3.9.24

Astrology: : கோடி நன்மை தரும் குரு மகா திசை!


Astrology: : கோடி நன்மை தரும் குரு மகா திசை!

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களின் முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய  பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள். அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால், அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும். ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும் குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்) நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும் பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்! 

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும் மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com