22.2.22

நடிகர் திலகத்தின் மேலான உழைப்பும், உயர்வும்!


நடிகர் திலகத்தின் மேலான உழைப்பும், உயர்வும்!

படப்பிடிப்பு நாளில், எந்த உடை அணிந்து நடிக்கிறாரோ, அது காட்சி முடியும் வரை கசங்காமல், அழுக்கடையாமல் பார்த்துக் கொள்வார் நடிகர்திலகம்.

ஒருசமயம் வாகினியில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கோடை வெயில் கொளுத்தும் வேளை அது. 
பகல் 12:00 மணியளவில் மின்வெட்டுக் காரணமாக படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யவில்லை. அரங்கினுள் புழுக்கம் தாளாமல் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.ஒருவர் மட்டும் உள்ளே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். அது நடிகர்திலகம்.
ஆம். நடிகர்திலகம் செட்டுக்குள் நுழைந்துவிட்டால் படப்பிடிப்பு இடைவேளை தவிர மற்ற சமயம் அரங்கைவிட்டு வெளியே வர மாட்டார்.
தயாரிப்பாளர் நடிகர்திலகத்திடம் சென்று " உணவு இடைவேளை விட்டு விடலாம். கரண்ட் வருவதற்கு எவ்வளவு நேரமாகுமோ, நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள் " என்று கூறியிருக்கிறார். அதற்கு, "ஒரு மணியாகட்டும். அதுவரை வெளியே வரமாட்டேன் " என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.சொன்னபடி ஒருமணிக்கே அரங்கைவிட்டு வெளியே வந்தார்.
அப்படி படப்பிடிப்பு தளத்தை கோவிலாக நினைத்தவர் நடிகர்திலகம்.

பாபு படப்பிடிப்பு  சென்னையில் நடந்த சமயம்,  ஒருநாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ரிக்ஷாவில் ஒருவரை அமர் வைத்து நடிகர்திலகம்  கடும் வெயிலில் இழுத்துக் கொண்டு செல்வதுபோல் படமாக்ககப்பட்டது. அதற்காக 'லாங் ஷாட்'டில் கூட அவர் டூப் போடவில்லை.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ரிக்சாவை இழுத்தபடி செல்வதெல்லாம் சரிபட்டு வராது என்று நினைத்த நடிகர் திலகம் இழுத்துக் கொண்டு ஓடினார். பாலத்தின்கீழ் வந்ததும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். இயக்குநர் ACT பதறிப்போய் விட்டார். "நமக்கு பழக்கமில்லாத வேலையில்லையா... அதான் நெஞ்சில்வலி வந்து விட்டது " என்று சிரித்தபடி சொன்னார் நடிகர் திலகம்.
ஆம். செய்த தொழிலில்  உண்மையாய் இருந்தவர் நடிகர்திலகம்.

வசந்த மாளிகை வளர்ந்த நேரத்தில்தான் அய்யனின் தாயார் காலமாகிப் போனார். இறுதிக் காரியங்கள் முடிந்த நான்காம் நாள் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் நடிகர்திலகம்.
பதினோராம் நாள் விசேஷத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கும்போது,  'இப்படி வரலாமா?' என்று தயாரிப்பாளர் ராமாநாயுடு கேட்டதற்கு, " வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைப்பு மிகவும் வாட்டுகிறது. அங்கிருப்பதைவிட இங்கு நடித்துக் கொண்டிருந்தாலாவது படவேலை சீக்கிரம் முடியும்." என்றார் நடிகர்திலகம்.

படப்பிடிப்பு நடந்த இடம் ஊட்டி.
துயரத்தின் ரேகையே தெரியாமல் அவர் அன்று நடித்தது "மயக்கமென்ன...இந்த மௌனமென்ன" பாடல் காட்சி!
      
இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே ..
செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்த அய்யனின் ரசிகர்களாய் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே...!
நன்றி-  சினிமா ரிப்போர்டர் 1991 ஜூன்
----------------------------------------------------------------------------
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com