6.5.11

உயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை!
வெள்ளி மலர்

ஆன்மீகம் என்றாலே மிகவும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்; வேடிக்கை வினோதங்களுக்கு வேலை இல்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.

நீண்ட முகம், தொங்கிய முகம், கவனமின்மை, எதிலும் ஆர்வம் அற்ற ஒரு விரக்தியான மனோநிலை, 'என்னாத்த‌ வந்து என்னாத்த போயி'என்று 'என்னாத்த க‌ன்னையா'வைப் போல ஒரு  சலிப்புத்தன்மை, இதெல்லாம் அவியலாகக் கலந்தது போன்ற ஒரு பேச்சும், தோற்றமும் கொண்டிருந்தால் அது ஆன்மீகம் என்று ஒரு போலி எண்ணம் பரவலாக உள்ளது.

ஆன்மீகம் என்பது நம் மரபில் அழுகை அல்ல. சில குழுக்களில் அழுவதற்கென்றே அழுகை வீடு என்று அறிவுப்புப் பலகையே போட்டு வைத்து இருப்பார்கள் கொஞ்சம் துக்கமான சமயத்தில் மனம் விட்டு அழுதுவிட்டால் துக்கம் மட்டுப்படும் என்பது மனோ தத்துவம்.ஆனால் ஆன்மீக வாதி எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்பது சரியான சந்தேகமே.

நமது மரபில் அழ வேண்டிய தருணத்தில் கூட அழுகையை ஊக்குவிக்க கூலிக்கு ஆள் அமர்த்துவது உண்டு.ஒப்பாரி, பிலாக்கணம் பாடும் மூதாட்டிகளுக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.இந்த மரபைப் பற்றிப் பலரும் ஆய்வு செய்துள்ளனர். 

நமது மரபில் ஆன்மீகம் என்பது ஆனந்த அனுபவம்.பரமானந்தம் என்றும், பிரம்மானந்தம்  என்றும், நித்யானந்தமென்றும் பல வகையில் 'ஆனந்தம் ஆன‌ந்தம்' என்றே கொண்டாடுகின்றோம்.

இங்கேதான் ஆன்மீகத்தோடு ஆட்டம் பாட்ட‌ம் கொண்டாட்டம்,இசை, கலை, எல்லாம் உண்டு.

கண்ணன் என்னும் கருந்தெய்வம் என்று கண்ணனை ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவும், காதலனாகவும், குறும்புக்காரனாகவும் பாவிக்கும் மனோநிலை நம்முடைய மரபு.

எனவே 'சீரியஸ்னெஸ்'தான் ஆன்மீகம் என்பது நமது மனோபாவம் அன்று. இதை மனதில் பதித்துக் கொண்டு மேற்கொண்டு படியுங்கள். 

அந்த ஆசிரமத்தில் இளைஞர்களாகத் துறவிகள் கூடித் தவம் இயற்றி வந்தார்கள்.அவர்கள் ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரிப்பார்கள்.ஒருவரை ஒருவர் காலை வாரும் படி பேசி மகிழ்வார்கள்.வாலிபால் விளையாடுவார்கள்.மல்யுத்தம் பழகுவார்கள்.

அவர்களில் ஒருவர் அதிகமாகப் பயணம் மேற்கொள்வார். பல ஊர்களுக்கும் போய்விட்டு வந்து தன் தோழர்களுக்குத் தன் பயண அநுபவத்தை விலாவாரியாகச் சொல்லுவார்.அவர் பேசுவது ஒரு குழந்தை பேசுவது போல இருக்கும். கண்கள் விரிய ,இழுத்து இழுத்து அவர் பேசுவதை அனைவரும் வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

ஒருசமயம் அவர் திபெத்துக்குச் சென்று திரும்பினார். சரியாகச்சொல்லுவதாக இருந்தால் உயிர் தப்பி ஓடி வந்தார்.

திபெத்தில் இருந்த பல புத்தர் ஆலயங்களுக்குச்சென்றுள்ளர். மடாலயங்களைப் பார்த்துள்ளார்.

அந்த பெள‌த்த ஆலயங்களின் செல்வச் செழிப்பையும்,வெளியில் மக்களின் வறுமையையும் ஒப்பு நோக்கியுள்ளார்.அவர் மனதில் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று தோன்றிவிட்டது.

பார்ப்பவர்களிடம் எல்லாம் இந்த முரண்பாட்டைப் பற்றிப் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். செய்தி பெளத்த குருமார்களுக்கு எட்டியுள்ளது. யாரோ ஒரு புரட்சிக்காரன் கடைவீதியில் மக்களைக் கூட்டித் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறான் என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டது.

நமது சாதுவை அவர்கள் மெதுவாக மடாலயத்திற்கு அழைத்துச்சென்றார்கள். ஓர் அறையில் உட்கார வைத்து விட்டு, உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் தேன் எடுத்து வந்தார்கள்.கூடவே ஒரு கத்தியும்! இரண்டையும் நம் சாது முன்னால் வைத்துவிட்டு," நாங்கள் ஒரு மந்திரம் சொல்லுவோம். அதைச் சொல்லி முடித்தவுடன் நீங்கள் தேனை கத்தியால் தொட்டுத் தொட்டு நாக்கில் தடவி சாப்பிட வேண்டும்.தேன் சாப்பிட்டு முடிக்கும் வரை நாக்கில் ரத்தம் வராமலிருந்தால் உம்மை உண்மையான துறவி என்று ஒப்புக் கொள்ளுவோம்.இல்லாவிட்டால் நீர் போலிச் சன்னியாசி என்று கூறி விடுவோம்.அதுவும் அல்லாமல் அந்தக் கத்தியாலேயே உமது நாக்கை அறுத்து விடுவோம்.என்ன சவாலுக்குத் தயாரா?" என்ற‌னர்.

முதலில் நமது சாதுவுக்குத் தேனை சாப்பிட ஆவல் எழுந்ததாம். அப்புறம்தான் அவருக்குப் புரிந்ததாம், தன் நாக்கை வெட்டிவிட போட்ட சதி என்பது.

உடனே சுதாரித்துக் கொண்டு,"ஹீ..ஹீஈ.நான் ச்சும்மா.. சன்னியாசி யெல்லாம் இல்லை...தேனும் வேண்டாம் கத்தியும் வேண்டாம்" என்று அங்கிருந்து ஓட்ட‌ம் பிடித்தாராம். அங்கே பிடித்த வேகம் மறுபடியும் கொல்கத்தாவில் தன் சகாக்கள் தங்கியுள்ள மடத்திற்கு வந்து சேரும் வரை குறையவில்லையாம்.

"என்ன சுவாமி!ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடிவருகிறீர்?"என்று சகாக்கள் கேட்டார்கள்.

தன் வழக்கமான பாணியில்,இழுத்து இழுத்து நடந்ததையெல்லாம் சொன்னார் நமது சாது. "நாக்கு அறுபட்டு இருந்தால் உங்க‌ளோடு எல்லாம் நான் எப்படி பேசமுடியும்?"

"உண்மையாகவே உமது நாக்கு வெட்டப் பட்டது என்று நினைத்துக் கொண்டு பேசும் பார்ப்போம்" என்று ஒரு துறவிச் சகோதரர் கேட்டார்.

நமது சாதுவும் வெள்ளந்தியாக நாக்கை உள் நோக்கி மடித்துக்கொண்டு
"அழ்,ழா ழ ழ ழழ்ழ்ழ் க்க்க்க்க்ப்ப்ப்ப்ப்ப்ழ்ழ்ழ்ழ்" என்று உளறிக் கொட்டினாராம்.

கேட்டு மகிழ்ந்த‌ சகோதரத் துறவிகள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்.

அது முதல் நமது சாது எதிரில் வந்தால் "அழ்,ழா ழ ழ ழழ்ழ்ழ் க்க்க்க்க்ப்ப்ப்ப்ப்ப்ழ்ழ்ழ்ழ்" என்று ஒலி எழுப்புவார்களாம். நமது சாதுவும் அவர்களோடு சேர்ந்து வயிறு குலுஙக‌ சிரிப்பாராம்.

இதில் நமது சாது என்பவர் ஸ்ரீமத் சுவாமி அகண்டானந்தர். ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்.மற்றவர்கள் அவருடைய 15 சக சன்னியாசிகள்.

ஆக்கம்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2




புகழ் பெற்ற பாடல்கள்

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?

இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!

"கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்
     வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.

இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்.

உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து உண்கிறோமே அதைப்போல!

சில பாடல்கள், பாடலின் கருத்து - அமைப்பு, பாடுபவர்,பாவம், உடன் சேர்ந்து ஒலிக்கும் இசைக்கருவிகள், என்று எல்லாம் சேர்ந்து சிறப்பாக அமைந்தால்தான் நம் மனதை ஈர்க்கும். ஆனால் பக்திப்பாடல்களுக்கு அந்த வரைமுறை கிடையாது!

பக்தி ஒன்றுதான் அதற்கு அளவுகோல்!படிக்கும்போதே அது நம் மனதிற்குள் வந்து அமர்ந்துவிடும்!

இப்போது பாடலைப் பாருங்கள்:


காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் -  கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!


      - பேராசிரியர், முனைவர் திரு.அர.சிங்காரவடிவேலன் அவர்கள் எழுதி 1973ம் ஆண்டு வெளியிடப்பெற்ற 'செந்தூர் முருகன் அந்தாதி' என்ற 101 வெண்பாக்களைக் கொண்ட நுலில் உள்ள மிகவும் சிறப்பான பாடல்களில் ஒரு பாடல்

அந்த அந்தாதி நூலின் துவக்கப் பாடல்

நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
வாழும் முருகா வரமருள்வாய் -  சூழும்
திருச்சீர் அலைபோலச் சிந்துதமிழ்ப் பூவால்
அருச்சனைகள் செய்திடவே ஆர்த்து.

சீர், சந்தம், எதுகை மோனை, கருத்து என்று எல்லாமே எவ்வளவு அசத்தலாக இருக்கிறது பார்த்தீர்களா?

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

14 comments:

  1. ////ஆன்மீகம் என்றாலே மிகவும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்; வேடிக்கை வினோதங்களுக்கு வேலை இல்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.

    நீண்ட முகம், தொங்கிய முகம், கவனமின்மை, எதிலும் ஆர்வம் அற்ற ஒரு விரக்தியான மனோநிலை/////

    உண்மைதான், பலரும் இப்படி இருந்ததை/ இருப்பதைக் காண்கிறோம்.... அது யோகிகளின் அமைதியைக் கண்டு அவர்களைப் போல் தம்மையும் தோற்றத்தில் காண்பித்துக் கொள்ளச் செய்யும் முயற்சி என நினைக்கிறேன்...

    "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்."

    துறவி தன்னை (நாவைக்) காத்துக் கொள்ள யாதொருவருக்கும் தீமையில்லாப் பொய்யை சொல்லித் தப்பித்து இருக்கிறார்...

    நன்றி கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம் மிக அருமையான பதிவு...அடியார்கள் லக்ஷணம் பத்து என்றவிடத்தில் ///மெய் விதிர்த்து ஆனந்த கண்ணீர் சொரிதல் .. இந்த கண்ணீர் அந்த கணக்கில் வராது! ஆனந்த நிலை என்றுதானே சொல்லுகிறோம்.. சரிதான?

    ReplyDelete
  3. "உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு"

    என்ற குறளினை சிந்தனைக்கு எதுவும் சொல்லாமல் வருகை பதிவினை தருகிறோம்..

    ReplyDelete
  4. புகழ் பெற்ற பாடல்கள்
    இந்த பகுதி வந்து எத்தனை நாட்களாகின..

    திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

    என்ற சூலமங்கலம் சகோதரியாரின் குரலில் வரும் அந்த பாடலுக்காக
    காத்திருக்கிறோம்..

    எமது ஒலிப்பேழையில் வந்தாலும்..
    வகுப்பறையில் வர விரும்புகிறோம்..

    ReplyDelete
  5. //நமது மரபில் அழ வேண்டிய தருணத்தில் கூட அழுகையை ஊக்குவிக்க கூலிக்கு ஆள் அமர்த்துவது உண்டு.ஒப்பாரி, பிலாக்கணம் பாடும் மூதாட்டிகளுக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.இந்த மரபைப் பற்றிப் பலரும் ஆய்வு செய்துள்ளனர். //

    உண்மைதான் ஐயா எங்களது சேலம் மாவட்டம் ( எடப்பாடியில் ) இதுபோல மரணம் நிகழ்ந்த இல்லங்களில் அற்புதமான பிரம்மாண்டமான லவுட் ஸ்பீக்கர் வைத்து சோகப் பாடல்களை பாட வைத்து விடுவார்கள்

    வந்தவர்களோ பேசிக் கொண்டிருப்பார்கள் ?!

    நீங்கள் சொல்வது உண்மைதான் இன்று ஆன்மீகத்தில் போலிகள் தான் அதிகம்.

    ReplyDelete
  6. //தேனை கத்தியால் தொட்டுத் தொட்டு நாக்கில் தடவி சாப்பிட வேண்டும்.தேன் சாப்பிட்டு முடிக்கும் வரை நாக்கில் ரத்தம் வராமலிருந்தால் உம்மை உண்மையான துறவி என்று ஒப்புக் கொள்ளுவோம்.இல்லாவிட்டால் நீர் போலிச் சன்னியாசி என்று கூறி விடுவோம்.அதுவும் அல்லாமல் அந்தக் கத்தியாலேயே உமது நாக்கை அறுத்து விடுவோம்.என்ன சவாலுக்குத் தயாரா?" என்ற‌னர்.//

    இவர்களும் சந்நியாசிகளா ?
    பெரியபுராணத்தில் ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது...

    " கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் "

    ReplyDelete
  7. //நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
    வாழும் முருகா வரமருள்வாய்//

    ஆடும் பரிவேல் அணிசேவல் என பாடும் பணியே பணியாய் அருள்வாய்

    என்னும் கந்தர் அனுபூதி - யும் நினைவுக்கு வருகிறது ஐயா..

    ReplyDelete
  8. பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆலயத்தையும் வெளியிட்டு என் பதிவையும் வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி!பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கெல்லாம் வந்தனம்.

    அந்தாதிப் பாடல் அருமை!

    ReplyDelete
  9. அன்புடன் வணக்கம்
    *** உமது நாக்கை அறுத்து விடுவோம்.என்ன சவாலுக்குத் தயாரா?" என்ற‌னர்.//இவர்களும் சந்நியாசிகளா ?
    பெரியபுராணத்தில் ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது...
    " கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம்***---தற்சமயம் பிரபலமாக இருக்கும் ஒரு [ஆன்மீக] பொது வாழ்க்கை பெரியவர் சமண மடத்திற்கு சென்று இருக்கிறார்!!.. அங்கே ஒரு மர கட்டிலில் இரண்டு பாவப்பட்ட மனிதர்கள் புழுவாக துடித்து கொண்டு இருந்தார்களாம். என்ன என விசாரித்த போது அந்த கட்டிலில் மூட்டை பூச்சிகள் உணவில்லாமல் வெகு நாட்களாக உள்ளன... ஆகவே பணம் கொடுத்து இரண்டு மனிதர்களை அந்த பூச்சி க்கு ரத்த உணவு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம் எப்பூடி...எங்க காருண்யம் !!!.இவர் சொன்னாராம் அடே பதர்களே.... பூச்சிக்கு உணவு சரி.???... அந்த மனிதர்கள் படும் துன்பம்..???எங்கே போய் முட்டுவது இவர்களின் அறிவுஜீவிதனத்தை.???

    ReplyDelete
  10. வணக்கம் கணபதி சார்,

    //ஆகவே பணம் கொடுத்து இரண்டு மனிதர்களை அந்த பூச்சி க்கு ரத்த உணவு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம் எப்பூடி...எங்க காருண்யம் !!!.இவர் சொன்னாராம் அடே பதர்களே.... பூச்சிக்கு உணவு சரி.???... அந்த மனிதர்கள் படும் துன்பம்..???எங்கே போய் முட்டுவது இவர்களின் அறிவுஜீவிதனத்தை.???//

    இந்த கொடுமையை எல்லாம் எங்கு போய் சொல்வது ?

    அதனால்தானே என்னமோ ?
    நமது முன்னோர்கள் அன்பே சிவம் என்றும் - சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை என்றும் சொன்னார்களோ ?

    கணபதி ஐயா நீங்க எல்லா நிகழ்ச்சிக்கும் தொடர்புடைய ஒரு செய்தியை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ..

    எடுத்துக்காட்டாக, அனுராதா - வில்
    மாலைமாற்று பதிகத்திற்கு பதில் தந்த போது,

    தா திதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூ திதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
    தித்தித்த தோதித் திதி.

    எனக் கொடுத்தீர்கள்.

    சிவயசிவ - வில்
    கோமுகை - மனோன்மனி என்ற செய்தியை கொடுத்திருந்தீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி ஐயா .. தங்களுடைய ஞாபக சக்தியைக் கண்டு ஆச்சரியப் படுகிறேன் ஐயா.

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம் sri.siva si ma janakiraman. sir.,
    ** அனுராதா - வில்
    மாலைமாற்று பதிகத்திற்கு பதில் தந்த போது,
    தா திதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூ திதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
    தித்தித்த தோதித் தித-=எனக் கொடுத்தீர்கள்.**
    இந்த கருத்துரை அடியேனுடையது இல்லை.
    ""நான் அவரில்லை. நன்றி.."".

    ReplyDelete
  12. ////"இந்த கருத்துரை அடியேனுடையது இல்லை.
    ""நான் அவரில்லை. நன்றி..""./////

    ஆம்! அந்தப்பாடலைப்பதிவு செய்து விளக்கமும் அளித்தவர் தஞ்சாவூர் பெரியவர்.

    எப்படியோ அனுராதா வகுப்பறையில் வந்து மீண்டும் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    http://jeyalakshmi-anuradha.blogspot.com

    ReplyDelete
  13. IMPORTANT NEWS: BEWARE OF AN ANOUNCEMENT IN FACE BOOK, TWITTER etc., INVITING YOU TO CLICK TO WITNESS THE SHOOT OUT VIDEO OF OSAMA. THAT IS A VIRUS ATTACK CATCH. For further details see this link.

    http://winmani.wordpress.com/2011/05/03/osama-binladen-killed-video/

    ReplyDelete
  14. நன்றி ஜெயலட்சுமி
    வெளியிட்ட வாத்தியாருக்கும் நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com