6.7.24

ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!


ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன் அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றி  கொண்டு "கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ ?" என்று கேட்டான் .

"இல்லை அர்ஜுனா,  நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுகிறேன்" என்றான் கண்ணன்.

"கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம், எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது."

"உறவு, பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா"

"அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச  பந்தம் அவர்களை விட்டு போகாது ".

"அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம்  செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது" என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டுகொண்ட  அர்ஜுனன் "என் மகனே அபிமன்யு" என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான் .

அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா "அய்யா, யார் நீங்கள்?  என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள்" என்றது.

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம், "பார்த்திபா பார்த்தாயா, உறவு பாசம் பந்தம்  உணர்வு  கோபம் அன்பு காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான்.  உடலை விட்டு உயிர் போய் விட்டால் ஏதும் அற்ற உடலுக்கும்  உணர்வு இல்லை. அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை  நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு—உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள் .

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு அதுவே வாழ்வின் அர்த்தமாகும்" என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏
--------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com