22.7.20

நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார். 

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா? 
----------------------------------------------------------------
படித்து ரசித்தது; பகிர்ந்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் குருவே 👍
    கொரோனா என்றாலே குலை நடுங்கும் இந்த சமயத்தில் அப் பெயரில் ஒரு கற்பனைக் கதையை நகைச்சுவையில் உருவாக்கி படிக்கும் வரை ஆனந்தம் தந்த கதாசிரியருக்கு
    இரு கரம் கூப்பி நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன்!
    அவரைக் கிடைத்தால் தெரிவியுங்கள்
    வாத்தியாரையா 👍

    ReplyDelete
  2. Super comedy iyya migavum radanayana commedy

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே 👍
    கொரோனா என்றாலே குலை நடுங்கும் இந்த சமயத்தில் அப் பெயரில் ஒரு கற்பனைக் கதையை நகைச்சுவையில் உருவாக்கி படிக்கும் வரை ஆனந்தம் தந்த கதாசிரியருக்கு
    இரு கரம் கூப்பி நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன்!
    அவரைக் கிடைத்தால் தெரிவியுங்கள்
    வாத்தியாரையா 👍///////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  4. ////Blogger sundari said...
    Good afternoon sir,/////

    வணக்கம் சகோதரி!!!

    ReplyDelete
  5. //////Blogger subathra sivaraman said...
    Super comedy iyya migavum radanayana commedy/////

    நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com