30.4.21

எது உங்கள் கையில்?



எது உங்கள் கையில்?

பசியை கொடுத்தவனே உணவையும் கொடுப்பான் வலியை கொடுத்தவனே மீள வழியை கொடுப்பான். 

தேடல் மட்டுமே உன் கையில்.

இன்றைய சிந்தனை 
.................................................................

"தேடல் இல்லா வாழ்க்கை...!"
..........................................................

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

*"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல திசையறியாது மூழ்கிப் போகும்"*_

படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!, 

அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்...

கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...

பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...

வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசைதான்..

அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைதான் பரிசளித்திருக்கிறது...

கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள்,  அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகதான் இருக்கும்...

*"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லி கொடுக்காத பாடத்தை, ஒரு வருட தேடல் கற்று கொடுத்து விடும்...!*_

முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றிபெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...

உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்டவேண்டும். 

தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்த தேடல் மாறிக்கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்...

*ஆம் நண்பர்களே...!*

⚫ *தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களை தழுவும் வரை தேடிக்கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்...!*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com