5.11.14

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள் பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!


பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள்
பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!

மனவளக் கட்டுரை

”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டால் பலருக்கும் சட்டென்று சொல்லத் தெரியாது. ஏனென்றால் பலருக்கும் அதீதமாக, பலவிதமான தேவைகள் உள்ளன. கேட்டால் பட்டியல் போட்டு அவர்கள் எழுதித் தரவே
பல மணித்துளிகளாகும்.

அனால் ஒரு கவிஞனைக் கேட்டபோது சட்டென்று இரண்டே வரிகளில்
அவன் பதில் சொன்னான்.

கேட்கப்பெற்ற  கேள்வி: மனிதனுக்கு என்ன தேவை? அவன் சொன்ன
பதில்:

காலையில் மலச்சிக்கலும்
இரவில் மனச்சிக்கலும் 
இல்லாத வாழ்க்கை வேண்டும்!”

என்னவொரு அசத்தலான பதில் பாருங்கள்.

ஆமாம். காலை எழுந்தவுடன், வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள Bowl விரிவடைந்து மலம் வெளியேறி விடவேண்டும். அப்போதுதான் மற்ற காலைக் கடன்களை எல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து, அன்றைய
வேலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ள முடியும். அதுபோல
இரவில் மனச் சிக்கல் இல்லாமல் இருந்தால்தான் நித்திராதேவி
நம்மை சீக்கிரம் அணைத்துக் கொள்வாள். இல்லை என்றால் அவள் போய்விடுவாள். நம்பாடு திண்டாட்டம்தான்!

இப்போதெல்லாம், பூவன் வாழைப்பழம், விளக்கெண்ணெய் போன்ற
இயற்கை மருந்துகளுடன், Acelac, Dulcolax, போன்ற அலோபதி
மருந்துகளும் உள்ளன. வயதானவர்களுக்கு மட்டுமே அவைகள்
சரியாக இருக்கும்.

சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கிரேவி. பரோட்டா என்று இரவில் வெட்டி
விட்டு காலை எட்டு மணி வரை தூங்கும் இளைஞர்களுக்கும், மத்திய வயதினருக்கும், அந்த மருந்துகள் எல்லாம் தேவைப்படாது.

சரி, சொல்லவந்த மேட்டருக்கு வருகிறேன்:

மனிதனுக்கு முதலில் என்ன வேண்டும்?

சின்ன வயதில் அரவணைத்து வளர்க்ககூடிய நல்ல தாய் வேண்டும்.

இளைஞனாக, நன்றாகப் படித்து, வேலையில் சேர்ந்த பிறகு, நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும். அதாவது அன்பான மனைவி வேண்டும்.
நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பாதிப் பிரச்சினைகள் தானாகச் சரியாகி விடும்.

நல்ல மனைவிக்கு அளவுகோள் என்ன? அதற்கு அளவுகோள், ஸ்கேல், அவுன்ஸ்கிளாஸ் எல்லாம் கிடையாது.

ஒரே வரியில் சொன்னால், அவனைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடிய
மனைவி வேண்டும். அவனுடைய நிலைமை தெரிந்த மனைவி
வேண்டும்.

”உங்களைக் கல்யாணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?”
என்று அவள் ஒருநாளும் புலம்பக்கூடாது.

மாதம் 20,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்குக்கூட,
இன்றைய விலைவாசிப் பேயால் பல உபத்திரவங்கள் உண்டு.
அதை உணராமல் பண்டிகை விசேடங்களுக்குப் பத்தாயிரம்
ரூபாயில் பட்டுப் புடவை கேட்டு நச்சரிக்கும் மனைவி கூடாது.

அதைத்தான் ஞானி ஒருவன் பாட்டில் வைத்தான். பாடலைப்
பாருங்கள்!

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம்
பயனில்லை, ஏழும் தானே!
           - விவேக சிந்தாமணி

தரித்திரம் அறியாப் பெண்டிர்’ என்று சொன்னான் பாருங்கள்.
அதுதான் சத்தியமான வார்த்தை. கணவனின் பொருளாதார
நிலைமை தெரியாத மனைவி என்று பொருள். சூழ்நிலை தெரியாத
பெண். அவளை வைத்துக்கொண்டு அவன் எப்படி அல்லல்பட
வேண்டும். சற்று யோசித்துப் பாருங்கள்!

தரித்திரம் அறியாத பெண் மனைவியாக வந்தால், கணவனின்
டெபாஸிட் காலியாகிவிடும்.

எந்த உணவாக இருந்தாலும் தொண்டைவரைதான் ருசி. அது
பாசுமதி அரிசி சாதமாகட்டும் அல்லது ஐ.ஆர் எட்டில் வடித்த
சாதமாகட்டும், கிடைப்பதை உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும். பசிக்குத்தான் உணவு: ருசிக்கு அல்ல!

தூக்கம்தான் முக்கியம். ஏ.ஸி அறையிலும், பஞ்சு மெத்தையிலும்
படுத்துப் பழகக்கூடாது. பாயில் படுத்துப் பழக வேண்டும். எங்கே
போனாலும் பாய் கிடைக்கும்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க சிறு வீடு இது மட்டும்தான்
அன்றாட வாழ்விற்குத் தேவை. ரோட்டி கப்டா மக்கான் என்று வட
இந்தியர்கள் சொல்வார்கள் அதுதான் முக்கியம். அதில் வசிதிக்கும்  ஆடம்பரத்திற்கும்  ஆசைப் படக்கூடாது.

பட்டினத்தடிகளைவிடவா பெரிய செல்வந்தர் இருக்க முடியும்.
கடைசியில் இறைவனின் பெருமையறிந்து, துறவறம் பூண்டு,
இறைவனைத் தேடியதோடு, எளிய வாழ்க்கையும் அவர்
மேற்கொண்டார்.

அந்தத் துறவு நிலையிலும், அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
பாடலைப் பாருங்கள்

உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

மனித வாழ்க்கையில் என்ன மிச்சமாகும்?

தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
       தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும் 
       சாம்பல்தான் மீத மாகும்
                          - கவியரசர் கண்ணதாசன் 

என்று கவியரசர் மீதத்திற்குக் கணக்குச் சொன்னார்!

அது இறக்கும் போது வரும் கணக்கு: இருக்கும்போது என்ன இருக்கும்? எப்போதும் ஏக்கம்தான் மேலோங்கி இருக்கும். அதுதான் முடிவில் மிச்சமுமாகும். நிறைவேறாத ஆசைகளால் ஏற்படும் ஏக்கம்தான்
அதிகமாக இருக்கும். ஆசைகளையும் அதனால் ஏற்படும்
ஏக்கங்களையும் விட்டொழியுங்கள். எளிய வாழ்க்கையில் அது சாத்தியமாகும். இருப்பது போதும் என்ற மனதில் ஏக்கத்திற்கு
இடமே இருக்காது.

ஆகவே எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதில்தான் நிமதியும் சந்தோஷமும் இருக்கும்

அது இல்லாதவர்கள், தலைப்பில் உள்ள பாடல் வரியையைத்தினமும்
பாடி முருகப் பெருமானைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நான்
பல்லாண்டு ஏங்கிவிட்டேன் வா முருகா!

கண்டிப்பாக அவர் உங்களுடைய வாழ்க்கையை சீராக்குவார்.
செம்மைப் படுத்துவார்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. Respected Sir,

    Happy morning... nice post...

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  2. ஒன்பது ருபாய் நோட்டு என்ற படத்தில் (தங்கர் பாச்சான் இயக்கியது) வைரமுத்து எழுதிய பாடல் :

    மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
    உப்பில்லாமக் குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
    பாயில்லாமப் படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயாவிற்கு மாணவனின் பணிவான வணக்கங்கள்.

    என்னுடைய தாயார் அடிக்கடி கூறுவார்கள். அது என்னவென்றால் பிள்ளையானது கடைசி காலத்தில்

    " ஒரு வாய் தண்ணீர் கொடுத்து "!

    " பெற்றோர்களை மோட்சத்திற்கு ",

    செல்லுங்கள் என்று வழி அனுப்பி வைப்பது ஆகும்.

    இந்த ஒரு பாக்கியம் இல்லாத பெற்றோர்களும், பிள்ளைகளும் மற்ற என்னதான் சகல சௌபாக்கியமும் கிடைத்தாலும் வீண் என்பது ஆகும்.

    இந்த ஒரு பாக்கியதிக்காக தான் அந்த காலத்தில் தவம் இருந்து ஆண் பிள்ளைகளை பெற்றோர் பெறுவது என்று அடிக்கடி கூறுவார்கள்.

    நாம் என்னதான் உதவ வேண்டும் என்று தவம் இருந்தாலும் ஒன்பது கிரக நாதர்களும் ஒத்துழைப்பு வேண்டும் . இல்லை எனில் ஒன்றுமே நடை பெறாது.சரி தானே ஐயனே!.

    இந்த கருத்தை ஒற்றுதான் விவேக சிந்தாமணி யில் அன்றே கூறி உள்ளார்கள் போலும் .

    நன்றி ஐயனே!.

    " ஆபத்துக்கு உதவாப் பிள்ளை ",

    அரும்பசிக்கு உதவா அன்னம்
    தாகத்தைத் தீராத் தண்ணீர்
    தரித்திரம் அறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன்

    " குரு மொழி கொள்ளாச் சீடன் "!

    பாபத்தை தீராத் தீர்த்தம்
    பயனில்லை, ஏழும் தானே!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... nice post...
    Have a pleasant day.
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger NAGARAJAN said...
    ஒன்பது ருபாய் நோட்டு என்ற படத்தில் (தங்கர் பாச்சான் இயக்கியது) வைரமுத்து எழுதிய பாடல் :
    மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
    உப்பில்லாமக் குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
    பாயில்லாமப் படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்/////

    பாடல் வரிகள் அருமை. பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. /////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயாவிற்கு மாணவனின் பணிவான வணக்கங்கள்.
    என்னுடைய தாயார் அடிக்கடி கூறுவார்கள். அது என்னவென்றால் பிள்ளையானது கடைசி காலத்தில்
    " ஒரு வாய் தண்ணீர் கொடுத்து "!
    " பெற்றோர்களை மோட்சத்திற்கு ",
    செல்லுங்கள் என்று வழி அனுப்பி வைப்பது ஆகும்.
    இந்த ஒரு பாக்கியம் இல்லாத பெற்றோர்களும், பிள்ளைகளும் மற்ற என்னதான் சகல சௌபாக்கியமும் கிடைத்தாலும் வீண் என்பது ஆகும்.
    இந்த ஒரு பாக்கியதிக்காக தான் அந்த காலத்தில் தவம் இருந்து ஆண் பிள்ளைகளை பெற்றோர் பெறுவது என்று அடிக்கடி கூறுவார்கள்.
    நாம் என்னதான் உதவ வேண்டும் என்று தவம் இருந்தாலும் ஒன்பது கிரக நாதர்களும் ஒத்துழைப்பு வேண்டும் . இல்லை எனில் ஒன்றுமே நடை பெறாது.சரி தானே ஐயனே!.
    இந்த கருத்தை ஒற்றுதான் விவேக சிந்தாமணி யில் அன்றே கூறி உள்ளார்கள் போலும் .
    நன்றி ஐயனே!./////

    உங்களுடைய அன்பவப்பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கண்ணன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com