27.5.15

கவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.


கவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.

அதென்ன கூட்டுக் களிப்புப் பாடல்கள் என்கிறீர்களா?

ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளர்தான் அந்தச் சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது காதலன், காதலி இருவரும் சேர்ந்து பாடும் பாடலைத்தான் (Duet Songs) அவர் அப்படிச் சொன்னார்.

கவியரசர் இந்த டூயட் எனப்படும் இருவர் பாடும் பாடல்களைக் குழலும், யாழும் பாடும் பாடல்கள் என்று சொல்வாராம். ஆண் மகனைக் குழலுக்கும் பெண் மகளை யாழிற்கும் உதாரணப் படுத்தி அவ்விதம் சொல்லியிருக்கிறார்.

இன்று இந்தத் தலைப்பில் மிகவும் அற்புதமான பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். கிராம வாசிகள் உட்பட ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த பாடல் இந்தப் பாடல். இந்தப் பாடலிற்குப் பிறகுதான், இலக்கியவாதிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும், மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களும் கண்ணதாசன் அவர்களுடைய ரசிகர்களானார்கள்.

இதற்கு முன்பேயே, கவியரசர் அவர்கள், மதுரைவீரன், மகாதேவி போன்ற படங்களில் சிறப்பாகப் பல பாடல்களை எழுதியிருந்தாலும், இந்தப் பாடல் அமைந்த 'பாகப் பிரிவினை' படத்திற்குப் பிறகுதான் அவருடைய பெருமை தமிழக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

வாருங்கள் பாடலைப் பார்ப்போம்:
---------------------------------------
"ஆண்:
தாழையாம் பூமுடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து....
பெண்: நடை நடந்து....
ஆண்:
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பெண்: பொன்னம்மா
ஆண்:
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பெண்: என்னம்மா
(தாழையாம்)
பெண்:
பாளைபோல் சிரிப்பிருக்கு -
பக்குவமாய் குணமிருக்கு
ஆண்: குணமிருக்கு
பெண்: ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
ஆண்: கண்ணையா
பெண்: இந்த ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா
ஆண்: சொல்லையா
பெண்: (பாளைபோல்) தந்தானத்தானத் தானனே

ஆண்:
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபிமானங்களைக் காக்குமா?
தன்னதாதனன் (தாழையாம்)

பெண்:
மானமே ஆடைகளாம்
மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
(பாளைபோல்)

ஆண்:
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

பெண்:
மண் பார்த்து விளைவிதில்லை
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
(தாழையாம்)

ஆண்:(தாழையாம்) தன்னனே

படம்: பாகப் பிரிவினை - வருடம் 1959
-----------------------------
பெண்ணிற்குப் தென்னம் பாளை போன்ற் சிரிப்பும், நல்ல  குணமும், அழகும் இருந்தால் போதுமென்று சொன்னதோடு,  மானமென்ற ஆடைகளும், மரியாதை என்ற பொன்னகையையும்,  நாணத்தையும் ஒரு பெண் சீராகக் கொண்டுவந்தால் போதும்  என்று எழுதியதும், எங்கள் நாட்டு மக்கள்
குலப் பெருமையும்  அதுதான் என்று தமிழக மக்களின் கலாச்சாரத்தை உயர்வாகச்  சொன்னதும் தான் இந்தப் பாடலின் சிறப்புக்களாகும்.

தமிழக இலக்கியவாதிகளைத் திரும்பிப் பார்க்க வைத்த வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"மண் பார்த்து விளைவிதில்ல
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா"

செடி, கொடி எல்லாம் வைப்பவன் வைக்குமிடத்திலேயே வளரும். இந்த மண் அந்த மண் என்று அவைகளுக்குக் கிடையாது. அதுபோல
படரும் கொம்புகளும் அது மூங்கில் அல்லது வேறு எந்தக் குச்சியானாலும் அல்லது இரும்புக் கம்பியானாலும் பின்னிப் படர்ந்து கொள்ளும்.
அது போலத்தான் நமது பெண்களும் கட்டிக்கொடுக்கப் பெறும் இடத்தில் பின்னிப் பிணைந்து கொள்வார்கள்.

ஆகவே கன்னியும், பூங்கொடியும் ஒன்று. அவர்களிடம் ஏது களங்கம் என்று பெண்மையின் பெருமையைச் சொல்லிப் பாட்டை முத்தாய்ப்பாய்
முடித்தார் பாருங்கள் - இந்த நான்கு வரிகளால்தான் அவருடைய கவி மகத்துவம் இலக்கியவாதிளுக்கும் தெரிந்தது!

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. கண்ணதாசன் இன்றைய
    காலத்திற்கு பாடல் எழுதினால்

    எப்படி இருக்கும்
    என ஒரு கற்பனையாக சொல்லுங்களேன்

    லால்குடியாரின் எழுத்துக்களை பார்த்து
    நாள் பல ஆயிற்றே அவரிடம்

    ஒரு எட்டு போய் சொல்லுங்களேன். இந்த
    ஒரு படைப்பு அவருடையாதாகட்டும்

    ReplyDelete
  2. வணக்கம் ஆசானே.

    மனம் உடைந்து போகி இருக்கும் கட்டிளம் காளையருக்கு நம்பிக்கை ஊட்டும் பாட்டு

    இல்லை!
    இல்லை!

    கவிங்கர் கண்ணதாசனின்!
    நம்பிக்கை ஊட்டும் தாலாட்டு .

    நன்றி. வணக்கம் ஆசானே .

    ReplyDelete
  3. இதோ அந்த வரிகள் .......

    பணமில்லா ஆண்மகனை
    வேளை இல்லாதவனை
    பெண்கள் நினைப்பதுண்டோ - இவ்வுலகில்

    அரைகுறை ஆடைகளாம்
    அளவில்லாத ஆட்டங்களாம்
    ஆண்களுக்கு இணையாக இருந்தால் - போதுமே
    இந்நாட்டு பெண்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com