6.5.20

கல்லணையின் வரலாறு!!!!!


கல்லணையின் வரலாறு!!!!!

கரிகாலன் கட்டியக் கல்லணை ... !

கல்லணைப் பற்றிய ஒரு சிறு எளிய அறிமுகம்.

கர்நாடகமாநிலத்தில் பிரம்மகிரி குன்றுப் பகுதியில் தலைக்காவிரி என்னும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து  சுமார் 4400 அடி உயரத்தில் காவிரியாறு உற்பத்தியாகிறது.. 384 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூர் பகுதியை அடைகிறது.. நீலகிரியில் உற்பத்தி ஆகும் பவானி ஆறு, இப்போதைய மேட்டூருக்குத்  தெற்கே காவிரியுடன் கலக்கிறது.. கோவை மாவட்டத்து நொய்யல் ஆறும், மூனாறு பகுதி அமராவதி ஆறும் காவிரியில் கலக்கின்றன... இப்போ அகன்ற காவிரியாகி ஒரு மகா சமுத்திரமாக உருவெடுத்து திருச்சியை நோக்கி பயணிக்கிறது காவேரி .

திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் எலமனூறு அருகே, முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப்  பிரிகிறது. சற்று உயர்ந்த காவிரியும், தாழ்ந்த கொள்ளிடமும் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஓர் இடம்..

அந்த இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

 திருச்சிக்கு கிழக்கே 15 கி.மீ தூரமுள்ள கரிகாலன் அணை கட்டிய இடம்..

மழைக் காலத்தில்  காவிரி தனது வடகரையை உடைத்து கொள்ளிடத்தில் பாய்ந்ததால் ஏற்படும் அபரிமிதமான வெள்ளப்பெருக்கினால்  இப்பகுதியைச் சுற்றியுள்ள விவாசாய நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்..  இந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே கரிகாலன் காவிரியின் குறுக்கே கரை எழுப்பத் தீர்மானித்தார்..

கரைகளை உயர்த்தி வலுப்படுத்தவேண்டும். ஆற்றின் குறுக்கே தடுப்பும் கட்ட வேண்டும்.

அப்போதுதான் மிக வேகமாக வரும் நீரின் வேகத்தை குறைத்து. அபரிதமான நீரை தடுப்பணையின் மேல் வழிந்தோட செய்து, நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளப் பெருக்கும் ஏற்படாது.

அந்த மகா சமுத்திரம் போன்ற காவிரி ஆற்றின் குறுக்கே எதைக்கொண்டு தடுப்பு எழுப்புவது.? சாத்தியமான முயற்சியா..?

1800 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தான் கரிகாலன் .

எப்படி சாத்தியமாயிற்று..? அந்த சாதனை எப்படி நமக்குத் தெரியவந்தது..?  வழக்கம்போல் அதைச்சொல்வதற்கும் ஒரு ஆங்கிலேயர்தானே நமக்கு வேண்டும் .

வந்தார் ...ஆர்தர் காட்டன்.. மிகச்சிறந்த நீர்ப்பாசன பொறியியல் அறிஞர்.

1829 ம் ஆண்டு.. அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியின் நீர்ப் பாசனத்  தலைமைப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்...முதல் முறையாகக் கல்லணைக்கு வருகிறார்..

கி.பி. 1777 இல் மெக்கன்சி கையெழுத்து ஆவணங்களில் இவ்விடம்

 " அணைக்கட்டி ' என்று குறிக்கப்பட்டிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தார் காட்டன்.

அது என்ன அணைக்கட்டி..?  அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இப்பகுதியை ஆய்வு செய்கிறார்.  12 அடி ஆழ குழி தோண்டி பார்க்கும் போதுதான் நீருக்குள் இருக்கும் அந்த கட்டுமான ரகசியம் அவருக்குத் தெரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே, 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட பாறைக் கற்களால் கட்டப்பட்ட தடுப்புச்சுவரைக் கண்டார்..

காவிரி ஆற்றின் நீர் தடுக்கப்பட்டதையும், தேவைப்படும் பொழுது மதகுகளின் வழியே பாசனத்திற்கு வெளிவிடப்பட்டதையும் அறிந்தார்..

இது எவ்வாறு சாத்தியம்..? தண்ணீரின் குறுக்கே கற்கள் அணை  எப்படி..? இதன் அடித்தளம் எவ்வாறு இருக்கும்.? இதை எப்படி அமைத்தார்கள்.? எப்போது ? பல ஆண்டுகள் ஆய்வு நடத்தினார்..

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழர்களின் பொறியியல் அறிவு வெளிவந்தது.. உலக பொறியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..

ஆர்தர் வெளியிட்ட கல்லணையின் கட்டுமான இரகசியம் இதுதான்...

நாம் கடற்கரையில் நின்றிருப்போம்.. அலையடித்த நீர் நமது பாதங்களை தழுவும். அப்போது ஏற்படும். மணல் அரிப்பின் காரணமாக நமது பாதம் சற்று மண்ணில் புதையும்.. சற்று நேரம் இதே நிலை நீடித்தால், நமது பாதங்கள் ஒரு நிலைத்தன்மை பெற்று விடும். நமது பாதங்களை வெளியே எடுப்பதற்கு சற்று சிரமம் நேரும்.. இதுதான் கல்லணையின் மூலத் தொழில் நுட்பம்...

பெரிய பாறைக்கற்களை கொண்டு வந்து  நீருக்குள் போட்டார்கள்.. அது நீருக்குள் மூழ்கி தரைத்தளத்தை தொட்டு மண் அரிப்பின் காரணமாய் இன்னும் அமுங்கி ஒரு பலமான நிலைத்தன்மை பெறும்..பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒட்டுப்பசை கொண்ட ஒரு வித களிமண்ணைத் தடவி அடுத்த பாறை.. இதே முறையில் அடுத்தடுத்த கற்கள்.. மணற் பகுதியான அடிப்பகுதி இப்போது கருங்கற்களால் ஆன அஸ்திவாரமாகிவிட்டது..( நீரை வெளியேற்றி, மணல் பகுதியில் ஆழமாய் குழி வெட்டி, கம்பி ஜல்லி மணல் சிமெண்ட் கொண்டு பில்லர் போட்டுத்தான் இப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம்)

தொடர்ச்சியாய் கல்லின் மேல் கற்கள் போடப்பட்டு ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமாய் தடுப்பணை எழுந்தது.. இவ்வமைப்பை முழுதும் ஆராய்ந்த ஆர்தர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் வார்த்தை..

  " The. Grand Anaicut. "

மகத்தான அணை.

இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான தமிழனின் பொறியியல் திறன் வெளியுலகத்திற்கு தெரியவந்தது..

சர் .ஆர்தர் காட்டன் இவ்வாறு எழுதுகிறார்.

ஆழம் காண இயலாத மணற்படுகைகளில் நீருக்குள் எப்படி அடித்தளம் அமைப்பது என்பதை கல்லணை அமைப்பைப் பார்ந்து கற்றுக்கொண்டேன். இம்மகத்தான செயல் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பழமையான தொழில்நுட்பத்தில்தான் 1874 ம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே நான் தடுப்பணை ஒன்று கட்டினேன்.

அதன்பிறகு, கரிகாலன் கட்டிய அதே கல்லணையின் மேல், சில மாற்றங்கள்.. நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர், மதகுககள் , கல்தூண்கள்  அமைக்கப்பட்டன..

1840 ஆம் ஆண்டு இன்று நாம் காணும் 32 அடி அகல பாலம் கட்டப்பட்டது.

தமிழகரசும் கரிகாலனுக்கு மணிமண்டபம், உருவச்சிலை எடுத்து பெருமிதமும் கொண்டது.

மழைக்  காலங்களில் தண்ணீரை தேக்க, பாசனத்திற்குத்  தண்ணீர் திறப்பு என்று கல்லணை இன்றும் தன் பணியைத்  திறம்படச் செய்கிறது..

எல்லாவற்றுக்கும் முன்னோடி என்றுமே தமிழன்தான் என்பதற்கு மேலும் ஒரு சான்றுதான் கல்லணை..

ஆக்கம்: அன்புடன்.. மா.மாரிராஜன்.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir good information about out ancient culture thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ///////Blogger Shanmugasundaram said...
    Good morning sir good information about out ancient culture thanks sir vazhga valamudan//////

    நல்லது, நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  3. ////Blogger sundari said...
    Good evening sir,//////

    வணக்கம் சகோதரி!

    ReplyDelete
  4. அருமையான வரலாற்று பதிவு

    ReplyDelete
  5. /////Blogger தமிழ் மொழி said...
    அருமையான வரலாற்று பதிவு/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com