9.2.21

மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!


மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!! 

*கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது  படக்குழு..* 

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்

இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர  முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

சங்கே  முழங்குஎன்ற படத்திற்கான பாடல் அது..! 

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர்பாடுவதாக வரும் பாடல்

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு  எழுதச் சொன்னால் எப்படி ..? 

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..! வேறு வழி இல்லை..!  படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்

சிரித்தார் கண்ணதாசன்

சில காலம் முன் அவர்  எழுதி இருந்த ஒரு கவிதை : "ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் சேர்ந்திருக்கின்ற வேளையிலே 

என் ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே எனை படைத்த இறைவன் கேட்பான்..”

 கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..! அப்படி  இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார்  என்றால்

புரிந்து கொண்டார் கண்ணதாசன்

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப்  பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி  இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்

கண்ணதாசனுக்கு  தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்

*“சிலர் குடிப்பது போலே நடிப்பார்*

*சிலர் நடிப்பது போலே குடிப்பார்”* 

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள்..! 

*“மதுவுக்கு ஏது ரகசியம் ?*

*அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்*

*மதுவில் விழுந்தவன் வார்த்தையை*

*மறுநாள் கேட்பது அவசியம் !”* 

ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த  வார்த்தைகள் :

*“அவர் இவர் எனும் மொழி*

*அவன் இவன் என வருமே”* 

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள்

*“நாணமில்லை வெட்கமில்லை*

*போதை ஏறும் போது*

*நல்லவனும் தீயவனே*

*கோப்பை ஏந்தும் போது”* 

சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை 

விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..? 

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி  சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..? 

எழுதிக் கொள்ளுங்கள்என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து  உதிர்ந்த வார்த்தைகள்

*“புகழிலும் போதை இல்லையோ*

*பிள்ளை மழலையில் போதை இல்லையோ*

*காதலில் போதை இல்லையோ*

*நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ

*மனம் மதி அறம் நெறி 

தரும் சுகம் மது தருமோ ?* 

*நீ நினைக்கும் போதை வரும்*

*நன்மை செய்து பாரு*

*நிம்மதியை தேடி  நின்றால்*

*உண்மை சொல்லிப் பாரு !”* 

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் 

கண்ணதாசன்

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?” 

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும்  என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;

சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..? 

இதோ.. அதை  கண்ணதாசனே சொல்லி இருக்கிறார்

வட்டிக் கணக்கே

வாழ்வென் றமைந்திருந்த

செட்டி மகனுக்கும்

சீர்கொடுத்த சீமாட்டி!

 

தோண்டுகின்ற போதெல்லாம்

சுரக்கின்ற செந்தமிழே

வேண்டுகின்ற 

போதெல்லாம்

விளைகின்ற நித்திலமே

 

உன்னைத் தவிர

உலகில்எனைக் காக்க

பொன்னோ பொருளோ

போற்றிவைக்க வில்லையம்மா!

என்னைக் கரையேற்று

ஏழை வணங்குகின்றேன்!”

 

ஆஹா..!

 

*வாழ்க  கண்ணதாசன் புகழ் !

வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!*

 

*நன்றி: எழுத்தாளர் :* *Vallam John*

-------------------------------------------------------

படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்

வாத்தியார்

====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே,
    மதுவும் மங்கையும் தான் உலகம் என்றிருந்த கால கட்டத்தில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் உணர்ந்த கவி(லை)யரசர்
    காஞ்சிப் பெரியவரைப் பார்த்துப் பேசியபின் தன் வாழ்வின் அத்நியாயத்தைப் புரட்டிப் போட்டாரே
    எத்தனை எத்தனை தத்துவங்கள் தந்தார்!💐
    எம்ஜிஆர் அவர்களும் திருந்திய மனிதர் தானே!💐
    அவர்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்று பட்டோர் எனவே தான் பதிவில் கண்ட காட்சிகள்
    அரங்கேறின.
    காலதேவன் வென்றானே! இரக்கமின்றிக் கவியரசரைக் கொன்டுபோக....
    கண்ணீர் கண்களை மறைக்கிறதையா ஆசானே... நிறுத்துகிறேன் வழியின்றி!

    ReplyDelete
  2. நல்லது. உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com