29.11.07

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

வீட்டில் ஒரு கவியரங்கம். நான்கு நண்பர்களின் கலந்துரையாடல்
- கவிதை வரிகளிலும் உரையாடல்.

நண்பர் ஒருவர் தலைப்பைச் சொன்னார்:
அர்ச்சனை:

பத்து நிமிடங்களில் எழுதி, நான் ஒரு கவிதையை வாசித்தேன்.
அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


அர்ச்சனை:

குமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை
குழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை
மாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை
மருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை
முப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை
நாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை
எவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை
என்றும் பயன்தரும்! செய்வீர் அர்ச்சனை

அப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை
அனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை
அர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்
அனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை!
உணவின் அருமை பசித்தால் தெரியும்
உறவின் அருமை இழந்தால் தெரியும்!
அப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை
அது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை!
-------------------------------------------------------

எப்படி இருக்கிறது சாமி?

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
என் வகுப்பறை மாணவர்களில் எத்தனைபேர்கள்
கவிதை ரசிகர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்
எழுதுங்கள் கவிதை: இடுங்கள் அதைப் பின்னூட்டத்தில்

இலக்கணம் தெரிந்தவர்கள் வெண்பா, ஆசியப்பா என்று
கலக்குங்கள்.

இலக்கணம் தெரியாதா? பரவாயில்லை - புதுக்கவிதையாக எழுதுங்கள்

அதுவும் வேண்டாமா? பரவாயில்லை கருத்தை உரையாகவும் எழுதலாம்

மிகச் சிறந்த கவிதைக்கு அல்லது கருத்திற்கு ஒரு நல்ல புத்தகம்
பரிசாக அனுப்பி வைக்கப்படும்

மொத்தம் மூன்று தலைப்புக்கள்:
1. தேங்காய்
2. (வாழைப்) பழம்
3. வெற்றிலை, பாக்கு

எதாவது ஒரு தலைப்பிற்கும் எழுதலாம் - அல்லது மூண்று தலைப்புக்களுக்குமே எழுதலாம்
வரிகளுக்கு வரம்பில்லை

கலக்குங்கள் - காத்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்,
வாத்தியார்

6 comments:

  1. கவிதைப் பிரியர்கள் அணியில் ஒரு உள்ளேன் ஐயா - ஆனால் நமக்கு இப்படி டப்டப்னு உடனே கவிதை எழுதிட வராதுங்க :-)

    ReplyDelete
  2. ///சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: கவிதைப் பிரியர்கள் அணியில் ஒரு உள்ளேன் ஐயா - ஆனால் நமக்கு இப்படி டப்டப்னு உடனே கவிதை எழுதிட வராதுங்க :-)///

    தேங்காய், பழம், வெற்றிலை,- பாக்கு ஏன் அர்ச்சனையில் இடம் பெறுகிறது?
    யோசியுங்கள் உங்கள் கருத்தை உரையாக எழுதுங்கள் சகோதரி!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா? இதோ எனது படைப்பு.

    முதிர்ந்த பின்னும் பழமாகாது தேங்காய்
    முக்கண் கொண்ட முட்டையிது தேங்காய்
    குழம்புக்கு ருசி சேர்க்கும் தேங்காய்
    குருவி கூட்டுக்கு கூரையிது தேங்காய்
    வெல்லத்தை போல் இனிக்குது
    வெயிலுக்கு குடித்தால் வியர்வை உதிருது
    அமிர்த நீர் உற் சென்று அமிலமாய் மாறியதேன்
    ஆசைகள் வளர்த்த மனது அறிவை மறைத்ததேன்
    இம்சைகள் பல செய்து
    ஈன்றவள் உயிர் வாங்குவதேன்
    உயிர் வளர்த்த உன் உள்ளம்- சில வேளை
    ஊனமாய் போனதுமேன்
    எரித்துவிடு தீமைகளை
    ஏற்றிவிடு நன்நெறிகளை
    ஐம்புலனை நம்பு
    ஒரு மனதாய் உழைத்துப் பார்
    ஓங்கிவிடும் உன் புகழ்
    மாயையான மனத் தேங்காயை உடைத்துவிடு
    உன் வெள்ளை உள்ளம் நீ அறிந்துக் கொள்வாய்.

    நன்றி

    ReplyDelete
  4. சிறிய வேண்டுகோள்

    பெனாசிர் பூட்டோ, ராஜிவ் காந்தி இருவோ யுடய வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றி அவர்கழுடாய ஜாதக பலன் கூறமுடியுமா!

    ReplyDelete
  5. வணக்கம் வாத்தியார் ஐயா,
    உங்கள் வகுப்பறைக்குள் வந்தேன், நீங்கள் மிகவும் அருமையாவும் அன்புடனும் கற்று கொடுக்கீர்கள், நான் உங்கள் வகுப்பு மாணவனாக சேர விருப்பம் உள்ளேன், இது எனுதய முதல் தமிழ் தட்டச்சு, எங்கேனும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும். தயவு கூர்ந்து என்னுதய இவ்விண்னபத்தை விருப்பு சேர படிவமாக கருதி என்னை உங்கள் வகுப்பு இளம் நிலை மாண்வனாக சேர்க்க தல்மையுடன் வேண்டுகிறேன்.

    உங்கள் மாணவனாக,
    விமல்

    ReplyDelete
  6. அடடா, வகுப்பில் சேரவேண்டும் அவ்வளவுதானே! அதற்கு ஏன் இத்தனை பெரிய விண்ணப்பம்?

    நீங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டீட்ர்கள்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com