மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.10

ஈரமுள்ள நெஞ்சும் சாரமுள்ள பொருளும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஈரமுள்ள நெஞ்சும் சாரமுள்ள பொருளும்!

இன்றையப் பக்தி மலரை, நமது வகுப்பறைக் கண்மணி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து  மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------------
மனதிற்குள்ளே புகுந்த மாயையும், கனவிலே வந்து அதைப்போக்கிய கடவுளும்!

பூமியிலே  கடவுளில்லையென்று புகல்வது  மனதிற்குள்ளே புகுந்த மாயை!

சிவபுரம் என்னும் ஊரிலே சதாசிவம் என்னும் சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

தான்கொண்ட பெயருக்குத் தகுந்தாற்போல அந்த சிவபக்தர் ஆண்டவன்பால் தீராத பக்தியோடும்; அன்போடும்;  எந்நேரமும்; ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! என்று சிவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம் இருப்பார்

அந்த ஊரில் வாழ்கின்ற வசதி படைத்த சிலரில் அவரும் ஒருவர் ஆவார்

நஞ்சை, புஞ்சை, தோட்டம், தொரவு என்று வருமானம் பல வழிகளில் வந்து கொட்டிக்கொண்டிருந்தது. .

தான, தர்மங்களில் மிகவும் நாட்டமுள்ளவர்.

வீட்டிற்குப் பசியோடு வரும் அனைவருக்கும் பேதமின்றி அன்போடும், பரிவோடும் அன்னமிட்டு உபசரிப்பார்.   அதே நேரத்தில் யாரும் தெய்வமறுப்போ, தெய்வத்தின் மீது குறையோ பேசிக்கொண்டு வந்தால் எரிமலைபோல் வெடிப்பார். அப்படி மறுப்போரைத் தன் முன் நிற்கவிடாமல் ஓட்டிவிடுவார். அதாவது விரட்டி விடுவார்.

அவர் செய்வது சரியா? தவறா? யார் அவரிடம் கூற முடியும்?

ஒரு நாள் இரவு ஊரடங்கிய பிறகு, சதாசிவத்தின் வீட்டை யாரோ வந்து தட்டினார்கள். சதாசிவத்தின் வீட்டு    வேலையாட்கள் அனைவரும் தங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றிருந்தார்கள்.

அதனால் சதாசிவமே வந்து கதவைத் திறந்தார். “யார் நீங்கள்?  என்ன வேண்டும் உங்களுக்கு? இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டுகிறீர்களே?” என்றார்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு நின்றிருந்தார்.

“ஐயா, என் பெயர் செல்வராசு. அபிராமபுரத்தில் இருந்து வருகிறேன்.
இங்கு சிவபுரம் பழையூரில் இருக்கும் எனது  நண்பர் ராஜசேகர்
என்பவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றேன். நான் கிளம்பும்
போதே அந்திசாயும் நேரமாகி விட்டது. இன்றைக்கென்று பார்த்தால்
ஒரு வண்டி கூட வரவில்லை. ஒரே தாகமாக இருந்தது. அமாவாசை 
இருட்டு, ஊருணியில் படிகள் சரியாகத் தெரியாததால், உங்கள்
வீட்டுக் கதவை தட்டினேன். சிரமத்திற்கு மன்னிக்கணும். தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”  என்று  மூச்சு விடாமற் பேசினார்.
   
“சிவா சிவா! குடிக்கத் தண்ணீர்தானே வேண்டும். உள்ளே வாருங்கள் தருகிறேன்” என்று அன்போடும்,   கனிவோடும் இவர் அழைத்தார்.
அவரும் உள்ளே வந்தார்.

இதோ வருகிறேன் என்று தண்ணீர் எடுக்கப் போனவர், “சிவ சிவா. அடப்பாவமே, இவ்வளவு நேரமாகி விட்டது அவர் ஏதாவது
சாப்பிட்டாரா என்று தெரியவில்லையே?” என்று எண்ணிக் கொண்டே தண்ணீரோடு வந்தவர், “ஐயா, தாங்கள் வரும்வழியில் ஏதாவது சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு வந்தவர், “இல்லை ஐயா, இன்னும் இரண்டு பர்லாங்கு தூரம்தானே பழையூர். அங்கு சென்று ஏதாவது   சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“சிவா சிவா! இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாமல் இருக்கலாமா?.அதோடு, இந்நேரத்தில் அங்கு சாப்பாடும் கிடைக்காது..கொஞ்சம் பொறுங்கள் நீங்கள் சாப்பிட உணவு தருகிறேன்; அதுவரைக்கும் இங்கு அமருங்கள்”  என்று முகப்பில் இருந்த இருக்கையைக் காண்பித்தார்.

“தண்ணீரைக் கொஞ்சமாகப் பருகுங்கள், பிறகு சாப்பிட முடியாது”  என்றும் கூறினார்.

வந்தவரோ, “இல்லை ஐயா, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் அங்கு
போய்ப் பார்த்துக் கொள்கிறேன்"   என்றார்.

சதாசிவம் விடவில்லை. “சிவா சிவா! எது வீண் சிரமம் -  ஒரு சான்
வயிற்றுக்கு ஒருவேளை உணவு தருவதா? அப்படியெல்லாம்
சொல்லாதீர்கள். எனக்கு எந்த சிரமும் இல்லை. தாய் அன்னபூரணி உங்களுக்கும் சேர்த்துத்தான் எனக்கு  நிறையப் படி அளந்து கொண்டிருக்கிறாள். இதோ வருகிறேன்" என்று கூறியவாறு உள்ளே சென்றார்..   
 
சமையல் கட்டுக்கு சென்று பாத்திரங்களைப் பார்த்தார். எல்லாம் நன்றாகக் கழுவப்பெற்று, தண்ணீர் வடியக் கவிழ்த்து வைக்கப் பெற்றிருந்தது.

“சிவ சிவா.. என்ன இது...  இந்த அழகனிடம் (வீட்டு சமையல்காரன்)
எத்தனை முறைக் கூறினாலும்  அவனுக்கு  புரிய மாட்டேன்கிறதே!..
இப்படித் துடைத்து வைக்காதே என்று பல முறைக் கூறி விட்டேன்.
அவன் அதைக் காதில்  வாங்கிக்கொள்ளவில்லையே! சரி, நாமே
அவரின் பசிக்கு ஏதாவது செய்து கொடுப்போம்” என்று   எண்ணியவர், வேகமாகச் சமைக்க ஆரம்பித்தார்.

“சிவ சிவா, நமக்கு சமையல் பக்குவம் நன்கு தெரிந்து இருப்பதும்,
அத்துடன் சமையல்காரன் அழகனின் கை ஒடிந்த சமயத்தில்,
சமைத்துப் பழகிக்கொண்டதும் நல்லதாகப் போயிற்று” என்று
தனக்குள்ளே பேசிக்கொண்டு சமையலைச் செய்யத் துவங்கினார்
.
வழிப்போக்கரோ, ‘பாவம் நாம்தான் இவருக்கு இந்நேரத்தில்
சிரமத்தைக் கொடுத்து விட்டோம் என்றும்; அதோடு இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல மனிதரைப் பார்ப்பதும் அரிதுதான் என்றும்; செல்வம் சரியானவரிடம் இருப்பதுதான் சிறந்தது என்றும், அவரைப்பற்றிய
உயர்ந்த சிந்தனையோடு மனதிற்குள் எண்ணியவாறு அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம்தான் ஆகி இருக்கும். “ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!” என்று பரமனின் திருநாமத்தை ஜெபித்தவாறு சதாசிவம் வந்தார்.

“ஐயா வாருங்கள் உணவுத் தயாராகி விட்டது... எழுந்திருங்கள் அதோ
அந்தத் தொட்டியில் தண்ணீர் இருக்கிறது கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு, அந்த மாடத்தில் இருக்கும் திருநீறைப் பூசிக்
கொண்டு வாருங்கள்” என்றார்.

அவரும், அவ்வாறே தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்து அமர்ந்தார். வாழை இலை போடப் பட்டது   உப்பிட்டு; உணவும் பரிமாறப்பெற்றது.

அப்போது, சதாசிவம் அமர்ந்தவரின் நீறில்லா நெற்றியைக் கண்டு, “நீறிட்டுக் கொள்ள மறந்துவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “இல்லை நீங்கள் உப்பிடும் முன்பே நான் இலையில் நீரிட்டு கழுவினேன்” என்றார்.

சரிதான் போங்கள் என்று சிரித்துக் கொண்டே, “நான் அதைக் கூறவில்லை ஐயா! நெற்றியில் நீறு பூசவில்லையா?” என்று கேட்டேன் என்றார் சதாசிவம்.

அதற்கு அவர், “இல்லை, எனக்கு அது பழக்கம் இல்லை” என்றார்.

சிவ சிவா, வேற்று மதத்தவராக இருக்குமோ?.அதனால், என்ன
“உங்களின் ஈசன்தான் எங்களின் ஏசு” என்பானே,  நம்ம தெருக்கோடி
வீட்டில் குடியிருக்கும் தையல்காரன் ஆசீர்வாதம்” என்று மனதிற்
குள்ளேயே எண்ணியவாறு.மேலும் கூறலானார்:

“ஐயா, ஆண்டவனை நினைத்துக் கும்பிட்டுவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டாவது சாப்பிட ஆரம்பியுங்கள்”  என்று சொல்ல, அதற்கு
அவர், “ஆண்டவனா யார் அவர்? அவருக்கு நான் ஏன்  நன்றி சொல்ல
வேண்டும்? உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள்
தானே எனக்கு உணவு அளிக்கிறீர்கள்” என்று   சொன்னது தான் தாமதம், சதாசிவத்திற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.

“என்னது ஆண்டவன் யாரா? அவர் எங்கு இருக்கிறாரா?  நீங்கள், இல்லை நீ,  முதலில் இலையைவிட்டு எழுந்திரு!” என்று சற்றும் எதிர்பாராத விதமாகக் கூறினார்.

“ஐயா நான், அப்படி என்ன கூறினேன். உங்கள் வீட்டில் அரிசி, பருப்பு இருக்கிறது. எனக்கு உணவு அளிக்க உங்களுக்கு மனம் இருக்கிறது.
இடையில் இல்லாத ஒருவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று மறுபடியும் அதையே கூறினார்.

“ஐயோ! சிவ சிவா, என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்ட சதாசிவம்,
“நீ முதலில் இங்கிருந்து சென்றுவிடு” என்று கத்தலானார்.

வந்தவர், “சரி. சரி சத்தம் போடாதீர்கள் நான் சென்று விடுகிறேன்.
இருந்தும் நான் உங்களுக்கும், உங்களின் அன்பிற்கும் எனது
நன்றியைக் கூறிக் கொள்கிறேன்” என்று சொல்லியவாறே வீட்டை
விட்டு வெளியேறி விட்டார்.

சதாசிவத்தின் கோபம், அவர் மீண்டும் படுக்கைக்குச் சென்று வெகு நேரமாகியும் அடங்கவில்லை. அப்படியே, ஓம் நமசிவாய! ஓம்
நமசிவாய என்றுக் கூறியவாறே கண்ணயர்ந்தார்.

அவரின் உள்மனது மட்டும் அதே சிந்தனையில் மூழ்கியிருந்தது..
அப்போது இரண்டாம் சாமம். பரம்பொருளான   சிவன் அவரின்
கனவிலே வந்தார் இவரும், “இறைவா!”. என்று பேச மொழியில்லாமல் பேரானந்தத்தில் திளைத்தார்.

அப்போது இறைவன், “பக்தரே!...உனக்கு அப்படி எதற்கு அத்தனை
வருத்தமும், கோபமும் என்று?” ஏதும்  அறியாதது போல் கேட்டார்.

அதற்கு சதாசிவம், ”சுவாமி தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு உணவு
அளிக்க, எல்லாம் தயார் செய்து விட்டு, இந்தப் பிரபஞ்சப் படைப்பிற்கும், இயக்கத்திற்கு காரணமான பகவானின் அருளால்தான் நமக்கு இந்த
உணவே கிடைக்கிறது. அதனால் அவரை வணங்கி, அவருக்கு நன்றி
சொல்லி உணவு அருந்துங்கள் என்றுதான் கூறினேன். ஆனால்
அவரோ, ஆண்டவனா யார்? அவர் எங்கு இருக்கிறார்? இல்லாத
ஒன்றுக்கு நான் ஏன் நன்றி சொல்ல   வேண்டும்? என்று பதில்
கூறியதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அதனால்தான், அவருக்குநான் உணவளிக்க மறுத்துவிட்டேன்” என்றார்.

அதற்கு இறைவன், “பக்தா, அவர் இன்று மட்டுமா அப்படிக் கூறுகிறார்?
அவர் பிறந்ததிலிருந்து அப்படிதான் கூறுகிறார். அதற்காக, அவருக்கு உணவில்லாமலா செய்து விட்டோம். கடவுள் இல்லை என்று கூறுவது

அவரவரின் மனத்தில் புகுந்துள்ள மாயை அது நீங்கும் போது அங்கே நான் வெளிப்படுவேன். எல்லாவற்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டு. அதனை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள நேரமும், காலமும், அவசியம். அது

ஒரு நாள் நிச்சயம் அவருக்கு வரும். அப்படி மறுப்பவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்..பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் நான் இருக்கிறேன். உன்னுள்ளும் நான் இருக்கிறேன். என்னை மறுக்கும் அவன் உள்ளும்

நான் இருக்கிறேன். எங்கும் வியாபித்து இருக்கின்றேன்.  ஆகவே இது போன்ற ஒரு நிலைக்கு இனியும் நீ ஆளாகாமல். எல்லாவற்றிலும்,.எங்கும், எதிலும், என்னை கண்டு, அன்பின் வழியே என்னை வந்தடைவாயாக!”

என்று உயரிய அத்வைதத்தை சதாசிவத்திற்கு உபதேசித்து. ஆசிகூறி  மறைந்தார். சதாசிவத்தின் கனவும் கலைந்தது. பொழுதும் விடிந்தது.

அன்று முதல் சதாசிவம் எங்கும் எதிலும் நிறைத்த பரபிரம்மத்தையே
சிந்தித்து எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும்    அன்பு காட்டி,
அன்பே சிவம் என்று நித்திய ஆனந்தத்தில் வாழ்ந்து, மேலும் அரிய பல
இறைத் தொண்டுகளைச் செய்து, அன்பே சிவம் என்று அத்வைதக் கொள்கையைப் போற்றியே வாழ்ந்து வரலானார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
“சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”

''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவுளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''

மகாகவி பாரதியின் இந்த நித்தியமான சத்திய வரிகளை நாமும் சிந்திப்போம்! அதன்படி நடப்போம்!

நன்றி வணக்கம்.
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி.
சிங்கப்பூர்
--------------------------------------------------------

ஆலாசியம் அவர்களின் எழில்மிகு தோற்றம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

29.12.10

டச்சிங், டச்சிங்காக இருக்க என்ன வேண்டும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டச்சிங், டச்சிங்காக இருக்க என்ன வேண்டும்?
---------------------------------------------------------------
நேற்றையப் பாடத்தின் தொடர்ச்சி.....
---------------------------------------------------------------
1
“அம்முதலோர் நான்கதும்வல் விருநான்குள்ள துக்கு
மகாவிரண்டிரு மூன்று மெய்ம்முத லாய்மூன்று
மம்முதலா றல்லதும்பந் தான் கிரண்டல்ல துந்தவ்
வாகவிரண்டேழுநக ரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுதலைந்து
நின்றதுமக்க வினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றதுநொம் முதன்மூன்றுயாவும்
சொல்சவினான் கைந்தொருமுன் தலுமீன் றெட்டுளதே”


எத்தனை கடினமான தமிழ் செய்யுள் பாருங்கள். பதம் பிரித்துப் படித்துத் தெளிவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

‘இன்னா நைனா, மஜாவா கீறே?’ என்னும் சிங்காரச் சென்னைத் தமிழ்தான் இப்போது பழக்கத்தில் அல்லது புழக்கத்தில் உள்ளது.

தாவு தீர்ந்துவிடும் தமிழில் இருந்தால் யார் படிப்பார்கள்?

என்ன சொல்லப்பட்டிருக்கிறது அதில்?

27 நட்சத்திரங்களின் பெயர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கிறது

27 நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டபடி எளிமையான தமிழில் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லப்படவில்லை என்பது விளங்கவில்லை. ஒருவேளை பாட்டில் சொல்லி அதை மனனம் செய்வது அக்கால வழக்கமாக இருந்திருக்கலாம்.

உரை நடையில் இருந்தால், அதுவும் படு  ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))

நட்சத்திரங்களின் பெயர்களை, வான்வெளியில் அவைகள் இருக்கும் வரிசைப்படி நான் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்:

கூட்டணி ஒன்று:
1. அஸ்வினி
2. பரணி
3, கார்த்திகை
4, ரோகிணி
5. மிருகசீர்சம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்,
8. பூசம்
9. ஆயில்யம்

கூட்டணி இரண்டு
1. மகம்
2. பூரம்
3. உத்திரம்
4. அஸ்தம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. கேட்டை

கூட்டணி மூன்று
1. மூலம்
2. பூராடம்
3. உத்திராடம்
4. திருவோணம்
5. அவிட்டம்
6. சதயம்
7. பூரட்டாதி
8. உத்திரட்டாதி
9. ரேவதி

வரிசைப்படிதான் நட்சத்திரங்கள் உள்ளன. ஏன் கூட்டணி என்ற தலைப்புடன் கொடுத்திருக்கிறேன்?

ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள். நட்சத்திரமும் மனனம் ஆகும். அதன் அதிபதிகளும் மனப்பாடம் ஆகும். தசைபுத்திகளின் வரிசையும் மனதில் பதியும்

எண் 1 கேதுவின் நட்சத்திரங்கள்
எண் 2 சுக்கிரனின் நட்சத்திரங்கள்
எண் 3 சூரியனின் நட்சத்திரங்கள்
எண் 4. சந்திரனின் நட்சத்திரங்கள்
எண் 5 செவ்வாயின் நட்சத்திரங்கள்
எண் 6 ராகுவின் நட்சத்திரங்கள்
எண் 7 குருவின் நட்சத்திரங்கள்
எண் 8 சனியின் நட்சத்திரங்கள்
எண் 9 புதனின் நட்சத்திரங்கள்
+++++++++++++++++++++++++
பாடலுக்கான விளக்கம்:

“அம்முதலோர் நான்கதும்
வல்விருநான்குள்ளதுக்கு மகாவிரண்டு
இருமூன்று மெய்ம்முதலாய் மூன்று
மம்முதலாறல்லதும் பந்தான் கிரண்டல்ல துந்தவ்வாக இரண்டேழு நகரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்று
யுயூவுகரமுதலைந்து நின்றதுமக்கவினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றது
நொம் முதன்மூன்று
யாவும்
சொல்சவினான் கைந்தொருமுன்தலும் மீன்றெட்டுளதே”
---------------------------------------------------------
அ,ஆ,இ, ஈ 4ம் = கார்த்திகை
வ, வா, வி, வீ 4ம் = ரோகிணி
வெ, வே, வை,வெள 4ம் = மிருகசீரசம்
கு,கூ 2ம் = திருவாதிரை
கெ, கே, கை, கூ 4ம் = புனர்பூசம்,
கொ,கோ, கெள  3ம் = பூசம்
மெ,மே, மை 3ம் ஆயிலியம்
ம,மா,மி,மீ, மு, மூ 6ம் = மகம்
மொ,மோ, மெள 3ம் = பூரம்
ப, பா, பி, பூ 4ம் = உத்திரம்
பு, பூ 2ம் அஸ்தம்
பெ,பே, பை, பொ,போ, பெள் 6ம் = சித்திரை
த, தா 2ம் = சோதி (சுவாதி)
தி,தீ,து,தூ, தெ, தே தை 7ம் = விசாகம்
ந, நா, நி, நீ, நு, நூ 6ம் = அனுடம் (அனுஷ்டம்)
நெ, நே, நை 3ம் = கேட்டை
யு, யூ 2ம் = மூலம்
உ, ஊ, எ, ஏ 4ம் = பூராடம்
ஒ, ஓ, ஒள 3ம் = உத்திராடம்
க, கா, கி 3ம் = திருவோணம்
ஞ, ஞா, ஞீ3ம் = அவிட்டம்
தொ, தோ, தெள 3ம் = சதயம்
நொ, நோ, நெள 3ம் = பூரட்டாதி,
யா, க 2ம் = உத்திரட்டாதி
ச, ஆ, சி, சீ 4ம் = ரேவதி
சு, சூ, செ, சே, சை 5ம் அசுபதி (அஸ்வினி)
சொ, சோ, செள 3ம் = பரணி

அம்முதலோர் நான்கு
அ,ஆ,இ, ஈ 4ம் = கார்த்திகை, உ, ஊ, எ, ஏ, ஐ 5ம் = பூராடம், யு, யூ 2ம் = மூலம், ஒ, ஓ, ஒள 3ம் = உத்திராடம், (4 நட்சத்திரங்கள்)
மெய்ம்முதலாய் மூன்று
க, கா, கி, கீ 4ம் = திருவோணம், கு,கூ 2ம் = திருவாதிரை,கெ, கே, கை, 3ம் = புனர்பூசம், கொ,கோ, கெள 3ம் = பூசம் (4 நட்சத்திரங்கள்)
ச, சா, சி, சீ 4ம் = ரேவதி, சு, சூ, செ, சே, சை 5ம் அசுபதி (அஸ்வினி), சொ, சோ, செள 3ம் = பரணி
(3 நட்சத்திரங்கள்)
ஞ, ஞா, ஞீ 3ம் = அவிட்டம்
தொம்முதலோர் மூன்று
த, தா 2ம் = சோதி (சுவாதி), தி,தீ,து,தூ, தெ, தே தை 7ம் = விசாகம், தொ, தோ, தெள 3ம் = சதயம்
(3 நட்சத்திரங்கள்),
நொம் முதன்மூன்று
ந, நா, நி, நீ, நு, நூ 6ம் = அனுடம் (அனுஷ்டம்), நெ, நே, நை 3ம் = கேட்டை, நொ, நோ, நெள 3ம் = பூரட்டாதி
(3 நட்சத்திரங்கள்)
ப, பா, பி, பூ 4ம் = உத்திரம், பு, பூ 2ம் அஸ்தம், பெ,பே, பை, பொ,போ, பெள 6ம் = சித்திரை
(3 நட்சத்திரங்கள்)
ம,மா,மி,மீ, மு, மூ 6ம் = மகம், மெ,மே, மை 3ம் ஆயிலியம், மொ,மோ, மெள 3ம் = பூரம் (3 நட்சத்திரங்கள்)
யா, க,  2ம் = உத்திரட்டாதி (1)
விருநான்குள்ளதுக்குமகாவிரண்டு
வ, வா, வி, வீ 4ம் = ரோகிணி, வெ, வே, வை,வெள 4ம் = மிருகசீரசம் (மிருகசீர்சம்), (2 நட்சத்திரங்கள்)
++++++++++++++++++++++++++++++++++
பாடல் எண் 2

“வதுவைமனன்புகர் பொனிவர்கேந்திரகோ ணேறி
மாகளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கி
லதிகபெலமாயிவர்களர வொழியவுது வூழ்க
கருகிலுறிலல்ல வெனிலைந்ததற்குள்ளாகின்
முதியவர்தம்குற்பெற மற்றவரபெலமா கின்
முதல்வணும்பொன்னுதய முறின்முகமதனுக்குடையோர்
நிதிமதியுற்றியவை சேரில்வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”

ஏழாம் வீட்டிற்கு உரியவனும், சுக்கிரனும், குருவும் கேந்திரம் அல்லது திரிகோண இடங்களில் தீய கிரகங்களுடன் சேராமல் தனித்திருக்க,

அல்லது லக்கினாதிபதி வலுவாக இருக்க இவர்கள் அதிக பலத்துடன் ராகு  மற்றும்  கேது சேர்க்கை இல்லாமல் சூரியனுக்கு அல்லது சந்திரனுக்கு முன் வீட்டில் அல்லது பின் வீட்டில் இருக்க

அல்லது 5ஆம் வீட்டிற்கு உள்ளாக இருந்து சுபக்கிரகங்கள் ஆட்சி பலத்துடன் இருக்க, அத்துடன் பாவகிரகங்கள் மறைவிடங்களில் இருக்க

அல்லது லக்கினாதிபதியும் குருவும் சேர்ந்து லக்கினத்தில் இருந்தாலும்

அல்லது 2ஆம் மற்றும் 7ஆம் அதிபதிகள் குருவுடனும், சந்திரனுடனும் சேர்ந்து 2, மற்றும் 7ஆம் இடங்களில் இருந்தாலும்

அவைகள் நன்மையைச் செய்யும்.

அதுபோன்ற அமைப்பையுடைய ஜாதகன் இளம் வயதிலேயே திருமணமாகி, நெடுங்காலம் தன் மனைவியுடன் கூடி இன்பம் 
எய்துவான்/ அனுபவிப்பான்.  

உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங், டச்சிங்காக எப்போதும் இருப்பான்.

கடைசி வரிகைக் கவனியுங்கள். அதில்தான் எதைப் பற்றிசொல்லப்படுகிறது என்பது அடங்கியுள்ளது

என்ன வரி அது?

......................................................வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”


பதம் பிரியுங்கள்

வாலிப விவாக (ம்)  நிறைவேறும். அவர்கள் இன்ப(ம்) நெடுநாளைக்கு உளதே”

விளக்கம் போதுமா?
+++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

28.12.10

Astrology உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!

இதன் முதல் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல் பகுதியின் சுட்டி (URL) இங்கே உள்ளது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க்கையின் முடிவில், நமக்கு சொந்தமாக இருப்பதெல்லாம், காணாமல் போகப்போகிறது என்பதும், நாம் மட்டும், அதாவது நமது ஆத்மா மட்டும் தனிமைப் படுத்தப்பெற்று, இறைவனடியைச் சேரப்போகிறது என்பதும் நிதர்சனமான வாழ்வியல் உண்மை.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை

என்று எழுதியவர்,
பல்லவியின் கடைசிவரியை “கடைசிவரை யாரோ?” என்று எழுதினார்.

அதை உணர்கிறவர்கள் உணரட்டும், உணராதவர்கள் உணராமல் போகட்டும் என்பதை வலியுறுத்தித்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் “கடைசிவரை யாரோ?” எழுதினார்

அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சரணங்களும் அந்தப் பாடலில் அசத்தலாக இருக்கும்.

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?


என்ற கேளிவியையும் எழுப்பி நம்மை, ஏன் பாடலைக் கேட்கும் அனைவரையுமே சிந்திக்க வைத்தார்!!
=============================================
பதவியிலேயே உயர்ந்த பதவி சிவபதவிதான்.

எங்கள் பகுதியில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களுக்கு, அவரின் இறப்பை அறிவிக்கும் முகமாக எழுதும் கடிதங்களில், இறந்து விட்டார், செத்து (சுண்ணாம்பாகிப்) போனார் என்று எல்லாம் எழுதாமல், அவரின் பெயரைக் குறிப்பிடுவதோடு, சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் எழுதுவார்கள்.
---------------------------------------------------------------------------
அதெல்லாம் போகிற காலத்திற்குப் பொருந்தும். இருக்கிறவரை என்ன செய்வது? என்பது பாமரனின் கேள்வி.
சில படித்தவர்களின் கேள்வி.

இருக்கிறவரை எல்லாம் வேண்டும்.

எல்லாம் வேண்டும். எல்லாவிதமான சொத்துக்களும் வேண்டும்.

சொத்துக்கள் என்றால் பொருள் உடைமை மட்டுமல்ல எல்லாவிதமான உடைமைகளுமே பொருள் பொதிந்ததுதான்.

நல்ல தாய்தான் மனிதனின் முதல் உடமை.

தாய்க்குப்பின் நல்ல தாரம் அடுத்த முக்கியமான உடைமை.

கல்வி நல்ல உடைமை. திருட்டுப்போகாத உடைமை.

சொன்னபேச்சைக் கேட்கின்ற, தாய் தகப்பனை மதித்துப்போற்றுகின்ற குழந்தைகளும் நல்ல உடைமைதான்.

நல்ல வேலை. ஆக்கபூர்வமான வேலை. அல்லது தொழில், கூட்டுத்தொழில் என்றால் நல்ல பங்குதாரர். வளர்ச்சி மிக்க தொழில் என்றால் நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர் என்று உடைமைகளை வரிசைப் படுத்திக்கொண்டே போகலாம். அல்லது அடுக்கிக்கொண்டே போகலாம்.

அத்தனையும் கிடைக்குமா?

அதெப்படிக் கிடைக்கும்?

அது வாங்கிவந்த வரம்.

முற்காலத்தில் காலத்தின் ஒரு பகுதியை ஒரு மண்டலம் என்று பிரித்துச் சொல்வார்கள். இறைவனை வழிபடுவதற்கு, ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) விரதம் இருங்கள் என்பார்கள் படுத்தும் உடல் நோய் குணமாவதற்கு மருந்தைச் சாப்பிடுவதற்கு ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிடுங்கள் என்பார்கள்.

அதென்ன 48 நாட்கள் என்ற கணக்கு?

27 நட்சத்திரங்கள்,12 இராசிகள், 9 கிரகங்கள் என்று நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அமைப்பைக் கூட்டுங்கள் 48 என்ற எண் கிடைக்கும். அந்த அமைப்பில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் என்பது கணக்கு.

நீங்கள் அஸ்வினி நட்சத்திரம், உங்களுடைய ராசி மேஷராசி, உங்களின் ராசி அதிபதி செவ்வாய் என்றாலும், அந்த மூன்று மட்டும் போதும் என்று நீங்கள் நினைக்க முடியாது. அந்த 48ம் சேர்ந்ததுதான் உங்கள் ஜாதகம்.

எல்லாமுமே நன்றாக அமையாதா?

அதெப்படி அமையும்?

சந்திரன், குரு, சுக்கிரன் என்று சுபக்கிரகங்கள் இருப்பதைப்போல, சனி, ராகு & கேது என்ற தீமை செய்யும் கிரகங்களும் உண்டல்லவா?

லக்கினம், ராசி, கேந்திரம், திரிகோணம் என்று இருப்பதைப்போல, 6, 8 & 12ஆகிய மறைவிடங்களும் (inimical places) உண்டு அல்லவா?

ஆகவே எல்லாமுமே நன்றாக அமைவது நடக்காத காரியம்.

ஒரு வீட்டிற்கு மூன்று பலாபலன்கள் என்று கணக்கிட்டால் மொத்தம் உள்ள 36 பலன்களில் 18 அதாவது சரிபாதி ஒழுங்காக இருந்தாலே போதும்.

இங்கே நாம் சம்பாதிக்கும், சேர்க்கும் அல்லது குவிக்கும் சொத்துக்களைப் போலவே, நாம் பிறக்கும்போதே பட்டாப் போட்டு வாங்கிவந்த சொத்துக்களும் உண்டு.

அதை அலசுவது பெரிய பாடம். அதை இங்கே அலச விரும்பவில்லை. அலசிய துணிகள் காய்வதற்குள் திருட்டுப் போய் விடும். பொறுத்திருங்கள். தனி இணைய தளம் 20.1.2011 அன்று துவங்கப்பட உள்ளது. அப்போது அலசுவோம். அதில் அலசுவோம். அது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. மேல் நிலைப் பாடங்கள் அனைத்தும் அங்கேதான்.

அது, அதில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டும்தான். கள்ளர்களுக்கு அதில் இடமில்லை!

இங்கேயும் (வேறு) பாடங்கள் - பொதுப் பாடங்கள் தொடரும். அனைவரும் படிக்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பொதுவானதுதானே? யாரும் பிறக்கும்போதே ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. நீங்கள் கற்றுத் தேர்ந்ததை, உங்களுக்குத் தெரிந்ததை, வழக்கம்போல இங்கேயே சொல்லுங்கள். இங்கேயே, வகுப்ப்றையிலேயே எழுதுங்கள் என்று அன்பர் ஒருவர் மின்னஞ்சலில் வலியுறுத்தி எழுதியிருந்தார்.

சென்ற நான்கு ஆண்டுகளாக, மொத்தம் 413 பாடங்களை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கே எழுதினேன். அடிப்படைப் பாடங்கள் மொத்தத்தையும் எழுதியுள்ளேன். பாடங்கள் நான் படித்துணர்ந்த பாடங்கள்தான் என்றாலும், எளிமைப் படுத்தி என் மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கடுமையான உழைப்பிற்கிடையே அவற்றை எழுதினேன்

அத்தனையும் திருட்டுப்போய் உள்ளது. அதுதான் வருந்த வேண்டிய, கவனிக்க வேண்டிய விஷயம்.

“பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!” என்ற எச்சரிக்கையையும் பதிவில் வைத்திருந்தேன். வைத்திருக்கிறேன். அதையும் மீறி ஒட்டுமொத்தமாகத் திருடப்பெற்றிருக்கிறது.

எவ்வளவோ பண்டைய ஜோதிட நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்துப் பொருள் உணர்ந்து எழுதுகிறவர்கள் எழுதலாம். யார் வேண்டாம் என்கிறது? உங்கள்மொழியில் உங்கள் விளக்கங்களுடன் எழுதலாம் யார் தடுக்க முடியும்? அல்லது குறை சொல்ல முடியும்?

அரசு பழைமாயான நூல்கள் அனைத்தையும் பொதுவுடையாக்கியுள்ளது.

ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்?

காடு பொதுவானதுதானே என்று காட்டிற்குள் நுழைந்து மரங்களை வெட்டிக் கொண்டுவர முடியுமா? நிலம் பொதுவானதுதானே என்று சொல்லி, தோட்டங்களில் உள்ள விளை பொருளைச் சுருட்டிக் கொண்டுவர முடியுமா?

பொள்ளாச்சி பகுதியில் 25 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. நிலம் பொதுவானதுதானே? அத்தனை மரங்களும் நமக்குச் சொந்தம் என்று அதில் காய்க்கும் காய்களை நீங்கள் விற்பனை செய்ய முடியுமா?

தொட்டியம், குளித்தலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் உள்ளன. குலை தள்ளிய 10 வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வர முடியுமா?

முடியதல்லவா?

பதிவுகளில் அது முடியும்.

பயனர் பெயர், காப்புரிமை, கடவுச் சொல் ஆகியவற்றுடன் இருக்கும் தனிப்பட்ட இணைய தளங்களில் மட்டும் அது சாத்தியமில்லை. உதாரணம் வங்கிகளின் இணைய தளங்கள்.
+++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பொதுவானதுதானே என்று கேள்வி கேட்கும் மேதைகளுக்காக இரண்டு ஜோதிடப் பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை எழுதட்டும் அவர்கள்!

1
“அம்முதலோர் நான்கதும்வல் விருநான்குள்ள துக்கு
மகாவிரண்டிரு மூன்று மெய்ம்முத லாய்மூன்று
மம்முதலா றல்லதும்பந் தான் கிரண்டல்ல துந்தவ்
வாகவிரண்டேழுநக ரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுதலைந்து
நின்றதுமக்க வினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றதுநொம் முதன்மூன்றுயாவும்
சொல்சவினான் கைந்தொருமுன் தலுமீன் றெட்டுளதே”


2
“வதுவைமனன்புகர் பொனிவர்கேந்திரகோ ணேறி
மாகளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கி
லதிகபெலமாயிவர்களர வொழியவுது வூழ்க
கருகிலுறிலல்ல வெனிலைந்ததற்குள்ளாகின்
முதியவர்தம்குற்பெற மற்றவரபெலமா கின்
முதல்வணும்பொன்னுதய முறின்முகமதனுக்குடையோர்
நிதிமதியுற்றியவை சேரில்வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”


இப்பாடல்களுக்கு விளக்கம் தெரியாதவர்கள் அல்லது வேண்டுவோர், தனி மின்னஞ்சலில் கேளுங்கள். விளக்கம் கிடைக்கும்.

இதுபோன்று ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. புரிந்து
கொண்டு படிப்பதற்கு வேண்டிய மொழி அறிவும், நேரமும்,
சொல்லிக் கொடுப்பதற்கு உயர்ந்த குருகுலங்களும்  அன்று
இருந்தன. இன்று இல்லை!

இன்று, பரபரப்பான செய்திகளைப் படிப்பதற்கும், கஃப்பிற்கும், பஃபிற்கும் செல்வதற்கே நமக்கு நேரம் பத்த வில்லை. அதை எல்லாம் படி என்றால் என்ன செய்வது? எங்கே போய் முட்டிக்கொள்வது?

வயதானவர்களுக்கு நேரமிருந்தாலும், வேறுவிதமான பிரச்சினைகளும் அவர்கள் தோள்களின்மேல் ஏறி அமர்ந்துகொண்டுள்ளன. ஆகவே அவர்களுக்கும் நேரம் கிடைப்பது சாத்தியமல்ல.

இங்கே வருகின்றவர்களில் 90% பேர்கள், தங்கள் ஜாதகத்தை ஒத்துப்பார்ப்பதற்கு, பலன் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்தி கிடைக்குமா என்றுதான் வருகிறார்கள். 10% பேர்கள் மட்டும்தான் உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வோம் என்று வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!
=============================================
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்




வாழ்க வளமுடன்!

27.12.10

Astology உனக்கு எது சொந்தம்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology  உனக்கு எது சொந்தம்?

இறைவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பேதம் கிடையாது. படைப்பில் உள்ள எல்லா உயிர்களுமே அவருக்கு வேண்டியவைகள்தான். வேண்டியவர்கள்தான்.

இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. எல்லோருக்கும் பொதுவானவர் அவர். எல்லோருக்குமே அவர் சொந்தமானவர். பேடண்ட் உரிமை யாருக்கும் கிடையாது.

அவர் படைத்தவற்றில் சில விஷயங்கள் பொதுவில் உள்ளன. சில விஷயங்களை சக மனிதர்களும், அரசும் கைப்பற்றி வைத்திருக்கின்றன.

காற்றும், வெளிச்சமும் பொது உபயோகத்தில் இருக்கிறன.

“மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று 

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை”

என்று கவிஞர் வாலி அவர்கள் அதை அற்புதமான பாட்டாகச் சொன்னார்

ஆனால் கடவுள் கொடுத்த நீரும் நிலமும் இன்று பொது உபயோகத்தில் இல்லை.

நிலம், சொத்து, பட்டா, பத்திரம் என்று பலரது கைகளில் சிக்கி இருக்கிறது. பெரும்பான்மையான நிலமும், நீர் வளமும், இயற்கை வளமும் அரசாங்கங்களின் கைகளில் சிக்கி இருக்கிறன.

அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இல்லையென்றால் மனிதன் இயற்கை வளங்களைல்லாம் ஒட்டு மொத்தமாகக் க்ளோஸ் செய்து காசாக்கி வைத்துவிடுவான். மாடமாளிகைகளில் குடியிருப்பான். ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் போய்க் கொண்டிருப்பான்..

இப்போதும் இயற்கையில் கிடைக்கும், ஆற்று மணல், சுண்ணாம்பு, கிரானைட் கற்களையெல்லாம் சில மனிதர்கள் கோடிக் கணக்கில் காசாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வருமானம் இருப்பதால் அரசும் அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அவர்களை விட்டு வைத்திருக்க்கிறது.

அதுபோன்றே, நிலங்களும் பலரது கையில் சிக்கியிருக்கிறது. நகரங்களுக்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கர் ஐம்பதாயிரம் ரூபாய் அளவில் இருந்த நிலங்கள் எல்லாம் இன்று ஒரு கோடிக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சென்னை அண்ணா சாலையில் ஒரு ஏக்கர் (அதாவது 44,000 சதுர அடிகள் கொண்ட நிலம்) நிலத்தின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாய்கள். கிடைத்தால் அந்த விலைக்கு வாங்குவதற்குப் பல செல்வந்தர்களும், நிறுவனங்களும் போட்டி போடும் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

விவசாயம் பார்த்துக் கஷ்டப்படுவதை விட நிலைத்தை விற்றுவிட்டு, நகரங்களில் சுகமான வாழ்க்கை வாழ நினைக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோவை கிராஸ் கட் ரோடு எண்ணும் வியாபாரப் பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு செண்ட் இரண்டு அல்லது மூன்று லட்சமாக இருந்த இடத்தின் விலை இப்போது ஒரு கோடியைத் தொட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு செண்ட் என்பது 440 சதுர அடி இடம்.

உங்களுக்கு அந்தத் தெருவில் இரண்டு கிரவுண்ட் இடமிருந்தால், அதன் இன்றைய மதிப்பு, பதினோரு கோடி ரூபாய். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம். எந்தத் தொழிலையும் செய்து கஷ்டப்பட வேண்டாம். அதை விற்று வங்கியில் பணத்தைப் போட்டு விட்டு, சுகமாக இருக்கலாம். தினமும் கோஹினூர் எக்ஸ்ட்ரா லென்த் பாசுமதி அரிசியில் சாதம் சமைத்துச் சாப்பிவிட்டு வீட்டில் படுத்துக்கொள்ளலாம். கோவை என்றால் ஏஸி தேவையில்லை. மற்ற ஊர்க்காரர்கள் வீடு மொத்தத்தையும் ஏஸி செய்துவிட்டால் போதும். வாழ்க்கை அம்சமாகிவிடும். ஆனந்தமாகிவிடும்.

உண்மைதானா?

தனி மனிதனுக்கு மட்டும் அது சாத்தியம். குடும்பஸ்தனுக்கு மட்டும் அது சாத்தியமில்லை. சொத்தை வைத்துப் பல குடும்பங்களில் இன்று குடுமிப்பிடி சண்டை நடந்துகொண்டிருக்கிறது. நெருங்கிய உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வருத்தம், மனஸ்தாபம், விரோதம், குரோதம், துரோகம் என்று பல காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

சொத்துக்கள் இருக்கும் பலர் வாழ்வில் இன்று நிம்மதி இல்லை. திருப்தியின்மை இல்லை.

சொத்து இல்லாதவன், இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி நிம்மதியாக இருக்கிறான்.

இதைப்பற்றிக் கவியரசர் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

எல்லையில்லா நீரும் நிலமும் நான்தந்தது
எந்தன்சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது.
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது.
காசுபண ஆசை எல்லாம் ஏன் வந்தது


மனிதன் சுய நலத்தின் மொத்த உருவமாக மாறிவிட்டிருப்பாதால்தான் இந்த அவலம்.

தஞ்சாவூரில் 100 ஏக்கர் நிலமும், ஊட்டியில் 300 ஏக்கர் தேயிலைத் தோட்டமும் வைத்திருப்பவன் கூட ஒரு நாள் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி போகப்போகிறான். மண்ணோடு மண்ணாகப் போகிறான்.

நிலம் எனக்குச் சொந்தம் என்பவனை, அவன் எனக்குச் சொந்தம் என்று நிலம் ஒருநாள் காட்டப்போகிறது.

யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.

வெறும் கையோடுதான் வந்தோம் (பிறந்தோம்) வெறும் கையோடுதான் போகப்போகிறோம்!

ஒடிந்துபோன ஊசிகூட உன்கூட வராது என்று பட்டினத்தார் அதை,அந்த நிலையை வலியுறுத்திச் சொன்னார்.

ஆகவே யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.

உனக்கு எது சொந்தம்? என்ற கேள்விக்குக் கவியரசர் கண்ணதாசன் அழகாக விளக்கம் சொல்வார்.

உனக்கு எதுவுமே சொந்தமில்லை. உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை. உன் ஆன்மா உடம்பு என்னும் வாடகை வீட்டில் குடியிருக்கிறது. நீ இறந்துபோகும்போது, உன் உயிர் உன்னைவிட்டுப் பிரியும் போது, அது உன உடலைவிட்டு நீங்கிவிடும். பாழ் உடம்பை ஒரு நாள் கூட வீட்டில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். எரித்துவிடுவார்கள். அல்லது மண்ணோடு மண்ணாகப் புதைத்துவிடுவார்கள். ஆகவே உனக்கு எதுவுமே சொந்தமில்லை.

அதையே தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வேறுவிதமாகச் சொல்வார்கள்.
You have not owned anything. You are only a custodian.
++++++++++++++++++++++++++++++++++
வேறு விதமாக, இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருகிறமாதிரி சற்று சிந்தித்துப்பார்ப்போம்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லாமல் எப்படி ஜீவிக்க முடியும்?

ஒரு கிலோ வெங்காயத்தின் இன்றைய விலை கிலோ 100 ரூபாய். நல்ல அரிசியின் விலை கிலோ 40 ரூபாய். நகரங்களில் ஆயிரம் சதுர அடிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை பத்தாயிர்ம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை இடத்தைப் பொறுத்து உள்ளது.

காலைப் பலகாரமாக ஒரு பிளேட் வடை, பொங்கல், ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி சாப்பிட்டால் நூறு ரூபாய் செலவாகும்.

மின் கட்டணம், செல்போன் பில், வாகனத்திற்குப் பெட்ரோல் என்று பலவகையான செலவுகள் உள்ளன.

பணம் வேண்டாமா?

பட்டினத்தார் போல எதுவும் வேண்டாம் என்று கோவில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா?

ஆகவே பொருளை (பணத்தை) வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது.

பொருள் வேண்டும்.

ஆனால் தேவைப்படும் அளவுதான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

தேவைப்படும் அளவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

தேவைக்கு மேல் கிடைப்பவன், அதைக் குவித்து வைக்க ஆசைப்படும்போது தான் பிரச்சினை!

தேவையான அளவு கிடைக்காதவன், தன் தேவைகளைக் குறைத்துக் கொள்வது ஒன்றுதான் சாத்தியமான வழி!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===========
யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதுதானே பொதுவிதி என்று சொல்லி, அம்பானி 4,500 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள வீட்டிற்குப் போய் நாம் குடியிருக்க ஆசைப்பட முடியுமா? ஏன் நுழைய முடியுமா? அமிதாப்பச்சன், சச்சின் டெண்டூல்கர் ஆகியோரின் மாளிகைக்குள் நுழைய முடியுமா?

தமிழ் நாட்டின் முன்னணிப் பொறியியல் கல்லூரிக்குள் சென்று, அதைச்(பொதுவிதியைச்) சொல்லி, கட்டணம் எதுவுமில்லாமல் உங்கள் பிள்ளைக்கு, அல்லது உங்கள் தம்பிக்குப் படிப்பதற்கு ஒரு சீட்டைக் கேட்டு வாங்க முடியுமா?

”இருக்கும்வரை எல்லாம் சொந்தம். இறந்து சாம்பலான பிறகு அது தன் வாரிசுகளுக்குப் பயன்படட்டும்” என்பதுதான் இருப்பவனின் அசைக்க முடியாத சிந்தனை.
++++++++++++++++++++++++++++++++++
சரி, அதையெல்லாம், அந்த சிந்தனையைச் சற்றுத் தள்ளிவைத்துவிட்டு, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொன்னான நேரம் கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

(தொடரும்)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

26.12.10

மறக்க வேண்டியதும், நினைக்க வேண்டியதும்!

==================================================
 மறக்க வேண்டியதும், நினைக்க வேண்டியதும்!
-----------------------------------------------------------------------------
இன்றைய வாரமலரை மொத்தம் 3 கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. மூத்த மாணவர்களில் ஒருவரின் கட்டுரையும், வெளிநாட்டில் வசிக்கும் இருவரது கட்டுரைகளும் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
"அந்தச் சுவர்களில் என்ன எழுதி இருக்கிறது?"

மதுரைப் பாலத்தை எங்கள் மகிழ்வுந்து(கார்)கடந்து கொண்டிருந்தபோது பின் இருக்கையில் இருந்து அந்தப் பெரியவர் கேட்டார். அது நடந்த ஆண்டு 1986.

பெரியவர் என்றா சொன்னேன்? அவர் பெரியவர் மட்டும் அல்ல.புகழ் பெற்ற மிஷன் மற்றும் மடத்தின் தலைமைப் பதவியைத் தன் 90 வயதுக்குப்பின்னர் அடைந்து சிறப்பாக வழி நடத்தி சமாதி நிலையை அடைந்தவர். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து நமது நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தியவர்.பல தத்துவப் புத்தகங்களை எழுதியவர்.அவர்களுடன் நான் மகிழ்வுந்துப் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தபோது, அவ‌ர்கள் மடத்தின் உப தலைவராக இருந்தார்கள்.

நாங்கள் மதுரையில் இருந்து இராஜபாளைத்திற்கு மகிழ்வுந்தில் சென்று கொண்டு இருந்தோம்.இராஜபாளையத்தில் சுழற்சங்க மகாநாட்டைத் துவக்கி வைக்க அவர்களுக்கு அழைப்பு. என்னையும் அங்கே வேறு ஒரு பணி நிமித்தம் அழைத்துச்சென்றார்கள்.மகிழ்வுந்தின் முன் இருக்கையில் நானும், ஒரு இளம் பிரம்மச்சாரியும் நெருக்கியடித்து அமர்ந்து இருக்கிறோம்.பின் இருக்கையில் அவர்கள் தனியாக‌ அமர்ந்து மோன நிலையில் இருப்ப‌து போல் மெள‌னமாக‌ப் பயணிக்கிறாகள்.

அப்போதுதான், வைகைப் பால‌த்தின் மீது செல்லும்  போது அந்தக் கேள்வி அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நடந்தது.அத்துறவிக்குத் தமிழ் தெரியாது.அவருடைய தாய் மொழி மலையாளமாக இருக்கக்கூடும்.

"அந்தச் சுவர்களில் என்ன எழுதி இருக்கிறது?"

அப்போதுதான் நாங்களும் பாலத்தின் கைப்பிடிச்சுவர்களை கவனித்தோம்.

நாத்திகப் பிரசாரச் சொற்கள் காணப்பட்டன.

பிரம்மச்சாரி பதட்டத்துடன் கூறினார்: "அவர்கள் 'கடவுள் இல்லை;க‌டவுள் இல்லவே இல்லை' என்று எழுதியிருக்கிரார்கள்"

துறவி கேட்கிறார்:"யார் அவர்கள்? நாயக்கரின் கட்சியினரா?"

(இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.அக்காலத்தில் தந்தைப் பெரியாரைக் குறிப்பிடும் போது நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. தவறாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.திசை திருப்பும் படி எதுவும் விம்ர்சிக்க வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன்)

"ஆம்! சுவாமிஜி!"

"வேறு என்ன எழுதியிருக்கிறது?"

நான் கூறினேன்: “கடவுளை மற! மனிதனை நினை!”

"ஓ! மனிதனை நினைக்க ஏன் கடவுளை மறக்க வேண்டும்?" என்று சொல்லிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார் துறவி!

பயணம் தொடர்ந்தது. சற்று நேரம் கழித்துத் துறவி கூறினார்:

"நாயக்கருடன் நாம் ஐம்பது சதம் ஒத்துப் போகிறோம். நம் கொள்கை கடவுளை நினை; மனிதனை நினை."

பயண‌ம் மேலும் தொட‌ர்ந்தது. தியானம் போலத் தோன்றினாலும் துறவி இந்தக் கருத்தையே தியானம் செய்து வருவது போலத் தோன்றியது.

துற‌வி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறது போலப் பேசுகிறார்:

"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் தானே இருக்கிறார்! ஆகவே மனிதனை நினைத்தால், கடவுளை நினைப்பது போலத்தானே!"

மகிழ்வுந்து வேகம் பிடிக்கிறது.துறவியின் உள்ளமும் கூட வேகம், விவேகம் இரண்டும் பெற்றுப் பயணிக்கிறது.

"நமது சுவாமிஜி (விவேகானந்தர்) நமக்குக் கூறினார், தரித்ர தேவோ பவ!மூர்க தேவோ பவ! நர சேவா, நாராயண சேவா!"

"ஏழையான மனிதக் கடவுளை வணங்கு! அறிவிலியான மனிதக் கடவுளை வணங்கு! மனிதனுக்குச் செய்யும் சேவையே மாதவ‌னுக்குச் செய்யும் சேவை"

துறவி தியானத்தில் ஆழ்ந்து விட்டார். மெளனமாகப் பயணித்தோம்.

எதிர்ப்படும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் கடவுளைப் பார்ப்பது போல பிரமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு அப்படித் தோன்றியது.

வாழ்க்கைப் போராட்டத்தில் தொடர்ந்து அக்கொள்கையைக் கடைப்பிடிக்க முடியா விட்டாலும், அவ்வப் போது நினைவு படுத்திக்கொண்டு நரசேவை செய்வேன்.

தொடர்ந்த சேவையாக ஏதாவ‌து ஒன்றினை என் மறைவுக்குப் முன்னர் நிறுவ வேண்டும் என்று ஆவல்.

நடப்பதெல்லம் நம் கையிலேயா இருக்கிறது?

ஆகட்டும் பார்க்கலாம்!
- ஆக்கம். K.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர்
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

----------------------------------------------------------------------------------
ஆக்கம் எண் 2

தலைப்பு: பாலில் செய்த பலகாரம்

தலைப்பை பார்த்துவிட்டு, ஏதோ சமையலைப்பற்றிய குறிப்பு என்று யாரும் நினைக்க வேண்டாம். முழுமையாகப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்

மேற்குமலைத் தொடர்ச்சி அடிவாரம். ஒரு சின்ன கிராமம். அடியேனின் ஊர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்ப் பணி செய்பவர்கள். காலம் 1983 ஆம் ஆண்டு. அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். நாங்கள் அண்ணன் தம்பி என்று மூன்று பேர்கள். நான் கடைக் குட்டி.

என் அன்னை வழித் தாத்தாவும் அதே கிராமத்தில்தான் இருந்தார். வயது அறுபதிற்கும் மேலாக இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் ஊர்ப் பிள்ளையார் கோவில் திண்ணையில், தன் வயதொத்தவர்களுடன் அமர்ந்து, தெருவில் போகிறவர்களைப் பிடித்து நக்கலடிக்கத்துவங்கி விடுவார். அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு. ஒரு நாள் நான் சிக்கிக் கொண்டு விட்டேன்.

தினத்த‌ந்தி நாளிதழைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நானும் செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே வந்தேன். அவர் மேலபடி, கீழேபடி, அந்தப்பக்கம் படின்னு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.

அப்படிப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு செய்தியின் தலைப்பு வாசகம் என்னைச் சற்றுக் குழப்பியது. எழுத்துக் கூட்டி மனதிற்குள் வாசிக்க முயன்றேன்.

"பா..லி..... ப..ல..கா...ர..ம்" என்று மனதிற்குள் கூட்டிச் சொல்லிக்கொண்டவன், அதுவரை கேள்விப்படாதாக இருக்கிறதே என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

பத்திரிக்கை, தவறாக எழுத்துப்பிழைகளோடு அச்சிட்டு விட்டது என்று சட்டென்று மனதிற்குள் தோன்ற பிழையுள்ள வார்த்தைகளைத் திருத்தி "பாலில் பல‌காரம் செய்து விட்டனர்" என்று அந்தச் செய்தியை வாசித்து விட்டேன்.  தாத்தாவும் அவரோட உடனிருந்த நண்பர்களும் பயங்கரமாக சிரித்து விட்டார்கள். ஒரு நிமிடம்  நானும் ஆடிப்போய்விட்டேன்.

தாத்தா கோபமாக, "யாருடா ஒனக்கு தமிழ் சொல்லிக்குடுத்த வாத்தியாரு?.... நீயெல்லாம் என்னதான் பள்ளிக் கூடத்துல படிச்சயோன்னு தெரியல" என்று சொல்லிட்டு மறுபடியும் அந்தச் செய்தியை படிக்க சொன்னாரு. நானும் தட்டுத்தடுமாறி அந்த செய்தியை வாசித்துவிட்டு, தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடி வந்துவிட்டேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் தினத்த‌ந்தி பத்திரிக்கை தவறாகவே அந்த சொல்லை அச்சிட்டு விட்டது என நினைத்திருந்தேன். தாத்தாவுக்கு என்ன தெரியுமுன்னு அவர்மேல் கோபமாகவும் இருந்தேன். ஆனால், கல்லூரியில் படித்த காலத்தில்தான் அது ச‌ரியான வார்த்தைதான் என்பது தெரிய வந்தது.

அன்று வாசித்து நான் மட்டிக்கொண்டு விழித்த அந்தச் செய்தி இதுதான்:

"ஈரோட்டில் 10 வயது சிறுமியைப் பாலில் பலகாரம் செய்து விட்டனர். குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு"

உண்மையான‌ செய்தி உங்க‌ளுக்கே தெரிந்திருக்கும்.

"ஈரோட்டில் 10 வயது சிறுமியைப் பாலிய‌ல் பலாத்காரம் செய்து விட்டனர். குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு"

அறியாப் பருவம் அது, அறியாமல் இருந்தது நான்தான் என்பதும் புரிந்துவிட்டது. இடையில் ஐந்தாண்டுகளாக மனதில் தங்கியிருந்த கோபத்தை மனதைவிட்டு வெளியேற்றினேன்.

தமிழ் வாழ்க! தாத்தாக்களும் வாழ்க!

ஆக்கம்: ஜவஹர் கோவிந்தராஜ், சிட்னி, ஆஸ்ட்ரேலியா
++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

--------------------------------------------------------
ஆக்கம் எண் 3

எப்படிப் பிச்சை இடவேண்டும்?

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் நான், திடீர் மற்றும் தூரத்து சொந்தங்களால் எப்படி அவதியுற நேர்ததது என்பதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதை எழுதத் தூண்டுகோலாக இருந்தது எது தெரியுமா,? வகுப்பறை பக்திமலரில் வந்த 'இறைவியின் செயல் என்றாகிவிட்ட பின்பு மர்மம் ஏது' என்னும் கட்டுரை.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு ஒன்றை வைத்து எழுதப்பெற்ற கதை அது என்றால், இது தற்காலக் கதை.

சென்ற ஆண்டு ஒரு நாள் மதியம். கைபேசி கிணு கிணுக்க எடுத்துப் பார்த்தால், சென்னை எண் ஒன்றிலிருந்து அழைப்பு.

எடுத்துப் பேசினேன். பேசியவர் தன்னை இன்னாரென்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் சொல்லவந்த செய்தியைச் சொன்னார். அவருடைய மகன் மேற்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு வரவுள்ளதாகவும், அவன் படிக்கவுள்ள கல்லூரி என் வீட்டிற்கு அருகில் இருப்பதாகவும், கூறியவர், தொடர்ந்து சொன்னார்:

“அவனை ஒரு வாரம் முன்னதாகவே அனுப்பி வைக்கிறோம். அங்கே உள்ள நடைமுறை வாழ்கையைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்”

பேச்சு வேண்டுகோளாக இல்லை. உத்தரவாக இருந்தது.

சரி என்றேன். சனி வந்து பிடிக்கப்போவது தெரியாமல்! 

என் கணவரும் சம்மதித்தார். “ஆஹா!! அதற்கென்ன செய்தால் போயிற்று!”

சரி என்று சொன்ன மறு நிமிடத்திலிருந்து எனக்கு நாலா பக்கங்களில் இருந்தும் தொல்லை பேசி அழைப்புகள். நேரம் காலம் இல்லாமல் அவருடைய மூத்த சகோதரி, அவருடைய அன்னை மற்றும் அவருடைய உறவினர் களிடமிருந்து எல்லாம் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. நானும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு வைத்துவிடுவேன். என்மேல் அக்கறை கொண்டவர்கள் போலப் பேசியவர்கள் எல்லாம் பேசினார்கள்.

எதையும் யாரிடமும் எதிர்பார்க்காத நான் “அம்மாவைப் போல நினைத்துக் கொள்:” என்ற அவர்களுடைய ஜாலவார்த்தைக் குழியிலும் விழுந்தேன்.

தாயற்ற நான். அவர்களின் உள்நோக்கம் அறியாமல் அவர்களுடைய தொல்லை பேசிகளுக்கு மதிப்பும் கொடுத்தேன்.

தேவமகன் வந்திறங்கினான்.

அவனை அழைத்து வந்து, கவனித்து அவனுடைய பெற்றோருக்கு கொடுத்த வாக்கின்படி நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்து (முதல் வெளிநாட்டு பயணமாம்) பத்து நாட்கள் வைத்திருந்து, பார்த்துப் பார்த்து அவனுக்கு வேண்டியவற்றைச் செய்து கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் (ஹொஸ்டலில்) கொண்டுபோய் விட்டேன்.

மறுநாளே திரும்பி வந்து விட்டான்.

வந்தவன் இன்னும் பாடம் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னான். ஒரு வாரம் இருந்துவிட்டுப் பிறகு போகிறேன் என்றும் சொன்னான். இருந்த சமயத்தில் நம் கவனம் எங்கும் சிதறி விடாதபடி தன் மேலேயே இருக்கும்படியும் பார்த்துக் கொண்டான். சொந்த அலுவல்களை மறந்து, கணவரையும், மகளையும் மறந்து அவன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தேன்

தொலைபேசி மூலம் வந்த உத்தரவுகளை நிறைவேற்றுவதே என் வேலையாக இருந்தது,

அந்த சமயத்தில் என்னுடைய போதாத நேரம், என் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ள செய்தியும் அவருக்கு உட்னே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்ற செய்தியும் வர ஊருக்குக் கிளம்பும்படி ஆயிற்று.

மகளையும், கணவரையும் விட்டுவிட்டுத் தனியாகப் புறப்ப்ட்டுச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்ற வேளையில், “உங்கள் தந்தையை உங்கள் சகோதரர்கள் பார்த்து கொள்ளுவார்களே. நீங்கள் அங்கேயே இருந்து தீபாவளியை எங்கள் மகனோடு கொண்டாடுங்கள்” என்று உத்தரவும் வந்தது.

எப்படிச் சொன்னார்கள் தெரியுமா? “இந்தக் காலத்தில் பைபாஸ் சர்ஜெரி ரொம்ப சாதாரணம் அதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டுமா? நாங்கள் பார்த்துகொள்கிறோம்”

என் மரமண்டையில் மணியடித்தது.  

அவர்கள் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், நம் தந்தைதான் நமக்கு முக்கியம் என்று கிளம்பினேன்.

தேவமகன், "நான் வேண்டுமென்றால் இங்கேயே தங்கி உங்கள் மகளைப் பார்த்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டான்.

அவன் வேலையை அவன் பார்த்து கொள்வதே பெரியது. அதில் அடுத்தவர்க்கு என்ன அவனுடைய உபச்சாரம் என்று நினைத்தவள், “இல்லை நீ ஹொஸ்டல் சென்று விடு”  என்று சொன்னேன், சரி என்று முகத்தை தூக்கி வைத்துகொண்டு போனான்.

சென்னையில் வந்து இறங்கினேன் பதின்மூன்று மணிநேரம் பிரயாணம் செய்த களைப்பும் உடன் வந்தது.

தந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குப் போகும் முன்பு, ஒரு 20 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்று நினைத்தபோது, தேவமகன் வீட்டாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கொஞ்சம் கூட இங்கிதம்  இல்லாமல். என்னை பார்க்க வரப்போவதாகச் சொன்னார்கள். 

என் வீட்டாரிடமிருந்து எனக்குத் திட்டுத்தான் மிஞ்சியது. என் மூத்த சகோதரர் என்னைக் கடிந்து கொண்டார். மருத்துவமனைக்குச் சென்று திரும்பினோம்.

இரண்டு மணி நேரத்தில், தீபாவளிக்குத் துணிமணிகளை வாங்கி விடலாம் வா பின்னர் நேரம் கிடைக்காது என்று என் சகோதரர் சொல்லக் கடைக்குக் கிளம்பிச் சென்றோம்.  அரை மணி கூட ஆயிருக்காது. தேவமகன் குடும்பத்தார் எங்கள் வீட்டு வாசலில் நிற்பதாகச் சொன்னார்கள்.

துணிமணிகளை வாங்காமல், அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினோம்.

தேவமகனின் பெற்றோர்கள் பேசினார்கள் பாருங்கள். அடடா, அடைமழை தோற்றுப்போகும்.

அத்தனையும் தங்களிள் பிள்ளையைப் பற்றிய புராணம்.

ஒரே பிள்ளை; ஓராயிரம் பக்கப் புராணம்

“மருத்துவமனை செல்ல நேரமாகிவிட்டது” என்று நாங்கள் சொல்லியும், அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினார்கள்.

அவர்களும், அவர் உடன் வந்த அவர்களுடைய உறவினர்களும் அந்த தேவமகனின் பெயரை ராமஜெபம் போன்று செபிக்க ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில், “திரும்பச் செல்லும்போது நீங்கள் ஏர் இந்தியா விமானத்தில்தானே போகிறீர்கள் நாங்கள் எங்கள் மகனுக்குச் சில சாமன்களைத் தருகிறோம் கொண்டு செல்லுங்கள்” என்ற உத்தரவையும் போட்டார்கள்.

“46 கிலோ அளவுதான் அனுமதிப்பார்கள். என்னுடைய உடைமைகளும் இருக்கின்றனவே” என்றதற்கு “சரி நாங்கள் தரும் சாமன்களின் அளவு 23 கிலோவிற்குள் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்கிறோம். எடுத்துச் செல்லுங்கள்” என்றார்கள். என்னை வாயைத் திறக்க விடவில்லை.

தொடர்ந்து சொன்னார்கள், “உங்களுகென்ன வாங்க இங்கே என்ன இருக்கிறது? ஏது நேரம்?”

என்னைத் திகைக்க வைத்துவிட்டு, இறுதியாகப் புரப்பட்டுச் சென்று விட்டார்கள். இல்லை பறந்து சென்று விடார்கள்.

நான் போன் செய்து என்னால் அவ்வளவு எடுத்து போக முடியாது என்று கட் அண்ட் ரைட் ஆகச் சொன்னேன் “அப்படியா?” என்று அவர்களுடைய சுருதி இறங்கியது. “சரி புத்தகங்களை மட்டுமாவது எடுத்துசெல்லுங்கள்” என்றார்கள். நானும் சரி என்றேன்,

புத்தகம்தானே என்று. பார்த்தால், வந்து இறங்கியது பாருங்கள் அப்பப்பா! 15  கிலோ அளவில் புத்தகங்கள்.

ஒருவழியாக, விமானம் ஏறியவள், இங்கே வந்து இறங்கினேன்.

விமான நிலையத்தில், கிரீன் சேனல் வழியாக நுழைந்தேன். என்னைத் தடுத்த விமான நிலைய அதிகாரிகள், பையைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். 'கை, கால்களில் நடுக்கம். மனதில் பதற்றம்

புத்தகங்களை எடுத்துப் பார்த்தார்கள். முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தார்கள். அவற்றில் இந்த புத்தகத்தை இந்தியாவை தவிர வேறு எங்கும் உபயோகிக்க கூடாது என்றும், மீறினால் குற்றம் என்றும்  குறிப்பிடப் பட்டிருந்தது. அனைத்து புத்தகமும் அம்பேல்.

என் கணவருக்கு வந்ததே பாருங்கள் கோபம்!

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பார்களே, அது அரங்கேறியது!

அன்று, அதிலிருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன்!.

பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்.
ஆக்கம்: திருமதி. மலர்விழி, இங்கிலாந்து
++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

25.12.10

நீ பாதி நான் பாதி பெண்ணே!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீ பாதி நான் பாதி பெண்ணே!
-------------------------------------------------
இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவர் ஒருவரின் ஆக்கம் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள். பிடித்திருந்தால், அவரை ஊக்கப் படுத்தும் முகமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: "உடலில் தரமுடியாவிட்டாலும் மனதிலாவது பாதி இடம் தந்தால் இல்லறம் நல்லறமே!".

இது கலியுகம். கலியுகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று அறிந்த நம் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனவைதான் இன்று நடக்கின்றது. தவசிகள், ஞானிகள், சித்தர்கள் என்று தமது பிறப்பு மற்றும் தவ வலிமையால் மேன்மையுற்றவர்கள் அவர்கள்.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். இன்று உலகம், மனிதன் வாழ்க்கை உட்பட அனைத்தும் இயந்திரமயமாகி விட்டது. அதை அறிந்திருந்த அவர்கள், இயந்திர உலகத்தில் மனிதன்  மனதை எவ்வாறு கட்டு படுத்தி வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இறைவனிடத்தில் நமது மனதைச் செலுத்தி வீடு பேறு என்னும் மோட்சம் நிலையை அடைய வேண்டிய வழிமுறைகளையும்  நமக்கு உணர்த்திவிட்டுச் சென்று உள்ளார்கள்.

இன்றையப் பொருளாதாரச் சூழலில் அதற்கு, அதாவது இறைவனிடம் மனதைச் செலுத்துவதற்கு நமக்கு முழு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்பதுதான் உண்மை!

சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்  .

நமது நாட்டில் உள்ள எண்ணற்ற கோவில்களுக்கு இருவகையான வழிகளில் ஸ்தல புராணம் உண்டு. ஒன்று சித்தாந்தம் மற்றது வேதாந்தம்.

சித்தாந்தம் என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப்போன அல்லது ஒத்துப் போகின்ற வழிகளில் இருக்கும். இங்கு தனிநபர் ஆராய்ச்சிக்கு முழு இடம் உண்டு.  

வேதாந்தம் என்பது சித்தாந்தத்தைப் போன்றதுதான். ஆனால் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றி வருபவை ஆகும். அங்கு தனி நபர் ஆராய்ச்சிக்கு இடம் இல்லை.

சித்தாந்தத்தைப் பின்பற்றிக் கூறப்படும் ஸ்தல புராணம் ஒன்றைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

வாசுதேவநல்லூர் என்னும் நல்லூரின் முற்பெயர் வாசவனூர். அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் என்னும் புகழ்பெற்ற ஆலயம் அங்கே உள்ளது.

தென்மேற்குத் தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த ரம்மியமான பகுதியில், அமைந்துள்ள ஊர்   வாசுதேவநல்லூர். பொதிகைமலைச் சாரல் அவ்வப்போது வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டுப்போகும்.

வாசுதேவநல்லூரின் கடைப் பகுதியில், முற்காலத்தில், ஒரு பெரும் தவசி, நித்தமும் சிவன் மீதே சிந்தனை வயப்பட்டு சிவபூசை செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த குடிலின் கிழக்குப் பகுதியில், மக்களின் பயன் பாட்டில் நடைபாதை ஒன்றும் இருந்தது.

ஒரு நாள் பூஜைக்கு வேண்டிய பால் இல்லாமல் போய் விடுகின்றது. அதிகாலைப் பொழுது. தவசி குடிலின் வாயிலில் வந்து நின்று யாராவது பாலுடன் செல்கிறார்களா என்று பார்க்கத் துவங்கினார்.
 
வாசுதேவன் என்னும் பெயர்கொண்ட மாயக் கண்ணனின் மனம் கவர்ந்த ஆயர்குல வழி வந்த பெண்கள், தங்கள் கிராமத்திலிருந்து, கறந்த பாலுடன் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு அதை விற்கும் பொருட்டுச் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் பெண்களிடம், தவசி தன் கோரிக்கையை வைக்க, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். கடைசியாக நடந்து வந்த இளம் பெண் ஒருத்தி மட்டும் முன் வந்து அவருக்கு, அவர் நீட்டிய பாத்திரத்தில் பாலை ஊற்றித் தருகின்றாள்.

அன்பிற்கு இலக்கணமான அந்த ஆயர் குலத்து இளம் பெண், பொருள்
ஏதும் வாங்கிக் கொள்ளாமல் தவசியின் பூஜைக்கு வேண்டிய பாலை தந்துவிட்டுச் சென்ற அன்றைய தினம், அவள் கொண்டு சென்ற பால் முழுவதும்  விற்றுத் தீர்ந்து விடுகின்றது. அவளுடைய கிராமத்தில்
இருந்து சென்ற மற்ற பெண்களுக்குக் கொண்டு சென்ற பாலில்
சரிபாதிகூட விற்கவில்லை.

மறுநாளும் வழக்கம் போல பால் விற்க செல்லும் அந்த இளம்பெண், செல்லும் வழியில் நிற்கும் தவசியின் சிவ பூஜைக்கு வேண்டிய பாலைக் கொடுத்துவிட்டுச் செல்ல, அன்றும் அதுவே நடக்கிறது.

அப்படியே அனுதினமும் அது வாடிக்கையாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவள் கொண்டு செல்லும் பால் மட்டும் விரைவில் விற்று விடுகின்றது. ஆனால் மற்றவர்களின் பால் மட்டும் மிச்சமாகிவிடுகிறது.

அனுதினமும் நடக்கும் அந்த நிகழ்வை, அவளுடைய கிராமத்துப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வியந்த வண்ணம் அவள் என்ன மாயம் செய்கிறாள் என்பதை அறிய விரும்பினார்கள். ஒரிரு நாட்கள் ஆரம்பம் முதல் அவளின் அனைத்து செயலையும் கண்காணித்தார்கள். தவசிக்குக் காசு வாங்காமல் பால் கொடுத்துவிட்டுச் செல்வது அவர்கள் கண்களையும், மனதையும் உறுத்தியது.

அவளுடைய உடன்பிறப்புக்களிடம் போட்டுக் கொடுத்தார்கள். தவசியுடன், அவளுக்குத் தகாத உறவு இருப்பதாகவும் சொல்லி வைத்தார்கள்.

சந்நியாசியிடம், அதாவது தவசியிடம் தங்கள் சகோதரிக்கு என்ன உறவு என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், மறைமுகமாகச் சென்று, அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தார்கள் அந்த இளம் நங்கையின் சகோதர்கள்.

அதை அறியாத அந்த ஆயர்குலத்துப் பெண்ணோ எப்பொழுதும் போல சிவ பூஜைக்கு வேண்டிய பாலைச் சந்நியாசியிடம் கொடுக்கும்போது, மறைவாக அவளைத் தொடர்ந்து வந்த அவளுடைய சகோதர்கள், அதைக் கண்ணுற்று, கோபமடைந்ததோடு அரிவாள் கொண்டு அவ்விருவரையும் வெட்டிச் சாய்க்க முற்பட்டார்கள்.

திடுக்கிட்ட சந்நியாசி, அவர்களிடமிருந்து தப்பிக்க ஒடத்துவங்கினார். பால்காரப் பெண்ணோ சகோதரர்களின் செய்கையைக் கண்டு அவளும் சன்னியாசி சென்ற வழியிலேயே தானும் ஓடத்துவங்கினாள்.

சற்று தூரம் ஓடிய சந்நியாசி, காட்டின் துவக்கப் பகுதியில் இருந்த ஒரு பெரிய புளியமரத்தின் பொந்துக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டார். மரப் பொந்திற்குள் அவர் ஒழிவதைப் பார்த்த பால்காரப் பெண்ணும், சகோதர்களிடம் உண்மையை சொல்லிப் புரியவைப்பது இயலாத காரியம் என்று எண்ணி, தான் வணங்கும் சிவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு, சந்நியாசியே தஞ்சம் என்று தானும் அந்த புளியமரத்து பொந்துக்குள் சந்நியாசியோடு சென்று ஒழிந்து கொண்டாள்.

இருவரையும் துரத்தி வந்த பால்காரியின் சகோதர்கள், அவர்கள் பொந்திற்குள் நுழைவதைக் கண்ணுற்று, அதன் அருகே, வந்து நின்று வெளியே வரும்படி கோபத்துடன் குரல் கொடுத்தார்கள்.

எந்த பதிலும் இல்லை.

மீண்டும் மீண்டும் குரல் கொடுக்க, எந்தப் பதிலும் வரவில்லை. எந்தச் சலனமும் இல்லை.

புளியமரப் பொந்திற்குள் மறைந்திருப்பவர்களை, அதிரடியாக வெளியே வரவைக்க வேண்டும் என்று எண்ணி, தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் பொந்தைப் பிளக்கத் துவங்குகிறார்கள்.

என்ன நடந்தது?

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

பொந்தை முழுமையாகப் பிளந்து பார்த்தால், அதிச்சிதான் மிஞ்சியது.

அவர்கள் இருவரையும் அங்கே காணவில்லை!

அடைக்கலம் தேடித் தன்னுடன் வந்தவளுக்குத் தன் மனதிலும் உடம்பிலும் சரிபாதி இடம் தந்து அவளுடன் மாயமாகிவிட்டார் தவ வலிமை மிகுந்த அந்த சிவ சந்நியாசி!

அந்த அதிசயத்தை அறிந்த பொது மக்கள் அந்த இடத்திற்குச் சென்று வழிபாடு  செய்யலாயினர்.

அதை இறைவனின் அதிசயத் திருவிளையாடலாக எண்ணிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மன்னனும் ஒரு பெரும் கோவிலை எழுப்பி அர்த்தனாரீஷ்வர் சிலையை நிறுவி, கோவிலுக்குக் குடமுழுக்கும் செய்தான். பொன்,  பொருள், நிலம் என்று அக்கோவிலின் பராமரிப்புச் செலவுகளுக்கு வேண்டிய தான தர்மங்களையும் செய்தான்.

அந்தப் பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு அனைத்து வகையான செல்வங்களையும் அக்கோவிலுக்கு தானமாகத் தந்தனர்.

அக்கோவில் இன்றும் சிறப்பாக இருக்கிறது. மக்களால் வழிபடப் பெறுகிறது.

திருவிழாக்கள் நடக்கும் நாட்களில், சந்நியாசி சிவனை பூஜித்த இடத்திற்கு ஊர் மக்கள், மேளதாளம், வான வேடிக்கை என சகல சாஸ்திர சம்பிராதாயங் களுடன் வந்து முறைப்படி பூஜைகளைச் செய்த பிறகுதான் மற்ற நிகழ்ச்சி களைச் செய்யத் துவங்குவார்கள்.

"சிந்தாமணி நாதர் பிறந்த இடம்!" என்று பெருமையுடன் சொல்லி, அந்த இடத்தில் மண் எடுத்துக்கொண்டு போய்த்தான் ஊர்த் திருவிழாக்களைத் துவங்குவார்கள். காலங்காலமாக நடக்கும் அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
 
ஊரில் பத்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் பக்தி மேலோங்க அதில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இக்கதையின் மூலம் அடியேன் சொல்ல வந்த முக்கியமான செய்தி இதுதான்:

"உடலில் தரமுடியாவிட்டாலும், மனையாளுக்கு மனதிலாவது பாதி இடம் தந்தால் இல்லறம் நல்லறமே!".
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம்: S. கண்ணன். பஹ்ரெய்ன்


ஆக்கத்தைத் தந்த வகுப்பறை மாணவர் கண்ணனின் எழில்மிகு தோற்றம்

வாழ்க வளமுடன்!

24.12.10

கடவுள் செய்து வைத்துள்ள மாற்று ஏற்பாடுகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
 பக்தி மலர்: கடவுள் செய்து வைத்துள்ள மாற்று ஏற்பாடுகள்!
---------------------------------------------------------------------
இன்றைய வகுப்பறையின் பக்தி மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: மனதிற்கு இதமான சில தத்துவங்கள்
இறைவனின் படைப்பில் மான் மிகவும் அழகானது. அந்த மானும் மனிதன் மாதரி சில நேரங்களில் நமக்கு சில  உறுப்புகளைக் கடவுள் அழகாக வைக்கவில்லை என்று மனவருத்தம் கொள்ளுமாம்

ம‌னித‌னுக்கு என்ன‌தான் அழ‌கையும், உட‌ற்க‌ட்டையும், ப‌டிப்பையும், போக‌த்தையும் கடவுள் கொடுத்திருந்தாலும் மனிதன் ம‌ன‌நிறைவு கொண்டதாகச் சரித்திரம் இல்லை!

தங்கள் உருவ‌த்தைக் க‌ண்ணாடியில் பார்த்து மன வருத்தம் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். கடவுளின்  படைப்பில் நாம் அனைவருமே அழகுதான். அழகானவர்கள்தான்!

யாருக்கு உட‌ல் ந‌ல‌க் குறைவோ (நீண்ட‌ தீராத‌ பிணி) அல்லது உடல் ஊனமோ அவ‌ர்க‌ள்தான் வருத்தம்  கொள்ளலாம். மற்றவர்கள் வருத்தமடைவது நியாயமல்ல!

மானும் அதே மாத‌ரி ‍ஓடைக்குச் சென்று நீர் பருகும் பொழுதெல்லாம் த‌ன்னுடைய‌ உருவ‌ பிம்ப‌த்தை நீரில்  பார்த்து வேத‌னைப்ப‌டுமாம்.
அதோடு ச‌ந்தோஷ‌மும் ப‌டுமாம். “ச்சே என்ன‌ காலு இது ஒல்லி
ஒல்லியா குச்சிமாதிரி? க‌ட‌வுள் த‌டி த‌டியா அழ‌கா குட்டையா வைக்க‌மா போயிட்டாரே  இந்த‌ உருவ‌த்திற்கும் இந்த‌ அழ‌குக்கும்  இந்த‌க் கால்
தேவையா?” என்று வேத‌னைப்படுமாம். கொம்பு இருப்பதால்
சந்தோஷமும் கொள்ளுமாம்.

“ஆ எவ்வ‌ளவு அழகான கொம்பைக் க‌ட‌வுள் எனக்குத் த‌ந்திருக்கிறார்? கிளை கிளையா அழ‌கா பிரிந்து  போகின்றதே? என‌க்கு கிடைத்த கொம்பைப் போன்ற கொம்புகள் ம‌ற்ற‌ ஜீவ‌ராசிக‌ளுக்கு இல்லையே?” என்று  ம‌னதைத் தேர்த்திக் கொள்ளுமாம்.

ஒரு நாள் மான் புல் மேய்ந்து கொண்டிருந்த‌து. அந்த‌ நேர‌த்தில் புலி
ஒன்று மானைத் தேடி வந்து, தூர‌த்த  ஆரம்பித்தது. த‌ன் உயிரைக் காப்ப‌ற்றிக்கொள்ள‌ மான் மிக‌வும் வேக‌த்தோடு ஓடிய‌து. ஓடும்
வ‌ழியில் கொம்பு ஒரு  ம‌ர‌த்தின்  தாழ்வான கிளையில் மாட்டிக்
கொண்ட‌து.  மானின் கால்க‌ளோ வேக‌மாக‌ ஓட‌த் துடித்த‌து. கொம்போ  ஒத்துழைக்கவில்லை. புலியோ அதைத் தின்ப‌த‌ற்கு நெருங்கி வ‌ந்து கொண்டிருந்த‌து. கடுமையான போர‌ட்ட‌த்திற்கு  பிற‌கு மானின் கொம்பு உடைந்துவிட்ட‌து. மானும் த‌ப்பித்து ஓடி ஒரு புத‌ரில் ம‌றைந்து கொண்ட‌து.

மான் த‌ன்னுடைய‌ அழ‌கில்லா கால்க‌ள் த‌ன்னை காப்பாற்ற‌ துடித்த‌தையும், அழ‌கான் கொம்பு மறுத்த‌தையும்  நினைத்து வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌து. மேலும் கொம்பு உடைந்த‌ற்கு வ‌ருத்த‌ம் கொள்ள‌வில்லை அது மற்றொரு ப‌க்க‌ கொம்பையும் வெறுக்கத் துவங்கியது.

அந்த‌மாத‌ரி எந்த‌ பொருளில் எல்லாம் மிகுந்த அழ‌கிருக்கிறதோகோ அதில் எல்லாம் ந‌ம‌க்குத் துன்ப‌மும்  இருக்கும். எந்த‌ப் பொருளில் எல்லாம் அழ‌கில்லையோ அதில் துன்ப‌ம் இருக்காது.

அழ‌கான‌ ம‌னைவி அல்லது க‌ண‌வ‌ன் ஒருவர் கண்ணுக்கு மற்ரவர் விருந்தாவார்கள் (அவர்கள் ஆபரணம்  போன்றவர்கள்) குண‌மான‌
ம‌னைவி அல்லது க‌ண‌வ‌ன் ஒருவர் மனதிற்கு மற்ரவர் மகிழ்ச்சியைக் கொடுப்பார்கள்.(அவ‌ர்க‌ள் பொக்கிஷம் போன்றவர்கள்)

ம‌ன‌ம் அழ‌கில் ம‌ய‌ங்கும் த‌ன்மையையுடைய‌து.

சீதை மாய‌மானின் அழ‌கில் ம‌ய‌ங்கிப் பின் துன்புற்றார். துன்ப‌த்திற்குக் கார‌ண‌ம் ம‌ன‌சுதான். ஆசையை  உருவாக்குவ‌தும் ம‌னசுதான். ம‌ன‌சு என்ற‌ குதிரைக்கு நாம் க‌டிவாள‌மிட்டு அட‌க்கி ஆளவேண்டும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ராஜ‌நாக‌ம் மிகவும் அழ‌காக இருக்கும். அதே நேர‌த்தில் எந்த‌ பாம்புக‌ளுக்கும் இல்லாத கொடிய‌ விஷ‌த்தைக்  கொண்டுள்ளது அதன் த‌னிச் சிற‌ப்பு.

அந்த‌ப் பாம்பு எப்பொழுதும் ம‌னித‌னின் த‌லையில்தான் எகிறி கொத்துமாம். கொத்து வாங்கியவன் நிமிட‌த்தில்  டிக்கெட் வாங்கி விடுவான். அதாவது சிவலோகம் அல்லது வைகுண்டம் சென்று விடுவான்.

அந்த‌ ராஜ‌ நாக‌த்தினால் காட்டில் வாழும் ம‌ற்ற‌ வில‌ங்குக‌ள் எல்லாம் துன்ப‌த்தை அனுப‌விக்கும். அந்த‌ பாம்பைப்  பார்த்தால் யானை கூட‌ப் பய‌ந்து ஒதுங்கிச் செல்லுமாம்.

வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன்  ஒருவன் இருக்க‌வே செய்வார். க‌ட‌வுள் க‌ட‌வுள் க‌ருணைமிக்க‌வ‌ர். எந்தொவொரு  ஆர‌ம்ப‌த்திற்கும் முடிவை வைத்திருப்பார். தீர்வை வைத்திருப்பார். துன்ப‌த்திற்கும் முடிவைக் கொடுப்பார்.

கொடுமைக்காரர்க‌ளுக்கும் ஒரு முடிவை வைத்திருப்பார்.

அக‌ந்தையில் (தான் என்ற‌ க‌ர்வ‌த்தோடு) இருப்பவர்க‌ளூக்கும் பாட‌ம் புகட்டுவார். அந்தப்‌  பாம்புக‌ள் அதிக‌ அளவில் குஞ்சு பொரிக்கும்.
பெரும்பாலும் ந‌திக்க‌ரை ஓர‌ங்க‌ளில்தான் அவைக‌ள் பொரிக்கும்.

அந்த‌க் குட்டிக‌ள் எல்லாம் நீரை நோக்கி ஓடும். அவற்றிற்கு நீந்துவது
மிகவும் பிடிக்கும். மீன்களையும், த‌வ‌ளைகளையும் பிடித்து அவைகள் சாப்பிடும்.  பாவ‌ம், அந்த‌ ராஜ‌ நாக‌த்தை முத‌லை பிடித்து  நின்றுவிடும். அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் முத‌லை அவைக‌ளிருக்கும் க‌ரைக்கே வ‌ந்து, நிறைய பாம்புக் குட்டிக‌ளைப்  பிடித்துத் தின்று விடும். ராஜ‌நாக‌ம்
நிறையக் குஞ்சுகளைப் பொரித்தாலும் ஒவ்வொரு த‌ட‌வையும் 2
அல்லது 3  குட்டிகள் மட்டுமே  உயிரோடிருக்கும். அப்படி முத‌லைகள் தின்னவில்லையென்றால், காட்டில் விலங்குகள் ஒன்றும்  இருக்காது. அதாவது மிஞ்சாது.

க‌ட‌வுள் வ‌ல்லமை உடைய ஒன்றைப் ப‌டைத்துவிட்டால் அதற்கு ஈடாக, மாற்று ஏற்பாடாக, வேறு ஒரு  வ‌ல்ல‌மையையும் படைத்து இருப்பார்.

மனிதர்களுக்கும் மாற்று ஏற்பாடாகக் கடவுள் சர்வ வல்லமை படைத்த ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்.

அதன் பெயர் ஊழ். உங்கள் மொழியில் சொன்னால் விதி. (Destiny)

எத்தனை உடல் வலிமை இருந்தாலும், எத்தனை மன வலிமை
இருந்தாலும், எத்தனை புத்திசாதுர்யம் இருந்தாலும்,  எத்தனை
செல்வம் இருந்தாலும் - கோடிகளை வீசி எதையும் வசமாக்கும்
திறமை இருந்தாலும், எத்தனை பெரிய பதவி இருந்தாலும்,
எத்தனை செல்வாக்கு இருந்தாலும், விதியின் முன் அவைகள்
ஒன்றும் செல்லாது!

ஆடுபவர்களை, ஆட்டம் போடுபவர்களை எல்லாம் விதி, ஒருநாள், அடக்கி, ஒடுக்கி, முடக்கி வைத்துவிடும். எத்தனையோ பேர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள்.

விதியைவிட வலியது எது?

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்நுறும் - குறள் எண் 380


அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் இப்படி அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்:

what is stronger than fate? If we think of an expedient (to avert it), It will itself be with us before the thought

சர்வ வல்லமை படித்த கடவுளை அனுதினமும் வணங்குவோம்.
அவன் தாள் பணிவோம்; அக மகிழ்வு கொள்வோம்!

-------------------------------------------------------------------------
ஆக்கத்தைத் தந்த மாணவி, தன் பெயரையும் ஊரையும் வெளியிட வேண்டாம் என்று அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். ஆகவே அவற்றை வெளியிடவில்லை.

நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில், அடுத்த ஆக்கத்தில், அவரே தன் பெயரை வெளியிடுவார் என்று நம்புவோமாக!
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23.12.10

அடியேன் வாத்தியாரான கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடியேன் வாத்தியாரான கதை!

எழுத்து என் தொழில் அல்ல! ஜோதிடமும் என் தொழில் அல்ல! செயற்கை இழைகளைச் சந்தைப்படுத்தும் முகவர் தொழிலைச் செய்து வருகிறேன். தீவிரவாசகன். அதோடு கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதுகிறேன்.

அதுஎன்னுடைய போதாத நேரம். உங்கள் மொழியில் சொன்னால்
It is not my good time!

கல்கி, கண்ணதாசன், எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சுஜாதா, பாலகுமாரன், வாரியார் சுவாமிகள், ஓஷோ, Jeffery Archer, James Hadley Chase என்று கலக்கலாகப் பலரது நூல்களையும் படித்ததால் எப்படி எழுத வேண்டும்
என்பதைவிட எப்படி எழுதக்கூடாது என்பது எனக்குப் பிடிபட்டது.

விளையாட்டாகப் பத்திரிக்கைகளில் எழுதத் துவங்கினேன். எழுத்து மோகினி என்னப் பிடித்துக்கொண்டு விட்டாள். அவள் அழகில் மயங்கியவன், அவளின் வற்புறுத்தலுக்காக பதிவுகளில் (Blogs) எழுத ஆரம்பித்தேன்.

“எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”


என்பதுதான் எழுத்தின் தாரகமந்திரம்.

ஆன்மிகக் கட்டுரைகள், சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள், ஜோதிடக் கட்டுரைகள் என்று  எழுத்தின் எல்லாப் பரிமாணத்தையும் தொட்டு எழுதுகிறேன்.

பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகளையும் இரண்டு கட்டுரைத் தொடர்களையும் எழுதியிருக்கிறேன். 4 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதன் மூலம் எனக்கு சுமார் 20,000 வாசகர்கள் உள்ளார்கள்.

என் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் அனைவரும் என்னுடைய
எளிமையான மற்றும் சுவையான நடைக்காகத்தான்  இங்கே வந்து
படிப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்காகத்தான் ஊக்கத்துடன்
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஜோதிடத்தை எழுதுவதால்தான் இங்கே இவ்வளவு எண்ணிக்கை என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால்,  அது தவறு என்பதை மனதில் கொள்ளவும். உணராதவர்கள், அதை உணர்வார்கள்.

குடுவைகள், ரசாயனக் கலவைகள், சோதனைச் சாலைகள் என்று வைத்து ஜோதிட ஆராய்ச்சிகள்  செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தில் பட்டம் பெற்ற எனது  மாணவர்களில் சிலர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! இறையருளால்  அவர்களுடைய ஆராய்ச்சிகள் வெற்றி பெறட்டும்!

எனக்குத் தெரிந்தவற்றை, நான் கற்றவற்றை, இங்கே என் மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.  ஜோதிடம் பெரிய கடல். அதை எவருமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆயுள் பத்தாது.

நான் கற்றுக்கொண்டது கையளவுதான். இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

 “போற்றுவார் போற்றட்டும் - புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும்!”


எழுத்தைக் கையில் பிடித்தவனுக்கு உள்ள தாரக மந்திரம் இது!

நான் எழுதவில்லை. பழநிஅப்பன் என்னை எழுத வைக்கிறான். எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

தூற்றல்களையும் புழுதிகளையும் மட்டும் என் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


இது ரேசன் கார்டையும், உத்தியோக உத்தரவையும் வைத்துக்கொண்டு
நான் தேடிப்பெற்ற பட்டப் பெயரல்ல. உங்கள் மொழியில் சொன்னால் அடையாளப் பெயரல்ல! பல்சுவை என்ற பதிவில் (http://devakottai.blogspot.com/)
நான்  எழுதிக்கொண்டிருந்த காலத்தில் பதிவுலக நண்பர்களால் வழங்கப்
பெற்ற பெயர். அந்தப் பெயருக்காகவே நான் ‘வகுப்பறை’ என்ற
வலைப்பூவைத் துவங்கியது தனிக்கதை!

மனத்திருப்தி ஒன்றுதான் சமபளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  
2,049 மாணவர்கள்தான் போனசாகக் கிடைத்திருகிறார்கள்.  
அவற்ரைவிட உயர்ந்தது  எது உள்ளது?

வாழ்க வளமுடன்!

22.12.10

Short Story மேங்கோப்பு மேனா!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story  மேங்கோப்பு மேனா!

சிறுகதைகள் எழுதுவதுதான் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்ததும், அதிகமாக வசப்பட்டதும் ஆகும்!

பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிய கதைகளில்
60 சிறுகதைகள் 3 தொகுதிகளாகத் தொகுக்கப்பெற்றுப் புத்தகங்களாக
வெளி வந்துள்ளன. இன்னும் 20 கதைகள் சேர்ந்தவுடன், அவைகளும்
புத்தகமாக வெளிவரும். வட்டார மொழியில் எழுதுவதால்,
செட்டிநாட்டில் எனக்கு 20,000 வாசகர்கள் உள்ளார்கள். அவர்களை
நான் விடமுடியாது. பல பணிகளுக்கு  இடையே விடாது
அவர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நான்காண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கதை ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன். படித்து  மகிழுங்கள். கதையைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
            மேங்கோப்பு மேனா

(பர்மாத் தேக்கு மரங்களால் ஆன தூண்களும், உத்திரங்களும், சட்டங்களும், நிறைந்த மேற்கூரைப் பகுதிக்கு  உள்ள பொதுப்பெயர் மேங்கோப்பு. செட்டி நாட்டில் உள்ள பெரிய பெரிய வீடுகளின் மேற்பகுதியை  அப்படித்தான் சொல்வார்கள். அதை மனதில் கொண்டு கதையைப் படிக்கவும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

        அந்த அடையாளப்பெயரை யாராவது சொன்னால் முத்தாள்  ஆச்சிக்குக் கெட்ட கோபம் வரும்

        ஆனால் வந்தவனுக்கு அது தெரியுமா என்ன ?

        அவன் இரண்டாவது முறையாக அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக் கேட்டான்," மேங்கோப்பு மேனா வீடு  எங்கே ஆச்சி இருக்கு?"

        கொதித்துவந்த கோபத்தை வெளிக்காட்டாமல் ஆச்சி  தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னார்கள்,  "இந்த வீடுதானப்பா! செட்டியார் உள்ளேதான் இருக்கிறார்-போய்ப்பார்!"

         வந்தவன் வெளியூர்க்காரன்போலும், தோளில் தொங்கிக் கொண்டிருந்த ரெக்ஸீன் பையோடு  வீட்டிற்குள்ளே போனான்.

        ஆச்சியின் வீடு சிவன்கோவில் தெற்குத் தெருவில் இருந்தது.  வீட்டு  வாசலில் இருந்து பார்த்தால்  கோவிலின் ராஜகோபுரம் நன்றாகத் தெரியும்

        அன்று ஆடிக்கார்த்திகை.பெரிய கோலமாகப் போடவேண்டும்  என்று தன் வீட்டின் வாசலுக்கு  வந்திருந்த ஆச்சிக்குக் கோலம்போடும் மனநிலை மாறிவிட்டது.

         பேருக்காக நான்கு புள்ளி, நான்கு வரிசையில் ஒரு கோலத்தைப் போட்டுவிட்டு, சிவன்  கோவிலைப்பார்த்துக் கையெடு த்துக் கும்பிட்டார்கள். தங்கள் வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரைப்  போக்கும்படி வேண்டிக்கொண்டவர்கள், வீட்டிற்குள்ளே திரும்பிச் சென்று விட்டார்கள்.

         முப்பது  ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சி மணமாகி, மாலையும் கழுத்துமாக அந்த வீட்டிற்குள்  அடியெடுத்துவைத்தபோது அந்த வீட்டிற்குக் 'காரியக்காரர் சோனா வீடு' என்றுதான் பெயர்.  ஆச்சியின் மாமனார்  சொக்கலிங்கம் செட்டியார் நகரச்சிவன் கோவிலின் காரியக்காரராக இருந்து இருபது வருடங்களுக்கு மேல்  செய்த  சேவைகள், தர்மங்களுக்காக ஊர் நகரத்தார்கள் பெருமைப்படுத்தி அழைத்த பெயர் அது!

        அதெல்லாம் ஒரு காலம்.

        ஆச்சி திருமணமாகி வந்த இரண்டாவது வருடமே பெரியசெட்டியார் சிவபதவி அடைந்துவிட்டார்.

       ஆச்சியின் குடும்பத்தார்க்குப் பூர்வீகத்தொழில் அரிசி வியாபாரம்.
ஊரின் நுழைவாயிலில் மிகப்பெரிய  அரிசி ஆலையும், நெல் கிடங்கும் இருந்தது. பெரிய செட்டியாரின் மறைவிற்குப் பிறகு தொழிலை யார் 
பார்ப்பது என்ற  பிரச்சினையில் ஆச்சியின் கணவர் மெய்யப்பன் தன் அண்ணனுடன் சச்சரவு செய்து கொண்டுவிட்டார். கறாராகப்பேசி பங்கைப்பிரித்துப் பணத்தையும் வாங்கிகொண்டு வந்துவிட்டார்.

        பஞ்சாயத்துவைத்துப்பங்குபிரிக்கும் சமயத்தில் வாய் வார்த்தைகள் 
முற்றி உன் சங்காத்தமே  வேண்டாமென்று பொதுவீட்டைத்  தன்
தம்பிக்கே கணக்குப்பண்ணிக் கொடுத்துவிட்டு ஆலைக்குப்
பக்கத்திலேயே ஒரு  வீட்டை வாங்கிக்கொண்டு  பிரிந்துபோய்
விட்டார்கள் அண்ணன் குடும்பத்தினர்.

         பிரிவிற்குப்பிறகு மேனா  ஆரம்ப காலத்தில் செட்டிநாட்டுக்
கலைப் பொருட்கள், ரவிவர்மாவின்  படங்கள், சாண்ட்லியர் சர
விளக்குகள், வேலைப்பாடுகள் மிகுந்த மரச்சாமான்கள் என்று
வாங்கிவிற்க ஆரம்பித்தவர்,  பிறகு ஏற்பட்ட வியாபாரத்தொடர்புகள் காரணமாக நிலைக்கதவுகள், உத்திரங்கள், மரத்தூண்கள்,  கல்தூண்கள் என்றும்  வாங்கி விற்க ஆரம்பித்தார். பிறகு மற்றும் ஒரு காலகட்டத்தில்   வீடுகளை விலைக்கு வாங்கி மேங்கோப்புக்களைப் பிரித்து மொத்தமாக விற்றுக் காசு பார்க்கும் தொழிலுக்கு இறங்கிவிட்டார்.

          சிதிலமான பழைய வீடுகள்,பராமரிப்பு பிரச்சினையுள்ள வீடுகள்,
பங்குப் பிரச்சினையுள்ள வீடுகள்  என்று விலைக்குவரும் எந்த 
வீட்டையும்  அவர் விட்டு வைக்கவில்லை.செட்டிநாட்டில் எந்த
ஊரையும்  வீட்டுவைக்கவில்லை

          இலட்சக்கணக்கில் பணம் பார்த்ததோடு, 'மேங்கோப்பு மேனா'
என்ற பட்டப்பெயரும் சேர, மிகவும்  பிரபலமாகவேறு  ஆகிவிட்டார்.

          எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் ஒரு மாத காலத்தில் தரைமட்ட மாக்கி, வீடு இருந்த சுவடே  தெரியாமல் செய்து விடுவார்.  மூன்று  கார்கள்,  நான்கு லாரிகள், இடிபாடுகளை அகற்றுவதற்கு 'பொக்லைன்'  இயந்திரம், நூற்றிற்கும் மேற்பட்ட கூலியாட்கள் பட்டாளம், பெரிய கிடங்கு என்று எல்லாம் சொந்தமாக வைத்துக்  கொள்ளும் அளவிற்குப் பெரிய ஆளாகி விட்டார்.

          முத்தாள் ஆச்சிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.

          தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக எத்தனையோ முறைகள்  சொல்லிப் பார்த்துவிட்டார்.  எதுவும் அவரிடம் எடுபட வில்லை!

          ஆச்சி அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்.

          "நகரத்தார்கள் என்றால்  ஆக்கபூர்வமான தொழிலைத்தான் செய்ய வேண்டும். அழிக்கும் வேலைகளைச்  செய்யக்கூடாது. நான்  ஒருவன் செய்யாவிட்டால், வேறு ஒருவன் இதைச் செய்யப்போகிறான்
என்கிறீர்களே- யாரோ செய்து விட்டுப்போகட்டும். நமக்கு இந்தத்
தொழில் வேண்டாம்.மாட்டுப் பண்ணை வைக்கலாம் - கசாப்புக்கடை வைக்கலாமா ?"

           உடனே ஆச்சியின் கணவர் மேனா சூடாகப் பதில் சொல்வார்.  "திருடக்கூடாது, அடுத்தவன்  சொத்தைக் கொள்ளையடிக்கக்கூடாது - அவைதான் தர்மமற்ற செயல்கள். நான் செய்வது தொழில்.நீ 
விளங்காமல்  வியாக்கியானம் பேசாதே! நான் ஒரு வீட்டை முழுப்
பணமும் கொடுத்து வாங்கிய பிறகுதான்  இடிக்கிறேன்.மேங்கோப்பை விற்கிறேன். அது  எப்படி கசாப்புக் கடையாகும், சொல்!" என்பார்

           முத்தாள்  ஆச்சி விடமாட்டார்கள். "நம்ம சேது அய்த்தான் செய்கிறார்களே- இடம் வாங்கி, வீடுகள்,  கடைகள், கட்டிடங்கள் கட்டி விற்கிறார்களே- அதே தொழிலை நீங்களும் செய்யுங்களேன். எதற்காக
இந்த இடித்து  விற்கும் தொழில் ? ஒரு வீட்டை விற்கும் போது அந்த வீட்டிலுள்ள பங்குதாரர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமித்த  சந்தோஷத்
தோடா உங்களிடம் விற்கிறார்கள் ? பத்தில் இரண்டு பேர்களுக்காவது மனக்கசப்பு, வருத்தம் இருக்கவில்லையா ? எத்தனை வீடுகளில்
அந்த வீட்டின் குலதெய்வங்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அந்த 
வீடுகளும் இடிபடத்தான் வேண்டுமா ? அந்த பாவமெல்லாம் நம்மைச்
சும்மா விடுமா ? சேது அய்த்தான் செய்வது மாட்டுப் பண்ணைத்
தொழிலுக்கு ஒப்பானது-நீங்கள் செய்வது கசாப்புக்கடை வேலை- இப்போதாவது வித்தியாசம்  தெரிகிறதா ? செய்தவரை போதும்,
இனிமேல் செய்ய வேண்டாம்- விட்டு விடுங்கள்!"

           ஆ னால் மேனாவா விடுவார்? குடித்துப் பழக்கப்பட்டவன் எப்படிக் குடிப்பழக்கத்தை  விடமாட்டானோ - அப்படி மேனாவும் விடவில்லை. தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.

           மேற்கோண்டு சொல்வார்." உன்னுடைய சிவபெருமான் உத்தரவு போடுவார் என்பாயே- அவர்  உத்தரவு போடட்டும்-நான் நிறுத்தி 
விடுகிறேன்"

         ஆனால் அந்த ஆதிமூலத்தின் உத்தரவுகள் வாய் மொழியாக
வராது- செயல் வடிவாகத்தான் வரும்  என்பது அவருக்குத் 
தெரியாமல் போய்விட்டது!

                                            ********************************

      அந்த ரெக்ஸீன் பை ஆசாமியுடன் செட்டியார் புறப்பட்டுச் செல்லும்
போது காலை மணி பத்து  இருக்கும்.திருச்சி வரை போகிறேன்- இரவு திரும்பிவர தாமதமானாலும் ஆகும் என்று  ஆச்சியிடம்  சொல்லி
விட்டுப் போனார்

        ஆ னால் இரவு திரும்பிவரும்போதுதான் எதிர்பாராத விதமாக
பெரிய சிக்கல் கிவிட்டது.  திருச்சியிலிருந்து எட்டாவது கிலோ
மீட்டரில்  செம்பட்டு விமான நிலயம் அருகே செட்டியாரின்  கார்  விபத்துக்குள்ளாகிவிட்டது.

       கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு, எதிரில் வந்த லாரிக்காரன்
ஒருவன் செட்டியாரின் காரை அசுர  வேகத்தில்  ஒரு சாத்து சாத்தி
விட்டான். சாத்திய வேகத்தில்  செட்டியாரின் கார் பின் பக்கமாக
வந்த மினி லாரி  ஒன்றோடும் மோதிக் கவிழ்ந்ததில் செட்டியாருக்கு மட்டும்தான் பலமான அடி, காயங்கள். பின் தலைப்பகுதி,  முதுகுப்
பகுதி, இடுப்பு என்று பலமான காயங்கள். காது,மூக்கு,வாய் வழியாக வெல்லாம் ரத்தம் கசிய ஆரம்பித்து  விட்டது. செட்டியார் மயங்கி
விட்டார்.

        சிறிய காயங்ளுடன் தப்பிப் பிழைத்த செட்டியாரின் டிரைவர்தான்
உடனே நிலைமையை உணர்ந்து  புத்திசாலித்தனமான வேலையைச் செய்தான்.

        செட்டியாரின் சின்ன மைத்துனர் திருச்சி¢யில் மருத்துவராக ஒரு
பெரிய தனியார் மருத்துவமனையில் பணி  புரிந்துகொண்டிருந்தார்.
அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் இருவரும் புறப்பட்டு வந்தனர்.  செட்டியாரின் செல்போனை எடுத்து பதட்டத்தோடு விஷயத்தை
அவரிடம் சொன்னான்

         அடுத்து எல்லாம் மளமளவென்று நடந்தன.

         அம்புலன்ஸ் வண்டியோடு இருபதே நிமிடங்களில் அந்த
இடத்திற்கு  வந்த செட்டியாரின் சின்ன  மைத்துனர், செட்டியாருக்கு
முதல் உதவியளித்ததோடு, தங்கள் மருத்துவ மணைக்கே  கொண்டு
போய்  அவசர  சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்செய்தார்.

          முத்தாள் ஆச்சிக்குக் காலையில்தான்  தகவல் சொல்லப்பட்டது

          முத்தாள்  ஆச்சி தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு,
தமிழ் நாட்டிலுள்ள, தனக்குத்தெரிந்த  அத்தனை கொவில் சாமிகளையும் வேண்டிக்கொண்டு தங்கள் கம்பெனி ஆ ட்கள் துணையோடு திருச்சிக்கு
வந்து சேர்ந்தார்கள்.செட்டியாரின் மகள்கள் இருவரும் தங்கள்
கணவருடன்  சென்னையிலிருந்து புறப்பட்டு  வந்தார்கள்.சிதம்பரத்தில்
கடைசி வருடம் பொறியியல் பட்டப் படித்துக்கொண்டிருந்த செட்டியாரின் மகனும் வந்து சேர்ந்தான்

          மற்றும் உறவினர்கள், நண்பர்கள், வியாபாரத்தொடர்பு நட்புக்கள்
என்று மருத்துவமனையில்   ஏராளமான கூட்டம்.

         பத்து நாட்கள் வரையில் யாரையும் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.மூன்று முறை பெரிய  அறுவை சிகிச்சைகள்
நடந்தன உடைந்திருந்த கழுத்து எலும்பு,ஸ்பைனல் கார்டு எலும்புகள்,
இடுப்பு எலும்புகள்  என்று ஒவ்வொருபகுதிக்கும் தனித்தனியாக
சிகிச்சைகள் நடைபெற்றன.மொத்ததில் பின் தலைபப்குதியிலிருந்து, 
முதுகு வழியாக பின் பகுதி முழுவதையும் மொத்தமாகப் பிரித்து
சிகிச்சையளித் திருந்தார்கள்

          மோசமாக அடிபட்டிருந்த தண்டு வடத்தசைகளுக்கும், நரம்புகளுக்கும் சிறப்பு மருத்துவர் ஒருவர்  வந்து அறுவை சிகிச்சை செய்தார்.

          நான்கு இலட்சரூபாய் செலவு. உயிரைக் காப்பாற்றி விட்டார்களே தவிர செட்டியார் பழைய  நிலைமைக்கு வருவது இயலாது என்று விட்டார்கள். மூன்று மாதங்கள் படுத்த படுக்கைதான். அதற்குப்பிறகு  பயிற்சி கொடுத்து எழுந்து உட்காரவைக்கலாம் என்றார்கள்.கை,  கால்களில் நல்ல உண்ர்வுகள் திரும்பினால்  வாக்கரின் உதவியுடன்  நடக்க வைக்க முயற்சிக்கலாம்  என்றார்கள்.

         பதினைந்தாவது நாள்தான் சிறப்புக் கண்காணிப்புப் பிரிவை விட்டு தனி அறைக்குத்  தூக்கிக்கொண்டுவந்து படுக்க வைத்தார்கள்.

         செட்டியாரின் முகம் தெளிவாக இருந்தது.அலைபாய்ந்த கண்கள் முதலில் முத்தாள்  ஆச்சியைத்தான்  தேடின!

          சற்றுத்தள்ளி நின்று கொண்டிருந்த ஆச்சி படுக்கையின் அருகில் வந்து நின்றார்கள்.

           செட்டியார் மெல்லிய குரலில் சொன்னார்," உங்களுக்கெல்லாம் மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டேன்."

           ஆச்சி பதிலுக்கு' ம்' ...என்றார்கள்

           "என்ன முத்தா, ம்' என்கிறாய், ஏதாவது பேசு !" என்றார் செட்டியார் விடாமல்

           ஆச்சி பட படவென்று பொரிந்து தள்ளிவிட்டார்கள்

           "ஆண்டவன் உத்தரவு போடட்டும் என்று ஏளனம் 
செய்வீர்களே! உத்தரவை எப்படிப்போட்டான்  பார்த்தீர்களா ? 
ஊர் மேங்கோப்பை யெல்லாம் நீங்கள் பிரித்தீர்கள், உங்கள் 
மேங்கோப்பை அவன்  பிரித்து  விட்டான்.என் தாலி பாக்கியம் 
தான் - இவ்வளவு பெரிய விபத்தில்  நீங்கள்  உயிர் பிழைத் 
துள்ளீர்கள். போனது  போகட்டும்,  மனம் உடைந்து விடாதீர்கள். 
நான் இருக்கிறேன் உங்களைக் கடைசிவரை வைத்துக்  காப்பாற்றுவேன்.மனம் தளராமல் நம்பிக்கையோடிருங்கள்! "

          எவ்வளவு நிதர்சனமான உண்மை!

           கண்களில் நீர் வழிந்தோட விம்மி, விம்மி அழ ரம்பித்து விட்டார் செட்டியார் - அதுவும் வாழ்க்கையில்  முதன் முறையாக !

          அடிபட்டுப் படுத்திருக்கும் மனிதரிடம் ஏன் அப்படிச் சொன்னோம் என்றாகிவிட்டது  ஆச்சிக்கு.அருகில்  சென்ற ஆச்சி அவருடைய
தோளில் தட்டிக்கொடுத்தார்கள்.

          ஆனால் உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம்  இல்லையா? அதை உணர்ந்த செட்டியாரின் மனது சமாதானமடைந்தது என்பதை அவரது முகமே
காட்டியது!
++++++++++++++++++++++++++++++++++++++++++        


வாழ்க வளமுடன்!

21.12.10

Astrology என்ன பார்வை உந்தன் பார்வை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology என்ன பார்வை உந்தன் பார்வை?

“என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பார்வை!”


என்று துவங்கும் கவியரசரின் பாடலும், பாடல் வரிகளும் பிரபலம்.

காதலியின் இடை மெலியும் அளவிற்கு காதலனின் பார்வை அப்படி சக்தி வாய்ந்ததாம். அதுபோல பெண்ணின் பார்வையில் பித்தானவர்களும் இருக்கிறார்கள்.

பெண்ணின் கண்களைப் பேசும் கண்கள் என்பார்கள். ஆணின் கண்களை தீட்சண்யமானதென்பார்கள்.

சாதாரண மனிதப் பிறவியின் கண்களுக்கே இத்தனை வலிமை என்றால், கிரகங்களின் கண்களுக்கு - அதாவது கிரகங்களின் பார்வைக்கு எத்தனை வலிமை இருக்கும்?

அதுதான் இன்றையப்பாடம்
+++++++++++++++++++++++
சீட்டாட்டத்தில் 13 சீட்டுக்கள். அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விளையாட வேண்டும். ஒரு சீட்டைக் கீழே இறக்கினால், பதிலுக்கு ஒரு சீட்டை எடுத்து சொருகிக் கொள்ள வேண்டும். ரம்மியைக் கையில் வைத்துக்கொண்டு மற்ற சேர்க்கைகளுக்காக ஆடி அசர்பவர்களும் உண்டு. அதேபோல 4 அல்லது 5 ஜோக்கர்களை வைத்துக்கொண்டு எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்று ரம்மிக்காக ஆடி ஓய்பவர்களும் உண்டு. சீட்டு ஆடுபவர்களுக்கு மட்டுமே அதன் சிக்கல் தெரியும்.

ஆரம்பத்திலேயே மடக்கினால், 20 புள்ளிகள் போய்விடும். இடையில் மடக்கினால் 40 புள்ளிகள் போய்விடும். கேட் என்று எதிரே அமர்ந்திருப்பவன் மடக்கினால், சமயத்தில் 80 புள்ளிகள் போய்விடும். சிலருக்கு மட்டும் எடுக்கும் கார்டுகள் எல்லாம் வசப்பட்டதாக இருக்கும்.

ஆனால் பலரும் ஆடுவதற்குக் காரணம் நமக்கும் அடுத்த களைப்பில் அல்லது குலுக்கலில் நல்ல சீட்டுக்கள் வரும் எனும் நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையும் அப்படித்தான். நாளையப் பொழுது நன்மையாக இருக்கும் எனும் நம்பிக்கையில்தான் அத்தனை மனிதர்களூம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதுதன் ஜாதகம் பார்ப்பதின் தலையாய நோக்கம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும். அது இல்லாதவன் ஜோதிடத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டான்.

சீட்டாட்டத்தில் உள்ள எண்ணிக்கை பதிமூன்று என்றால், ஜாதகத்தில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு. அந்தப் பன்னிரெண்டை வைத்துக்கொண்டுதான் நம் ஆட்டம் இருக்கும்.

1, 9, 10, 11 ஆம் வீடுகள் முக்கியமானவை என்பார்கள்.

மற்றவீடுகள் முக்கியமில்லையா?

எல்லா வீடுகளுமே முக்கியமானதுதான்.

வீடுகள் முக்கியம்

வீட்டின் அதிபதி சென்று அமரும் இடம் முக்கியம்

அதோடு அந்த வீடு பெறும் பார்வைகளும் முக்கியம்.

செங்கல், சிமெண்ட், மணல், தண்ணீர், முறுக்குக் கம்பிகள் என்று பல அயிட்டங்கள் சேர்ந்து ஒரு வீடு அமைவதைப்போல, அதிபதி, காரகன், பார்வை, சேர்க்கை, அஷ்டகவர்க்கப்பரல் என்று பல அயிட்டங்கள் சேர்ந்துதான் ஜாதகத்தில் உள்ள வீடுகள் அமையும். மேன்மையாக இருக்கும் அல்லது மேமையில்லாமல் இருக்கும்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இது மேல் நிலைப் பாடம் ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும். 
+++++++++++++++++++++++++++++++++++++++++
கிரகங்களில் எதெதற்கு என்னென்ன பார்வை என்று அடிப்படைப் பாடத்தில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் அதை தேடிப் பிடித்துப் பார்ப்பதற்கு நீங்கள் சிரமம் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

சூரியன் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
சந்திரன் - அதுவும் அப்படித்தான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
புதன் & சுக்கிரன் ஆகிய இருவருக்கும் 7ஆம் பார்வை மட்டுமே
செவ்வாய் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 4, 7 & 8 ஆம் வீடுகளைப் பார்க்கும்
குரு - தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7 & 9 ஆம் வீடுகளைப் பார்க்கும்
சனி - தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7 & 10 ஆம் வீடுகளைப் பார்க்கும்
ராகு & கேது ஆகிய இரு கோள்களுக்கும் சொந்த வீடும் கிடையாது பார்வையும் கிடையாது. ஆகவே இந்தப் பார்வை ஆட்டத்தில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

பார்வையால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. சுபக்கிரகங்கள் பார்க்கும்போது நன்மைகள் உண்டு. தீய அல்லது பாபக் கிரகங்கள் பார்க்கும்போது தீமைகளே அதிகமாக இருக்கும். அல்லது நன்மைகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டிற்கு எதிர் வீடு காவல்துறையில் உள்ள மிகப் பெரிய அதிகாரியின் வீடு என்றால், இயற்கையாகவே உங்கள் வீட்டிற்கும் சேர்த்து பாதுகாப்பு இருக்கும். அதே நேரத்தில், எதிர் வீட்டுக்காரன் பேட்டை தாதா என்றால் உங்கள் வீட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
7ஆம் வீட்டில் சனி இருந்தால் அது லக்கினத்தைப் பார்க்கும்
4ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது 10ஆம் வீட்டைப் பார்க்கும்.

4ஆம் வீட்டில் அமர்ந்த சந்திரனால், ஜாதகனின் 4ஆம் வீடும் நன்மை பெறும், அத்துடன் 10ஆம் வீடும் நன்மையடையும்.

பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது. 4ல் சனி அமர்ந்தால் சுகக்கேடு. 2ல் சனி அமர்ந்தால் கையில் காசு தங்காது. அத்துடன் சிலர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விட்டு, பொருள் ஈட்டும் முகமாகத் தூர தேசங்கள் வாழ நேரிடும்.

அவ்வாறு இடம், இருப்பிடம், பார்வை, சேர்க்கை, அஷ்டகவர்க்கம் என்று எல்லாக் கிரகங்களின் நிலைமையையும் அலசலாம். அலசுவோம்.

இங்கே அலச முடியாது.

அலசிக் கொடியில் காயப்போட்டால், காயுமுன்பாகத் துணிகளைத் தூக்கிக் கொண்டு போய்விடும் அன்பர்கள் பலர் இணையத்தில் இருக்கிறார்கள். ஆகவே ஜோதிடத்தைப் பல உதாரணங்களுடன் பாதுகாப்பாக அலசுவோம்.

தனி இணையதள வகுப்பு 20.1.2011 அன்று துவங்க உள்ளது. User Name, Password, content theft protection & copy right  ஆகியவற்றுடன் அது இருக்கும். ஆகவே சற்றுப் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!