///ஏன் ராவணன் கூட பிராமணன் தான் என்கிறது புராணம் ஆக பிறப்பால் யாரும் உயர்ந்தவன் ஆக முடியாது.... ஊருக்கு உழை என்று மற்றவரை பல பல கதைகளைக் கூறி ஒரு சிலர் சுக போகங்களை அனுபவிக்கவும் முடியாது கூடாது.... அது ஆத்மத் துரோகம், அதுவே பிரம்ம துரோகம்...////

    ஆக பிறப்பால் குலம் என்ற நிலை வெகு காலத்திற்கு இல்லை என்பது தெளிவு. எந்தக் குலத்தில் தோன்றியவரும் எந்தப் பணியையும் செய்யலாம் என்ற நிலையும் இருந்துள்ளது. அது திரிபு பட்டது பின்னர்தான்.தீர்வாக பெள‌த்தம் தோன்றியது.

    நிர்பந்தம் காரணமாக எந்த ஒன்றையும் வெகு காலத்திற்குத் த‌க்க வைக்க முடியாது.நிர்பந்தித்துத்தான் அந்தச் சமூக அமைப்பு தக்க வைக்கப்பட்டது என்பதற்குச் சான்று ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  48. எந்தக் கொள்கையும் முற்றிலும் தவ‌றாகவோ முற்றிலும் சரியாகவோ இருப்பதில்லை. எல்லாவற்றிற்குமே ஆக்கம்,ஆக்கமின்மை என்று இரண்டு
    முகங்கள் இருக்கும்.ஒரு செயலால் பலரும் நன்மை அடையலாம்,ஒரு சிலருக்குத் தீமையாக அமையலாம்.

    நான் மெளன சுவாமிகள் பற்றிய கட்டுரையில் வர்ணாஸ்ரமத்தில் உள்ள
    ஆக்கபூர்வமான முகத்தைக் குறிப்பிட்டேன்.அதனால் அதனை இப்போதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அந்தக் கொள்கை முற்றிலும் சரி என்றோ எழுதவில்லை.மனதால் நினைக்கவும் இல்லை.உயர்வு தாழ்வு கற்பிக்கவும் இல்லை.அப்படியெல்லாம் நான் கூறுவதுபோல ஒரு தோற்ற்த்தைப் பின்னூட்டத்தில் ஏற்படுத்திவிட்டார்கள்.

    முற்போக்காகக் காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் நடை முறையிலும் அவ்வாறே
    இருக்கட்டும். எந்தெந்த இடத்தில் சறுக்குகிறோம் என்பதை அவர்களே தங்க‌ளை
    சுய விமர்சனம் செய்து கொள்ளட்டும்.

    நான் பொதுப் பணி பலதும் செய்து பழகியவன்.அந்தப் பணிகள் எல்லாம் இறைப்பணி என்று கருதிய போது அயர்வு ஏற்படவில்லை.மாறாக புது உத்வேகம் இருப்பதைக்கண்டேன்.அது போலவே சிக்கலில்லாத அந்த சமூக அமைப்பிலும் இறைப்பணி என நினைத்துச் செய்ததால் பல சாதனைகளை அவர்களால் செய்ய முடிந்தது.அதைத்தான் நான் என் கட்டுரையில் சொல்ல நினைத்தேன்.

    மெள்ன சுவாமிகள் ஒரு நவீன மோஸ்தர் ஆசாமி இல்லை.படிப்பு என்பதற்கு
    நாம் கொள்ளும் பொருளில் அவர் படிக்காதவர் என்ற நிலையிலேயே இருந்துள்ளார்.தான் ஏற்றுக் கொண்ட அல்லது பரம்பரையாக அவருக்கு வந்த
    கலையில் உன்னதத்தை அடைந்ததால் அவர் இறை அனுபூதி அடைந்தார்
    என்பதுதான் நான் சொல்ல வ‌ந்தது.

    புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி!புரிந்தும் புரியாததுபோல்
    இருப்பவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  49. ///// இதைத்தான் எப்போதும் இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக என்பேன்.உங்க‌ள்
    வாதத்திற்குப் பாரதியை கைப்பாவை ஆக்கி விட்டீர்கள்.//////
    யார்? மஹாகவி அவன் ஒரு வேள்வித்தீ, அக்னிக் குஞ்சு, அவன் எமனையே எதிர்த்தவன்.....
    அவனை யார் கைப் பாவையாய் யார்கொள்வது....

    ReplyDelete
  50. ////"கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம்;
    கடமை யறிவோம் தொழிலறியோம்;
    கட்டென் பதனை வெட்டென் போம்;
    மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
    வருத்தம்,நோவு,மற்றிவை போல்
    கடமை நினைவுந் தொலைத் திங்கு
    களியுற் றென்றும் வாழ்குவமே.////

    இங்கே கூறும் கடமை என்ற வார்த்தையின் பொருள் என்ன????
    பாரதி எதைக் குறிப்பிடுகிறான்?
    நம் இருவருக்கும்.... யாவருக்கும்...தெரியும்....

    ReplyDelete
  51. /////ஒரு விஷயம். பாரதி சாதிகள் இல்லை என்றார்.குலம் உண்டென்றார்.'குலம் உண்டு. ஆனால் அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லால் பாவம்' என்பது அவர்
    கருத்து.//////

    அப்படியா? இல்லை.. இல்லவே.. இல்லை.... எல்லாம் சும்மா! சாதிகள் இல்லை என்று அவன் சொல்லவே இல்லை....
    எல்லாம் பின்னாளில் மாற்றப் பட்டது..... அதுவும் பாப்பா பாட்டு விளக்கம் நிறைய தரவேண்டும் என்பதால்
    குழந்தைகளுக்காக மாற்றிச் சொல்லப்பட்ட வெள்ளைப் பொய்... பாரதி !!!!சாதியில் பெருமை இல்லை என்று தான் எழுதினான்!!!! (மாறாக புரட்சித் தலைவி சொன்னாள்... ஆம், அப்படியொரு புரட்சியை ஒளவைப் பாட்டி முன்பே கூறிவிட்டாள்.. அதையும் பாரதி அமுதென்றான்)
    சாதி இல்லையென்று சொன்னவனா இப்படி தனித் தனியாக பிரித்து அவரவர் பெருமை கூறுகிறான்.. அப்படி இல்லை என்பவன் எப்படி தனது படைப்பை பறையருக்கு சமர்ப்பணம் செய்திருப்பான்... எப்படி அனைவருக்கும் விடுதலை என்கிறான்... சாதியில் உயர்வு தாழ்வு காண்பது தவறு.... மானிட வாழ்வில் கீழோர் மேலோர் என்பதில்லை என்றான்...
    ***வேத மறிந்தவன் பார்ப்பான், பல
    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
    நீதி நிலைதவ றாமல் - தண்ட
    நேமங்கள் செய்பவன் நாய்க்கன்****
    (இப்படியாக பெருமை பாடியவன் ஐயர் என்பவர் யார் என்பதையும் கூறி அவர்களை தனியாக சாடுகிறான்... அதோடு விடவில்லை... தனது ஞானரதத்தில் பர்வதகுமாரி வழியாக யாவரையும் சாடுகிறான்... ஒருவரையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் அவன் எல்லோரையும் சமமாக பார்த்ததற்கு சான்று...)
    ***பறைய ருக்கும் இங்கு தீயர்
    புலைய ருக்கும் விடுதலை
    பரவ ரோடு குறவருக்கும்
    மறவ ருக்கும் விடுதலை!
    திறமை கொண்டதீமை யற்ற
    தொழில் புரங்ந்து யாவரும்
    தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
    வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
    ஏழை யென்றும் அடிமையென்றும்
    எவனும் இல்லை ஜாதியில்,
    இழிவு கொண்ட மனித ரென்பது
    இந்தி யாவில் இல்லையே
    வாழி கல்வி செல்வம் எய்தி
    மனம கிழ்ந்து கூடியே
    மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
    மானமாக வாழ்வமே! (விடுதலை) ***

    சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
    உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
    சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
    உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
    கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்***

    **சாத்திர மின்றேற் சாதியில்லை,
    பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
    பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்,
    நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
    அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -
    மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் -
    இவர்தம்
    உடலும் உள்ளமும் தன்வச மிலராய்....**


    (இங்கேதான் நான் கூறிய புரட்சித் தலைவி வருகிறாள் / நீங்கள் கூறியதுபோல் பெண்கள் எதையும் மாற்றி அமைப்பவர்கள் என்று)
    சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
    தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
    நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
    நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) ////

    /////ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
    தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
    நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
    நீட்டினால் வணங்குவாய் போ போ போ/////

    //////சாதி என்பது உட்பிரிவுகள்.உதாரணமாகக் கோவிலைப் பெருக்குபவர் தெருவினை பெருக்குபவரைவிடத் தன்னை உயர் சாதியாகக் கற்பித்துக்கொள்வார்/////
    எனக்கு கோவிலில் கூட்டுபவரையும் தெரியாது.... கொடங்கியாடிப்பவரையும் தெரியாது...
    பாரதி அக்னிப் பிழம்பாய் பீறிட்டுக் கூறிய இதுமட்டும் தெரியும்....
    /////எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
    எல்லாரும் இந்திய மக்கள்,
    எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத/////

    ReplyDelete
  52. /////நான் மெளன சுவாமிகள் பற்றிய கட்டுரையில் வர்ணாஸ்ரமத்தில் உள்ள
    ஆக்கபூர்வமான முகத்தைக் குறிப்பிட்டேன்.அதனால் அதனை இப்போதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அந்தக் கொள்கை முற்றிலும் சரி என்றோ எழுதவில்லை.மனதால் நினைக்கவும் இல்லை.உயர்வு தாழ்வு கற்பிக்கவும் இல்லை.அப்படியெல்லாம் நான் கூறுவதுபோல ஒரு தோற்ற்த்தைப் பின்னூட்டத்தில் ஏற்படுத்திவிட்டார்கள்.//////

    ///// தேர் கட்டும் ஆகமவிதிகளில் நல்ல‌ பயிற்சியும் பட்டறிவும் உடையவர் சுவாமிகள். திருப்பதிபோன்ற பெரிய‌ கோவில்களுக்குக்கூட சுவாமிகள் தேர் அமைத்தார் என்று வாய் மொழிச்செய்தி உண்டு.தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம் என்பதும்,
    இப்பிறப்பிலேயே இறைவனிடம் கலந்து உறவாடும் ஆனந்த நிலையில் மூழ்கித்திளைக்கலாம் என்பதற்கும் மெளன சுவாமிகள் நல்ல எடுத்துக்காட்டு.///// !!!!!!ஆனால் பாரதி கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம்; என்கிறார்...!!!!!!
    நீங்கள் இங்கே நல்ல எடுத்துக் காட்டு என்று கூறுவது உங்களின் எண்ணம் என்றே யாருக்கும் தோன்றும்.... நீங்கள் தான் இடம் சுட்டி பொருள் விளக்குவதில் வல்லவர் ஆயிற்றே!!!!!... அதனால் தான் நான்...///"உள்ளே ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தி விட்டு.... என்று எழுத நேர்ந்தது...
    மாறாக.... இவைகள் மனித நாகரிக வளர்ச்சியில் அன்றைய தேவைக்கு சரியான ஒரு திட்டமிடல்... சரியான சமூகப்பார்வை; சாக்கடையானது... சாக்கடை அள்ளுபவன் சாக்கடையே அள்ளவேண்டும் என்பது தவறு என்றும்... !!!!!!பின்னர் வந்த கலியுக சுயநல சமுதாயம் வர்ணபகுப்பு என்பது பிறப்பால் என்று
    இரும்பு, கான்கிரீட் அளவுக்குக் கெட்டிப்படுத்தி எல்லோரையும் மூச்சுத் திணற வைத்து விட்டது.பிறப்பால் வர்ணம் என்ற கொள்கையை முற்றிலும் எதிர்கிறேன்.!!!!
    என்பதை எழுதியிருந்தால் சுயம் எதுவாக இருந்தாலும் இவ்வளவு பேசவேண்டி வந்திருக்காது...

    !!!!!!ஒரு கன்னத்தில் அடித்தால் என்ன? மறு கன்னத்தையும் காட்டுகிறேன்
    என்று சந்திரன் விட்டுக்கொடுத்துப் போவார். அவர் சுபக் கிரகமல்லவா? அதனால்தான் அப்படி. சான்றோர்களின் வழி!!!!! தவற்றை சூரியனாய் சுட்டிக் காட்டினாலும்..... பாரதிகண்ட சமுதாயத்தைப் பெரிதும் போற்றுபவன் நான் ஆகவே... சந்திரனை வருகிறேன்... உங்கள் மனம் புண்பட பேசுவதாக எண்ணினால் என்னை மன்னித்து விடுங்கள்...
    இந்த விவாதத்தை இத்தோடு நான் முடித்துக் கொள்கிறேன்....நன்றி வணக்கம்....

    ReplyDelete
  53. தமிழ்நாட்டு நடைமுறையை நீங்கள் அறியவில்லை என்றே நினைக்கிறேன். கூடியவரை தமிழகப் பிராமணர்கள் பொது இடங்களில் அவ்வாறு பேசுவதை தவிர்த்தே வருகின்றோம்//

    எல்லாருமே அப்படிக்கிடையாது என்பது என் கருத்து (என் கருத்து மட்டுமே). நீங்க என்னைவிட தமிழ்நாட்டில் அதிக காலம் இருப்பதால் உங்கள் அனுபவங்கள் வேறுபட்டிருக்கலாம். நான் ஒவ்வொரு வருடமும் ஊருக்குப்போகிறேன். நிறைய மனிதர்களுடன் பழகுகிறேன். ஆனால் ஒரு முறை கூட நீங்கள் சொல்வதுபோல் அனுபவம் ஏற்பட்டதில்லை. எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்களே. இந்த ஜாதி, மதம் இதெல்லாம் பயன்படுத்தி குளிர்காயறவங்க சில பேர்தான். சுயமா யோசிக்கும் தன்மை பெற்றவர்கள் அவங்க பின்னாடி போக மாட்டாங்க. நான் இப்பயும் ஊர்ல பொது இடத்தில் பேசும்போது கூட என்னோட பாஷைலதான் பேசறேன்.

    ReplyDelete
  54. நீண்ட நாட்க‌ளாக வடக்கேயே இருப்பதால்// இல்ல சார், இங்க நாங்கள் சந்திக்கும் விஷயங்கள் வேறு மாதிரி. அதாவது வட / தென்னிந்தியர்களுக்கு இடையேயான கலாச்சார வேறுபாடு. ஒரு ஸ்டேட் மக்கள் வேறொரு ஸ்டேட் மக்களை கிண்டல் செய்யும் வழக்கம். இங்கேயும் எல்லாரும் அப்படிக்கிடையாது என்பதுதான் என் கருத்து.

    அதற்காக தமிழ்நாட்டின் கலாச்சார விஷயங்கள் எதையுமே நான் விட்டுக்கொடுக்கவில்லை. இங்கே பெண்கள் திருமணத்திற்கு முன் போட்டு வைத்துக்கொள்ள மாட்டார்கள். பள்ளியிலும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் என் பெண் படிக்கும் பள்ளிக்கு இதற்காகவே போய் அவள் ஆசிரியையிடமும் / தலைமை ஆசிரியையிடமும் பேசினேன். இதுமாதிரி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  55. anthropology என்ற இந்தப் படிப்புத் துவங்கி 200 ஆண்டுக்குள்ளாகவே இருக்கும்//

    அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்களுக்கு தான் எந்த இனம்னு தெரியவே தெரியாதா? பண்டைக்காலங்களில் தமிழர்கள் ரோமானியர்களோடு வணிக உறவு வைத்திருந்தார்கள் அப்படின்னெல்லாம் இருக்கே, அப்ப அது? நிஜமாவே குழப்பமா இருக்கு, அதான் கேட்கிறேன்.

    ReplyDelete
  56. எத்தனை மஹான்களோ அத்தனை பேருக்கும் வணக்கம்"

    //திருவலத்தில் ஒரு சுவாமிகள் இருந்தார். மவுன சுவாமிகள். சாக்கினால் ஒரு கெள‌பீனம் மட்டும் அணிந்து கோவில் வாசலிலேயே இருந்தாராம். அவருடன் என் தந்தையாருடைய அனுபவம் இங்கே வாசிக்கவும்.
    http://classroom2007.blogspot.in/2011/02/blog-post_13.html

    தங்களுடைய பதிவுகள் அனைத்தையும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு கட்டுரையும் அதனளவில் நிறைவாக உள்ளது. பணிசிறக்க வாழ்த்துக்கள். //

    எமது பதிவில் தாங்கள் அளித்த கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்ற்கள் ஐயா..

    ReplyDelete
  57. //கட்டுரையாளர் அனுப்பியிருந்த திருவலம் சுவாமிஜியின் படத்தின் கோப்பு சிதிலமாகி இருந்ததால் வலையில் ஏற்றமுடியவில்லை //

    இணையத்தில் திருவலம் சுவாமிகளின் படம் கிடைத்தது .. எமது பதிவில் இணைத்திருக்கிறேன் ஐயா,,

    தங்கள் தகவலுக்காக ...

    http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_1242.html
    திருவலம் திருத்தலம் ..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com