18.8.16

படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்?


படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்? 

ஐந்தாம் வகுப்பு
-----------------------------
'அ' பிரிவு  
-----------------
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?"
_____________________
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;

கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
____________________
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
_____________________
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
_____________________
"பிளைட்  ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
____________-______
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
__________________
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.

-கவிஞர் நா. முத்துக்குமார்
===================================
மனதைத் தொட்ட வாசகங்கள்!




================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் குருவே!
    எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
    ஆனால்,ஒரு சிலரால் மட்டுமே காலச்சக்கரத்துடன் இணைந்து அல்லது எதிர்த்து வாழ்ந்து காட்ட முடிகிறது!?
    Everything is predestined என்பதும்
    பின்னாட்களில் புரிந்து கொள்கிறோம்!
    அழகான Quotations பதிவை நனறாக அலங்கரிக்கின்றது!

    ReplyDelete
  2. அன்புள்ள வாத்தியாரிற்கு
    பிரமாதம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  3. கவி அருமை குருவே...........
    தங்கள் பாணியில் சொல்வதானால்.....
    எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை...........நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....??? இருந்தும் முயற்சி திருவினையாக்கும்......என்று நம்புவோம்.

    அன்பு நன்றி ஐயா

    அன்புடன்
    விக்னசாயி.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,"வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசை மாற்றி போட"-எதார்த்தத்தை சொன்ன எளிமையான வரிகள்.சொன்னவரையும் விதி மாற்றிப்போட்டதுடன் விட்டுவைக்கவில்லை.

    ReplyDelete
  5. கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கவிதாஞ்சலி.

    நெஞ்சினில் நிந்தன் கவிதை
    நெருடிய தெனவோ உண்மை

    பிஞ்சினில் மறைந்து போனாய்
    பிள்ளைகள் இருவர் விட்டு

    நஞ்சினை அமுதம் என்று
    நாள்தொறும் பருகி நின்றாய்

    மஞ்சள் காமாலை வந்தும்
    மருந்தென மதுவைக் குடித்தாய்

    கெஞ்சியே கேட்ட பின்னும்
    கிஞ்சித்தும் இரக்க மின்றி

    கூப்பிடு அவனை என்று
    கூற்றுவன் ஆணை யிட்டான்

    திரைக்கென கவி வடிக்க
    திரண்டதோர் கூட்ட முண்டு

    நிறைந்த நின் குடும்பந்தன்னை
    கரைசேர்க்க யார்தான் உண்டு...

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Very Nice,Sir////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
    ஆனால்,ஒரு சிலரால் மட்டுமே காலச்சக்கரத்துடன் இணைந்து அல்லது எதிர்த்து வாழ்ந்து காட்ட முடிகிறது!?
    Everything is predestined என்பதும்
    பின்னாட்களில் புரிந்து கொள்கிறோம்!
    அழகான Quotations பதிவை நனறாக அலங்கரிக்கின்றது!/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. /////Blogger Rajam Anand said...
    அன்புள்ள வாத்தியாரிற்கு
    பிரமாதம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  9. /////Blogger Vicknaa Sai said...
    கவி அருமை குருவே...........
    தங்கள் பாணியில் சொல்வதானால்.....
    எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை...........நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....??? இருந்தும் முயற்சி திருவினையாக்கும்......என்று நம்புவோம்.
    அன்பு நன்றி ஐயா
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,"வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசை மாற்றி போட"-எதார்த்தத்தை சொன்ன எளிமையான வரிகள்.சொன்னவரையும் விதி மாற்றிப்போட்டதுடன் விட்டுவைக்கவில்லை.//////

    உண்மைதான். உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  11. //////Blogger mohan said...
    கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கவிதாஞ்சலி.

    நெஞ்சினில் நிந்தன் கவிதை
    நெருடிய தெனவோ உண்மை
    பிஞ்சினில் மறைந்து போனாய்
    பிள்ளைகள் இருவர் விட்டு
    நஞ்சினை அமுதம் என்று
    நாள்தொறும் பருகி நின்றாய்
    மஞ்சள் காமாலை வந்தும்
    மருந்தென மதுவைக் குடித்தாய்
    கெஞ்சியே கேட்ட பின்னும்
    கிஞ்சித்தும் இரக்க மின்றி
    கூப்பிடு அவனை என்று
    கூற்றுவன் ஆணை யிட்டான்
    திரைக்கென கவி வடிக்க
    திரண்டதோர் கூட்ட முண்டு
    நிறைந்த நின் குடும்பந்தன்னை
    கரைசேர்க்க யார்தான் உண்டு...////

    அவர் குடும்பத்தைக் கரை சேர்க்க - செந்தில்
    ஆண்டவன் அருள் உண்டு!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com