10.4.11

சிரிக்க மட்டுமே இது: வேறு விவகாரம் வேண்டாம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வாரமலர்:

சிரிக்க மட்டுமே இது: வேறு விவகாரம் வேண்டாம்!

நகைச்சுவை, நக்கல், நையாண்டி என்று ஒன்றையும் விடாமல் ரசிக்கும் அன்பரா நீங்கள்? வாருங்கள் உங்களுக்காகத்தான் இது எழுதப் பட்டுள்ளது. வேறு நோக்கம் எதுவுமில்லை.குற்றம் கண்டு பிடித்துப் பெயர் வாங்க நினைக்கும் பேரன்பர்கள் தயவு செய்து விலகிக் கொள்ளவும்
-------------------------------------------------------------------------------
"கொள்ளையில போக! என்னிய விட்டுப்போட்டு எங்கிடா கெளம்பிட்டே? " என்ற குரல் கேட்டவுடனேயே , பைக்கை ஸ்டார்ட் செய்வதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான் பாலா

வேறு யார்? அவனுடைய 'ரூம்மேட்' சென்னியப்பன்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன்

பாலா பதிலுரைத்தான் "டேய் மாப்ளே! உன்னைத் தேடுனேன்டா, கருமம் பிடிச்சவன் நீ சிக்கலியா அதான் கெளம்பிட்டேன்!"

"இப்ப சிக்கீட்டன்ல - சித்தோடு மாப்பிள்ளை கணக்கா-எங்க கெளம்பிட்டே - அதச் சொல்லு முதல்ல!"

"எங்கபோறீன்னு கேட்டிட்டீல்ல - போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்"

"சென்னியப்பன விட்டுட்டுப்போனாத்தான் உருப்படாது - அதியத் தெரிஞ்சுக்க முதல்ல!"

"சரி, அறுக்காம ஏறி உட்காருடா! போற வழியிலே சொல்றேன்"

"அய்யோ வேண்டாஞ்சாமி ! சரியான டாஸ்மார்க் பார்ட்டி நீ - இன்னிக்கு ஞாயித்துக்கிழமவேற - எங்கியாச்சியும் கூட்டிக்கிட்டுப்போய் கவுத்துபோடுவே -நீ போற இடத்தச் சொல்லு - நானு ரோசணை பண்ணிட்டு ஏறிக்கிறேன்!"

"ரெட்டைச் சாமியார் ஆசிரமம் வரைக்கும் போறேன்டா - சும்மா கேள்விமேல கேள்வி கேட்டுத் தொலைக்காம ஏறிக்கடா சாமி!"

"ரெட்டைச் சாமியார் ஆசிரமமா? பொள்ளாச்சி போற வழியிலே கிணத்துக்கடவு பக்கத்தில இருக்கே - அதா?"

"ஆமாண்டா சாமி!"

"அங்க உனக்கென்ன சோலி.....?"

" காரமடைலேருந்து எங்க மாமன் போன் பண்ணிச்சுடா - அங்க புத்தக மெல்லாம் தர்றானுங்களாம்.போயி வாங்கிட்டுவாடான்னாரு.அதான் கெளம்பிட்டேன் என்ன ஏது புத்தகம்னு அப்பால பேசிக்கலாம். முதல்ல நீ பைக்ல ஏறு!"

"புத்தகம்தான் கொள்ளையா இங்க விசயா பதிப்பகத்தில கெடைக் குமே - கெரகம் -அவ்ளோ தூரம் எதுக்காகப் போகோணும்?"

"டேய், இந்த வெட்டி நியாயமெல்லாம் பேசாதே! நீ வர்றியா இல்லியா அதச்சொல்லு - நான் போறவனையும் குறுக்கட்டாதே!"

அவன் குரலில் இருந்த கண்டிப்பையும், கோபத்தையும் பார்த்த சென்னியப்பன், உதட்டைப் பிதுக்கி வழித்துக் காண்பித்துவிட்டுப் பைக்கில் ஏறிக்கொள்ள, ஒரே உதையில் ஸ்டார்ட் ஆன பஜாஜ் பல்ஸர் பைக், ஜிவ்வென்று சீறிப்பாய்ந்து கொண்டு புறப்பட்டது!
         &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களுக்கு நடுவே பரந்து விரிந்திருந்தது ஆசிரமம்.புதுப்பெண்ணைப்போல பொலிவுடன் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது!

"டேய், மாப்ளே! வழக்கமா பண்ற மாதிரி உள்ளாரபோய் ரவுசுவுட் ராதடா! சிரிச்சிக்கிரிச்சித் தொலைக்காம கம்னு வரனும் தெரிஞ்சுடா?" என்று பாலா, தன் நண்பனின் குணம் தெரிந்ததால், அவனை எச்சரித்தே கூட்டிக் கொண்டு சென்றான்

இருவரும் ஆசிரமத்திற்குள் நுழைந்தார்கள்

ஒரு பெரிய மேடையின் மேல் இரண்டு சாமியார்கள் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.இருவருக்கும் நாற்பது வயது இருக்கலாம். ஒருவர் மொட்டைத்தலை, நன்கு சவரம் செய்யப்பட்ட முகம்,நெற்றியில் விபூதிப்பட்டை ஆகியவற்றுடன் பளபளவென்று வீற்றிருந்தார்.மற்றொருவர் அதற்கு எதிர்மாறான தோற்றத்துடன் அமர்ந்திருந்தார்.கொண்டைபோட்ட அடர்ந்த தலைமுடி, மார்பைத்தொடும் அளவிற்கு நீண்ட தாடி, நெற்றியில் விபூதிப் பட்டைக்குப் பதிலாக ஒரு ரூபாய் அளவிற்கு பெரிய குங்குமப் பொட்டு.

இருவரையும் பார்த்தவுடன் தனக்குள் பொங்கி வந்த சிரிப்பை சென்னியப்பன் மிகுந்த சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டான்.பாலா செய்வதைக் கூடவே தானும் செய்தான்.

இருவரும் சாஷ்டாங்கமாக சாமியார்களை வி¢ழுந்து வணங்கி விட்டு அவர்கள் கொடுத்த பஞ்சமுக ருத்திராட்சம், மனதைக் கட்டுப் படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் 3 புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, அடுத்திருந்த கூடத்தில் வழங்கப்பெற்ற உணவையும் ஒரு கை பார்த்துவிட்டு அடுத்த அரை மணிநேரத்தில் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார்கள்

ஆசிரமத்தை விட்டு வெளியே மெயின் ரோட்டிற்கு வந்தவுடன்,'ஸ்டாப், ஸ்டாப்' என்று சென்னியப்பன் குரல் கொடுக்க ஒரு புளிய மர நிழலில் வண்டியை நிறுத்தினான் பாலா.

வண்டியில் இருந்து இறங்கிய சென்னியப்பன் தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு மாணிக்சந்த் பாக்கெட்டை சாவகசமாக எடுத்துப் பல்லால் கடித்துக் கிழித்து, பாக்கை வாயில் கொட்டிக் கொண்டு விட்டுப் பிறகு அதை மென்று கோண்டே கேட்டான்.

"இந்த சாமியார்களைப் பற்றி ஏதோ சுவாரசியமான விஷயம் இருக்கு - திரும்பி வரும் போது சொல்றேனில்ல - இப்ப சொல்லு என்ன மாட்டர் அது?"

"அது பெரிய ஸ்டோரி, வா - கோயமுத்தூரு போயி பேசிக்கலாம்!"

"முடக்கடி பண்ணாத இங்கியே சுருக்காச் சொல்லுடா!"

"இரண்டு சாமியார் ஒன்னா உட்கார்ந்திருந்ததை பார்த்தீல்ல - அதில மொட்டை அடிச்சிரிந்த சாமியார் - சாமியாரனதுக்குக் காரணமே ஒரு ·பிகருதான்!"

"என்னது ·பிகரா....? "

"ஆமாண்டா, சாமியார் லேசுப்பட்ட ஆளில்ல - அவரு ஒரு மிராசுதார் வூட்டுப் பையன். காலேஜ்ல படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணினாரு. பொண்ணு சூப்பர் ·பிகரு! ஆனா இவரோட காதல் ஒரு தலைக்காதல் - ஒன் சைட் லவ். ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலை. மனுசன் வெறுப்பில சாமியாராயிட்டாரு!"

"அது சரி, அந்த இரண்டாவது ஆளு - அதான் ஜடாமுடி, தாடி யெல்லாம் வச்சிருந்தாரே அவரு..?"

"அவரு கதை சோகமானது!"

" அதுவும் லவ் மாட்டரா..?"

"அதான் இல்லை! அதே ·பிகரை கண்ணாலம் கட்டிகிட்டது இந்த ஆளுதான். அவளோட குடும்பம் நடத்த முடியாலை.அந்த கோபத்தில இவரும் சாமியாராயிட்டாரு!"

"அடப்பாவிகளா...!"

"கதை அதோட முடியலை! பஞ்ச்லைன் ஸீன் ஒன்னு பாக்கி இருக்கு..கேளு!"

"சொல்லு..."

"அந்த ஹால்ல ஒரு ஓரமா , டேபிள் சேரெல்லாம் போட்டு பந்தாவா உட்கார்ந்து வர்றவங்க கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு ரசீது போட்டுக்கொடுதுக்கிட்டிருந்தாரே ஒருத்தரு - அவரை நீ கவனிச்சில்ல...?"

" ஆமா..வெள்ளையும் சொள்ளையுமா ஜிப்பா போட்டுக்கிட்டு ஒருகெழ போல்ட்டு ஆசாமி - அவரைத்தானே சொல்றே?"

" கரெக்டா மாப்ளே! அவரேதான்!"

" அவருக்கென்ன கெரகம் புடிச்சிதாம் - இங்க வந்து சேர்ந்திட்டாரு?"

"அவரு வேற யாருமில்லடா, மாப்ளே! அந்தப் ·பிகரப் பெத்தவரே அவருதான். வயசான காலத்தில அவளோட இருக்க முடியாம அவரும் இங்க வந்து சேர்ந்திட்டாருடா!"

கதையின் கிளைமாக்ஸைக் கேட்ட பரவசத்தில் 'அட நாசமாப் போனவனுங்களா!" என்று சென்னியப்பன் தன்னுடைய கட்டைகுரலால் சொன்ன சொற்கள், பாலா வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை முடுக்கிய வேகத்திலும், சத்தத்திலும் அடிபட்டுப் போய்விட்டது!

இது மீள் பதிவு. இதன் முதல் பதிவு 22.8.2006 அன்று எனது பல்சுவை வலைப்பூவில் வெளியானது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

7 comments:

  1. "பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே" என்ற தூக்கு தூக்கி பட பாட்டும், பட்டினத்தார் பட்ட பாடும், எத்தனை பட்டாலும் முந்தையோர் பின்பற்றிய அதே வழியில் பயணித்து, பட்டு, அனுபவித்துப் பின் யோகியாகி, மழித்தலும், நீட்டலும் கொண்டு தனித்து வாழும் 'சராசரி' மனிதர்களின் வாழ்க்கை கேலிக்குரியதே! என்றாலும் பெண் இனத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே, அதைத் தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன், ஆசிரியர் ஐயா அவர்களே, இப்படி வாரியிருக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்.பார்த்தால் இப்படி ஏதாவது சுவார‌ஸ்யமான கதை கிடைக்கும். பெரும்பாலும் காதல் தோல்வியாகத்தான் இருக்கும். அல்லது பெண் செய்த துரோகமாக இருக்கும்.

    இதற்கெல்லாம் சன்னியாசம் வாங்கினால், அங்கேயும் போய் நிலைக்க முடியாது.

    "குடும்ப பாரத்தைத் தாங்க‌ முடியாமல் ஒருவன் சொல்லிக் கொள்ளாமல் காசிக்கு ஓடி சன்னியாசி ஆவதற்காக முயன்றானம் .அங்கேபோய் அவனுக்கு காசு எப்படியோ சேர்ந்து விட்டதாம்..உடனே மனவிக்குக் கடிதம் போட்டானாம்...
    '2 நாளில் வந்து சேருகிறேன். வரும் போது நீ கேட்ட நகை வாங்கி வருகிறேன்.கவலைப்பட வேண்டாம்...'ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!

    ReplyDelete
  3. Vaathiyar avargalukku vanakkam

    unmaiyaga nalla sirippu,naiyandi

    naan thankalin book i vanga vendum atharkku enna seiya vendum

    perumal

    ReplyDelete
  4. சிரிப்புக்காக சொன்னது என்று கொண்டே படித்தேன்...

    "கதையின் நடை....கொங்கு நாட்டு வழக்கு அருமை சிரிக்க வைத்தது..."

    நன்றி ஆசிரிய

    ReplyDelete
  5. நல்ல டயலாக் டெலிவரி..
    சப்பை மேட்டரா இருந்தாலும் வாத்தியாரின் கதை சொல்லும் பாணியினால் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது..

    ReplyDelete
  6. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ஆவதும் பெண்ணாலே..
    அழிவதும் பெண்ணாலே ..

    இது இந்த நகைச்சுவையால் உணர்ந்து கொண்டது...

    //என்றாலும் பெண் இனத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே, அதைத் தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன், ஆசிரியர் ஐயா அவர்களே, இப்படி வாரியிருக்க வேண்டாம்.//

    தஞ்சாவூரருக்கும் வணக்கங்கள்,

    இது நகைச்சுவை தானே ... நம்பளை வார்ற கதை எத்துணை இருக்கு ?

    சரி சரி .. உமாஜி மாதிரி யாரும் காதுல புகைவிடக்கூடாது பாருங்க..

    அதனாலே

    நல்லது ஆவதும் பெண்ணாலே
    தீயது அழிவதும் பெண்ணாலே

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com