26.6.11

எச்சதாற் காணப்படுவது எது?

--------------------------------------------------------------------------------------
எச்சதாற் காணப்படுவது எது?

வாரமலர்
------------------------------------------
இன்றைய வாரமலரை நண்பர் ‘முக்காலம்’ எழுதியுள்ளார். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
சமீபத்தில் சென்னையில் இருந்து மதிய நேரத்தில் என் ஊருக்குப் பயணம் செய்தேன்.சரியான வெய்யில்; புழுக்கம். சென்னையைக் கடக்கும் முன்னால் இடை வழியில் வயதான தம்பதியர் பேருந்தில் ஏறினார்கள். அன்று முகூர்த்த நாள் ஆகையால் பேருந்து நிரம்பி வழிந்தது. அந்தப் பெரியவர் தோளில் கனமான பையும், கையில் தடியுமாகத் தடுமாறிக் கொண்டு நின்றார். அவரை அழைத்து என் இருக்கையை அவருக்கு அளித்துவிட்டு நான் நின்று கொண்டேன். நன்றி சொல்லிவிட்டு அமர்ந்த பெரியவர் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து என்னுடன் பேசத் துவங்கினார்.

"சாரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! நங்கந‌ல்லூரா?"

"நங்கநல்லூருக்கு அடிக்கடி வருவேன். ஆனால் நான் நிரந்தரமாகச் சென்னையில் வசிக்கவில்லை."

"எந்த ஊருன்னு சொல்ல‌லாமோ?"

"பேஷா!சத்தியமங்க‌லத்திற்குப் பக்கத்தில் ஒரு கிராமம்."

"அப்படியா?சத்தியில் வக்கீல் ராகவனைத் தெரியுமோ? அவர் பிள்ளையும் வக்கீலாத்தான் பிராக்டீஸ்பன்றான்."

"நன்னாத்தெரியுமே! அவர்தான் எங்க‌ள் குடும்ப வக்கீல். தாத்தா காலத்திலிருந்து நிலம் நீச்சு அதிகம். அதைக் கட்டிக் காப்பாத்த அடிக்கடி சட்டத்தை உரசிக்க வேண்டியுள்ளது. அதனாலே வக்கீல் ராகவனை எங்க எஸ்டேட்
அட்வகேட்டா வைச்சுன்டுட்டோம்."

"ரொம்ப சந்தோஷம்! பாத்தேளா பேச்சுக் குடுத்தா நெருங்கி வந்துட்டோம். ராகவன் எனக்கு என்ன‌ சொந்தம் தெரியுமோ...?"

பெரியவர் சொன்ன சொந்த முறை எனக்கு ஒன்றும் விளங்க‌வில்லை.

என் பாட்டி சொல்வது போல,"ஆச்சாளுக்குப் பூச்சா மதனிக்கு ஒடப்பொறந்தா; நெல்லுக் குத்தற நல்லுவுக்கு நேரே ஓர்ப்படியா.."

அந்த சொந்தத்தை நான் சொன்னால் என் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து என் வீடு தேடி வந்து கல் எறிந்தாலும் எறிவீர்கள்.அதனால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

ராகவனைப்பற்றி நினைவு படுத்தியவுடன் என் மூளை ஆகிய கணினி 'பூட்' ஆகிவிட்டது.நினைவு மேலெழுந்து வந்தது.

ராகவன் ஊரிலேயே பெரிய வக்கீல். வயதிலும் மூத்தவர். உயர்நீதி மன்றத்துக்கு அடிக்கடி சென்று வாதாடக் கூடியவர். உச்ச நீதி மன்ற வழக்குறைஞர்களுடன் நல்லதொடர்பு. சத்தி நல்ல பணக்கார ஊர். வழக்கு வியாஜ்ஜியத்துக்குக் குறைவில்லை.அதனால் ராகவனும் வக்கீல் தொழிலிலேயே நிறைய சம்பாதித்து
செழிப்பாக வாழ்ந்தார்.

ராகவனுக்கு ஒரு பெண்.நல்ல அழகி.தன் அந்தஸ்த்திற்குத் தகுந்த மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தார். மண நாளும் வந்தது . காலையில் முகூர்த்தம் முடிந்து பெண் கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. உள்ளூர்
பிரமுகர்கள் எல்லாம் வந்து வாழ்த்திப் பரிசளித்து, விருந்துண்டு தேங்காய்களைக் கவர்ந்து கொண்டு விடை பெற்றுச் சென்று விட்டனர்.

மாலையில் நலங்கு என்ற சம்பிரதாயத்திற்காகப் பெண் மாப்பிள்ளையை அழைத்து வரவேண்டும்.மூன்றாவது மாடியில் தங்கியிருந்த மணமகனைத் தோழியருடன் சென்று நலங்குக்கு அழைதாள் மணப்பெண்.சம்பிரதாயமாகக் கொஞ்சம் பிகு செய்து கொண்ட மாப்பிள்ளை சம்மதித்து எழுந்து பெண்ணுடன் படி இறங்கினார்.சற்றும் எதிர்
பார்க்காமல் கால் இடறிப் படிகளில் உருண்டார். தலையில் அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டது உடனே காரில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவமனையில் "வரும் போதே இறந்துவிட்டார்" என்று பிரகடனம் செய்தார்கள்.

ஊர் முழுவதும் செய்தி பர‌வியது.ஊரே அழுதது. சில விஷமிகள் "பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. கட்டாயக் கல்யாணமாதலால் பெண்ணே தள்ளிவிட்டு விட்டாள்." என்று கட்டி விட்டு விட்டார்க‌ள்.பல விதமான
கதைகள் உலவின.பத்திரிகையில் வரும் கற்பனைத் திகில் கதைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்ற பல திடுக்கிடும் சம்பவங்களுடன் பல மாதங்கள் இது பற்றி சந்துமுனைகளில் அலசப்பட்டது.
************************************************************************
இப்போது பேருந்தில் கூட்டம் குறைந்துவிட்டது.பெரியவரிடம் எனக்கும் அமர இடம் கிடைத்தது.

"என்ன பேச்சையே காணும்."என்று மீண்டும் துவங்கினார் பெரியவர். மனதில் ஓடிய பழைய‌ காட்சிகளை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்த போதே அடுத்த தலைப்புக்கு மாறினார் பெரியவர்.

"நாங்கள் உள்ளகரத்தில் இருக்கோம்.ஆயில் மில் பேருந்து நிலையம் தெரியுமா? அது பக்கத்தில் டாக்டர் ராஜகோபாலன் தெரு."

மீண்டும் எனக்கு நினைவுக்கு வேலை கொடுத்தார் பெரியவர். டாக்டர் ராஜகோபாலன் வேறு யாருமல்ல. என்னுடைய பெரிய மாமனார்.சுமார் 25 வருடத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.

"நல்ல டாக்டர் அவர். அந்தக் காலத்து எல் ஐ எம்.அதிகமாக மருந்து கொடுத்து செலவு வைக்க மாட்டார். கை வைத்தியம் போல எதோ கொஞ்சம் மருந்திலேயே குணப்படுத்தி விடுவார்.பணமும் இப்போ மாதிரி அதிகம் பிடுங்க‌ மாட்டார். சொல்பத் தொகைதான் கொடுப்போம். கொடுத்ததை வாங்கிக்கொண்டு உண்மையான சேவை
செய்வார்" என்றார் பெரியவர். "அவருடைய நினைவாக தெருவுக்குப் பெயர் வைத்துள்ளோம்."

என்னுடைய உறவினர் ஒருவர் தான் வழ்ந்த பகுதியில் இன்னும் புகழோடு மக்கள் மனதில் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியில் மூழ்கி டாக்டர் ராஜகோபாலனின் நல்லியல்புகளைப் பற்றி சிந்தனை ஓடியது
************************************************************************
"என்ன யோசனை ?" மீண்டும் சிந்தனையைக் கலைத்தார் பெரியவர்.

"உங்க‌ளுக்கு நங்கந‌ல்லூர் நல்ல பழக்கம் என்றால், எஞ்சினியர் கந்தசாமியைத் தெரியுமோ?" என்று பேச்சுக்கொடுத்தார் பெரியவர்.

என்ன ஆச்சரியம்!? அவரையும் நான் அறிவேன்.

அது ஒரு தனிக்கதை.

வீட்டுக் கடன் கொடுப்பது பரவலாக்கப்பட்ட நேரத்தில் வீடு கட்ட ஒப்பந்தக்காரராக  இயங்கியவர் எஞ்சினியர் கந்தசாமிதான்.நிறைய வீடுகள் கட்டப்பட்டன.நங்கநல்லுரில் உள்ள தனி வீடுகள் பலதும் கந்தசாமி கட்டியதுதான். நல்ல சம்பாத்தியம்.

என்னமோ ஒரு வக்கிர புத்தி.குடும்பம், குழந்தைகளைத் தவிக்க விட்டு,அவரிடம் வேலைக்கு வந்த ஒரு கூலிக்கார பெண்ணுடன் தலைமறைவு ஆனார் எஞ்சினியர்.அரபு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது.
************************************************************************
சிந்தனையில் இருந்த என்னை "சார், சார் நான் இறங்க‌ வேண்டிய இடம் வந்தாச்சு. போயிட்டு வரேன்"என்று உரக்கக் கூவினார் பெரியவர்.

"ரொம்ப சிந்தனை செய்கிறீர்கள் சார். மூளை கொதிச்சுப்போயிடும். சிந்தனையை ரொம்ப ஓட்டாதீர்கள்."என்று இலவச‌ அறிவுரை வழங்கிவிட்டுப் போனார் பெரியவர்.

மூன்று விதமான ஹானஸ்டு ஃப்ரஃபொஷனில் இருந்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நிற்கிறார்கள்.

"எச்சதாற் காணப்படும்"என்று மனதில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஏன் என்று சொல்லுங்களேன்.
‍++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிகு:டாக்டர் ராஜகோபாலன் மட்டும் உண்மைப்பெயர். மற்றவை ஊர், பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. சம்பவங்கள் நடந்தவை.
ஆக்கம்: 
முக்காலம் 
(புனைப்பெயர் - உண்மைப் பெயரை அவர் தரவில்லை )

       

வாழ்க வளமுடன்!

2 comments:

  1. அன்புடன் வணக்கம்
    நல்லா சம்பவங்களை கோர்வையாக சொல்லி இருகிறீர்கள் அருமையாக கதை எழுதலாம்
    ம்ம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்தப்பதிவுக்கு
    தக்கார் தகவுஇலார் என்பது அவரவர்
    எச்சத்தால் காணப் படும்
    என்னும் திருக்குறள் பொருந்தும் என நினைக்கின்றேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com