28.11.19

நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!


நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!

*கடும் கஷ்டம் அனுபவிக்கிறீர்களா? கடவுள் உங்களை கை விடமாட்டார்.!!*

நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘நமக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறான். அடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர். இதே போன்ற எண்ணம், மஹாபாரத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார். தை மாத ரத சப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார். ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.
நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டதா' என, கேட்டார்.

இதற்கு தருமன் சிரித்தான். ‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில் தானே நின்றோம். எங்களுக்கு உள்ள பங்கை  தரமறுத்து, துரியோதனன் துன்புறுத்தினான். தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா? அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன. தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்துவிட்டு, பதில் அளித்தார்.

'பேரக்குழந்தைகளே! நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தான், இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும், நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை. அதர்ம பாதையில் செல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?

13 ஆண்டு வனவாசம் இருந்த போது கூட, நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தீர்கள். ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?

எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டிருந்தான். உங்களுக்கு தீமை செய்வதில் தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினான்.

நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை, இறைவன் இருந்தான். ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான். பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையைவிட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான், கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளி தருவான், ஆனால், கைவிட்டுவிடுவான் என, கூறி முடித்தார் பீஷ்மர்.

உண்மைதான், ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், மனதில் எந்த  சந்தேகமும் வராது. கஷ்டம் கொடுத்த இறைவனுக்கு அதிலிருந்து நம்மை காப்பாற்றவும் தெரியும்... 

*அன்புடன் திருமலை*
-------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. Good morning sir Nice story excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir Nice story excellent thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. ஆஹா எவ்வளவு அருமையான கடை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com