27.2.10

Short Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்

---------------------------------------------------------------------------------
Short Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்

காரைக்குடியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்தச் சிற்றூர்.


இராமநாதன் செட்டியார் தன் மனைவி சீதை ஆச்சியுடன் அங்கே போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்து.

வெயில் சூடு பிடிக்கத் தொங்கியிருந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அவர் வீட்டு டிரைவர் ஒரு புளிய மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார். செவர்லே ஸ்டேசன் வாகன் வண்டி. முன்பக்கம் மெட்டல் பாடி, பின்பக்கம் மரத்தினால் பாடி கட்டப்பட்டிருக்கும். ராசியான வண்டி என்பதற்காகச் செட்டியார் அதை விடாமல் வைத்திருந்தார்.

இராமனாதன் செட்டியாருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். இங்கே மட்டுமல்ல, மலேசியா, பினாங். கிள்ளான்ங், சிரம்பான் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் மனைவி சீதை ஆச்சியும் வரும்போது வெள்ளமாகக் கொண்டு வந்தார்கள். தட்டு, கிண்ணம், குவளை, தொன்னை என்று முழுவதும் வெள்ளியிலேயே செய்த டைனிங் செட் மட்டும் மொத்தம் 300 ஜோடிகள் வீட்டில் இருக்கிறதென்றால் மற்றதெல்லாம் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நூறு பவுனில் செய்த கெட்டிக் கழுத்திரு (திருமாங்கல்யம்) மற்றும் வைர அட்டிகைகள் (Diamond Necklace) மட்டும் தலா நான்கு உருப்படிக்கள் உள்ளன. மற்ற வைர நகைகள் போக உதிரி வைரங்கள் மட்டும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆச்சியிடம் உள்ளது.

இருவருக்கும் ஒரேஒரு பெண்குழந்தை மட்டும்தான். அவளை நன்றாக வளர்த்து, உரிய பருவம் வந்தவுடன் தன் மைத்துனன் மகனுக்கே கட்டிவைத்து விட்டார் செட்டியார். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை. ஆண் வாரிசு இல்லை.

அந்தக் குறையைப் போக்குவதற்காகத்தான் இப்போது கிளம்பி வந்திருக்கிறார்.

கதை நடந்த காலம் 1948ம் ஆண்டு. பிரபலமான மகான்.. காந்தி மகான்... பாட்டு பட்டி தொட்டியயல்லாம் ஒலித்து மக்களைப் பரவசப் படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

வண்டியை விட்டு இறங்கிய செட்டியார் பார்த்தார். நான்கே எட்டு தூரத்தில் தான் லேனா என்னும் லெட்சுமணன் செட்டியாரின் வீடு இருந்தது.

பராமரிப்பின்றி முகப்புச்சுவர் சிதிலமடைந்து இருந்தது. முன்பு இரண்டொருமுறை வந்திருந்தாலும், ரெம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான் வருகிறார். லேனாதான் வரச் சொல்லியிருந்தார்.

தனது கடைக்குட்டிகள் இருவரில் ஒருவனை இவர் வீட்டிற்குச் சுவிகாரம் கொடுப்பதற்குச் சம்மதித்துப் பிள்ளை பார்க்க வரச் சொல்லியிருந்தார்.

”மானீ... நான் எட்டு மணிக்கே கிளம்பி விடுவேன். நான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் ஆச்சியிடம் செல்லியிருக்கிறேன். நீங்கள் பையனைப் பார்த்துவிட்டு வாருங்கள். மற்ற விபரங்களைக் காரைக்குடியில் மாவன்னா விட்டில் வைத்துப் பேசிக் கொள்eலாம்” என்றிருந்தார்.

இரண்டே நிமிடத்தில் சீதை ஆச்சி பின்தொடர லேனாவின் வீட்டிற்குள் நுழைந்தார் செட்டியார்.

அங்கே முகப்புத் திண்ணையில் சாய்ந்து படுத்திருந்த லேனாவின் சம்சாரம் சடாரென்று எழுந்து, வாய் நிறைய ‘’வாங்க ... வாங்க” என்று இவர்களை வரவேற்றார்கள்.

வருத்தமும், கவலையும் கூட்டாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது அந்த ஆச்சியின் முகத்தில்.

இருக்காதா பின்னே?

மூத்தவனை விடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பையன்களை ஏற்கனவே பிள்ளை விட்டாகிவிட்டது. இப்பொழுது கடைசி இருவரில் ஒருவனையும் விட்டுவிடுவதற்கு தன் கணவர் ஏற்பாடு செய்து வருவதில் ஆச்சிக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் போகிற இடத்திலாவது பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும் என்ற பெருநோக்கில்தான் கடைசியில் சம்மதித்தார். எல்லாம் அவர் வீட்டுச் செட்டியார் பிழைத்த பிழைப்பு. ஆடிய ஆட்டம்.

அந்த ஆச்சி சொன்னார். ‘’இரண்டு பேரும் கடைசிக் கட்டில்தான் இருக்கிறார்கள். பார்த்துவிட்டு வாருங்கள்.”

அங்கே அந்தச் சிறுவர்கள் இருவரும் பெரிய ஆட்டுக்கல் ஒன்றில் மாவு ஆட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல சிவந்த நிறத்தோடு களையாக இருந்தார்கள்.

பெரியவன் ஒல்லியாக இருந்தான். வயது பதினான்கு இருக்கும். சின்னவன் சற்றுக் குண்டாக இருந்தான். அவனுக்கு வயது பன்னிரெண்டு இருக்கும். இருவருமே சட்டையின்றி அரை டிராயர் அணிந்த நிலையில்தான் இருந்தார்கள்.

சின்னவன் உரலைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான். பெரியவன் தண்ணீர் தெளித்து மாவைக் குழிக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு கணம் ஆட்டுவதை நிறுத்திவிட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.

செட்டியாருக்கு இருவரையுமே பிடித்திருந்தது.

ஆச்சிக்கு யாரைப் பிடித்திருக்கிறது?

செட்டியார் மெல்லிய குரலில் கேட்டார், ‘’இஞ்சே... யாரைப் பிடித்திருக்கிறது?

ஆச்சி அதைவிட மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

”தள்ளுகிறவனையே கூட்டிக்கொள்வோம்!”

செட்டியார் மீண்டும் கேட்டார். ‘ஏன் அவனைப் பிடித்து இருக்கிறது?”

ஆச்சி சொன்னார். “ஆட்டுகிறவன் நம்மை ஆட்டி வைத்துவிடுவான். தள்ளுவதற்குத்தான் பொறுமை வேண்டும். தள்ளுகிறவன்தான் நம்மோடு இசைஞ்சு வருவான்!

ஆச்சியின் இந்தப் பதிலால் செட்டியார் அசந்து விட்டார். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள்.

சொன்னபடியே சீதை ஆச்சி ஒரு நல்ல நாளில் தள்ளியவனைத்தான் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.

(எனது, செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள் - இரண்டாம் தொகுப்பு நூலில் உள்ள 20 கதைகளில் இதுவும் ஒன்று. உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்)

வார இறுதிப்பதிவு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

28 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    எத்தனை முறைப் படித்தாலும் காட்ச்சிகளுக்குள் ஒரு கதாப் பாத்திரமாக பக்கத்தில் நின்று காண்பது போன்ற உணர்வு வரும் அளவுக்கு எழுத்தின் நடை மிகவும் அருமை. இந்த உணர்வை நாம் பண்டைய இதிகாச, இலக்கியங்களில் தான் காணலாம்.
    சீவக சிந்தாமணியில் வரும் காட்சிகள் (சற்று வர்ணனைகள் அதிகமாக இருக்கும்) படிப்பவரின் கவனத்தை மோகினியாய்ப் பிடித்துக் கொள்ளும், அது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்படுகிறது. பெருமைப் படுத்தவேண்டும் என்று அல்ல; பெருமை படக் கூடியதே!
    அதிலும் "மாநீ" , "இஞ்சே", "இசஞ்சு" போன்ற நமது ஊர் வழக்குச் சொற்கள் தான் இன்னும் மெருகூட்டுகின்றன!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. அருமை அருமை.

    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  3. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    எத்தனை முறைப் படித்தாலும் காட்ச்சிகளுக்குள் ஒரு கதாப் பாத்திரமாக பக்கத்தில் நின்று காண்பது போன்ற உணர்வு வரும் அளவுக்கு எழுத்தின் நடை மிகவும் அருமை. இந்த உணர்வை நாம் பண்டைய இதிகாச, இலக்கியங்களில் தான் காணலாம்.
    சீவக சிந்தாமணியில் வரும் காட்சிகள் (சற்று வர்ணனைகள் அதிகமாக இருக்கும்) படிப்பவரின் கவனத்தை மோகினியாய்ப் பிடித்துக் கொள்ளும், அது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்படுகிறது. பெருமைப் படுத்தவேண்டும் என்று அல்ல; பெருமை படக் கூடியதே!
    அதிலும் "மாநீ" , "இஞ்சே", "இசஞ்சு" போன்ற நமது ஊர் வழக்குச் சொற்கள் தான் இன்னும் மெருகூட்டுகின்றன!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  4. //////Imayavaramban said...
    அருமை அருமை.
    http://eluthuvathukarthick.wordpress.com/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. வணக்கம். வாத்தியார் ஐயா!

    'மனமே முருகனின் மயில்வாகனம்
    மாந்தளிர்மேனியே குகனாலயம்
    குரலே செந்தூரின் கோவில்மணி
    குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி'!
    -கொத்தமங்கலம் சுப்பு

    நன்றிகள்! பல ஐயா,

    தாங்கள் கூறுவது இதைத்தானே!

    "Knowledge speaks, but wisdom listens."

    ஒரு வேண்டு கோள்?
    ஏன் தாயும்! தந்தையும் இருந்திருந்தால்
    தரணில் எனக்கு இந்த நிலைமை வருமோ, ஐயா!

    என்பது, 'பாபனாசனின்'! பாடல் என்று நினைக்கின்றேன் முழுவதுமாக
    பாடல் வரிகளை தர முடியுமா ?

    ஏன்னெனில்! அடியேன் உள்ளது கடலின் இக்கரையில் ஐயா!

    ReplyDelete
  6. அய்யா,

    தப்பா எடுத்துக்கலைன்னா சில கேள்விகள்.

    1. தத்துக் கொடுத்தபின் பையன் தத்தெடுத்தவர்களை மட்டுமே தாய், தந்தையாக அழைக்க வேண்டுமா?
    2. பிள்ளைகள் 'பயாலஜிக்கல்' பெற்றோரை பிற்காலத்தில் சந்திப்பார்களா?
    3. அவர்களை எப்போதும் தாய், தந்தையாக அழைக்கலாமா?

    ReplyDelete
  7. அன்புள்ளஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகளில் ஒன்று படிக்கும் வாய்ப்புக் கொடு த்தமைக்கு நன்றி. தங்களின் எழுத்து வளமை மற்றும் நாட்டுப்புற நடை மிக மிகவும் அருமை.
    இந்த கதையில், விளையாட்டாக இருக்கக்கூடிய தனது தம்பியை
    ஆட்டுக்கல்லை ஆட்டவிட்டுவிட்டு,வேலை வாங்குவதுடன்; லாவகமாக, நீக்கு போக்குடன் செய்யும் வேலையைத் தானே மேற்கொள்ளும் அண்ணனை ஆச்சி சுவீகாரமாக தேர்ந்து எடுத்த விதம் நன்றாக உள்ளது.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-02-27

    ReplyDelete
  8. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் கதை சுவாரசியமாக உள்ளது.படமும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  9. வட்டாரச் சொல்வழக்கு,சமூகத்துச் சொல்வழக்கு எல்லாம் ஓர் அடையாளம்.
    "இஞ்சே" என்பது செட்டிநாட்டுக்கே உரிய விளிப்புச் சொல்.'இங்கே பார்' அல்லது 'இதோபார்'என்பது அதன் விரிவாக இருக்கலாம். 'ஏண்டி' 'என்னடி'என்று விளித்துத் துவங்குவதைக் காட்டிலும்
    எவ்வளவு நாக‌ரிகமாக, நாசுக்காக இருக்கிறது! பிராமணப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை 'ஏன்னா!'என்று விளித்துப்பேச்சைத் துவங்குவார்கள்.அதற்குப் பொருள் 'ஏன்,என்ன', என்பதாகும். மற்ற சமூகத்தவர்கள் 'ஏங்க, என்னாங்க' என்று விளிப்பதைப் போன்ற‌தாகும்.‌
    ண்,ன் வித்தியாசம் அறியாதவர்கள் பிராமணர் இல்லங்களில் மகளிர் கணவனை 'அண்ணா' என்று அழைப்பதாகக் கூறி கொச்சைப் படுத்துவார்கள்.
    திண்டுக்கல் லியோனி தன் பட்டிமன்றங்களில் தவறாமல் இதை ஒரு சிரிப்பாகப் பயன்படுத்துகிறார். அவரே ஒரு தமிழ் ஆசிரியர்!அவருக்கே சொல்லாய்வு செய்ய விருப்பம் இல்லாதபோது, சாமானியர்களைப்பற்றி என்ன‌
    சொல்ல?கதை தொகுப்பில் படித்ததுதான். மீண்டும் படிக்கக் கொடுத்ததற்கு நனறி.

    ReplyDelete
  10. மண் மணம் வீசும் கதை

    ReplyDelete
  11. அட நம்ம ஊர் கதை...எல்லாரும் சொன்ன மாதிரி "இஞ்சே" என்ற வார்த்தையை படித்தவுடன், மனதில் பல தோழிகள், சகோதரிகள் நினைவுகள்...ஒரு வார்த்தை நம்மை எளிதாய் பல ஆண்டுகள் முன்னும் பின்னும் பயணிக்க வைப்பது ஆசிரியம் தான்..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  12. /////kannan said...
    வணக்கம். வாத்தியார் ஐயா!
    'மனமே முருகனின் மயில்வாகனம்
    மாந்தளிர்மேனியே குகனாலயம்
    குரலே செந்தூரின் கோவில்மணி
    குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி'!
    -கொத்தமங்கலம் சுப்பு
    நன்றிகள்! பல ஐயா,
    தாங்கள் கூறுவது இதைத்தானே!
    "Knowledge speaks, but wisdom listens."
    ஒரு வேண்டு கோள்?
    ஏன் தாயும்! தந்தையும் இருந்திருந்தால் தரணில் எனக்கு இந்த நிலைமை வருமோ, ஐயா!
    என்பது, 'பாபனாசனின்'! பாடல் என்று நினைக்கின்றேன் முழுவதுமாக
    பாடல் வரிகளை தர முடியுமா ?
    ஏன்னெனில்! அடியேன் உள்ளது கடலின் இக்கரையில் ஐயா!////

    பொறுத்திருங்கள் தேடிப்பிடித்துத் தருகிறேன்

    ReplyDelete
  13. /////Indian said...
    அய்யா,
    தப்பா எடுத்துக்கலைன்னா சில கேள்விகள்.
    1. தத்துக் கொடுத்தபின் பையன் தத்தெடுத்தவர்களை மட்டுமே தாய், தந்தையாக அழைக்க வேண்டுமா?
    2. பிள்ளைகள் 'பயாலஜிக்கல்' பெற்றோரை பிற்காலத்தில் சந்திப்பார்களா?
    3. அவர்களை எப்போதும் தாய், தந்தையாக அழைக்கலாமா?//////

    இல்லை. தான் பிறந்த இடத்துப் பெரியவர்களையும் (பெற்றவர்களையும்) அப்படியே அழைக்கலாம்!
    சந்திப்பார்கள். அவர்களும், இங்கே வந்து செல்வார்கள். பிறந்த இடத்து சொத்தில் மட்டும் பங்கு கிடையாது.

    ReplyDelete
  14. V Dhakshanamoorthy said...
    அன்புள்ளஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகளில் ஒன்று படிக்கும் வாய்ப்புக் கொடு த்தமைக்கு நன்றி. தங்களின்

    எழுத்து வளமை மற்றும் நாட்டுப்புற நடை மிக மிகவும் அருமை. இந்த கதையில், விளையாட்டாக இருக்கக்கூடிய தனது தம்பியை ஆட்டுக்கல்லை ஆட்டவிட்டுவிட்டு,வேலை வாங்குவதுடன்; லாவகமாக, நீக்கு போக்குடன் செய்யும் வேலையைத் தானே மேற்கொள்ளும் அண்ணனை ஆச்சி சுவீகாரமாக தேர்ந்து எடுத்த விதம் நன்றாக உள்ளது.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-02-27///////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  15. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் கதை சுவாரசியமாக உள்ளது.படமும் நன்றாக

    உள்ளது./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  16. //////kmr.krishnan said...
    வட்டாரச் சொல்வழக்கு,சமூகத்துச் சொல்வழக்கு எல்லாம் ஓர் அடையாளம்.
    "இஞ்சே" என்பது செட்டிநாட்டுக்கே உரிய விளிப்புச் சொல்.'இங்கே பார்' அல்லது 'இதோபார்'என்பது

    அதன் விரிவாக இருக்கலாம். 'ஏண்டி' 'என்னடி'என்று விளித்துத் துவங்குவதைக் காட்டிலும்
    எவ்வளவு நாக‌ரிகமாக, நாசுக்காக இருக்கிறது! பிராமணப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை

    'ஏன்னா!'என்று விளித்துப்பேச்சைத் துவங்குவார்கள்.அதற்குப் பொருள் 'ஏன்,என்ன', என்பதாகும். மற்ற

    சமூகத்தவர்கள் 'ஏங்க, என்னாங்க' என்று விளிப்பதைப் போன்ற‌தாகும்.‌
    ண்,ன் வித்தியாசம் அறியாதவர்கள் பிராமணர் இல்லங்களில் மகளிர் கணவனை 'அண்ணா' என்று

    அழைப்பதாகக் கூறி கொச்சைப் படுத்துவார்கள்.
    திண்டுக்கல் லியோனி தன் பட்டிமன்றங்களில் தவறாமல் இதை ஒரு சிரிப்பாகப் பயன்படுத்துகிறார். அவரே

    ஒரு தமிழ் ஆசிரியர்!அவருக்கே சொல்லாய்வு செய்ய விருப்பம் இல்லாதபோது, சாமானியர்களைப்பற்றி என்ன‌
    சொல்ல?கதை தொகுப்பில் படித்ததுதான். மீண்டும் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி./////

    லியோனி உடற்பயிற்சி ஆசிரியர். தமிழாசிரியர் அல்ல! உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. ////LK said...
    மண் மணம் வீசும் கதை////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. அன்பு அய்யாவுக்கு வணக்கம், இது சிறு கதை என்றாலும் மிக பெரிய ஆழ்ந்த கருத்துடன் இருந்தது, உங்கள் எளிமையான எழுத்து நடை என்னை அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது, மிக்க நன்றி அய்யா.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  19. ஐயா காலை வணக்கம்

    செட்டி நாட்டு கதை மிகவும் அருமை. எப்பவும் ஆட்டுவதை விட தள்ளு வதற்கு தான் மிகவும் பொறுமையும் கவனமும் தேவை. ஆட்டுவது எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். தள்ளும் வேலை தான் சிரமம். மாவு வெளியே சிந்தாமல் அதே சமயம் ஆட்டுக்கல்லுக்குள் லாவகமாக தள்ளி மாவு அரைப்பது சிரமமான வேலைதான். அதனால் தான் சீதை ஆச்சி ஆட்டுபவன் வேண்டாம் தள்ளுபவனை சேர்த்துக்கொண்டார்கள்.என்று நினைக்கிறேன்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. /////செந்தில் நாதன் said...
    அட நம்ம ஊர் கதை...எல்லாரும் சொன்ன மாதிரி "இஞ்சே" என்ற வார்த்தையை படித்தவுடன், மனதில் பல தோழிகள், சகோதரிகள் நினைவுகள்...ஒரு வார்த்தை நம்மை எளிதாய் பல ஆண்டுகள் முன்னும் பின்னும் பயணிக்க வைப்பது ஆச்சர்யம் தான்..
    வாழ்த்துகள்//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், இது சிறு கதை என்றாலும் மிக பெரிய ஆழ்ந்த கருத்துடன் இருந்தது, உங்கள் எளிமையான எழுத்து நடை என்னை அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது, மிக்க நன்றி அய்யா.
    அன்புடன் ஜீவா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  22. /////T K Arumugam said...
    ஐயா காலை வணக்கம்
    செட்டி நாட்டு கதை மிகவும் அருமை. எப்பவும் ஆட்டுவதை விட தள்ளு வதற்கு தான் மிகவும் பொறுமையும் கவனமும் தேவை. ஆட்டுவது எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். தள்ளும் வேலை தான் சிரமம். மாவு வெளியே சிந்தாமல் அதே சமயம் ஆட்டுக்கல்லுக்குள் லாவகமாக தள்ளி மாவு அரைப்பது சிரமமான வேலைதான். அதனால் தான் சீதை ஆச்சி ஆட்டுபவன் வேண்டாம் தள்ளுபவனை சேர்த்துக்கொண்டார்கள்.என்று நினைக்கிறேன்.
    நன்றி/////

    ஆமாம். ஆச்சிமார்களின் ’சமர்த்து’ என்று அதைச் சொல்வோம்! நன்றி உங்கள் பாராட்டிற்கு!

    ReplyDelete
  23. ராமநாதன் செட்டியாரின் அட்ரஸ் கொடுக்க முடியுமா?
    ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் தேவைப்படுகிறது.அதான் ..பார்த்துட்டு வரலாம்ன்னு..

    ////வைர அட்டிகைகள் (Diamond Necklace) மட்டும் தலா நான்கு உருப்படிக்கள் உள்ளன. மற்ற வைர நகைகள் போக உதிரி வைரங்கள் மட்டும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆச்சியிடம் உள்ளது.////

    ReplyDelete
  24. /////Ashok said...
    Nice story sir
    Ashok////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. //////minorwall said...
    ராமநாதன் செட்டியாரின் அட்ரஸ் கொடுக்க முடியுமா?
    ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் தேவைப்படுகிறது.அதான் ..பார்த்துட்டு வரலாம்ன்னு..
    ////வைர அட்டிகைகள் (Diamond Necklace) மட்டும் தலா நான்கு உருப்படிக்கள் உள்ளன. மற்ற வைர நகைகள் போக உதிரி வைரங்கள் மட்டும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆச்சியிடம் உள்ளது.////

    கதை நடந்த காலத்தைப் பாருங்கள் மைனர். இப்போது அவர் சிவலோகத்தில். இங்கே இருந்தால், உங்களுடன் நானும் சேர்ந்துவந்து ஆளுக்கு ஒரு பாட்டில் தேற்றியிருக்கலாமே மைனர்!

    ReplyDelete
  26. அப்புடின்னா, இராமநாதன் செட்டியார் உண்மையிலேயேவாழ்ந்து மறைந்தவர்தானா

    ReplyDelete
  27. ///minorwall said...
    அப்புடின்னா, இராமநாதன் செட்டியார் உண்மையிலேயேவாழ்ந்து மறைந்தவர்தானா?/////

    இந்தக் கதையில் வருவது கற்பனைப் பாத்திரம். ஆனால், அதுபோன்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்களை, வாழுகின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com