21.9.20

நமது வாழ்வியல் முறை!!!!


நமது வாழ்வியல் முறை!!!!          

புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது.

*பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?*

உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி.

அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான் அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம்.

புதிய வீட்டில் குடியேறும் போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும் போதே,

அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றி விடுகின்றன.

நாம் அதைச் சாப்பிடும் போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது.

நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது.

நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். 
வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது.

பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும் புத்துணர்வும் சமநிலையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால் தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்! 

*பூஜைக்கு எது அவசியம்.?*

மகா பாரதத்தில் ஒரு கதை வரும். 
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம். ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக் கொண்டிருந்ததை கண்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.

யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன , இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம்.

என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர். அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.

வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.

உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான். 
அது மிக எளிது.

பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான் 
அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.

இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி. 
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..

*சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?*

குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.

முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...

ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

அதனால் தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது . 


*திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன் ?*

மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். சுப நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிள்ளையார் பிடிப்பதிலிருந்தே மஞ்சளின் உபயோகம் ஆரம்பித்து விடுகிறது.

மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது.

அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில் மஞ்சள் பூசப்படும்.

திருமண பத்திரிக்கைகள் சம்பிரதாயங்களுக்காக உள்ளது மட்டுமல்ல. அதில் மனிதனின் நிகழ்வுகளும் மறைந்து கிடக்கிறது.

ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்த திருமணத்தை அன்று அச்சடித்த அழைப்பிதழ்களை தொட்டு பார்த்தவுடனே நேராக அனுபவிப்பது போன்ற சுகம் கிடைக்கும்.

கறுப்பு இருட்டு அண்டிய இடங்கள் விரைவில் அழிந்து விடும். ஒரு அறையை வெகுநாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தோமேயானால் அங்கே இருள் இருபத்தி நான்கு மணி நேரமும் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும்.

சிறிது சிறிதாக சுவர்கள் ஈரமாகி கரையான்கள் அரித்து அறை யாருக்கும் பயன்படாதவாறு ஆகிவிடும்.

மரணம் என்பது மறக்கபட வேண்டிய நிகழ்வு. இறந்து போனவனையே நினைத்து கொண்டிருந்தால் வாழ்பவன் பிணமாகி விடுவான்.

உயிர்கள் அணைத்து வாழ்விலும் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்றால் அதை எப்போதுமே நினைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அதனால் தான் மரணம் சம்மந்தப்பட்ட பொருட்கள்0 அனைத்தையும் விரைவில் அழிந்து போகுமாறு உருவாக்குகிறோம்.

கருமாதி பத்திரிக்கையில் பூசப்படுகின்ற கறுப்பும் அந்த காகிதத்தை விரைவில் செல்லரிக்க வைத்துவிடும். 


*சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?*

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....

இது சரியா தவறா ?!!

*முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?*

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது. 
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com